Saturday, August 11, 2012

கடவுள் அந்நியராகி வருகிறார் !!?

கோவிலுக்கு போவது என்பது மனம் நிம்மதியை தேடி. ஆனால், இப்போதெல்லாம் அது கிடைகிறதா 
என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனது மகனுக்கு மொட்டை எடுக்க வேண்டும் 
என்று மதுரை திருபரங்குன்றம் கோவிலுக்கு சென்று இருந்தோம். அது மதியம் என்பதால் கோவிலை 
சாத்தும் நேரம் ஆகிவிட்டது, ஆனால் பொது வழி என்னும் க்யு நிற்பதை பார்த்தால், நாங்கள் 
அன்று முழுவதும் அங்கு நிற்க வேண்டிய வரும் போல இருந்தது. ஆதலால், ஸ்பெஷல் தரிசனம் என்னும் 
வாயில் வழியாக செல்லலாம் என்று சென்றோம். ஒருவருக்கு நூறு ரூபாய், ஆனால் சீக்கிரம் கடவுளை 
பார்க்கலாம் என்று சொன்னதால் கொடுத்து விட்டு சென்றோம்.

ஆனால், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது நாங்கள் மூலஸ்தானம் சென்ற போது தெரிந்தது. அந்த சின்ன இடத்தில எந்த விதமான காற்று வெளியே செல்லும் வசதியும் இல்லாமல், சுமார் எண்பது பேர் நெருக்கி அடித்து கொண்டு நான் முந்தி நீ முந்தி என்று ஒரு சக மனிதனை, குழந்தைகளை, பெண்களை, வயதானவர்களை நெட்டி தள்ளி கொண்டு படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் ஒரு காட்டுவாசி கும்பலை போல் மிதித்து தள்ளி கொண்டு செல்லும்போது.....முருகா, இவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்று என்று எண்ண  தோன்றியதே ஒழிய, இந்த வாழ்வின் பிணியிலிருந்து காப்பாற்று என்று எண்ண தோன்றவில்லை. ஏன் நமது கடவுளை தரிசிக்கும் முறை இப்படி மிருகத்தனமாக போனது ? கோவிலுக்கு நாம் சென்று வந்தால் இப்போதெல்லாம் நாம் மனநிம்மதியோடுதான் இருக்கிறோமா ?ஸ்பெஷல் தரிசனம் என்று கடவுளின் பக்கத்தில், சீக்கிரம் செல்ல துடிக்கும் நாம், அந்த ஸ்பெஷல் என்பது கடவுளுக்கா, நமக்கா என்று எண்ணி இருக்கிறோமா ?


 சிறு வயதில் என் பெற்றோர் திருச்சி வயலூர் கோவிலுக்கு அழைத்து செல்லும்போது எல்லாம் மனம் அப்படி சந்தோசமாக இருக்கும். ஊருக்கு வெளியே கோவில் என்பதால் வயல் வெளியை பார்த்துக்கொண்டே பஸ் பயணம், அங்கு சென்றவுடன் கிடைக்கும் இயற்கையான காற்று, இளநீர், நுங்கு, அங்கு கோவிலுக்கு முன் கிடைக்கும் தேங்காய்...பல கடையில் எவருமே இங்குதான் வாங்க வேண்டும் என்று கட்டாயபடுத்தி நான் பார்த்தது கிடையாது. இங்கு வாங்குங்கள் என்று கூபிடுவார்களே தவிர, மிரட்ட மாட்டார்கள். தட்டு வாங்கி திரும்பும்போது போங்க, நீங்க நினைச்சது நல்ல படியா நடக்கும் என்று சொல்ல கேட்டு இருக்கிறேன். கோவிலுக்கு உள்ளே நுழையும் முன் அந்த பிரம்மாண்டமான யானை துதிக்கை நீட்டும்போது என் தந்தை என்னை காசு கொடுக்க சொல்லிவிட்டு யானையிடம் ஆசீர்வாதம் வாங்க செய்வது என்பது ஒரு சுகமான அனுபவம். உள்ளே நன்கு காற்றோட்டமான இடம், தூணில் இருக்கும் சில்லிப்பு, அந்த இடத்தில் நிலவும் அமைதி, ஊதுபத்தி வாசனை என்று கடவுளை பார்பதே ஒரு நல்ல அனுபவம். நாங்கள் எப்போதும் பொது தரிசனம் வழியாகத்தான் செல்வோம், அப்போதெல்லாம் நாங்கள் எதுவும் நினைத்தது கிடையாது, அர்ச்சகரும் எங்களை தாழ்த்தி நடத்தியது கிடையாது. கடவுளை நாங்கள் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் நின்று தரிசனம் செய்யலாம். என் அப்பா தரிசனத்தின் போது அந்த ஸ்தல வரலாறு, கடவுளின் கதைகள் என்று சொல்லுவார். பின்னர் மன நிம்மதியோடு வெளியில் வந்தவுடன், அங்கு லட்டு, அதிரசம், புளியோதரை என்று கிடைக்கும் பிரசாதங்கள் அமிர்தமாய் இருக்கும். சுமார் மூன்று மணி நேரம் நாங்கள் அங்கு இருக்கும் அந்த பொழுது இந்த உலகத்தின் மேலும், மனிதர்கள் மீதும், வாழ்கையின் மீதும் ஒருவித அன்பு துளிர்க்க செய்யும்.

