Tuesday, May 28, 2013

ஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - 1/4)

மிகவும் சந்தோசமாக இருக்கிறது, இந்த ஊர் ஸ்பெஷல் பகுதியை நிறைய பேர் படிப்பது. அப்படி படிப்பவர்கள் என்னிடம் கேட்க்கும் கேள்வி, இதற்காக எவ்வளவு தூரம் செல்வீர்கள், எவ்வளவு மெனகெடுவீர்கல்  என்பது.......அதுவும்
இப்படி நிறைய நாடுகள் சுற்றும்போது எப்படி உங்களுக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறது என்பதும், இதற்க்கு எனது பதில் என்பது இதை நீங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பதிந்தால் அதில் கிடைக்கும் சந்தோசமே என்னை இவ்வளவு செய்ய வைக்கிறது என்பதே !! சென்ற முறை ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா பற்றி எழுதி இருந்தேன், இதை படித்த ஒருவர் மிகுந்த சந்தோசமாக எனக்கு போன் செய்து அதெப்படி உங்களுக்கு மட்டும் அந்த பால்கோவா செய்யும் இடத்திற்கு அனுமதி கிடைத்தது, யாருமே உள்ளே விட மாட்டார்களே என்றார், உண்மைதான் பல இடங்களில் என்னை கேள்விகளால் துளைத்து எடுத்திருக்கின்றனர், அப்போதெல்லாம் நான் பொறுமையாக அவர்களிடம் பேசி அதை தெரிந்து கொண்டிருக்கிறேன். நேர்மையுடன் பேசும்போது அவர்களும் எனது எண்ணத்தை புரிந்து கொள்கின்றனர்........இந்த முறை இதுவரை இல்லாத அளவுக்கு சிரமம் எடுத்து உங்களுக்கு சின்னாளபட்டி சேலை செய்யும் முறையும், அதன் பெருமையும் !! படியுங்கள், ரசியுங்கள்.......தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி !!
 
*********************************************************************************
 
சின்னாளபட்டி - இந்த பெயரை கேட்கும்போது இந்த சந்ததியினருக்கு எதுவும் நினைவுக்கு வருமோ என்னவோ, ஆனால் பலருக்கு சுங்குடி சேலை என்று பளிச்சென்று நினைவுக்கு வரும். திண்டுக்கல்லிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஊர். ஊருக்குள் நுழையும்போதே உங்களுக்கு புரிந்துவிடும் பார்க்கும் இடங்களில் எல்லாம் புடவை கடைகள் !! இங்கிருந்துதான் காட்டன் புடவைகள் இந்தியாவில் பல பகுதிகளுக்கும் செல்கிறது என்பதும், நமது ஊரில் இருக்கும் எல்லா புடவை கடைகளும் இங்குதான் இந்த புடவைகளை வாங்குகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா ? ஒரு புடவை இங்கு எப்படி உருவாகிறது என்பது இதுவரை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா ?? வாருங்கள் பார்க்கலாம்......
 
 
 
 
இந்த சின்னாளபட்டி சுங்குடி சேலை பதிவை மட்டும் நான்கு பகுதிகளாக பிரித்துள்ளேன், இல்லையென்றால் இதுவே ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு வரும் !!
 
முதல் பகுதி சாயம் போடுவது,
இரண்டாவது பகுதி புடவை டிசைன்,
மூன்றாவது பகுதி கஞ்சி போடுவது,
நான்காவது பகுதி என்பது புடவையை தேய்ப்பது மற்றும் வியாபாரம் !!
சிறப்பு பதிப்பாக.....மெழுகு சேலை பிரிண்டிங் முறையும் உங்களுக்காக !
 
இங்கு நாம் பார்க்க போவது முதல் பகுதி - சாயம் போடுதல். முதலில் இவர்களுக்கு துணி வருவது வெள்ளை கலரில். இந்த துணிகள் பண்டல் பண்டலாக வந்து இறங்குகிறது...... பின்னர் ஊரில் எல்லோரும் புடவை செய்தால் எப்படி இருக்கும் ?! இது வரும்போதே புடவையில் ஓரத்தில் டிசைன் உடன் வருகிறது, இந்த டிசைன் அவர்கள் ஆர்டர் செய்தும், கேட்டும் வாங்குகின்றனர். இந்த புடவை வரும்போது, இதை இயந்திர தறியில் நெயவதால் நூல் பிய்யாமல் இருக்க அந்த இயந்திர தறியில் நூலுக்கு மெழுகு தடவி விடுகின்றனர். இதனால், இங்கு வரும்போது அந்த துணி மெழுகு வழவழப்புடன் வருகிறது, இதனால் இதன் மீது சாயம் ஒட்டாது !
 
