Monday, October 29, 2012

அறுசுவை - சென்னை "மண் வீடு" உணவகம்

சமீபத்தில் சென்னை சென்று இருந்தபோது எனது நண்பர்களுடன் நேரம்
செலவிட முடிந்தது, நிறைய பேசினோம். பேசினால் மட்டும் போதுமா, வயிறும் நிறைய வேண்டுமே. வெகு காலத்திற்கு பிறகு சந்திப்பதாலும், நன்கு சாப்பிட வேண்டும் என்பதாலும், தேடி பார்த்தபோது இந்த பெயரே 
எங்களை ஈர்த்தது. ஆனால், பெயருக்கு ஏற்றார்போல சாப்பாடும் 
வித்தியாசமாக,  சுவையாக, சுத்தமாக இருந்தது ! விலைதான் ஜாஸ்தி !

இந்த உணவகத்தை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்..."மண் வீடு" உணவகம்



உள்ளே நுழைவதற்கு முன்னரே உங்களது புருவங்களை உயர்த்த வைக்கும் வகையில் எல்லாம் மண்ணால் செய்யப்பட்ட அலங்காரங்கள்...
கோலங்கள், மாட்டு வண்டி என்று புதுமையாக இருந்தது. பார்கிங் செய்வதற்கு அவ்வளவு இடம் இல்லை இங்கு, ஆனால் ஒரு காவலர் இருப்பதால், அவர் இடம் ஏற்படுத்தி தந்து விடுகிறார். உள்ளே நுழைந்தவுடன் உங்களை ஒரு இடம் பார்த்து அமர்த்தி விட்டு கையில் மெனு கார்டை கொடுத்தவுடன்தான் நாம் சாப்பிடலாமா, அல்லது எழுந்து சென்று விடலாமா என்று தோன்றியது...அவ்வளவு காஸ்ட்லி !! நாங்கள் பசியோடு இருந்ததாலும், வேறு இடம் தேட மனம் இல்லாததாலும், சரி என்று மெனு கார்டை மேய ஆரம்பித்தோம்.

நான் எனது பார்வையை மெனு கார்டிலிருந்து திருப்பி நோட்டம் விட ஆரம்பித்தேன், இடம் விசாலமாக இருந்தது, நல்ல உள் அமைப்பு, உங்களது டேபிள் விரிப்பில் கூட ஒரு கலை வண்ணம் என்று அருமையாக இருந்தது, ஆனால் உள்ளே வெளிச்சம் ரொம்ப கம்மி, நாங்கள் சாப்பிட்டு முடித்து வெளியே வரும்போது வெளிவெளிச்சம் ஒத்துக்கொள்ளவில்லை!
நான் மேடு கார்டை பார்த்து கொண்டிருந்தபோது சட்டென்று ஒரு வார்த்தை என்னை நிறுத்தியது....ஜமீன் விருந்து. நமது படத்தில் எல்லாம் ஜமீன் என்றால் பிரமாதமாக காண்பிப்பதால், ஒரு ஆர்வத்தில் நானும் எனது நண்பனும் வெஜ் ஒன்றும், நான்-வெஜ் ஒன்றும் என்று ஆர்டர் செய்தோம். மற்ற இருவரும் பிரியாணி, வைட் ரைஸ், நாகப்பட்டினம் கருவாட்டு குழம்பு, சிக்கன் இடிச்சது என்று ஆர்டர் செய்ய நாங்கள் அவர்களை நக்கலாக பார்த்தோம் !! என்ன இருந்தாலும் ஜமீன் விருந்து என்றால் சும்மாவா !!

ஜமீன் விருந்தில் முதலில் உங்களுக்கு சூப், ஸ்டார்ட்டர் வகையில் சிறிது பிங்கர் சிப்ஸ், இரண்டு பீஸ் வறுத்த இறைச்சியோ / பேபி கார்ன் வகையோ முதலில் வரும். நாங்கள் இதுதானே ஆரம்பம் என்று திமிராகவும், நக்கலாகவும் எங்களது நண்பர்களை பார்த்துக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தோம். அவர்கள் நண்டு சூப்பும், கோழி இடிச்சதும் வந்தவுடன் சாப்பிட ஆரம்பித்தனர்.

