Sunday, September 30, 2012

புதிய பகுதி - புரியா புதிர் !!

நானும் எனது நண்பர்களும் ஒரு இரவினில் பேசிக்கொண்டு இருந்தபோது, திடீரென்று எங்களது பேச்சு அரசியலுக்கு திரும்பியது, அப்போது எல்லோரும் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இருந்தோம். அப்போது நர்மதா அணை பிரச்னையை பற்றி ஒருவர் ஆரம்பித்தபோது எல்லோரும் அவரவர் கருத்துக்களை சொல்லும்போது ஒன்று மட்டும் புரிந்தது.....எவருக்கும் அந்த பிரச்சனையின் அடிநாதம் என்னவென்று புரியவில்லை. அவரவருக்கு தெரிந்த செய்தியினை கொண்டு ஒரு முடிவுக்கு வந்து இருந்தனர் !! உண்மையான பிரச்சனை என்னவென்பது பலருக்கும் ஒரு புதிராகவே இருந்தது, இன்னும் சிலர் இந்த நர்மதை நதியின் குறுக்கே பாலம் கட்டுவதை எதிர்க்கும் மக்களை திட்டி கொண்டு இருந்தனர்.....அந்த மக்களின் பிரச்சனைகளை உணராமல். இப்படிதானே நாம் எல்லோரும் பல உலக பிரச்சனைகளை "ஜஸ்ட் லைக் தட்"அலசி காய போடுகிறோம் ?



இதுபோல் உலகில் நிறைய பிரச்சனைகள், அவற்றின் அடிப்படை காரணங்கள் என்னவென்று நமக்கு தெரியுமா ? இஸ்ரேலுக்கும் - பாலஸ்தீனத்துக்கும் என்ன பிரச்சனை, சீனாவுக்கும் - திபெத்துக்கும் என்ன தகராறு, ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியா இல்லையா, பொற்கோவிலில் இராணுவம் ஏன் நுழைந்தது, கூடங்குளம் மக்கள் ஏன் இப்படி போராடுகின்றனர், இரோம் ஷர்மிளா ஏன் கடந்த 11 வருடங்களாக உண்ணாவிரதம் இருக்கிறார், அமெரிக்காவுக்கும் - ரஷ்யாவுக்கும் என்ன ஆனது......இப்படி நிறைய நிறைய பிரச்சனைகள்.



இவற்றை எல்லாம் சற்று ஆராய்ந்து பார்த்து என்னைப்போல் இருக்கும் சில வாசகர்களுக்கு புரியும்படி எழுதினால் என்னவென்று தோன்றியது. என்னால் இயன்றவரை இதன் ஆழத்தை வாசகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறன். இந்த முயற்சியினால் சில புரியாத புதிர்கள் அவிழக்கூடும், அடுத்த முறை இந்த செய்தியினை பார்க்கும்போது விவாதம் இன்னும் சுவையாக இருக்க கூடும். உங்களது ஆதரவு என்றும் உண்டு என்ற நம்பிக்கையுடன்.......கடல்பயணங்கள் தொடர்கிறது !!


Saturday, September 29, 2012

நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மரம் தங்கசாமி

 "மரம்" தங்கசாமி என்னும் பேரே வித்யாசமாக இருந்தது ! இன்று திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் வெயிலுக்கு இளைப்பாறும் எவருக்கும் தெரியாது இவர்தான் இதை நட்டு வளர்த்திருப்பார் என்று. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்த மங்கலத்துக்கு அருகே சேந்தன்குடி என்னும் கிராமத்தில், இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு போல் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாணவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மரம் வளர்க்கும் தங்கசாமியின் பணி மற்றும் மக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது சேவை ஆகியவற்றைப் பலர் பாராட்டி உள்ளனர்.


ஆரம்பத்தில் இவர் நட்ட 100 தேக்கு மரங்கள் நன்கு வளர்ந்து பயன் தர, அவருக்கு இதில் ஆர்வம் அதிகமானது. பின்னர் அதை பின்பற்றி மா, பலா, முந்திரி, புளி, வேப்பம், சந்தனம், நெல்லி என்று மரங்களை வளர்க்க ஆரம்பித்து இன்று அவரது 12 ஏக்கர் நிலத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்ட மர வகைகள் இருக்கின்றன. இவரிடம் இதை பற்றி கேட்டால், மிகவும் தன்னடக்கமாக "இது எனது கடமை" என்கிறார்.


இவரது இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு, அதை மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்கிறார். இவர் "South India Aromatic Sandal & Herbal tree Farmers Association (SAFARI)" என்னும் NGO-வுக்கு சேர்மனாகவும் உள்ளார். ஒரு விவசாயி இயற்கையை நம்பி இருப்பதால் அவனுக்கு இழப்புகள் அதிகம் வரும், அப்போது அவன் கடன் வாங்கினால் அவனாலும், விவசாயமும் மீளவே முடியாது, இதை தவிர்க்க அவன் பணம் தரும் மரங்களான சந்தனம், தேக்கு என்றும் வளர்க்க வேண்டும், இதனால் அவனுக்கும் பலன் கிடைக்கும் என்பது இவரது கூற்று.


இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...மரம் தங்கசாமி

Friday, September 28, 2012

நான் ரசித்த குறும்படம் - வெளிநாட்டு திருமணம் (உண்மை சம்பவம்)

இது ஒரு குறும்படம் அல்ல, அனால் ஒரு குறும்படத்தில் என்ன பீல் உங்களுக்கு வருமோ அது இதில் இருக்கிறது. முதலில் நான் இந்த தலைப்பில் இதை கொடுக்க வேண்டுமா என்று யோசித்தேன், பின்னர் இதை பார்க்கும் பொது ஒரு குரும்படதிற்க்கான திட்டமிடலுடன் இதை செய்திருப்பதால் இதை இங்கே பகிர்கிறேன்.

ஒரு மனிதன் தனது காதலிக்கு, காதலுக்கு என்னவெல்லாம் செய்கிறான் என்பதை நீங்கள் பார்க்கும்போது உங்களது மெய் சிலிர்க்கும் ! இவர் தனது காதலியுடன் உணவருந்தும்போது தனது முன்னாள் காதலி போல ஒருவர் வந்து அவரை திட்டுவதில் இருந்து இது ஆரம்பிக்கிறது, ஆனால் முடிவில் அது எல்லாம் நாடகம் என்று உணரும்போது......ஆஹா இது போல நாம் திருமணம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது ! இது ஒரு உண்மை சம்பவம்...கடைசி வரை பாருங்கள், உங்களுக்கே புரியும்.






Thursday, September 27, 2012

புதிய பகுதி - உலக திருவிழா !!

பண்டிகைகள் அல்லது திருவிழாக்கள் என்றாலே மனம் எல்லாம் குதுக்களிக்கும் ! சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா அன்று பிள்ளையார் வாங்க வெளியில் சென்றபோது ஆச்சர்யமாக இருந்தது, இவ்வளவு மக்களும் எங்கு இருந்தார்கள் இதுவரை ? ஒவ்வொருவரும் மண் பிள்ளையாரை பலகையில் வைத்து கடந்து செல்லும்போதும் அதில் தெரிந்த உற்சாகம், இதுவரை அழுக்கு நைட்டியில் வலம் வந்த பெண்கள் எல்லாம் குளித்து முடித்து, பூ வைத்து இருந்தனர். பக்கத்துக்கு வீட்டில் நான் எப்போதும் முண்டா பனியனோடும், அல்லது ஷார்ட்ஸ் போட்டு பார்த்த நண்பர்கள் எல்லாம் அன்று காலையிலேயே வேஷ்டியில் பார்த்தது இன்னும் ஆச்சரியம் !!






இது போல பண்டிகைகள்தான் நம்மை உற்சாகமாக வைக்கிறது இல்லையா ? இந்தியாவில் நிறைய பண்டிகைகள் இருந்தாலும், எல்லோரும் கொண்டாடுவது என்று தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஹோலி என்று சில இருக்கின்றன. ஆனால், இதுவரை இது போல பண்டிகைகள் அல்லது திருவிழாக்கள் வெளிநாடுகளில் என்ன என்ன என்று யோசித்து இருக்கிறீர்களா ? அமெரிக்காவில் ஹல்லோவீன் என்னும் ஒரு திருவிழா உண்டு, அன்று குடும்பத்தில் எல்லோரும் கூடி புது விதமான, சிரிக்க வைக்கும்படியாக உடை அணிந்து எல்லோரது வீட்டுக்கும் சென்று வருவார்கள், பிரேசிலில் நடக்கும் கார்னிவல், தைவானில் நடக்கும் பின்க்சி விளக்கு திருவிழா, இத்தாலியின்
ஆரஞ்சு திருவிழா,  தாய்லாந்தில் சொங்க்ரன் தண்ணீர் திருவிழா என்று உலகில் அதிசய திருவிழாக்கள் நிறைய இருக்கின்றன.




ஒரு நாள் நானும், என்னுடன் கூட வேலை செய்யும் நண்பருடன் ஜப்பானில் இருந்தோம், அங்கு மே மாதத்தில் எங்களுடன் கூட வேலை செய்த ஜப்பானியர்கள் முகத்தில் ஒரு சந்தோசத்தை காண முடிந்தது, என்னவென்று விசாரித்தபோது அவர்கள் சகுரா வருகிறது என்றனர். நாங்கள் அவர்கள் ஏதோ ஒரு ஆளை பற்றி சொல்கிறார்கள் என்று நினைத்தோம், ஆனால் அவர்கள் எங்களை க்யோடோ அழைத்து சென்றபோதுதான் தெரிந்தது அப்படி ஒரு அருமையான செர்ரி மரங்கள் பூத்து குலுங்கும் நாள் என்று. அதை அவர்கள் சகுரா என்று கொண்டாடுகின்றனர். வார்த்தையில் விவரிக்க முடியாத ஒரு அருமையான திருவிழா அது....இது போல நிறைய பண்டிகைகளை உங்களுடன், அது கொண்டாப்படும் தகவல்களுடன், உற்சாகத்துடன் உங்களுடன் பகிரலாம் என்று இருக்கிறேன், வழக்கம் போல உங்களது கருத்துகளையும், மெருகேற்ற என்ன செய்யலாம் என்றும் தெரிவியுங்களேன் !