 
 
முதலில் இந்த துணியை சுடு தண்ணீரில் சில கெமிக்கல் கலந்து ஊற வைக்கின்றனர். இரு தினங்கள் இது போல செய்தால் இந்த துணியில் இருக்கும் மெழுகு போய் விடுகிறது, இதை அங்கு வேலை செய்யும் பெண்கள் வண்டியில் எடுத்து சென்று காய வைக்கின்றனர். பொதுவாக இதற்க்கு நிறைய இடம் தேவைபடுவதால் இந்த தொழிற்சாலைகள் எல்லாம் ஊருக்கு வெளியில்தான் இருக்கிறது ! அந்த துணிகள் காய்ந்தபின் அந்த கடை முதலாளிகள் சொன்னபடி சாயம் இடபடுகிறது.
 
 
 
 
 
பொதுவாக நம் புடவைகளை பார்த்தல் இரண்டு அல்லது மூன்று கலர் இருக்கும், அதாவது புடவை முந்தானை, மெயின் இடங்கள் மற்றும் ஓரம். இந்த இடங்களுக்கு கலர் இட வேண்டும். மெயின் பகுதிக்கு கலர் இடுவது என்பது ஈசி வேலை. ஆனால், இந்த ஓரங்களுக்கும், முந்தானைக்கும் கலர் இடும்போது அது பரவாமல் தடுக்க வேண்டுமே அதுதான் இங்கே மிக சிரமமான வேலை. அதை செய்ய இந்த புடவையை இரு கட்டைகளுக்கு இடையில் வைத்து ஒரு பெரிய இரும்பு குண்டினால் அடித்து இறுக்கி கயிறு கொண்டு கட்டுகின்றனர். சொல்வதற்கு சுலபம், ஆனால் இந்த வேலை செய்பவர்கள் இதை உட்கார்ந்தே செய்ய வேண்டும் அதுவும் மூச்சு பிடித்து, இதனால் இவர்கள் இந்த வேலையினை அதிகாலை நான்கு மணியில் இருந்து செய்ய துவங்குவார்கள்...... நடுவில் டீ மட்டும்தான். நான் அந்த இரும்பு குண்டினை கையில் எடுத்து பார்த்தபோது தெரிந்தது அவர்களின் கஷ்டம்.
 
 
 
அந்த கட்டையினை வைத்து இருக்க கட்டியபின், அதை அடுத்த கலர் சாயத்தில் முக்கி எடுக்கிறார்கள். இது இறுக்க கட்டியதால் சாயம் மற்ற இடங்களுக்கு பரவுவதில்லை. பின்னர் இதை நன்கு வெயிலில் காய வைக்கின்றனர். இப்போது டிசைன் எதுவும் இல்லாமல் புடவை ரெடி. அடுத்து டிசைன் போடுவது.......அடுத்த வாரம் பார்க்கலாமா ?!
 


 
 
Labels : Oor special, District special, chinnalapatti sarees, Suresh, kadalpayanangal, Part 1

12 comments:

  1. அற்புதமாக விளக்கி இருக்கிறீர்கள்
    அறிந்த சேலை அறியாத விவரங்கள்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் ! இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிகள் உங்களுக்கு மிகவும் பிடிக்கிறது என்பதை உங்களின் கருத்துக்கள் தெரிவிக்கின்றன !

      Delete
  2. ஆகா... எங்கே ஊர் - எங்களின் தொழில்... பல அறிய பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் பக்கத்தில் உள்ள ஊர், அதை நீங்கள் ரசித்தது கண்டு மகிழ்ச்சி. அடுத்த முறை நீங்கள் விரும்பினால் நேரிலேயே சென்று காண்பிக்கிறேன் சார் !

      Delete
  3. selai parri therinthukolla oru vaaippu!(dewi-malaysia)

    ReplyDelete
    Replies
    1. நன்றி தேவி ! சேலை உருவாகும் முறை உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது கண்டு மகிழ்ச்சி !

      Delete
  4. Many thanks Suresh

    Hari Rajagopala n

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜகோபால் !

      Delete
  5. கோடைக்கு ஏற்ற காட்டன்...நிறைய விவரங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம், காட்டன் புடவைகள் செய்யப்படும் முறை உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது கண்டு சந்தோசம் !

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. நன்றி கிருஷ்ணா !

    ReplyDelete