Wednesday, January 29, 2014

சிறுபிள்ளையாவோம் - சேமியா ஐஸ் !!

வாழ்க்கையில் மிக சிறந்த பகுதி என்பது நமது குழந்தை பருவம்தானே. நமக்கு வயது ஆக ஆக நாம் என்னதான் வளர்ந்தாலும் மனதில் அந்த குழந்தைப்பருவம் மட்டும் மாறாமல் இருக்கும் இல்லையா !! நான் என்னதான் வெளிநாடு, பல இடங்கள் சென்றாலும் அதில் எல்லாம் கிடைக்காத சந்தோசம் ஒரு குச்சி ஐஸ் பார்த்ததும் கிடக்கிறது என்பதுதான் உண்மை. எவ்வளவோ உணவகங்கள் சென்று ருசியாக நிறைய உணவு உண்டு இருந்தாலும் இருந்தாலும் ஒரு பஞ்சு மிட்டாய் கிடைக்கும்போது நிறைய சந்தோசம் கிடைப்பது நிஜம் இல்லையா. இப்படி நான் சென்ற பயணத்தில் சிறுபிள்ளை ஆகி இருந்திருக்கிறேன்...... சமீபத்தில் எனது நண்பனுடன் சென்னையில் சென்று கொண்டு இருந்தபோது, வழியில் ஒரு பிலிம் துண்டு கிடந்தது, அதை நான் எடுப்பதற்குள் அவன் எடுத்து கொண்டு விட்டான். சிறிது தூரம் நடக்க இருவரும் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தோம்..... பின்னர் நான் அவனிடம் "மச்சான்..... என்ன படம்ன்னு பாருடா"என்று சொல்ல, அவனோ "ஹீ, ஹீ...... நானே பார்க்கனுமின்னு நினைச்சேன் மச்சி !!" என்று சொல்ல ஒரு ஐந்து நிமிடம் நாங்கள் அந்த ஆர்வத்தில் சிறு குழந்தைகளாகி இருந்தோம் !! இந்த பதிவை படிக்கும்போது அந்த ஒரு சில நிமிடங்கள் உங்களது குழந்தை பருவத்தை நினைத்தால், வெட்கத்தை மீறி அதை அனுபவித்து பார்த்தால் அதுதான் பதிவிற்கு கிடைத்த வெற்றி !!


சேமியா ஐஸ்...... இன்று என்னதான் விதவிதமாக ஐஸ்கிரீம் கிடைத்தாலும், அன்று கிடைத்த சேமியா ஐஸ் போல ஆகுமா ! சிறு வயதில் அந்த ஐஸ் விற்கும் ஆள் வீதியினில் கத்திக்கொண்டே நுழையும்போதே இங்கே காது விடைக்க ஆரம்பிக்கும். ஐஸ்......ஐஸ்......சேமியா ஐஸே....என்று வண்டியை தள்ளிக்கொண்டு வரும்போது அம்மாவை ஒரு ஏக்க பார்வை பார்ப்பேன். அவர் முறைத்துக்கொண்டே அதெல்லாம் கிடையாது என்று சொல்லும்போது கண்ணில் தண்ணீர் எட்டி பார்க்கும், அதை பார்த்த பின்னர் அம்மா, சரி இன்னைக்கு மட்டும்தான் எனும்போது பூம் பூம் மாடை விட வேகமாக தலை தானாக ஆட ஆரம்பிக்கும் !! அவரை விட வேகமாக வெளியே சென்று "ஐஸ்.... ஐஸ்..... இங்க வாங்க"என்று கூப்பிட, அவன் என்னை நோக்கி வர வர...... கடவுளே நேரில் வருவது போல இருக்கும் அந்த கணம் !!