எல்லாம் முடித்தவுடன், ஒரு தட்டில் கீழே காண்பித்து போல ஒரு இடியாப்பம், பீஸ் புலாவ், வறுத்த கறி, மற்றும் நான்கு வகை மசாலாக்கள் வந்தன, பின்னாலேயே நான், குல்ச்சா, ரோட்டி என்று ஒரு சின்ன கூடையில் !! நாங்கள் ஒவ்வொன்றாக, ஆனால் ஜாக்கிரதையாக குறைவாக சாப்பிட்டோம், ஏனென்றால் ஜமீன் விருந்தல்லவா...இன்னும் நிறைய வரும்போது வயிற்றில் இடம் வேண்டும் அல்லவா. ஒரு ஜமீன் சமஸ்தானத்தில் விருந்து என்பது எவ்வளவு முக்கியம், போதும் போதும் என்ற அளவுக்கு அவர்களை உணவினுள் ஆச்சர்யபடுதினால்தானே ஜமீனுக்கு பெருமை !

                          


வெஜ் ஜமீன் விருந்து

நான் - வெஜ் ஜமீன் விருந்து
 எங்களுக்கு கொடுத்த சைடு டிஷ் என்னவென்று கண்டுபிடிக்கவே நாங்கள் திணற வேண்டி இருந்தது, சரி சர்வரையே கேட்போம் என்றால் அவர் தலையை சொறிந்தது கண்டு கலங்கி விட்டோம். மெனு கார்டில் தேடலாம் என்றால் அதில் மொட்டையாக ஜமீன் விருந்து என்று மட்டும் இருந்ததால், யாரிடம் கேட்பது என புரியவில்லை. அட பரவாயில்லை என்று இடியாப்பத்தையும், நான், குல்ச்சாவையும் சாப்பிட்டு முடித்து விட்டு அடுத்து என்னவென்று கேட்டால் ஆடு போல எல்லோரும் விழிக்கின்றனர்!! முடிவில் அவ்வளவுதான் என்றபோது, எங்களுக்கு பக்கத்தில் நாகப்பட்டினம் கருவாட்டு குழம்பு வாசனையோடு கையை நக்கி கொண்டே எனது நண்பன் "என்ன மச்சி...ஜமீன் விருந்து அட்டகாசம் போல" என்று வெறுப்பேற்றுகிறான். என்ன சாபிடுவது அடுத்து என்று தெரியாமல், டிசர்ட் கொண்டு வர செய்து சாப்பிட்டோம். அட....இந்த சாப்பாடு கூட பரவாயில்லை, வரும் வழியெங்கும் என்னை ஒட்டி எடுத்து விட்டனர். இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்....இந்த ஜமீன் விருந்து நொடிந்து போய் விட்டது !

ஜமீன் விருந்துதான் அப்படி,ஆனால் எனது நண்பர்கள் மற்ற எல்லாவற்றையும் 
குறையின்றி சாப்பிட்டனர், அதிலும் அந்த கருவாட்டு குழம்பும், இடிச்ச 
கோழியும் மிகவும் அருமை. முடிவில் எங்கள் நான்கு பேருக்கு 2200 ரூபாய் வரை மொய் வைக்க வேண்டி இருந்தது. வீடுதான் மண்ணே தவிர, மற்ற எல்லாம் காஸ்ட்லி இங்கு. ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு 
இங்கு செல்லலாமே தவிர, சுவைக்காக அல்ல, இதை விட சுவையான
உணவு நம்ம சென்னை கையேந்தி பவனிலேயே கிடைகிறது !!



பஞ்ச் லைன் :

சுவை               -      நன்றாக இருக்கிறது, கண்டிப்பாக ஜமீன் விருந்து ஆர்டர் செய்து விடாதீர்கள் !.

