Tuesday, October 9, 2012

அறுசுவை - பெங்களுரு "99 வகை தோசை"

எத்தனை நாள்தான் ரொட்டி, பரோட்டா, பிரியாணி என்று சாப்பிடுவது, அதனால் ஒரு நாள் எந்த இடத்தில நல்ல தோசை கிடைக்கும் என்று தேட ஆரம்பித்தேன். தோசை என்றால் பெங்களுருவில் மாசல் தோசைதான், அதையும் தாண்டி என்றால் ஊத்தப்பம், ரவா தோசை. நான், ஏதோ ஒரு ஹோட்டல் கிடைக்கும், அங்கு தோசையும் ஒரு மெனுவில் இருக்கும் என்றுதான் நினைத்தேன்.....
ஆனால் தோசை மட்டுமே மெனுவாக இருக்கும் என்று சத்தியமாக நினைக்கவில்லை !!

 

கூகுளில் தேடியபோது தோசை கிடைக்கும் இடம் ஒன்றும் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை, கடைசியில் இந்த "99 வகை தோசை" பதிவு ஒன்று கண்ணில் பட்டது. ஆனால், அட்ரஸ் ஒன்றும் தெளிவாக இல்லை. ஆதலால் போகலாமா வேண்டாமா என்று இருந்தது, முடிவாக சனிக்கிழமை அன்று போகலாம் என்று முடிவானது. இந்த இடம் ஒரு கையேந்தி பவன், ஆனால் சுவையோ அபாரம். இவர்கள் கொடுக்கும் விதவிதமான தோசைக்கு அவ்வளவு கூட்டம் !! இதற்க்கு பக்கத்தில் மும்பை தோசா ஸ்டால் என்று ஒன்று இருந்தும், இங்குதான் கூட்டம் அலைமோதியது !



ஒரு வழியாக கிளம்பி விட்டோம், அட்ரஸ் என்பது கோரமங்களா பார்க் அருகில் என்று, ஆனால் பெங்களுருவில் நிறைய பார்க் இருந்ததால் சிரமம் இருந்தது, யாரவது ஒருவரிடம் கேட்கலாம் என்றால் என்ன சொல்லி கேட்பது என்று தெரியவில்லை. ஆகையால், ஒரு குத்துமதிப்பாக சென்றோம், ஒரு வழியாக சொன்ன இடத்தை அடைந்து விட்டோம் !! இது கோரமங்களாவில் உள்ள லக்ஷ்மிதேவி சில்டர்ன்ஸ் பார்க் அருகில் உள்ளது !!




அங்கு சென்று மெனு கார்டு தேடினால் இல்லை என்றனர், சரி என்ன தோசை சொல்லலாம் என்று மண்டையை சொரிந்தால் அங்கு இருந்த பெண்மணி (முதலாளி !) சர சரவென்று சொல்ல ஆரம்பித்தார்....பனீர், மேதி, மசாலா, டிரை ஆலூ, கோபி, ஆனியன், பாவ் பாஜி, மஷ்ரூம்......இப்படி சொல்ல ஆரம்பிக்க எங்களுக்கு இன்னமும் குழம்பியது, ஒரு வழியாக போட்டு கொண்டிருந்த தோசையில் அழகான தோசையாக சொன்னோம். ஆக....உங்களுக்கு வேண்டிய தோசையை நீங்கள் கேட்டு அல்லது பார்த்து சொல்லலாம், அல்லது இதன் பக்கத்தில் இருந்த மும்பை 99 வகை தோசை கடையில் இருக்கும் மெனு கார்டு படித்து செலக்ட் செய்துவிட்டு இங்கு வந்து சொல்லலாம் !!



