Wednesday, November 6, 2013

அறுசுவை - பெர்ரி டி அலைவ், பெங்களுரு

 கையில் சுமார் நூறு ரூபாய் இருந்தால் நாம் என்ன சாப்பிடுவோம், அது சாப்பிடும் இடத்தை பொருத்தது என்றாலும் ஒரு சுமார் ஹோட்டலை கற்பனை செய்து கொள்ளுங்களேன்...... ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு தோசை, ஒரு காபி, அதற்க்கு மேலும் உங்களிடம் பணம் மிச்சம் இருக்கலாம், இல்லையா ! பெங்களுருவில் குடும்பத்தோடு வெளியில் சென்றால், சாப்பிட்டு முடித்த பின்பு எப்போதுமே ஒரு ஸ்வீட் அல்லது ஐஸ் கிரீம் வேண்டும் என்பது எழுதபடாத விதி. எப்போதுமே அந்த ஹோட்டலில் என்ன இருக்கிறதோ அதை ஆர்டர் செய்துவிட்டு சாப்பிட்டு வருவோம். சென்ற முறை எனது நண்பருடன் சென்றபோது, அவர் ஸ்வீட் மட்டும் வெளியில் சென்று சாப்பிடலாம் என்று வற்புறுத்தி அழைத்து சென்றார். எனக்கு அது என்ன ஸ்வீட்டுக்கு மட்டும் கடை என்று ஆச்சர்யமாக இருந்தது, வாருங்கள் அதை விரிவாக பார்ப்போம்.





பெங்களுருவில் இந்திரா நகரில் இருக்கும் இந்த கடை ஒரு ஓரமாக இருக்கிறது, அங்கு சென்று அந்த கடையை பார்த்தபோது உள்ளே என்ன சாப்பிட இருக்கும் என்று முதன் முதலில் செல்பவர்களுக்கு நிச்சயம் சந்தேகம் ஏற்படும். சிறிய இடம்தான், மெனு கார்டு பார்த்தபோது எல்லாமே ஸ்டார் ஹோடேலில் மட்டுமே காணப்படும் உலக வகை ஸ்வீட்கள் ! ஒவ்வொன்றும் சுமார் நூறு ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. முதலில் உட்கார்ந்து மெனு கார்டு எடுத்து படிக்க ஆரம்பித்தவுடன் இவ்வளவு வகை ஸ்வீட் இருக்கிறதா என்று ஆச்சர்யம்தான் ஏற்பட்டது. எல்லாம் ஹோட்டல் சென்று சாப்பிடும்போது கேசரி, கேரட் அல்வா அல்லது ப்ரௌனி கேக் என்று மட்டுமே சாப்பிட்டு, இன்று இப்படி எல்லாம் இருக்கிறதா என்று பார்க்கும்போது ஆச்சர்யம் ஏற்பட்டது !




முடிவில் குழப்பம் எல்லாம் தெளிந்தபின் சாக்லேட் வோண்டன், ஹேசல் நட் கிரீம் பாட் மற்றும் மேங்கோ - பேசன் ப்ரூட் புட்டிங் ஒன்றும் ஆர்டர் செய்தோம். நூறு ரூபாய்க்கு மேல் ஒவ்வொன்றும் இருப்பதால் நிறைய இருக்கும், வயிற்றில் இடம் இருக்காது என்று எனது மனைவி கத்தி கொண்டு இருந்தார். நான் அங்கிருந்து நகர்ந்து அதை எப்படி செய்கிறார்கள் என்று பார்க்க ஆரம்பித்தேன். சிறிய கிச்சன், இரண்டே பேர், பில்லிங் போடா ஒரு ஆள். சர சர வென்று அவர்கள் அங்கு இருக்கும் கலவைகளில் ஒவ்வொன்றாய் எடுத்து போட்டு நாங்கள் கேட்டதை உருவாக்கி கொண்டு இருந்தனர். முடிவில் அது எங்களது டேபுளுக்கு வந்தபோது தட்டின் ஓரத்தில் கொஞ்சமே கொஞ்சமாக இருந்தது. நான் எனது மனைவியை பார்க்க, அவரோ அப்போ மீதி பின்னாடி வருதோ என்று கேட்டார், நானோ அவ்வளவேதான் என்றேன் !