முடிவாக எனக்கு பிடித்த "ஜிந்தகி நா மிலேகா துபாரா" என்னும் படத்தில் வரும் இந்த பாடலை பாருங்கள், இது "லா டோமடினா" என்று ஸ்பெயினில் நடைபெறும் ஒரு திருவிழா, அங்கு எடுத்த இந்த பாடலை பாருங்கள்....இந்த பண்டிகையின் உற்சாகம் புரியும்.


Wednesday, September 26, 2012

சாகச பயணம் - ஹெலிகாப்ட்டர் ரைட்

ஒரு சில பயணங்கள் உங்களது மனதை விட்டு நீங்காது, அது மட்டும் அல்ல சில சமயம் பெருமைப்படும் வண்ணமும் இருக்கும் ! இந்த பயணத்தை "மறக்க முடியா பயணம்" என்ற தலைப்பில் எழுதலாமா என்று யோசித்தேன், பின்னர் அந்த தலைப்பு சரி வராது என்று "சாகச பயணம்" என்று மாற்றினேன். ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவல் இருக்கும், அதுவும் நம்ம தமிழ் படங்களில் எல்லாம் ஹீரோ சாகசம் செய்யும்போது எல்லாம் நான் ஆ என்று வாயை பிளந்துகொண்டு பார்ப்பேன். ஆறு மாதங்களுக்கு முன்பு நான் மெல்போர்ன் நகரம் சென்று இருந்தபோது, அங்கு இருந்த "கிரேட் ஓசன் ரோடு" என்னும் பயணம் மேற்கொண்டோம், அங்குதான் இந்த ஹெலிகாப்டர் பயணம். 


இந்த பயணம் ஒரு நெடுந்தூரமான ஒன்று, வழியெங்கும் உங்களது ஒரு பக்கத்தில் கடல் உங்களது அருகினுள் வந்து கொண்டு இருக்கும், இந்த பயணத்தை பற்றி விரிவாக மற்றொரு பதிவில் பாப்போம்...இந்த பயணத்தின் முடிவில் அதாவது ஐந்து மணி அளவில் இங்கு சென்றடைந்தோம். முதலிலேயே இங்கு ஹெலிகாப்ட்டர் ரைட் இருக்கும் என்று சொன்னதால் மிகுந்த ஆவலுடன் இருந்தேன். ஆனால் பருவநிலை சாதகமாக இல்லாமல் இருந்தால் இது கான்சல் ஆகும் வாய்ப்பு அதிகம் என்றும் சொல்லபட்டிருந்ததால் நான் வேண்டாத தெய்வம் இல்லை. இந்த இடம், நமது "காதலர் தினம்" படத்தில் "என்ன விலை அழகே..." பாடல் முழுவதும் எடுக்கப்பட்டது இங்கேதான்.


இங்கு காலையிலிருந்து எவரும் இருக்க மாட்டார்கள், இவர்களுக்கு மாலையில் அதுவும் மூன்று மணி நேரத்திற்கு மட்டும்தான் வேலை....ஏனென்றால் மக்கள் அப்போதுதான் இங்கு வந்து சேர முடியும், அவ்வளவு தூரம் ! இந்த ஹெலிகாப்ட்டர் ரைட் செய்வது "12apostles" எனப்படும் ஒரு கம்பெனி. இங்கு நான்கு விதமான தூரம் பயணம் செய்யும் விதம் இருக்கிறது, ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை. குறைந்தபட்சம் 95 ஆஸ்திரேலியா டாலரிலிருந்து 445 ஆஸ்திரேலியா டாலர் வரை உண்டு.
இந்த ஹெலிகாப்ட்டர் கம்பெனி, பயண தூரம், பணம், இன்னும் பல விவரங்களை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...12apostles




இங்கு மாலை மயங்கும் முன் சம்பாதித்து விடவேண்டும் என்று இருப்பதால் சர சரவென்று எல்லாம் நடக்கும். முதலில் நீங்கள் வரிசையில் நிற்க வேண்டும், டிக்கெட் வாங்கியவுடன் ஒருவர் இன்னொரு வரிசையில் நிற்க வைப்பார், பின்னர் உங்களது ஹெலிகாப்ட்டர் வந்து இறங்கியவுடன் நீங்கள் அதில் ஏறி கொள்ள வேண்டும், பின்னர் உங்களை உள்ளே வைத்து கொண்டே அந்த பைலட் சர்கஸ் செய்வார்....அடிவயிறு சிறிது கலங்கும்.




ஒரு நான்கு பேர் (பைலட்வுடன் சேர்த்து !) மட்டும் அமரும் ஒரு சிறிய 
ஹெலிகாப்ட்டர், பதினைத்து முதல் அரை மணி நேரம் வரை பயணம் என்று இது நிஜமாகவே ஒரு சாகச பயணம்தான். இந்த பயணம் எப்படி இருக்கும் என்று கேட்பவர்களுக்க, கீழே உள்ள வீடியோ இணைப்பை பாருங்கள்...

                                     

வாழ்வில் சில பொழுதுகள் உங்களுக்கு வாழ்கையின் மேல் காதல் கொள்ள வைக்கும், இந்த ஹெலிகாப்ட்டர் பயணமும் அதில் ஒன்று. பணத்தை பற்றி பார்க்காமல் நீங்கள் இதில் பயணம் செய்தால் ஒவ்வொரு நொடியும் இதை பற்றி உங்கள் வாழ்வில் நினைத்து பார்ப்பீர்கள் !

Tuesday, September 25, 2012

இவர்களும் மனிதர்கள்தான்...

எனது நண்பர் ஒருவருக்கும், கடைக்காரருக்கும் பொருள் வாங்கும்போது சண்டை வந்துவிட்டது. நான் அவர்களுக்கு மத்தியஸ்தம் செய்ய முயன்று கொண்டிருந்தேன். சண்டையின்போது எனது நண்பர் கடைகாரரிடம் "முதலில் மனுஷனை மனுஷனாக மதிக்க கற்றுக்கொள், பணம் இருந்தாலும் இல்லையென்றாலும் மரியாதை என்பது முக்கியம்....எல்லோரும் கடைசியில் ஆறடி இடம்தான்" என்றெல்லாம் சொல்லி கொண்டிருந்தார். ஒரு வழியாக சண்டை முடிந்து அவரை வீட்டில் விட்டு விட்டு நான் வீடு சென்றேன். ஒரு வாரம் கழித்து நானும் அவரும் வெளியில் சாப்பிட்டு விட்டு பார்கிங்கில் நின்று சிரித்து பேசி கொண்டிருந்தோம்...அப்போது ஒரு குஷ்டம் வந்த பிச்சைக்காரர் ஒருவர் எனது நண்பனிடம் பிச்சை கேட்டு கொண்டிருந்தார், நானும் அதை கவனித்து கொண்டிருந்தேன். சரி, அந்த ஆள் என்னிடம் கேட்கும்போது பிச்சை போடலாம் என்று நான் காத்து கொண்டிருந்தபோது, அவரின் கால் எங்களது பைக்கின் ஸ்டான்ட் பட்டு அவர் தடுமாறி எனது நண்பனின் தோளை பிடித்து விட்டார். நான் அந்த பிச்சைகாரரை உடனடியாக கையை பிடித்து ஸ்திரபடுத்தி கொண்டிருந்தபோது எனது நண்பர் அவரை திட்ட ஆரம்பித்து விட்டார்....இந்த பதிவில் எழுத முடியாத அளவுக்கு வார்த்தைகள், அதை கேட்கும் ஒருவர் ஒன்று தற்கொலை செய்து கொள்வார் அல்லது திட்டியவரை கொலை செய்வார் !!? ஆனால், ஒன்றும் செய்ய முடியாத அந்த பிச்சைக்காரர் கண்ணில் நீர் வர அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். நான் எனது கையை கழுவிகொண்டிருந்தபோது எனது நண்பரிடம் கிண்டலாக "என்னவோ போன வாரம் அந்த கடைகாரரிடம் சண்டை போட்ட போது மனுஷனுக்கு மனுஷன் மரியாதை குடுக்கணும், எல்லோருக்கும் ஆறடி இடம்தான் அப்படினெல்லாம் சொன்னீங்க....இப்போ அந்த ஆளு மனுஷனா உங்களுக்கு தெரியலையா ??" என்றேன், அதற்க்கு அவர் "அந்த பிச்சைகாரனா....அவனை எல்லாமா மனுஷனா மதிக்கணும்?" என்ற போது எனக்கு யாரை எல்லாம் இந்த உலகம் மனிதன் என்று மதிக்கிறது என்ற கேள்வி எழுந்தது.


மனிதனை மனிதனாக மதிப்பது என்றால் என்ன ? நாம் நமக்கு சமமாக, அவர்களுக்கும் உணர்சிகள் உண்டு என்று உணர்ந்து அவர்களின் உணர்வுகளை மதித்து, அவர்களுக்கு உதவி தேவை எனில் உதவி, வெறுத்து ஒதுக்காமல் அன்பு காட்டுவதுதான் மனிதனாக மதிப்பது இல்லையா ?! அப்படியென்றால் நாம் எல்லோரையும் மனிதனாக மதிக்கிறோமா ?


அடுத்த நாள் முழுவதும் நான் யாரை எல்லாம் எனக்கு சமமாக, அல்லது குறைவாகவாவது மதிக்கிறேன் என்று சோதித்து பார்த்தேன். நான் காரை எடுக்கும்போது பக்கத்து பிளாட் மனிதரிடம்  இனிமையாக
பேசினேன், ஆனால் கேட்டில் இருந்த வாட்ச்மேனுக்கு புன்னகை கொஞ்சம்தான், சிக்னலில் இருந்த
பிச்சைகார பெண்ணுக்கு அது கூட இல்லை, அதே சிக்னலில் புத்தகம் விற்ற ஆளுக்கு பதிலாவது சொன்னேன், ஆபிஸ் வந்தவுடன் எல்லோருக்கும் எனது புன்னகையின் அளவு பெரிதானது, மதியம் சாப்பிட வெளியே சென்றபோது டேபிள் தொடைபவர் எனக்கு கண்ணுக்கு தெரியவில்லை, சர்வர் வந்தபோது கொஞ்சம் தெரிந்தார், அந்த ஹோட்டல் முதலாளிதான் முழுமையாக கண்ணுக்கு தெரிந்தார், மறுபடியும் மாலை காரில் வரும்போது முன் சென்ற பைக்காரர் மீது கோபம் வந்தது இப்படியாக ஒரு நாள் முழுவதும் ஒரு சக மனிதரை நான் எப்படி நடத்துகிறேன் என்று என்னையே
நான்  சோதிக்க வேண்டி வந்தது.