அவர்கள் சர சரவென்று தோசையை ஊற்றி ஒன்றின் மேல் ஒன்றாக ஏதேதோ போடும்போது வயிற்றில் புளியை கரைக்கும் உணர்வு, ஆனால் அந்த தோசை தட்டில் வந்து உங்கள் வாய்க்கு செல்லும்போது அதன் சுவையில் நீங்கள் மெய் மறப்பது நிச்சயம் ! முறுகலாக, உள்ளே காரமான மசாலா, தொட்டு கொள்ள தேங்காய் மற்றும் புதினா சட்னி என்று இருக்கும்போது இன்னும் இரண்டு தோசை உள்ளே இறங்கும். ஒவ்வொரு தோசையும் அவ்வளவு ஒன்றும் விளையும் இல்லை.....இருபது முதல் ஐம்பது ரூபாய்தான் !!


பஞ்ச் லைன் :

சுவை               -      ரொம்ப ரொம்ப ரொம்பவே நன்றாக இருக்கிறது, கண்டிப்பாக மிஸ் செய்ய கூடாத சுவை !.

அமைப்பு         -       சிறிய கையேந்தி பவன், பார்கிங் வசதி சற்று குறைவு ஆனால் பார்க் என்பதால் அங்கு எங்கேயாவது ஒரு பார்கிங் இடம் கிடைத்து விடுகிறது.


பணம்              -      குறைந்த விலை,  ஒவ்வொரு தோசையும், அதை போடும்போது அவர்கள் போடும் விதவிதமான ஒன்றையும் பார்க்கும்போது விலை குறைவோ குறைவு.
சர்வீஸ்           -       ரொம்பவே நன்றாக இருக்கிறது !

திறக்கும் நேரம் - மாலை 5 மணி முதல்

முகவரி  -

பாலாஜி தோசா கார்னர்,
லக்ஷிமிதேவி பார்க் அருகில்,
பஜாஜ் ஷோரூம் எதிர்புறம்,
6th பிளாக், 80 feet ரோடு,
கோரமங்களா,
பெங்களூர்




13 comments:

  1. 50 ரூபாய் குறைந்த விலையா, சார்?

    ReplyDelete
    Replies
    1. சார், நான் பக்கத்தில் போட்டு இருந்த ஆச்சர்ய குறியை கவனியுங்கள்...விலை அதிகம் என்பதால்தான் ஒரு கிண்டலுக்கு ஆச்சர்ய குறி போட்டு இருந்தேன். நீங்கள் சொன்னதுதான் சரி, நானும் ஆமோதிக்கும் ஒன்று.
      தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

      Delete
  2. வெகு அருமையான தோசைகள் பதிவு.
    நாக்கில் நீர் ஊற வைக்கும் படங்கள்.
    வலைச்சரத்தின் மூலம் என் முதல் வருகை.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார், இன்னும் சுவையான பகுதிகள் வரவிருக்கின்றன.....எதிர் பாருங்கள் !

      Delete
  3. நான் ஒரு தோசை விரும்பி.

    இங்கு திருச்சியிலேயே சூப்பரான தோசைகள் கிடைக்கின்றன.
    இங்கும் அதே 50 ரூபாய் தான். அதனால் அது ஒன்றும் விலை ஜாஸ்தி என்றெல்லாம் நான் சொல்லவே மாட்டேன்.

    வாய்க்கு ருசியாகக்கிடைக்கணும் .. அது தான் முக்கியம். பணமா முக்கியம்?

    சில இடங்களில் பணம் கொடுத்தாலும் இது போல வாய்க்கு ருசியான உணவுப் பொருட்கள் கிடைக்கவே கிடைக்காது என்பதை நான் நன்றாகவே உணந்தவன்.

    அன்புடன்
    தோசை விரும்பி.
    VGK

    ReplyDelete
    Replies
    1. நன்கு சொன்னீர்கள் சார்...இந்த பதிவில் எழுதுவதற்காக நான் பத்து இடங்களில் சாபிட்டால், இரண்டு இடங்கள்தான் தேறுகிறது சுவையில்....சில நேரங்களில் வயிறு உபாதைகள் வேறு !! காசு கொடுத்தாலும் சில நேரங்களில் நல்ல சுவை கிடைபதில்லை.....பெங்களுருவில் ஒரு இடத்தில ஐம்பதுக்கும் மேலான வகைகளில் டீ கிடைகிறது தெரியுமா....?? நாக்கில் ஊரும் மசாலா தோசை எங்கு கிடைகிறது தெரியுமா ?