ஆனால் இன்று ?? வைதீஸ்வரன் கோவிலில் நீங்கள் முதல் கடையில் தட்டு வாங்காமல் செல்ல முடியாது, அடியாட்கள் போல் உங்களை சூழ்ந்துகொண்டு அங்கு தான் தட்டு வாங்க வேண்டும் என்பார்கள். இல்லையென்றால், உங்களின் காது படவே போங்க, போங்க நீங்க நினைச்சது நல்லபடியா நடகனுமின்னா இங்க தட்டு வாங்குனாத்தான் என்பார்கள். திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் எந்த அர்ச்சகரும் ஒரு வெளிநாட்டவர்க்கு கொடுக்கும் ஆரத்தியும், ஸ்தல வரலாறும், விபூதியும் ஒரு இந்தியனுக்கு, நம் மண்ணின் மக்களுக்கு கொடுக்க மாட்டார்கள். நாமே எடுத்துக்கொண்டு போக வேண்டும், அப்படி உங்களுக்கு ஆரத்தி வேண்டும் என்றால் குறைந்தது பத்து ரூபாய் முதலில் கண்ணில் காட்ட வேண்டும்.



மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் பொது தரிசனமே செய்ய முடியாது என்னும் அளவுக்கு கும்பல் இருக்கும், எவரும் நகர மாட்டார்கள். தஞ்சாவூர் கோவிலில், யாராவது வீல் சேரில் வந்தால் நீங்க எல்லாம் ஏன் இங்க வரீங்க என்பார்கள். வயலூர் செல்லும் வழியில் இருந்த வயல்கள் எல்லாம் இன்று பிளாட் ஆகி விட்டன, ஸ்பெஷல் தரிசனமே ரெண்டு மணி நேரமாகிறது. திருப்பதி கோவிலில் 20 மணி நேரம் கால் கடுக்க நின்று கடவுளை பார்த்தால் ஜருகண்டி ஜருகண்டி என்று காதில் விழுகிறதே தவிர கோவிந்தா கோஷம் எல்லாம் இல்லவே இல்லை.


பொதுவாக இப்போது எந்த கோவிலில் சென்று கடவுளை பார்க்க வேண்டும் என்றாலும் நாம் பல பல தடைகளை தாண்டித்தான் செல்ல வேண்டி இருக்கிறது. தேங்காய் கடையில் காட்டும் உதாசீனமாகட்டும், செருப்பு வைக்கும் இடத்தில் மக்கள் பொறுமை காட்டாமல் இருபதாகட்டும், அர்ச்சகரின் அந்த "ஸ்பெஷல் தரிசன" பார்வை வித்யாசமாகட்டும், இதை எல்லாம் விட நம்மோடு க்யுவில் நிற்கும் மனிதர்கள் கடவுளை நெருங்கும்போது எடுக்கும் அவதாரம், அவர்கள் மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும் என்று குதிப்பது, இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

எனது மகனுக்கு கடவுள் வெகு சீக்கிரமே அன்னியனாகிவிடுவார் என்று எனக்கு தோன்றுகிறது....நமது குழந்தைகளை நாம் இப்போதெல்லாம் கூட்டங்கள், நெரிசல்கள் போன்றவைகளில் இருந்து நாம் தள்ளியே வளர்கிறோம், அது மட்டும் இல்லாமல் முன்பெல்லாம் நமக்கு கோவில்கள்தான் பொழுது போக்கு இடங்களாக இருந்தன, ஆனால் இன்று ஷாப்பிங் மால் என்று வந்து விட்டதால் நாளை அவன் கோவிலுக்கு எல்லாம் செல்ல முனைவானோ என்னவோ ? கோவிலுக்கு செல்வதை போல ஒரு கொடுமையான விஷயம் இங்கு வேறு எதுவும் இல்லை என படுகிறது.

நான் பார்த்த கோவில்களிலேயே மிகவும் அமைதியாக, நன்றாக பராமரிக்கப்படும் ஒரு கோவில் உள்ளது, அங்கு சென்றால் மட்டும் இறைவன் இங்கு இருக்கிறான் என்ற உணர்வும், பக்தியும் தன்னாலேயே வரும். அதை பற்றி அடுத்த பதிவில்....

