Tuesday, February 19, 2013

மறக்க முடியா பயணம் - குறுவா தீவு, வயநாடு, கேரளா

திருச்சி செல்கிறவர்கள் முக்கொம்பூர் சென்றிருந்தால் இந்த தீவின் அமைப்பு பற்றி தெரியும். காவிரி ஆறு இரண்டாக பிரிந்து சற்று தூரம் சென்று மீண்டும் சேரும், அந்த பிரியும் இடமே முக்கொம்பூர் என்பார்கள், அதே போல் இந்த குறுவா தீவு கபினி ஆற்றினால் உருவாகி உள்ளது. இதன் சிறப்பம்சம் என்பது இன்னும் அந்த இயற்கையை பாதுகாத்து வைத்திருக்கின்றனர். கேரளா என்னும்போதே இயற்கை நமது கண் முன்னே வரும், அதில் இந்த இடம் வெகு சுத்தமான இயற்க்கை எனலாம்.


இந்த தீவிற்கு செல்வதற்கு சாதாரணமாக நமது ஊரு போல துடுப்பு போடும் படகு இல்லாமல், ஒரு மூங்கில் படகு, அதுவும் ஒரு கயிறை கொண்டு கடக்க வேண்டும். இந்த படகு பயணம் அந்த தீவை பற்றி எதிர்ப்பார்ப்பை மிகவும் அதிகப்படுத்துகிறது. முடிவில் நீங்கள் அந்த பகுதிக்கு சென்றவுடன் இரண்டு பக்கமும் மூங்கில் தடுப்பு கொண்டு ஒரு பாதை வருகிறது, அந்த பாதையின் முடிவில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நடக்க ஆரம்பிப்பீர்கள்....... நடந்து, நடந்து, நடந்து நீங்கள் ஏறி வந்த படகு துறை போன்று இன்னொன்னொன்று வரும்போது ஆஹா, நாமும் செல்ல வேண்டும் என்று நினைத்து நாங்கள் அந்த க்யூவில் நின்றோம். பின்னர்தான் தெரிந்தது அது தீவின் மற்றொரு பகுதி, அந்த பக்கம் இருந்து இந்த தீவுக்கு வருகிறார்கள். ஒரு போர்டு வைக்க கூடாதா !!!



அந்த இடத்திலிருந்து ஒரு பாதை செல்கிறது, அதிலும் நடக்க ஆரம்பிக்கிறீர்கள், ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு இயற்கையின் அதிசயத்தை எதிர் பார்க்கிறீர்கள், ஆனால் ஒவ்வொரு திருப்பமும் ஒரு நீண்ட பாதையை தருகிறது. களைத்து களைத்து எங்களை போல நிறைய பேர் இப்படி நடக்கிறார்கள், எதிரே வருபவரிடம் இன்னும் எவ்வளவு தூரம் என்று கேட்டு கேட்டு நடந்து முடிவில் ஒரு சிறு ஓடை வருகிறது. அதற்க்கு மேல் நடக்க வழி இல்லாமல் இதுதானா அந்த அதிசயம் என்று மனதை தேற்றி கொண்டு குளிக்க நினைத்தால் தண்ணி அந்த அளவு ஆழம் இல்லை. அங்கு தண்ணிக்குள் இருக்கும் வழுக்கு பாறைகளில் கால் வைத்து நடப்பது மட்டுமே ஒரு நல்ல அனுபவம் !



நீங்கள் இந்த தீவுக்குள் கால் வைக்கும்போதே அங்கு என்ன இருக்கிறது, எவ்வளவு தொலைவு நடக்க வேண்டும், அங்கு என்ன பார்க்கலாம் என்றெல்லாம் இல்லாதது ஒரு மிக பெரிய குறை. ஒரு எதிர் பார்ப்புடன் நீங்கள் ஒரு நான்கு கிலோமீட்டர் நடந்து சென்று அங்கு ஒரு சிறிய ஓடை போன்று பார்க்கும்போது ஏமாற்றம் ! ஆனால் இப்படி நடக்கும்போது உங்களது உடல் எப்படி இருக்கிறது என்பதை இந்த நீண்ட தூர நடை பயணத்தில் தெரிந்து கொள்ளலாம் !



இந்த இடத்திற்கு சென்று வர குறைந்தது மூன்று மணி நேரம் ஆகும், ஆகையால் நீங்கள் திரும்பி வரும்போது நடந்து நடந்து களைத்து பசியுடன் இருப்பீர்கள். இதனால் நீங்கள் செல்லும்போதே அங்கு கோட் போட்டு வண்டியை நிறுத்துவார்கள், நீங்களும் அவர்கள் ஏதோ வன காவலர்கள் போலும் என்று நிறுத்தும் போது அவர்கள் சாப்பாடிற்கு ஆர்டர் எடுப்பார்கள். ஒரு டோக்கன் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, குறுவா தீவு சென்று வந்து நல்ல கேரளா உணவு உண்ணலாம். இது போல நிறைய உணவகங்கள் இருப்பதால் நிறுத்தி நிதானித்து முடிவெடுங்கள் !


Labels : Kuruva island, Wayanad, Suresh, Kadalpayanangal, Island, fun trip, from bangalore, short trip

8 comments:

  1. நடையோ நடை அனுபவம்... கேரளா உணவுகளைப் பற்றி சொல்லவில்லையே...?

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் !! எப்போதுமே உங்களதுதான் முதல் கருத்தாக உள்ளது என்னை மகிழ்ச்சியில் நனைய வைக்கிறது !

      Delete
  2. புகைப்படங்கள் அருமை... அனுபவங்களை இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வைச்சிகிட்டா வஞ்சனை பண்றேன்..... நல்லா இருந்தா நானே சொல்லி இருக்க மாட்டேனா !! நீங்க வேற நான் நடந்த நடைக்கு ஒரு லாரி அம்ருதாஞ்சன் ஆச்சு சார் !

      Delete
  3. நடைப்பயண அனுபவம்(!) சுவாரஸ்யம்!

    ReplyDelete
    Replies
    1. என்ன வில்லத்தனம் !! நடை பயணி ஆக்கி என்னை உங்களது profile படம் போல ஆக்கி விட்டீர்களே குட்டன் !

      Delete
  4. Replies
    1. நன்றி நண்பரே..... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete