பாம்பு...... இதை சொன்னாலே படையும் நடுங்கும் ! நான் சிறு வயதில் இருந்து கிராமத்தில் இருந்ததால், அதுவும் காட்டுக்குள் வீட்டை கட்டி இருந்ததால் பாம்பை பார்த்து என்றும் அவ்வளவாக பயந்தது கிடையாது !! ஆனாலும், ஒரு முறையாவது பாம்பை பார்த்துக்கொண்டே இருப்பதை விட, அதை தொட்டு தூக்கி கொஞ்ச வேண்டும் என்ற ஆவல் இருந்து கொண்டே இருந்தது. முதல் முறையாக பாங்காக், தாய்லாந்து சென்று இருந்த போது அங்கு இருந்த ஜூவில் ஒரு பெரிய மலைப்பாம்பை தோளில் போட்டு போட்டே எடுத்தேன், அதற்கே உள்ளுக்குள் உதறல் எடுத்தது. இந்த முறை எனது அனுபவம் வித்யாசம் !
பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவை ஆனாலும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நகரவல்லவை. பாம்பு வகையில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. சில பாம்புகளே நச்சுப்பாம்புகள். நூற்றில் ஒரு விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் (< 1% ). இந்தியாவிலுள்ள நல்ல பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள எதிரி விலங்குளைப் பற்களால் கவ்விக் கடிக்கையிலே பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நச்சுப்பொருளை எதிரி விலங்கின் உடலுள்ளே செலுத்துகின்றது. கடிபட்ட விலங்கு விரைவில் இறக்க நேரிடும்.
இந்த முறை சிங்கப்பூரில் சென்டோஸா தீவு சென்று இருந்தபோது, அண்டர் வாட்டர் வேர்ல்ட் அருகினில் ஒருவர் பாம்பை வைத்து இருந்தார். சரி, அங்கிருந்த பாம்பை பிடித்துக்கொண்டு இருக்கிறார் போல இருக்கிறது என்று இருந்தபோது, ஒரு சின்ன போர்டில் போட்டோ வித் ஸ்நேக் என்று 20 வெள்ளி எழுதி இருந்தது. நாமதான் "ஸ்நேக்" பாபுவாச்சே..... உள்ளுக்குள் நடுங்கினாலும் ஒரு முறையேனும் இந்த பாம்பை தோளில் போட வேண்டும் என்ற ஆசையினால் சென்றேன். முதலில் ஒரு பாம்பை எனது தோளில் போட்டார், நானும் அது என்னை சுற்றி சுற்றி வர அதன் வழு வழுப்பு மேனி மீது பட பட ஒரு மாதிரி இருந்தது. முடிவில் அது எனது தோளை நன்கு சுற்றியபோது சிவன் போல போஸ் எல்லாம் கொடுத்தேன்..... அப்போதுதான் அந்த பாம்பின் சொந்தக்காரர், நான் ரொம்ப ரசிக்கிறேன் (உள்ளுக்குள் எடுத்த உதறல் எல்லாம் உங்களுக்கு என்ன தெரியும் ?!) என்று இன்னொரு பாம்பையும் எனது தோளில் போட்டு விட்டு "திஸ் இஸ் ப்ரீ.....!" என்று என்னை பார்த்து சிரித்தான் மகா பாவி..!!
ஒரு பாம்பிர்க்கே உயிரை கையில் பிடித்துக்கொண்டு நின்று கொண்டு இருந்த என்னை, பாவி இன்னொரு பாம்பையும் தோளில் போட்டு விட்டதாலும், என்னை பலரும் அங்கு நின்று பார்த்துக்கொண்டு இருந்ததாலும், வடிவேலு செய்யும் முக பாவனையில் நின்று கொண்டு இருந்தேன். அது சரி, போட்டதுதான் போட்டான் ஒரு சின்ன பாம்பாக போட கூடாதா, நல்ல பெரிய மலை பாம்பாக போட்டு விட்டு போய் விட்டான்.... கொஞ்ச நேரம் அவன் ஆளையே வேற காணோம், என்னவென்று பார்த்தால், அவன்தான் அங்கு சோடா கடை வேறு போட்டு இருக்கிறான், இது சைடு பிசினஸ் ! மனதில் நொந்துக்கொண்டே அவன் வரும் வரை காத்திருந்து பாம்பை எடுத்து விட்டவுடன்...."ஓ... இட் இஸ் சோ நைஸ் !" என்று சொல்லி விட்டு எஸ்கேப் ஆனேன்.
என்ன அதுக்குள்ள முடிஞ்சு போச்சுன்னு கிளம்பரீன்களா.... இருங்க, நம்ம பகுதிக்கு வந்தா புதுசா ஒரு விஷயமாவது உங்களுக்கு சொல்லணுமின்னு நினைச்சிருக்கேன், அப்படியே போனா எப்படி ? "பாம்பு மசாஜ்" பற்றி தெரியுமா ? ரஷ்யாவிலும், இஸ்ரேல் நாடுகளிலும் இது மிகவும் பிரபலம். சின்ன, பெரிய பாம்புகளை உங்களது உடலில் விட்டு மசாஜ் செய்வார்களாம், வாங்களேன் நாமளும் இப்படி ஒரு மசாஜ் செய்துகிட்டு வரலாம் !?