Saturday, July 28, 2012

தஞ்சாவூரின் தாஜ்மஹால் !

பலருக்கு இந்த தலைப்பை பார்த்தவுடன் அதிசயமாக நினைக்கலாம் அல்லது ஆத்திரபடலாம்....ஆனால் உங்களின் கவனத்தை கவர இந்த தலைப்பை வைக்க வேண்டியதாய் இருந்தது ! சிறு வயது முதல் உலகின் ஏழு அதிசயங்கள் பற்றி படிக்கும் போது எல்லாம் ஐரோப்பிய கண்டம் அல்லது அமெரிக்க கண்டம் சொன்னதையே நாமெல்லாம் நம்பினோம், அதனாலேயே நமது தலைமுறை, உலகின் ஏழு அதிசயங்கள் எல்லாம் இந்தியாவிற்கு வெளியிலேயே உள்ளன என்று நம்பிக்கொண்டு இருந்துள்ளோம் !! ஆனால் நமக்கு அருகிலேயே உலகின் மிக பெரிய அதிசயம் இருந்திருப்பது தெரியாமல் போய் விட்டது.


நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருச்சி, ஆனால் இதுவரை 2 முறைதான் நமது தஞ்சை பெரிய கோவிலை பார்த்து இருக்கிறேன். வெளிப்படையாக சொல்வதானால் அந்த கோவிலை பார்த்த போது எனக்கு எந்த உணர்வும் எழவில்லை. இதுவரை நான் கருவறை வரை சென்று கூட பார்த்ததில்லை. ஆனால் கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோவிலையும், சீனாவில் உள்ள புத்த மத கோவிலையும், ஜப்பானில் உள்ள அகபூசா கோவிலையும், மலேசியாவில் உள்ள பத்து கேவ் முருகன் கோவிலையும், அமெரிக்காவின் ஹூஸ்டன் ஹிந்து கோவிலையும், தாய்லாந்து பாங்காக் நகரில் உள்ள வாட் Wat  Phra Kaeo என்னும் எம்ரால்ட் புத்த கோவிலையும், ஐரோப்பா பிரசெல்ஸ் நகரின் சர்ச், ஜெர்மனியின் கொலோன் நகரின் உலக புகழ் பெற்ற கதீட்ரலையும் சுற்றி பார்த்து விட்டு இது போன்ற அதிசய கோவில்கள் ஏன் நம் நாட்டில் இல்லை என்று எண்ணியிருக்கிறேன். இந்த கோவில்களின் முன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நான் பெருமையாக எல்லோரிடமும் காட்டும் நான், நமது தஞ்சை கோவில் முன் எடுத்த படத்தை யாரிடமும் காண்பித்ததில்லை. :-(



சமீபத்தில் எனது மேல் வீட்டு நண்பர், அவரிடம் இருந்த "உடையார்" என்னும் பாலகுமாரன் எழுதிய நாவலை கொடுத்தார் (அது முதல் தொகுதி மட்டும்தான் !! இது போல் 6 தொகுதி இருக்கிறது !!). அதை படிக்க ஆரம்பித்ததில் இருந்து நமது தஞ்சை பெரிய கோவில் பற்றி மிகுந்த மரியாதை வந்து விட்டது. நாம் எல்லோரும் எவ்வளவு அறிவிலிகளாக இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. இந்த நாவல் இந்த தஞ்சை பெரிய கோவில் உருவான கதையையும், மாமன்னர் ராஜ ராஜ சோழ சக்கரவர்த்தி பற்றியும் தெளிவாக கூறுகிறது.அதை படிக்க
அரம்பிக்கபோதுதான்  நான் இதுவரை பார்த்த எல்லா கோவிலும் இதன் முன் மண்டியிட வேண்டும் என்று தோன்றியது. அந்த காலத்திலேயே எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாத நேரத்தில், நமது முன்னோர்கள் எவ்வளவு அறிவுடன் இதை நடத்தி காட்டி இருக்கிறார்கள் என்று நீங்கள் அறிந்தால் ஆச்சர்யபடுவீர்கள் ! மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை கூட உலக அதிசயத்திற்கு வோட்டு போடுங்கள் என்று கூக்குரலிட்ட நமது மக்கள், இதை எப்படி மறந்தார்கள் !! இந்த கோவிலை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் Brihadeeswarar_Temple