12 comments:

  1. go-to-some-less-popular-temples-if-you-want-to-have-an-experience.

    ReplyDelete
    Replies
    1. ஆம் நீங்கள் சொல்வது சரிதான் அனால் கோவிலுக்கு நான் கடவுளை பார்க்க மட்டும் செல்வதில்லையே...அங்கு செல்வது நமது சிற்ப கலைகளுக்காகவும், புது மனிதர்களை காணவும்தான். அனால், நீங்கள் சொல்வதை ஏற்று கொள்கிறேன்.

      Delete
  2. என் கண்ணுக்கு பட்ட கடவுள்...அந்த கடைசி போட்டோ தான். குழந்தைகள் தான் தெய்வம்.
    திருப்பதி ஒரு முறை போய் ஏண்டா போனோம் என்றாகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. மிக அருமையாக சொன்னீர்கள் வடுவூர் குமார்....மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.

      Delete
  3. நானும் ஒவ்வொரு முறையும் கோவிலில் இந்த சங்கடங்களை அனுபவித்திருக்கிறேன். அருமையான பதிவு..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும். நீங்கள் இந்த பதிவை தொடர்வது எனக்கு மிகவும் உற்சாகம் அளிக்கிறது.

      Delete
  4. உண்மை. அதற்கு நாமும் ஒரு காரணம் என்பதையும் இங்கே சொல்லிவிட வேண்டும். சிரமம் பார்க்காமல் எதுவும் நடக்க வேண்டும், அதற்காக பத்து நூறு செலவானாலும் பரவாயில்லை என்ற மனப்பாங்கு வந்த பிறகு கோவில் கோவிலாக இல்லை. பணம் பிடுங்கும் பிசாசுகளின் கூடாரமாகிவிட்டது. ஆனால் கோவிலில் கடவுள் இருக்கிறார் என்று உங்களுக்கு யார் சொன்னது...?

    ReplyDelete
    Replies
    1. //கோவிலில் கடவுள் இருக்கிறார் என்று உங்களுக்கு யார் சொன்னது...?// இந்த வரியை மிகவும் ரசித்தேன்...உங்களது கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை, வாயடைத்து போய் உள்ளேன்.
      நன்றி தங்கள் கருத்திருக்கும், வருகைக்கும்.

      Delete
  5. Replies
    1. நன்றி கிருஷ்...தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  6. என்ன செய்வது? ஜனத்தொகை அதிகமாகிற அளவுக்கு, கோயில்கள் பெருசாவதில்லை. 20 வருஷத்துக்கு முன் எங்க அப்பா, அம்மா, நாங்க நாலு பசங்க சாமி கும்பிடப்போனோம். இன்னைக்கு என்க அப்பா, அம்மா, நாங்க நாலு பசங்க, எங்க மனைவிகள், கணவர்கள், மற்றும் எங்க குழந்தைகள் 4 பேர் - இப்படி 14 பேர் ஆயிட்டோம். இதே மாதிரி எல்லோரும் கெளம்பிட்டா கோயில் என்ன ஆவுறது? ஊரு என்ன ஆவுறது?

    அதே மாதிரி, கோவிலில் ஒன்னு அல்லது 2 குருக்கள் / பூசாரிகள் இருப்பாங்க அந்தக்காலத்திலே. இப்போ அவுங்களுக்கும் குடும்பம் பெருசாகி, 8 பூசாரிகள் அதே கோவிலை பூசை போட வேண்டியிருக்கு. வருமானத்தப் பெருக்க, தட்டில் காசு விழுந்தாலொழிய வேறு வழியில்லை.

    சாமியைச் சொல்லிக் குத்தமில்லை. நம்ம ஜனத்தொகையைச் சொல்லணும்.

    ஜனத்தொகை அதிகரிப்பு நாம் இன்னும் வறுமையை நோக்கிச் செல்லுவதைக் குறிக்கிறது.

    இன்னும் 50 வருசத்தில் இன்னும் கோவிலுக்குள்ளேயே எல்லோரும் குடும்பம் நடத்தினாலும் ஆச்சரியமில்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரங்குடு...நீங்கள் சொல்வது சரிதான். அப்போதைய ஜனத்தொகை கோவிலுக்கு சரியாக இருந்தது, ஆனால்
      இன்று பெரிய கோவில்கள் கூட சிறியதாகத்தான் தோன்றுகிறது. ஆனால், நமது இந்து அறநிலயதுரை திருப்தியில் உள்ளது போல கடவுளை தரிசிக்க சௌகரியம் செய்தால் தேவலை...
      தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

      Delete