எனது அம்மா, என்னை நோக்கி என்ன ஐஸ் வேணும் என்று கேட்க "சேமியா ஐஸ்மா"என்று சொன்னவுடன்  அவன் அந்த பெட்டியின் சிறு துவாரத்தில் கையை விட்டு வெளியே எடுக்க சிகப்பும், மஞ்சளுமாக குச்சியில் இருக்கும் அந்த தேவாமிர்தம் வெளியே வர, அம்மா அப்போது பார்த்து எவ்வளவு என்று கேட்க, அந்த ஐஸ் வண்டிக்காரன் ரெண்டு ரூபா என்று சொல்ல, என்னது ரெண்டு ரூபாயா என்று சொன்னவுடன் எனது கைகளுக்கு வர இருந்த அந்த ஐஸ் சிறிது தூரத்தில் நின்ற அந்த கணத்தில் எனது மனதில் இருந்த திகில் வேறு எந்த திகில் படத்திலும் பார்த்து இருந்தது கிடையாது. "ரெண்டு ரூபாய்க்கு ஐஸ் வேணுமா..."என்று எனது அம்மா எனது தலையை தட்ட, நான் ஏக்கமாக அவரை பார்ப்பேன். முடிவில் அவர், சேலையில் முடித்து வைத்திருக்கும் காசை எடுத்து அவனின் கையில் கொடுக்க கொடுக்க, எனக்கு அந்த சேமியா ஐஸ் கையில் வந்த தருணத்தில் கிடைத்த அந்த சந்தோஷத்தில்....... ஐஸ் வண்டிக்காரனிடம் "நாளைக்கும் வருவீங்களா..."என்று கேட்க, அம்மாவோ "வருவாரு, வருவாரு..... வந்தா காலை ஒடிப்பேன்" என்று என்னை பார்த்து சொல்ல, அடுத்த நாள் பக்கத்து தெருவில் மட்டும் சத்தம் மிக மெலிதாக கேட்க்கும் ஐஸ்......ஐஸ்......சேமியா ஐஸே....!!



அந்த சேமியா ஐசை ஆசை தீர முதலில் பார்ப்போம், அடுத்து ஒரு நக்கு நக்குவோம்....... அந்த சுவை மூளைக்கு சென்று அடைந்தவுடன், வேக வேகமாக அந்த முனையை மட்டும் ம்ம்ம்ம்ம்..... என்று விறு விறுவென்று சாப்பிட, அப்போதுதான் வாயில் ஒரு சுவையின் மாறுதலை கவனிப்போம். சேமியா...... ஐஸ் கிரீம் உடன் சேமியா சேர்க்கலாம் என்று கண்டு பிடித்தவன் ஒரு மகானுபாவன் என்றுதான் சொல்ல வேண்டும். கொஞ்சம் கொஞ்சம் அந்த ஐஸ் கரைய கரைய சேமியா வெளியில் வர அதை சுவைக்கும் முன் அது எப்படி எப்படி எல்லாம் சுருண்டு இருக்கும் என்று கவனிப்போம். முடிவில் ஐஸ் மற்றும் சேமியா தின்று முடித்தவுடன் நாக்கை கண்ணாடியில் பார்த்துவிட்டு அம்மாவிடம் ஓடி போய்...... "அம்மாமாமாமா..... நாக்கு பாரேன் எவ்வளவு கலரா இருக்குதுன்னு...."என்று சொன்ன அந்த கணம் மிகவும் இனிமையானது இல்லையா.

கடைசியாக என்று நீங்கள் சேமியா ஐஸ்கிரீம் சாப்பிட்டீர்கள் ??..... ஒரு சேமியா ஐஸ் வாங்கி சுவைத்து பாருங்கள், சுமார் இருபது வருடம் வேகமாக பின்னால் சென்று இருப்பீர்கள் !!

Labels : Suresh, Kadalpayanangal, Childhood, Sirupillaiyaavom, Semiya ice, ice, Old days, once upon a time, village ice

Tuesday, January 28, 2014

அறுசுவை(சமஸ்) - ஒரு ஜோடி நெய்தோசை, திருச்சி

"சாப்பாட்டுப்புராணம்" என்ற புத்தகத்தை படித்துவிட்டு இதை படிப்பவர்களுக்கு மிகவும் கொண்டாட்டமாக இருக்கும், அதை படிக்காதவர்கள் இந்த பதிவை பத்திரபடுத்தி வையுங்கள்..... ஏனென்றால், இந்த உணவகங்கள் எல்லாம் தலைமுறையை தாண்டி சுவையான உணவுகளை தருகின்றன, அது மட்டும் இல்லை இங்கு நீங்கள் சென்றால் அலைமோதும் கூட்டத்தில் வரிசையில் நின்றுதான் சாப்பிட வேண்டும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் !. திருச்சி....... நான் பிறந்து வளர்ந்த ஊர், ஆனால் எனக்கே இந்த புத்தகத்தை படித்தபின்புதான் இந்த உணவகத்தின் சிறப்பு தெரிந்தது. காலம் காலமாக இந்த உணவகத்தை தெரிந்த மக்கள், இங்கு தேடி சென்று காத்திருந்து உண்கிறார்கள்.....ம்ம்ம்ம்ம் நான் ரொம்ப லேட் பண்ணிட்டேன். இதுவரையிலும் பல பல உணவகங்களில் உணவு உண்டு இருந்தாலும், தோசைக்கு ரேகை உண்டு என்று அறிந்தது இங்கேதான் !!