அந்த நாளின் சோதனையின் முடிவில் நான் மனிதர்களை அவர்களின் உருவம், அந்தஸ்து, அதிகாரம், பணம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே முடிவு செய்கிறேன் என்று தோன்றியது. ஒரு முழுமையான மனிதர்களையே, படித்தவர்களாகிய நாம் இப்படி நடத்தும்போது சில விளிம்பு நிலை மனிதர்களை இந்த சமூகம் எப்படி எல்லாம் நடத்தும் என்று எண்ண தோன்றியது.

இந்த பூமியில் இருக்கும் எல்லா மனிதர்களுக்கும் உணர்ச்சிகள் ஒன்றுதானே ? ஏழையோ - பணக்காரனோ, இந்தியனோ - அமெரிக்காகாரனோ  எல்லோருக்கும் பசி, கோவம்,  மோகம், தாகம், அழுகை, இரக்கம், பயம்  என்று உணர்சிகள் எல்லாம் ஒன்றுதான், ஆனால் நாம் மனிதர்களை மனிதர்களாக பார்கவில்லை, அவர்களிடம் தெரியும் அல்லது நாம் உணர்வதை வைத்தே எடை போட்டு பேசுகிறோம். நம்மை பொறுத்தவரை மனிதன் என்பவன் செதுக்கிய சிற்பம் போல இல்லையா...எந்த குறையும் இருக்க கூடாது. யோசித்து பாருங்கள்...
கை இல்லாதவர், ஊமை, செவிடு, கால் இல்லாதவர், திருநங்கை, முகம் சிதைந்தவர்கள், வெள்ளை தேமல் உள்ளவர்கள், ஜெயிலுக்கு போய் திரும்பி வந்தவர், எய்ட்ஸ் நோயாளி, விபச்சாரி, மனநிலை தவறியவர், உடம்பில் கொப்புளங்கள் உள்ளவர்கள், முசுடு, அதிகம் உணர்ச்சிவசப்படும் மனிதர், படிக்காதவர்கள், கண் தெரியாதவர்கள், நடக்க முடியாமல் வீல் சேரில் வருபவர்கள், மறதி உடையவர்கள், நோயாளிகள் - கான்சர், டி.பி., ஆங்கிலம் அறியாதவர்கள், நகரத்தின் விதிகள் அறியாத கிராமத்து மக்கள், பணம் எண்ண தெரியாதவர்கள், பசி மயக்கத்தில் உள்ளவன் இவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா....இவர்களை எல்லாம் நாம் பழகும் மனிதர்களை விட கீழே நினைக்கிறோம், என்பதுதானே உண்மை. ஒரு திருந்திய சிறை கைதியை நாம் ஒரு சகமனிதனாக நினைத்து மனதில் எந்த குறுகுறுப்பும் இல்லாமல் நம்மால் பேச முடியுமா ?






அன்னை தெரசா அவர்களுக்கு எல்லோரும் மனிதர்களாக தெரிந்தார்கள், நான் எழுதும் தொடரான "நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள்" பதிவில் வரும் எல்லோரும் ஒரு சக மனிதனிடம் அன்பு பாராட்டுபவர்கள். ஒரு மனிதனை ஜாதி, மதம், அந்தஸ்து, பிறப்பு என்று எதையும் பாராமல், அவர்களின் உணர்சிகள் மட்டுமே பார்க்கும் அவர்கள் மனிதர்கள்.....ஆனால் நாம் ??

எனது வீட்டின் அருகே உள்ள ஒரு இடத்தில் நேற்று வண்டியை நிறுத்திவிட்டு கடையின் உள்ளே ஒரு பொருள் வாங்க சென்று இருந்தேன், அப்போது எனது வண்டியில் பையை மறந்து விட்டேன் என எடுக்க சென்ற போது ஒரு மனநிலை தவறிய நபர், மிகுந்த அழுக்காக, தலை பரட்டையுடன் என் வண்டியை தடவி கொண்டிருந்தார், எனக்கு வந்த கோவத்திற்கு கண்டபடி திட்டி விரட்டினேன். பையை உள்ளே கொண்டு போய் சாமானெல்லாம் வாங்கி வண்டிக்கு திரும்பியபோது எனது வண்டியை நோ பார்கிங்கில் நிறுத்தியதாக கூறி ஒரு போலீஸ்காரர் நின்று கொண்டு கத்தி கொண்டு இருந்தார், அந்த இடத்தில் ஒரு போர்டும் இல்லாமல் அவர் கத்தியபோது என்னால் அதை சொல்ல முடியவில்லை, எவ்வளவு கெஞ்சியும் எனது சாவியை எடுத்துக்கொண்டதால் 100 ரூபாய் கொடுத்து கடைசியில் எனது சாவியை வாங்க வேண்டி இருந்தது. வண்டியில் ஏறி அதை ஸ்டார்ட் செய்யும்போது என்னின் அருகில் வந்த அழுக்காக, வயிறு ஒட்டிய, கிழிந்த சட்டை போட்ட சிறுவன் ஒருவன் என்னின் கையை தட்டி "சார்...ரொம்ப பசிக்குது, ஏதாவது குடுங்க" என்று குரலில் அழுகையுடன் சொல்ல, என்னால் கோவத்தை அடக்க முடியாமல், தள்ளி போறியா இல்லையா, வந்துட்டானுங்க என்று சொல்லிவிட்டு எனது வண்டியை ஸ்டார்ட் செய்தேன், அது அவனை பாதித்திருக்கும் போல, உடனே அவன் "நானும் ஒரு மனுசந்தான் சார்...உங்களுக்கு இருக்கிற எல்லா உணர்ச்சியும் எனக்கும் இருக்கு, பசி உட்பட" என்று நகர....எதோ என்னின் மனதை பிசைய ஆரம்பித்தது, அவனும் மனிதன்தானே....