முதலில் ஒரு வாய் எடுத்து வைத்தவுடன் அதன் விலை, இடம், அமைப்பு என்று எல்லாமே மறந்து போனது எனலாம். மேங்கோ - பேசன் ப்ரூட் புட்டிங் எடுத்து சாப்பிடும்போது நன்கு அடிக்கப்பட்ட அந்த கிரீம் அப்படியே பழ சுவையுடன் இருக்கிறது. அதன் கீழே இருந்த புட்டிங் மிக கவனமாக செய்யப்பட்டு, அந்த கிரீம் உடன் சாப்பிடும்போது அட, அட, அட...... அருமைதான் ! அடுத்து வந்த சாக்லேட் வோன்டன் நன்கு சூடாக இருந்தது. எடுத்து ஒரு கடி கடிக்கும்போது உள்ளே பழங்களுடன் சாக்லேட் கலந்த அந்த குளிர்ச்சி பற்களை தீண்டியது. பழங்களை உள்ளே வைத்து சாக்லேட் ஊற்றி அதை மைதா மாவு போன்ற ஒன்றில் சுருட்டி எண்ணையில் போட்டு பொறித்து தந்தனர். கிரிஸ்பி, கிரீமி, ஜெல்லி என்று அமோகமான சுவை. அடுத்து வந்த ஹேசல் நட் கிரீம் பாட்டும் அதே கதைதான் !!







நீங்கள் எப்போதும் ஹோட்டல் சென்றால் ஒரே வகையான இனிப்பு வகைகளை சாபிடுபவராக இருந்து, பலவற்றை சுவைக்க வேண்டும் என்ற வேட்க்கை இருந்தால் இது ஒரு நல்ல இடம். அதுவும் ஒரு நல்ல சாப்பாடு சாப்பிட்டு விட்டு நீங்கள் இங்கு சென்றால்..... அந்த நாள் இனிய நாளே !

பஞ்ச் லைன் :

சுவை - ஏகப்பட்ட வகைகள் இருக்கிறது, எல்லாமே நல்ல சுவை. உயர் ரக இனிப்பு வகைகள் சாப்பிட வேண்டும் என்று எண்ணம் இருந்தால் நீங்கள் இங்கு செல்லலாம்.

அமைப்பு - சிறிய இடம்,  பார்கிங் வசதி இருக்கிறது !

 
பணம் - ஒரு ஆளுக்கு சுமார் நூறு ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. தட்டில் வருவது கொஞ்சமே கொஞ்சம் என்றாலும் சுவை அருமை !

சர்வீஸ் - நல்ல சர்விஸ், பார்த்து பார்த்து செய்கிறார்கள்.

அட்ரஸ் :

Berry'd Alive Indiranagar,                           

1079, 12th Main Road, HAL II Stage, Indiranagar, Bangalore



மெனு கார்டு :



 
 
 Label : Arusuvai, Delicious desserts, Berry D Alive, Bangalore, Bengaluru

Tuesday, November 5, 2013

சாகச பயணம் - மீன் பிடித்தல், ஜப்பான்

சிறு வயதில் காவேரி கரையில் இறங்கினால் சிறு மீன்கள் கால்களை வந்து கடிக்கும், அதன் பின்னர் கிராமத்து குளம் எல்லாம் வற்றி போய் மீன் பிடிப்பது என்பது முடியாமல் போனது. ஆனாலும் சிறு வயதில் இருந்து இந்த தூண்டில் போட்டு மீன் பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருந்தது. அது சமீபத்தில் நான் ஜப்பான் சென்று இருந்தபோது நிறைவேறியதில் அளவில்லா ஆனந்தம் ! எனது நண்பர் யகவா -சான் உடன் ஒரு நாள் நான் இந்த ஆசையை பற்றி பேசியபோது நாங்கள் எல்லோரும் ஒரு சிறு படகில் கடலுக்கு சென்று மீன் பிடிக்கலாம் என்று பேசி வைத்திருந்தோம், ஆனால் வேலை பளுவினால் கடைசி நேரத்தில் படகு கிடைக்கவில்லை, எனது ஏமாற்றத்தை பார்த்த அவர், அருகில் இருந்த ஒரு பார்க்கினுள் உள்ள சிறிய குட்டையில் மீன் இருக்கும், அங்கு சென்று பிடிக்கலாம் என்றதில் இருந்து எனது மனம் அதையே எண்ணிக்கொண்டு இருந்தது !
 


முதலில் அங்கு சென்று ஒரு கடையினில் தூண்டில் வாங்கி கொண்டோம், அதில் மீன் பிடிக்க ஆரஞ்சு கலரில் மீன் உணவை அந்த தூண்டிலின் முனையில் குத்தி கொள்ள கொடுத்தனர். முதலில் அந்த தூண்டிலை போட்டு மீன் பிடிக்க முயன்றபோது மீனே சிக்கவில்லை. மற்ற எல்லோரது தூண்டிலிலும் சிக்கியபோதும் எனது தூண்டிலின் அருகினில் வரவே தயங்கியது. ஆனால் சிறிது நேரத்தில், மீன்கள் என்னுடைய தூண்டிலிலும் வந்து அந்த உணவை உண்ண முற்பட்டது. ஒரு கட்டத்தில் சட்டென்று ஒரு மீன் அதை கடிக்க முற்ப்பட எனது தூண்டில் இழுப்பட்டது, அதில் நான் அடைந்த ஆனந்ததிற்கு அளவில்லை எனலாம் !
 
 

அப்படி இழுக்கப்பட்ட மீன் மேலே வந்து துள்ள துள்ள அதை அவர்கள் கொடுத்த வாளியில் போட்டு விட்டோம். அடுத்த முறை தூண்டில் போடும்போதும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான கணத்தில் மீன் மாட்டியது. நமது கிராமத்தில் எல்லாம் மணி கணக்கில் காத்திருந்து மீன் பிடிப்பார்களே அட, இங்கு என்ன மீன்கள் இப்படி மாட்டுகிறது என்றபோது அருகில் இருந்த ஜப்பானிய நண்பர், இந்த மீன்கள் எல்லாம் இங்கு கொண்டு வந்து விடுவதற்கு முன்பு பட்டினி போட்டு விடுகின்றனர், அதனால்தான் இங்கு வந்தவுடன் அது இரையை கண்டு இப்படி துள்ளுகிறது என்றவுடன் புரிந்தது........... அது சரி அந்த சிறிய குட்டையில் இப்படி நிறைய பேர் மீன் பிடிக்கும்போது எவ்வளவு நேரம்தான் காத்திருப்பார்கள். 

 
அடுத்து அப்படி பிடித்த மீன்களை பக்கத்தில் இருக்கும் கடைகளில் கொடுத்து சுட்டு திங்கலாம். சிறு வயதில் நெருப்பு மூட்டி இப்படி பொறித்து தின்ற மீன்கள் யாபகம் வந்தது. அங்கு கொடுத்தவுடன் எண்ணை, உப்பு தடவி தணலில் வாட்டி கொடுக்கின்றனர். அதை பிடித்து இருக்கும் எனது நண்பரின் ஸ்டைல் பாருங்கள் ! மீனின் தொண்டையில் ஒரு குச்சியை கொடுத்து அதை பொறித்து எடுத்து லாலி பாப் போன்று சாப்பிடுவதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது, ஆனாலும் நமது ஊர் ஓடையில் மீன் பிடித்து அதை குழம்பு வைத்தும், பொறித்தும் தின்கின்ற சுகம் நிச்சயம் கிடைக்காது..... கிடைக்காது..... கிடைக்காது !!
 

 


Labels : Fishing, Adventure trip, Saagasa Payanam, Travel, Japan

Monday, November 4, 2013

செவ்வக வடிவ வாழ்க்கை...!!

கடந்த ஒரு மாதமாக கடுமையான வேலை, இதன் இடையில் பதிவுகள் எழுதுவது என்பது முடியாததாக இருந்தது. அதை புரிந்து கொண்டு நீங்கள் அளித்த ஆதரவுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. இன்று இந்த பதிவுகளை எழுதும்போது உங்களை சந்திக்க போகிறேன் என்ற மகிழ்வுடனே எழுதுகிறேன். தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி !!
*********************************************************************************

சமீபத்தில் எனது மகன் படிக்கும் பள்ளியில் எல்லா மாணவர்களும் ஷேப்ஸ் (வடிவங்களை) பற்றி படமோ, இல்லை வடிவமோ செய்து எடுத்து வர வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். எதை செய்வது, எப்படி செய்வது என்று வீட்டில் தினமும் விவாதம்தான்...... முடிவாக ஒரு மாடி பஸ் செய்து அதன் கண்ணாடி இருக்கும் இடத்தில எல்லாம் ஒவ்வொரு வடிவம் வருமாறு அமைத்து விடுவோம் என்று முடிவானது. அன்றில் இருந்து நான் எங்கு சென்றாலும் வடிவங்களை பார்க்க ஆரம்பித்தேன் (வடிவான பெண்களை அல்ல !!). முதல் நாள் இப்படி பார்த்தபோது ஒன்றும் வித்யாசம் தெரியவில்லை, ஆனால் நாள் செல்ல செல்ல ஒன்று மட்டும் புரிந்தது...... எங்கும் எதிலும் செவ்வகம் என்று இருந்தது, மற்ற வடிவங்கள் எல்லாம் வேறு வழி இல்லாமல் அங்கு இருந்ததே ஒழிய, வாய்ப்பு இருந்தால் அதுவும் செவ்வக வடிவம் எடுத்து இருக்கும் என்பது. இன்று செவ்வகம் என்பது எல்லா இடத்திலும் இருப்பதால், அதை மீறி ஒரு வடிவம் சிந்திக்க முடியவில்லை என்பது நமக்கு புரிவதில்லையோ ?! நினைத்து பாருங்கள்...... நீங்கள் படிக்கும் பேப்பர், போன், உங்களது ஐ.டி. கார்டு, பில், வாட்ச், டிவி என்று கொஞ்சம் உங்களை சுற்றி பார்த்தால் எங்கும் செவ்வகமாக இல்லை ?! இதை நாம் வெகு நாட்களாக கவனிக்கவில்லை இல்லையா...... வாழ்க்கை செவ்வகமாக ஆனதா என்ன ?