அமைப்பு         -       பெரிய இடம், பார்கிங் வசதி சற்று குறைவு ஆனால் ஒரு காவலர் இருக்கிறார், அவர் எப்படியாவது ஒரு இடத்தை உங்களுக்கு காண்பிக்கிறார். உள் அமைப்பு உங்களை நிச்சயம் கவரும்...ஆனால் வெளிச்சம் சற்று கம்மி !!
பணம்              -      அதிக விலை, இதை விட நிறைய இடங்கள் சுவையிலும், பணத்திலும் நன்றாக இருக்கிறது என்பது என் கருத்து.

சர்வீஸ்           -       நன்றாக இருக்கிறது !

முகவரி  -

No.34/72A,4th Main Road,Gandhi Nagar, Adyar,Chennai-20.

Ph No:044-42607475,7299909494.

email:admin@munveedu.com

Website:www.munveedu.com


8 comments:

  1. கடலயே கலங்க வச்சிருக்காங்க ....ஹீ ஹீ ஹி


    அறுசுவையின் சிறப்பே அந்த 4 வரி பஞ்ச லைன் தான் அண்ணா ..

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஆனந்த், கலங்கிதான் போனேன்...ஒரு இடத்திற்கு சாப்பிட போய் மிரண்டு போய் வந்தது இங்கேதான். ஆனால், நிறைய பிரபலங்கள் இங்கே வருகின்றனர் !!

      Delete
  2. பெங்களூருவில் "ஹள்ளி மனே" ஓட்டல்கள் பிரபலம், பார்த்தால் பெயர் உட்பட எல்லாத்தையும் காப்பியடிச்சு இவங்க தமிழ் நட்டு பண்ணிட்டாங்க போல....

    ReplyDelete
    Replies
    1. அட காப்பி அடிச்சதுதான் அடிச்சாங்க, நல்லா அடிக்கலாம் இல்லையா.....பேருதான் மண் வீடு ஆனால் இந்த வீட்டுக்குள் ராஜா மட்டும்தான் உணவு உன்னும்படியாக விலை !! நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  3. போனமாசம் சென்னைக்கு வந்தப்ப இந்தக் கடை பார்த்துட்டு பெயர் நல்லா இருக்கு சாப்பிடப்போகலாமுன்னு தோழிகளைக் கூப்பிட்டேன். தோழியை பிக்கப் பண்ணிக்க அவுங்க வீட்டுக்குப் போனால் எல்லாம் சமைச்சு வச்சுட்டு ரெடியா இருக்காங்க நமக்கு சாப்பாடு போட!

    ஆமாம்...இங்கே வெஜ் சாப்பாடு உண்டா?

    ReplyDelete
    Replies
    1. அப்போ நல்லா சாப்பாடு சாப்பிட்டு இருக்கீங்கன்னு சொல்லுங்க ?! வெளிச்சம் கம்மியா சாப்பாடு சாபிட்டா எங்க அம்மா கத்துவாங்க....அவங்க அன்னைக்கு அங்க இல்லை....இருந்திருந்தா அந்த இடம் இப்போ மண் மேடாதான் இருக்கும் :-). ஆமாம், இங்கே வெஜ் சாப்டும் உண்டு. அதுவும் அருமைதான்....

      Delete
  4. உங்கள் தயவில் பார்த்துத்
    திருப்திப்பட்டுக்கொண்டோம்
    நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல
    விலை மிகவும் அதிகம்தான்
    படங்கள் எப்போதும் போல அற்புதம்
    நேரடியாகப் பார்ப்பதைப் போல இருக்கிறது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார், நமகெல்லாம் இந்த கையேந்தி பவனில்தான் ஒரு சாபிட்ட திருப்தி வரும். இங்கே என்னதான் நல்லா உணவு கிடைத்தாலும் அந்த மன திருப்தி வரவில்லை என்பதுதான் நிஜம் !

      Delete