சமஸ் அவர்களின் எழுத்தில் இந்த தோசையை பற்றி படிக்க...... ஒரு ஜோடி நெய் தோசை !



திருச்சி சென்று, அங்கிருந்து திருவானைக்காவல் கோவிலுக்கு செல்பவர்கள், அப்படியே கோவில் கோபுரத்தில் இருந்து வலதுபுறம் இருக்கும் மேல விபூதி பிரகாரத்திற்கு திரும்பி நடந்தால் சிறிது தூரத்திலேயே நெய் வாசம் தூக்கும்..... அதுதான் "ஸ்ரீ பார்த்தசாரதி விலாஸ்" நெய் தோசை !!




மிக பழமையான கட்டிடம், உள்ளே நுழையும்போதே அந்த கால தூண்கள், படங்கள் என்று நம்மை பின்னோக்கி இழுத்து செல்கிறது. மர மேஜைதான், அதில் உட்கார்ந்து நாம் சுற்றி பார்க்கும்போதே வாழை இலை வைத்து தண்ணீர் வைக்க, என்ன வேண்டும் என்று கேட்கும்போதே அடுத்த இலைகளை பார்த்தால் எல்லோரும் மொருகலாக தோசையை ஒரு கட்டு கட்டிக்கொண்டு இருந்தனர். நாம் அதை எச்சில் ஊற பார்க்கும்போதே ஆர்டர் எடுக்க வந்தவர் "நெய் தோசையா....." என்று கேட்க தலை தானாக ஆடுகிறது !! வாயில் இருந்து சட்டென்று "எனக்கு ரெண்டு நெய் தோசை....." என்று சொல்ல பக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சிரிப்பதை பார்த்தாலும், அதை எதிர்நோக்கி காத்திருக்க ஆரம்பித்தேன்.





கொஞ்சம் உற்று கேட்டால் "சொய்.....சொய்" என்ற சத்தம் விடாமல் கேட்க்கிறது. தோசை தட்டு தட்டாக நமது மேஜைக்கு வராமல் அடுதவரிடதிர்க்கு போகும்போது கொலைவெறி தோன்றினாலும், அடுத்து நமது முறை என்று நமக்கே சமாதானம் செய்துகொள்ள வேண்டுகிறது ! முடிவில் எனது இலைக்கு வந்து சிரித்துக்கொண்டே இரண்டு நெய் தோசையை வைத்தவுடன், எனது முகம் மலர்ச்சியோடு இருந்தது என்று அடுத்தவர்கள் சொன்னாலும், அந்த இடத்தில் சிறிது வெளிச்சம் அதிகமானது எனக்கே தெரிந்தது ! தோசையை மெதுவாக பியித்து எடுக்கும்போது சட்டென்று உடைந்து போனது, அவ்வளவு மொறு மொறுவென்று இருந்ததை எப்படி சொல்ல. வெறும் நெய் வாசத்தோடு மட்டும் ஒவ்வொரு விள்ளலாக எடுத்து வாயில் போட போட, அது கரைய கரைய....... இந்த பதிவினில் நான் ருசித்ததை எவ்வளவுதான் சொன்னாலும் உங்களுக்கு இந்த ருசி சாப்பிட்டால் மட்டுமே தெரியும் !!





அடுத்து இருந்த நெய்தோசையை மீண்டும் சட்னி தொட்டு கொள்ளாமல் சாப்பிடலாமா என்று யோசித்தாலும், அது சட்னியுடன் எப்படி ருசிக்கும் என்ற ஆவலால் கொஞ்சம் சட்னி என்று குரல் கொடுக்க, சற்றே கெட்டியாக சட்னி வந்து வைக்கிறார்கள். முதல் தோசையில் பசியில் இருந்ததாலும், மூக்கில் ஏறிய நெய் மணம் காரணமாகவும் அதை இப்போதுதான் கவனித்தேன்...... தோசையில் ரேகை இருந்ததை. இதுவரை நான் சாப்பிட்ட தோசையில் எல்லாம் மொழு மொழுவென்று தங்க கலரில் மின்னும். ஆனால் இந்த தோசையில் நன்றாக சிவப்பு நிறத்தில் ரேகை தெரிந்தது. அதை பார்த்துக்கொண்டே இருந்த போது அடுத்த தோசையும் காலி !! நாமா சாப்பிட்டோம் இந்த வேகத்தில் என்று எண்ணிக்கொண்டே கை கழுவ கடக்கும்போது கேட்டது..... "சொய்..... சொய்" சத்தம்.