Monday, September 24, 2012

அறுசுவை - திண்டுக்கல் நன்னாரி சர்பத்

நல்லா  வெயில் அடிக்கும்போது நீங்க தாகத்துக்கு என்ன சாப்பிடுவீங்க ? கோக், பெப்சி  அப்படின்னு சொல்லாதீங்க...அது எல்லாம் வெளிநாட்டு பானங்கள், உடம்புக்கும் கெடுதல். நம்ம திண்டுக்கல்லுல மக்கள் எல்லாம் சோடா சர்பத் சாப்பிடறாங்க....வாங்க நாமளும் சாபிடலாம் !!


நம்ம ஊரு நன்னாரி சர்பத் சாப்பிட்டு இருக்கீங்களா ? நன்னாரி ” சுகந்த திரவியங்கள்” குழுவில் சேர்க்கப்பட்ட மணமூட்டும் செய்கையுடைய மூலிகை. இதன் பெயரே நல் + நாரி. அதாவது நல்ல மணமுடையது என்று பொருள். இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும். நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள நீங்கள் இங்கே சொடுக்கவும்...நன்னாரி


நான் போன வாரம் திண்டுக்கல் போனபோது வெயில் மண்டையை பொளந்தது...அட ஜூஸ் எதாவது சாபிடலாமின்னு நம்ம திண்டுக்கல் கடைவீதியில் சுத்திக்கிட்டு இருந்தப்ப என் மச்சான் வாங்க சர்பத் சாபிடலாமின்னு கூப்பிட்டான். அட டீக்கடையில்தான் இப்ப சர்பத் வைச்சிருக்காங்க, அவன் நல்ல தண்ணி யூஸ் பண்ணுவானா அப்படின்னு இருகிரப்ப....சர்பத்க்கு மட்டுமே ஒரு கடை இருக்கு அப்படின்னு சொன்ன கடைதான் இந்த JMS சர்பத் கடை. பல பல வருசமா இவங்க அவங்களே தயாரிச்ச சர்பத், சோடா விக்கிறாங்க. இங்க வெறும் சர்பத் மட்டும்தான்.

இங்க சர்பத் ரெண்டு வகை...ஒண்ணு தண்ணி ஊத்தி, ரெண்டாவது சோடா ஊத்தி. அந்த கடைகாரர் சர்பத் போடற வேகத்தை பார்த்தா நமக்கு தலையை சுத்தும்....அப்படி ஒரு ஸ்பீடு. சல்லுன்னு க்ளாசை கழுவி, எலுமிச்சம்பழத்தை புளிஞ்சி விட்டு, நன்னாரி சர்பத்தை அளவா ஊத்தி, சோடாவை லாவகமா உடைச்சி அதில் ஊத்தி ஒரு கலக்கு கலக்கி குடுத்தவுடன் அதை அந்த வெயிலுக்கு இதமா குடிச்சா......
சொர்கம்ன்னா அது இதுதான்னு தோணும். இந்த கடை சர்பத் ரொம்பவே பேமஸ், இவர்களே தயாரிக்கும் நன்னாரி சர்பத் ஆதலால் ருசி மிகவும் நன்றாக இருக்கிறது. முதலில் நானும் இங்கு செல்லும்போது "அட, இதுவும் ஒரு சர்பத் கடைதானே" என்று தோன்றியது, ஆனால் குடித்து பார்த்தவுடன்தான் இது எல்லாவற்றையும் போல அல்ல என்று உறுதியானது.

கண்டிப்பாக நீங்கள் திண்டுக்கல் பக்கம் போனா இங்க போய் ஒரு சர்பத் சாப்பிட்டு பாருங்க, ஒரு வித்யாசமான அனுபவமாக இருக்கும்.

பஞ்ச் லைன் :
சுவை               -      வெயிலுக்கு இதம் - தொண்டைக்கு குளிர்ச்சி - நாவுக்கு சுவை , கண்டிப்பாக சோடா சர்பத் மிஸ் செய்யாதீர்கள்.
அமைப்பு         -       ரொம்ப ரொம்ப சின்ன இடம், பார்கிங் வசதி கிடையவே கிடையாது. கோட்டை மாரியம்மன் கோவிலில் பார்க் செய்து விட்டு நடந்து செல்லலாம்.
பணம்              -      கொடுக்கும் விலைக்கு சரியான சுவை ! ஐந்து ரூபாய்தான் !

சர்வீஸ்           -       சூப்பர் !