வடிவங்கள் என்று சிறு வயதில் புஸ்தகத்தில் சொல்லி கொடுக்கும்போது அதை வேறு இடத்தில பார்த்தால் மட்டுமே மனதில் பதியும்........முக்கோணம், உருண்டை, ஸ்குயர், ஸ்டார், பென்டகன், ஹெக்ஸ்கன், எல்லிப்ஸ், டைமன்ட், ஓவல் என்று நிறைய வடிவங்களை நாம் படித்து இருக்கிறோம். அதுவும் எட்டாவது தாண்டியவுடன் ஜியோமேன்ட்ரி பாக்ஸ் வைத்து அந்த எல்லிப்ஸ் வரைவது எவ்வளவு நேரம் எடுத்தது தெரியுமா ? ஒவ்வொரு வடிவங்களையும் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு கற்று கொண்டோம், ஆனால் இன்றைய வாழ்க்கையில் இந்த வடிவங்களை எல்லாம் நாம் பார்க்கிறோமா அல்லது உபயோகிக்கிறோமா என்ன ? ஏன் பள்ளிகூடத்தில் படிக்கும்போதே கொண்டு செல்லும் பை, புத்தகம், நோட்டு, ஜியோமேன்ட்ரி பாக்ஸ், கரும்பலகை, ஸ்கேல், டஸ்டர், படிக்கும் மேஜை, நாற்காலி, ஜன்னல் என்று எல்லாமே செவ்வகம்தானே, ஆனால் படித்தது மட்டும் எல்லா வடிவங்களையும் இல்லையா....... என்ன ஒரு ஆச்சர்யம் இல்லை ?!




யோசித்து பார்த்தால் எவ்வளவு செவ்வக வடிவம் நமது வாழ்வில் இருக்கிறது தெரியுமா..... நமது வீட்டின் கதவு, ஜன்னல், ரூம், கட்டில், டிவி, டெக், ரிமோட், சோபா, பேப்பர், மேஜை, போன், பெல்ட், வாட்ச், வாட்டர் பாட்டில், லஞ்ச் பேக், பிள்ளைகளின் ஸ்கூல் பேக், கார், சட்டை அல்லது சுடிதார் அடுக்கி வைக்கும் விதம், சிகரெட் பெட்டி, கட்டை பை, பால் கவர், ஹோட்டல் பில், காய்கறி பைகள், புக், தலையணை, காய போடப்படும் ஆடைகள், தையல் மெசின், ஸ்டேப்ளர், பரிசு பொருட்கள் பெட்டி, கேக், அலமாரி, டிரா, கண்ணாடி, கரண்டி, சீப்பு, அவ்வளவு ஏன் இதை நீங்கள் வாசிக்கும் கம்ப்யூட்டர் பெட்டி என்று நீங்கள் எங்கும் செவ்வக வடிவத்தை பார்க்கவில்லை. சில பொருட்களை பார்க்கும்போது அப்பாடா அது செவ்வக வடிவத்தில் இல்லை என்று யோசித்தாலும் அது வந்து சேர்ந்த பெட்டியை பார்த்தால் செவ்வகமாக இருக்கும், இல்லையென்றால் அது வேறு வழி இல்லாமல் அந்த வடிவத்தில் இருக்கும் என்று உங்களால் புரிந்து கொள்ள முடியும்.... உதாரணமாக குக்கர் !!



