Tuesday, August 28, 2012

அறுசுவை - சின்னாளபட்டி சவுடன் பரோட்டா கடை

இந்த பதிவுகளில் நான் எனக்கு பிடித்த உணவுகளை உங்களுக்கு அறிமுகபடுத்துகிறேன். தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை செய்வதால் நிறைய நாடுகளுக்கு சென்று அங்கு உள்ள உணவுகளை சுவைத்திருக்கிறேன், பிறந்து வளர்ந்தது எல்லாம் கிராமமாக இருந்ததால் கையேந்தி பவனிலும் உண்டிருக்கிறேன். ஆகையால், எந்த உணவு சுவையாக இருந்தாலும், அது எங்கு இருந்தாலும் அறிமுகபடுத்துவதுதான் இந்த பதிவின் நோக்கம். நீங்களும் அதை ருசிக்கும்போது என்னின் பதிவு சரிதான் என்று நினைப்பீர்கள் !

இந்த படத்தை உற்று பாருங்கள்...உரிமையாளர் S. சவுடன் என்று இருக்கும்.

நம்ம சவுடன் கடை முகப்பு...

நமது மக்களுக்கு ஒரு கடையில் அந்த உணவின் சுவை பழகிவிட்டால் அதை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள், அதே அந்த உணவின் சுவை நன்றாக இல்லையென்றால் பக்கத்தில் கூட போக மாட்டார்கள். அது போல் சுவையில் இன்றும் கொடி கட்டி பறக்கும் ஒரு கடைதான் இது. பரோட்டவுக்காக சண்டை எல்லாம் நடக்கும். பரோட்டா போடும் கல் பக்கத்திலேயே நின்று கொண்டு, போட்டவுடன் சூடாக சட்டென்று கையில் எடுத்து "பார்சல் பண்ணுப்பா" என்று கஸ்டமரே எடுத்து செய்யும் அளவுக்கு பிரசித்தம். இவர்களின் சால்னாவின் சுவை நன்றாக இருப்பதால், பலரும் விசேசங்களுக்கு அடிக்கடி இந்த ஹோட்டல்காரர்களை கூப்பிடுவதும், அவர்கள் அதனால் கடைக்கு லீவ் விடுவதும் சகஜம். இவ்வளவு ஏன், சின்னாளபட்டியில் உள்ள மற்ற கடைகாரர்கள் அவர்களின் வியாபாரம் நன்றாக நடந்தால், அது இந்த கடை லீவில் இருந்தால்தான் என்பது சத்தியமான உண்மை.
சவுடன் கடை பரோட்டா, சால்னாவுடன்...உங்கள் சுரேஷ்

இங்க இதுதான் சார் கிடைக்கும்...ஆனால் இந்த பாண்டிய நாடே இதற்க்கு அடிமையப்பா...
 சின்னாளபட்டி என்பது திண்டுக்கல் மதுரை இடையில் உள்ளது. இது சேலைகளுக்கு பெயர் பெற்ற ஊர். அங்கு சென்றால் நான் ஒரு நாளாவது கண்டிப்பாக இந்த கடையில் சென்று சாப்பிடாமல் இருக்க மாட்டேன். அவர்கள் போடும் பரோட்டாவும், பிச்சி போட்ட நாட்டு கோழியும், தோசை - கெட்டி சட்னி - சால்னாவும், கொத்து பரோட்டா - கோழி குழம்பும் என்று களை கட்டும். எல்லா கடைகளில் கிடைக்கும் அயிட்டம்தான் என்றாலும், அவர்கள் செய்யும் முறையில் இந்த ஊரே மயங்கி இருக்கிறது என்றால் அது மிகையாகாது !
சவுடன் கடை இரவு நேர தோற்றம்...
அந்த சால்னா சுவை இந்த போட்டோவில் தெரியாதே...ஆனா நம்புங்க "இதுதாண்டா சால்னா"
இந்த கடையின் பேர் என்னவோ "சௌடேஸ்வரி பரோட்டா கடை", ஆனால் எல்லோரும் அதை சுருக்கி கூப்பிட்டு கூப்பிட்டு அது "சவுடன் கடை" ஆகிவிட்டது. மிக சிறிய கடை, ஆனால் சுவையோ அற்புதம். ஒருவர் பொய் சொல்லலாம், ஆனால் ஒரு ஊரே பொய் சொல்லாது....சுவைக்கு நான் காரண்டி. நீங்களும் சென்று வாருங்கள்.


நம்ம பரோட்டா மாஸ்டர்...
தலை கறி, குடல் மசாலா, வறுத்த நாட்டு கோழி
இது ஒரு சிறிய கிராமம்தான், ஆனால் நீங்கள் மதுரை பக்கம் 
செல்லும்போது  இந்த சின்னாளபட்டியில் சிறிது திரும்பி கண்டிப்பாக
சாப்பிட்டு செல்லலாம்....உங்களது பயணம் இன்னும் இனிதாக அமையும் 
என்பது நிச்சயம் !! 



8 comments:

  1. போய் பார்க்கணும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே...உங்கள் பதிவின் பாதிப்புதான் இதை எழுத தூண்டியது. கண்டிப்பாக நீங்கள் சாப்பிட வேண்டிய இடம் இது.

      Delete
  2. சாவுடன் கடை பரோட்டா, சள்னவுடன்...உங்கள் சுரேஷ் \\

    சாரே கொஞ்சம் சாவ கவனிங்க , நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜ், தவறுக்கு மன்னிக்கவும், சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி.
      உங்கள் வருகையும், கருத்தும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

      Delete
  3. பரோட்டா பார்சல் அனுப்ப முடியுமா

    ReplyDelete
    Replies
    1. சார்க்கு ரெண்டு பரோட்டா பார்சல்...!! :-) நன்றி நண்பரே, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.

      Delete
  4. அட நம்ம ஊர் ஹோட்டல்..
    புரோட்டா செம டேஸ்ட் தான் அங்க...

    நமக்கு சொந்த ஊரே சின்னாளபட்டி தானுங்கோ...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா !!! நன்றி பிரகாஷ் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் !!

      அது எப்படி இந்த ஊரே இதுக்கு மயங்கி கிடக்குது...அப்படி என்ன சேர்கிறார்கள், சொல்லுங்களேன் !

      Delete