 

Sunday, September 23, 2012

நான் ரசித்த குறும்படம் - Pigeon Impossible

குறும்படங்கள் என்றாலே நாம் எல்லோரும்  போல  தமிழில் மட்டும் இல்லை, அதையும் தாண்டி எல்லா இடத்திலும் இது போல முயற்சிகளும், பல நல்ல படங்களும் இருக்கின்றன. ஆகவே இந்த பகுதியில் நீங்கள் சில மற்ற மாநில, தேச குறும்படங்களையும் பாருங்கள் !!

இங்கே நீங்கள் பார்க்க போவது Pigeon Impossible எனப்படும் ஒரு கார்ட்டூன் குறும்படம். இதை செய்ய 5 வருடங்கள் ஆனது !! ஆனால் இதில் தெரியும் குறும்பு, புத்திசாலித்தனம் உங்களை ரசிக்க வைக்கும். ஒரு குறும்படம் உங்களை முதல் முப்பது நொடிகளில் வசபடுதவில்லை என்றால் அது வெற்றியடையாது...இந்த குறும்படத்தில் நீங்கள் அதை உணர்வீர்கள் !!

ஆச்சி நாடக சபா - ப்ளூ மேன் ஷோ

நீங்கள் 1980-களில் டிவியில் வரும் மிரிண்டா விளம்பரங்கள் பார்த்திருகிரீர்களா ? மூன்று மொட்டை தலை ஆரஞ்சு வண்ண மனிதர்கள் முட்டாள்களை போல அடிக்கும் கூத்துக்கள் !! அன்று அது மிகவும் பிரபலம், அதை ப்ளூ கலர் ஆக்கி இன்னும் கொஞ்சம் மியூசிக், குறும்பு, ஐடியா சேர்த்து உருவாகியதுதான்  "ப்ளூ மேன் குரூப்". இன்று இவர்கள் மிக மிக பிரபலம்....அது மட்டும் அல்ல இவர்கள் பணத்தை அள்ளி குவிகிறார்கள்.





இவர்களது ஷோவில் புதுமையான இசை, யாரையும் காயபடுத்தாத நகைசுவை, புதுமையான ஐடியா என்று இருக்கும். பெரும்பாலும் எல்லா ஷோவிலும் எதாவது ஒன்று புதிதாக இருக்கும். உதாரணமாக பைப் கொண்டு இசை, டிரம் இசை என்று பார்பதற்கே புதிதாக நன்றாக இருக்கும், பின்னர் உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் எதாவது ஒரு நகைசுவை, இவை எல்லாமே இந்த மூன்று ப்ளூ முட்டாள் மனிதர்கள் செய்யும் சேஷ்டைகளாக !!


இவர்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்...


நமது ஊரில் மயில்சாமி, இன்னும் பல காமெடி நடிகர்கள் எல்லாம் இதை விட நன்றாக செய்வார்கள், ஆனால் சில புதுமைகள் இருக்காது. அவர்கள் அதை எல்லாம் சேர்த்து செய்தால் உலக புகழ் பெற்ற ஒரு ஷோவாக உருவாகும். இந்த வீடியோ பார்த்தீர்கள் என்றால் இந்த ப்ளூ மேன் பின்னே யார் இருக்கிறார்கள், அதை எப்படி உருவாகினார்கள் என்று உங்களுக்கே புரியும்.


அந்த ஷோவின் படங்கள் சில கீழே...






Saturday, September 22, 2012

உலகமகாசுவை - மெக்ஸிகன் உணவுகள் (பாகம் - 1)

அமெரிக்காவிற்கு கீழே வால் போல நீண்டு இருக்கும் உலக வரைபடத்தில் இருக்கும் நாடுதான் மெக்ஸிகோ !! நம்ம "கந்தசாமி" படத்தில் விக்ரம் ஆடும் மாம்போ மாம்யா என்னும் பாடல் மெக்ஸிகோ நடனத்தை காட்டும். அந்த நாட்டின் உணவு வகைகளைத்தான் நாம் இப்போது பார்க்க போகிறோம் !






நம்ம ஊரில் எல்லாம் நீங்கள் சாப்பிட உட்கார்ந்தவுடன் ஸ்டார்ட்டர் என்று வடை, பக்கோடா என்று தருவார்கள் இல்லையா....அது போல இங்கே டோர்டில்லா (Tortilla) சிப்ஸ் உடன் சல்சா (நாக்கில் இப்போதே எனக்கு நீர் ஊருகிறது), இதில் சல்சா என்பது நமது ஊர் தக்காளி சட்னி போல......ஆனால் இதன் டேஸ்டே தனி. வீட்டில் நீங்கள் இருக்கும்போது நமது உருளைக்கிழங்கு சிப்சுக்கு ஒரு நல்ல சாய்ஸ் இந்த சல்சா. கீழே இருக்கும் படத்தில் சிகப்பாக இருகிறதே அதுதான் சல்சா !!

                            
இந்த சல்சாவை எப்படி செய்வது என்று நீங்கள் இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்...