      Delete
  4. மதுரை சபரீஸ் உணவகத்தில் இதுபோல் விதவிதமான தோசைகள் சாப்பிட்டிருக்கிறேன். மதுரைக்குச் சென்று பல மாதங்களாகி விட்டன. தங்களது பதிவை பார்த்ததும் மீண்டும் விதவிதமான தோசைகளைக் தேடுகிறது மனது. பெங்களுருக்கு செல்ல முடியாவிட்டாலும், மதுரைக்காவது செல்ல வேண்டும்.
    வலைச்சரம் மூலமாக தங்களது பதிவிற்கு வந்தேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மதுரை என்றால் எனக்கு நினைவுக்கு வருவது பெரியார் நிலையம் அருகில் இருந்த அசோக் பவனில் அம்மா வாங்கி கொடுத்த ராக்கெட் தோசையும், கையேந்தி பவன் இட்லியும்தான் !! நன்றி நண்பரே...தங்களது வருகைக்கும், கருத்திற்கும் !!

      Delete
  5. தோசை யில் பலவிதம்.
    ஒவ்வொன்றும் ஒரு விதம்.

    சாதா தோசை.
    நெய் தோசை. கீ ரோஸ்ட்.
    ரவா தோசை. ரவா கீ ரோஸ்ட்.
    ஆனியன் தோசை. ஆனியன் கீ ரோஸ்ட்.
    பெப்பர் தோசை. பெப்பர் ஆனியன் கீ ரோஸ்ட்.
    கார்லிக் பெப்பர் தோசை.
    புதினா பெப்பர் ரோஸ்ட்.
    மசால் தோசை.
    நெய் ரவா வெங்காய ஸ்பெஷல் மசாலா ரோஸ்ட்.

    வீட் தோசை. அதில் வெட் தோசை. ரோஸ்ட் வீட் கீ தோசை.
    ஃபாமிலி ரோஸ்ட்..... டயாமீடர் ஐந்து அடி.
    பெஸரட் தோசை. இது கர்னாடகா மா நிலம் முழுவதும்
    பார்லி ஓட்ஸ் ம்ருது ரவா தோசை.

    இதைத் தவிர அசைவ தோசை.
    நடுவில் மஞ்சள் முட்டை கரு ஊத்தப்பட்டிருக்கும்
    இதை ஆம்லெட் என்றும் சொல்லலாம்.

    தோசைக்கு பல்வேறு சைட் டிஷ்கள்.
    இட்லி மிளகாய் பொடி, தேங்காய் சட்னி, கொத்தமல்லி சட்னி, இஞ்சி பூண்டு சட்னி,
    வெத்தக்குழம்பு, வெங்காய சாம்பார், மோர்க்குழம்பு, புதினா சட்னி.

    கல் தோன்றி மண் தோன்றும் காலத்துக்கும் முன்னே பிறந்தது
    இட்லியா தோசையா என்னும்
    பட்டி மன்ற நிகழ்ச்சி சாலமன் பாப்பையா அவர்கள் தலைமை வகித்து நடத்தினால்
    மட்டுமே இந்த தோசை புராணம் தெள்ளெனத் தெரிய வரும்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. அருமை, அருமை....நா ஊற ஊற படித்தேன்.....என்னுடைய பதிவுக்கு நிஜமான பாராட்டு என்று தோன்றுகிறது. நன்றி நண்பரே, தங்களது வருகைக்கும், கருத்திற்கும் !!

      Delete
    2. நீங்கள் தோசையைப் பற்றி இத்தனை சுவையாகப் பதிந்தால் நாங்கள் எப்போ பங்களூருக்குப் போவது :)மாவும் சுத்தமாக இருந்து வார்ப்பவரும் மாஸ்டராக இருந்தால் ம்ம்ம்சுவைக்கு ஏது குறை.

      Delete
    3. வல்லிசிம்ஹன் சாருக்கு ஒரு ஸ்பெஷல் தோசை பார்சல்..........

      Delete
  6. தல..... இன்னும் இந்த கடை இருக்கா?

    ReplyDelete