வீட்டின் உள்ளே மட்டுமா வெளியே சென்று பாருங்கள் எந்த போர்டு ஆக இருந்தாலும் அது செவ்வக வடிவம், தள்ளு வண்டி, கார், காரின் உள்ளே இருக்கும் பொருட்கள், ரோடு, வாங்கி வரும் பொருட்கள் என்று இன்று உலகம் அந்த வடிவத்தை மிக ஆழமாக உருவாக்கி வைத்துள்ளது, அது நமக்கு தெரியாமல் உள்ளே இறங்கி இன்று கையில் கோலி குண்டு கிடைத்தால் ஒரு இனம் புரியாத சந்தோசம் கிடைக்கும், அது வடிவதாலா என்பது கேள்வியே ?! இந்த உலகம் வர்த்தகத்திற்கு என்று அந்த வடிவத்தை தேர்ந்து எடுத்தது, இன்று எங்கும் இருக்கிறது. நிலா ஏன்மா வட்டமா இருக்கு என்று குழந்தைகள் கேட்கும்போது நமக்கு பதில் தெரிவதில்லை, ஆழமாக பார்த்தால் அது செவ்வக வடிவ பொருட்களை பார்த்து பார்த்து அது மட்டும்தான் வடிவம் என்று எண்ணி விட்டதோ என்று தோன்றுகிறது.


ஒவ்வொரு பொருளுக்கும் நாம் ஒரு வடிவம் கற்பனை செய்து வைத்து இருக்கிறோம் என்பது தெரியுமா. உதாரணமாக டிவி என்பது செவ்வகம், பீஸா என்றால் வட்டம், பேனா என்றால் உருளை, பர்த்டே கேக் என்றால் வட்டம், பர்ஸ் என்றால் சதுரம் இப்படி நிறைய சொல்லலாம். இந்த வடிவங்கள் ஒவ்வொன்றும் மாற ஆரம்பிக்கும்போது முதலில் ஒரு கேள்வி எழுந்தாலும் அது பழக்கமாகி விடும். அந்த வடிவங்கள் சிறிது சிறிதாய் மாறும்போது மனது ஏற்று கொள்ள பழகிவிடும், இது பல காலமாய் நாம் பார்த்த வடிவங்கள் எல்லாம் செவ்வகமாக மாற ஆரம்பித்து இன்று அது ஏற்றுக்கொள்ள பட்டு விட்டது என்பது உங்களுக்கு புரிந்தால் சரி. இன்னும் சொல்லவேண்டும் என்றால்....... வடிவ மாற்றம் என்பது ஒரு கட்டத்தில் செவ்வகத்தை நோக்கியே நகருமாறு உங்களை உந்த ஆரம்பிக்கும்....... அதாவது இந்த நொடியில் நீங்கள் வாங்க நினைக்கும் பொருள் செவ்வகமாக இருக்க வேண்டும் என்றே உங்களது மனதில் தோன்றும் அளவுக்கு, முயற்சித்து பாருங்களேன் !



எந்த பொருளும் வட்டமாக இருந்தால் என்ன, செவ்வகமாக இருந்தால் என்ன ? அது நம்மை என்ன செய்யும் என்று கேட்பவரா நீங்கள்........ ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு உணர்சிகள் தரும், இதயம் என்பதற்கு ஒரு வடிவம் உண்டு, அதை நீங்கள் செவ்வகமாக வரைந்து கொண்டு உங்களது காதலை தெரிவிக்க முடியுமா ? ஒரு புதிய வடிவத்தை நீங்கள் பார்க்கும்போது யோசிக்க ஆரம்பிப்பீர்கள், அதை ஆராய்வீர்கள், ஏன் இப்படி என்ற கேள்வி பிறக்கும், பின் ரசிக்க ஆரம்பிப்பீர்கள். உதாரணமாக, உங்களுக்கு இதயத்தை உருளை வடிவில் வரைந்து கொடுத்தால் முதலில் மனதில் என்ன இது என்ற கேள்வி பிறக்கும், இதுவரை நீங்கள் இதயத்தை ஒரு வடிவமாக மணத்தில் வைத்து இருந்துள்ளீர்கள் இன்று அது வேறு வடிவத்தில் இருக்கிறது, அது ஏன் என்று கேள்வி பிறக்கும், சிறிது புரிந்தவுடன் ரசிக்க ஆரம்பிப்பெர்கள். இதுவே எல்லாமும் செவ்வக வடிவத்தில் இருந்தால் கேள்வியே பிறக்காது....... பின் யோசனையே இருக்காது. இன்றைய உலகம் ஒரு பாதையை நோக்கி பயணிக்கிறது....... இதை சொன்னவுடன் சட்டென்று ஒரு பாதையை நினைத்து பாருங்கள், சோகமாக அந்த பாதையும் செவ்வகமே !!



Labels : Ennangal, Shapes, Thoughts, Think a shape, everything rectangle