                                     

இதை நீங்கள் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது நாக்கிற்கு ஏதாவது குடிக்க வேண்டுமே, அதற்க்கு மெக்ஸிகோவின் புகழ் பெற்ற ஒரு காக்டெயில் ட்ரின்க்தான் "மார்கரிட்டா (Margarita)". இது டகீலா என்னும் உயர் ரக மது மற்றும் லெமன் ஜூஸ் கொண்டு தயாரிக்கப்படும். எனக்கு மிகவும் பிடித்த பானம் இது !! இதை நீங்கள் சிறுக சிறுக பருகி கொண்டே அந்த டோர்ட்டில்லா சிப்ஸ் சாப்பிட்டால் அது ஒரு சொர்க்கம் ! இதுவரை நான் சொன்ன உணவு வகையின் பெயர் எதுவும் புரியவில்லை என்றாலும் சரி....ஆனால் இதற்க்கு பின்னே நான் சொல்ல போகும் எல்லாம் கெட்ட வார்த்தைகள் இல்லை, அதுவும் உணவுகளின் பெயர்கள்தான் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

                                      

 எங்கே நான் சொல்வதை எல்லாம் திருப்பி சொல்லுங்கள் பார்போம்.....பாஜிட்டா, சிமிச்சங்கா, பரிட்டோ, பிளாடோ.....என்ன வாய் சுளுக்கி கொண்டு விட்டதா ??!!! அப்போ இதை எல்லாம் சாப்பிடும்போது ??!! பயபடாதீர்கள், பெயர்தான் இப்படியே தவிர சுவை எல்லாம் அபாரம் ! நானும் எனது நண்பர் ராமும் சிங்கப்பூரில் பல முறை இந்த மெக்ஸிகன் உணவுகளை உண்டிருக்கிறோம், ஒவ்வொருமுறையும் எங்களை கவர்ந்தது இது.


                                

முதலில் நாம் இந்த பாஜிட்டா என்னும் உணவை பற்றி பார்ப்போம். இந்த உணவை பற்றி நாம் சுருக்க சொல்வதென்றால் நம்ம ஊர் சப்பாத்தியில் சில்லி சிக்கன் வைத்து சுருட்டி நீட்டினால் எப்படி இருக்குமோ அது போலவே இருக்கும்....என்ன நீங்கள்தான் இங்கு சுருட்ட வேண்டும் ! உங்களுக்கு முதலில் டோர்டில்லாவில் செய்யப்பட்ட சப்பாத்தி போன்ற ஒன்று ஒரு தட்டில் வைக்கபட்டிருக்கும், இன்னொரு தட்டில் உங்களுக்கு பிடித்த மாமிசம், வேக வைக்கப்பட்டு, தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் (மெக்ஸிகோ பச்சைமிளகாய் சார் !!) உடன் சல்சா, புதினா சட்னி போன்று ஒன்றுடன் இருக்கும். நீங்கள் இதை பார்த்தவுடன்
 ஒரு சப்பாத்தியை உங்கள் கைகளில் எடுத்து கொண்டு மேலே சொன்ன 
ஒவ்வொன்றையும்   எடுத்து அதில் வைக்க வேண்டும், பின்னர் ஒரு சுருட்டு சுருட்டி வாயில் வைத்து விழுங்க வேண்டும். நான் சொன்ன விதத்தில் வேண்டுமானால் தவறு இருக்கலாம்.....ஆனால் சுவையில் எந்த குறையும் இருக்காது என்பதற்கு நான் காரண்டி !



இந்த பாஜிட்டா என்பது சிக்கன், பீப், போர்க் மற்றும் ஷ்ரிம்ப் கறிகளில் கிடைக்கும் அதை எப்படி செய்வது என்பதை கீழே பார்ப்போம்.


இந்த வாரம் இதை பார்த்தே உங்களுக்கு வயிறு நிரம்பியிருக்கும், அடுத்த பாகத்தில் நாம் சிமிச்சங்கா, பரிட்டோ, பிளாடோ மற்றும் அவர்களின் டிசர்ட் வகைகளை பார்போம்.

Friday, September 21, 2012

நான் ரசித்த கலை - சுதா/கார்ஸ்

பொதுவாக கார் என்றாலே நமக்கு நான்கு வீல், ஸ்டீரிங், பானெட் என்று ஒரு எண்ணம் உண்டு, ஆனால் முதல் முறை பால் கார், ஹெல்மெட் கார், படுக்கை கார் என்று வித விதமான கார் உங்கள் கண் முன் அசையும்போது சிறு பிள்ளை போல கைதட்டி ரசிப்பீர்கள். இதை எல்லாம் செய்வது ஹைதராபாத்தை சேர்ந்த திரு. சுதாகர் அவர்கள். கீழே உள்ள படத்தை, வீடியோவை பார்த்து இதெல்லாம் காரா என்று ஆச்சர்யபடவேண்டாம்....நிஜமாகவே இது கார்தான்.





இவர் செய்த கார் எல்லாம் கொண்டு பெரும் கண்காட்சி வைத்துகொண்டிருப்பார். இவரின் அபரிதமான கற்பனைக்கு பல பல விருதுகள் கிடைத்துள்ளன இதில் கின்னஸ் விருதும், லிம்காவின் புக் ஆப் ரெகார்ட்ஸ் விருதும் இவரின் திறமைக்கு சாட்சி. ஹைதராபாத்தில் உள்ள இவரது அருங்காட்சியகம் காலை 9:30 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். நீங்கள் ஹைதராபாத் சென்றால் இதை பார்க்காமல் திரும்பாதீர்கள் !!

இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....சுதா/கார்ஸ்