Tanjore temple - Side view

Tanjore temple - Top view


இந்த கோவிலை கட்ட எங்கிருந்து பணம் வந்தது, எவ்வளவு சிற்பிகள், கல் மண் சுமபவர்கள், அவர்களுக்கு சமைத்து போடுபவர்கள், தண்ணீர் தருபவர்கள், காய்கறி பயிரிட்டவர்கள், அதை கொண்டு வந்து கொடுத்தவர்கள், கணக்கர்கள், வீடு அமைத்து தந்தவர்கள், சிற்பிகளுக்கு சிலை மாடல் ஆக நின்றவர்கள், இவர்கள் எல்லோரையும் உற்சாக படுத்திய ஆடல் பாடல் கலைஞர்கள், சாரம் கட்டுபவர்கள், குப்பை அகற்றுபவர்கள் என்று எத்தனை பேர் பாடுபட்டனர் !! இப்படிப்பட்ட கோவில் அமைக்க அந்த காலத்தில் எங்கிருந்து எல்லோருக்கும் அரிசி வந்தது, அதை விளைவிக்க என்ன செய்தனர், அதை எப்படி பல ஊர்களில், தேசங்களில் இருந்து கொண்டு வந்தனர், எப்படி அந்த கோபுர கல்லை மேலே ஏற்றினர், எப்படி பாறைகளை எங்கிருந்து கொண்டு வந்தனர், எத்தனை யானைகள், குதிரைகள், எருதுகள் உதவின, அதை யார் பராமரித்தனர், அவைகளுக்கு உணவுகள் எப்படி கிடைத்தன, யார் அதை கொடுத்தனர் / விளைவித்தனர், எப்படி மழை / புயல் / வெள்ளம் தாங்கினார் மக்கள், நினைத்தாலே ஆச்சர்யம்தான். இன்று ஆயிரம் அடி வீடு நாம் கட்ட வேண்டும் என்றாலே முழி பிதுங்கி விடுகிறோம்...மேஸ்திரி, சித்தாள், மர வேலை செய்பவர், மின்சார வேலை செய்பவர், ப்ளம்பர், சாரம் கட்டுபவர் என்று பலரை நாம் பார்க்க வேண்டும். யோசித்து பாருங்கள்...ராஜ  ராஜ சோழன் எப்படி எல்லோரையும் வேலை வாங்கி இருப்பான் என்று. நல்ல வேளை நான் அந்த புத்தகம் படித்தேன், இல்லையென்றால் இந்த அதிசய கோவிலை பற்றி எனக்கு தெரியாமலே போயிருக்கும்.


அடுத்த வருடம் உலக அதிசயம் தாஜ் மஹால் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால் இங்கேயே ஒரு தாஜ் மஹால் இருக்கிறது, நன்றாக அதை முதலில் பார்க்க வேண்டும். தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள்...முடிந்தால் டெல்லியில் இருக்கும் தாஜ்மஹாலை "ஆக்ராவின் பெரியகோவில்" என்று மாற்ற முடியுமா என்று பாருங்கள். அப்போதுதான் அதற்கு பெருமை.

நமது பெரியகோவில் ஒரு உலக அதிசயமில்லை, அது ஒரு அண்ட அதிசயம்...ஆகவே தயவு செய்து இது உலக அதிசயத்தில் இடம்பெறவில்லையே என்று யாரும் வருந்தவேண்டாம்.

ராஜ ராஜா....  நீ இந்த கோவிலை சலவை கல்லில் கட்டி இருந்திருக்க வேண்டும். இந்த நாட்டில் மனிதர்களில் மட்டுமல்ல, கோவிலிலும் வெள்ளை தோல் இருந்தால்தான் அதற்கு மதிப்பு !

2 comments:

  1. Last lines are very true well said. Ur this year post are very nice new look. Go ahead :)

    ReplyDelete
  2. அருமையை புரிந்து கொண்டீர்களே நான் பெரிய கோயிலை 2 முறை அணு அணுவாக ரசித்திருக்கிறேன்
    அதன் பிறகுதான் உடையார் நாவல் 6 பாகங்களையும் படித்தேன்....
    உடையார் ஆறு பாகங்களும் நான் இணையத்தில் PDF ஆக பதிவிறக்கி படித்தேன்.......
    அருமையான கற்பனை படைப்பு உடையார்

    ReplyDelete