ஆர்வம் மிகுதியில் சமையல் கட்டின் உள்ளே நுழைந்து யார் இப்படி இவ்வளவு ருசியுடன் சுடுகிறார்கள் என்று பார்க்க, ஒருவர் சிறிது வெளிச்சம் கம்மியான அந்த இடத்தில் தோசையை சுட்டு கொண்டே இருக்கிறார். எனது கண்ணில் தெரிந்த ஆச்சர்யத்தை கவனித்துக்கொண்டே நெய்யை தோசையில் ஊற்றி, விறகை சரியாக வைக்கும்போது அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து நகர்ந்தேன், ஆனாலும் அவருக்கு தெரிந்திருக்கும் எனது கண்ணில் தெரிந்த அந்த நன்றி !






கடல்பயணங்கள் பஞ்ச் :

ஒரு தோசை அதை எங்கே சாப்பிட்டால் என்ன என்றுதான் உங்களை போல இன்று வரை நினைத்திருந்தேன், ஆனால் தோசை சாப்பிட்டால் இங்கேதான் சாப்பிட வேண்டும் என்று இன்று நினைத்துக்கொள்கிறேன். இந்த பதிவில் சுவையை எப்படியும் புரிய வைக்க முடியாது, வெறும் அனுபவத்தைதான் சொல்ல முடியும். ஒன்று மட்டும் நிச்சயம்..... திருசிகாரர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்......ம்ம்ம்ம்ம் !!

 Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Samas, Sappaattupuranam, Trichy, Thiruvanaikovil, Parthasarathy vilas, Dosai, Butter roast, Best dosai, Ghee dosai

Monday, January 27, 2014

ஊர் ஸ்பெஷல் - போடி ஏலக்காய் (பகுதி - 2)

சென்ற வாரத்தில் ஊர் ஸ்பெஷல் - போடி ஏலக்காய் (பகுதி - 1) படித்த நிறைய பேர் "இதுதான் ஏலக்காய் செடியா !!" என்று ஆச்சர்யப்பட்டது கண்டு மகிழ்ந்தேன். வாங்க இந்த வாரம் இன்னும் விரிவாக பார்ப்போம். செப்டம்பர் முதல் ஜனவரி வரை ஏலக்காய் வரத்து அதிகமாக இருக்கும். முதலில் கிழங்குடன் கூடிய ஏலக்காய் தட்டையை வைத்தபிறகு 18 முதல் 24 மாதங்கள் கழித்து ஏலக்காய் சாகுபடி செய்ய முடியும். அதன்பிறகு 45 முதல் 60 நாட்கள் இடைவெளிவிட்டு வருடத்திற்கு ஆறு முறை ஏலக்காய் அறுவடை செய்யலாம். ஓர் ஏக்கருக்கு சுமார் 500-600 கிலோ ஏலக்காய் (உலர்த்தப்பட்ட ஏலக்காய்) கிடைக்கும். கூலி ஆட்களின் சம்பளம், களையெடுப்பு, மருந்து அடிப்பு என ஓர் ஏக்கருக்கு வருடத்தின் பராமரிப்பு செலவு சுமார் 1.20-1.50 லட்சம் ரூபாய் ஆகும். முதல் மூன்று முறை அதிகமாகவும், அடுத்த மூன்று சாகுபடிகளில் முன்பு கிடைத்ததைவிட கிடைக்கும் ஏலக்காயின் அளவு குறைவாகவும் இருக்கும். சென்ற வாரம் ஏலக்காயை செடியில் இருந்து பறித்து இருந்தோம், இப்போது அதை  காய வைக்க வேண்டும். ஏலக்காயை காய வைக்க வேண்டிய மெசின் சுமார் ஒன்றரையில் இருந்து இரண்டு லட்சம் வரை ஆகிறது. வெளியில் கொடுத்து காய வைத்தால் ஒரு கிலோவிற்கு பத்து ரூபாய் கேட்ப்பார்கள். சிறிய ஏலக்காய் தோட்டம் உடையவர்கள் இப்படி வெளியில் கொடுத்து காய வைப்பார்கள், பெரிய தோட்டம் உடையவர்கள் அவர்களாகவே ஒன்றை அமைத்து கொள்வார்கள்.

ஏலக்காயை பற்றிய செய்திகளுடன்.....உங்கள் !!
ஏலக்காய் உலர்த்தும் ரூம்
இதன் மேலேதான் ஏலக்காயை போடுவார்கள், கீழ் இருந்து வெப்பம் வரும் 
இதுதான் கீழ் இருக்கும் பகுதி, வெப்பம் இதன் மூலம் மேலே செல்லும் 
இது எப்படி வேலை செய்கிறது என்று ஆர்வமாக கேட்க, என்னை அவர் கூட்டி சென்று காண்பித்தார். நான்கு அல்லது ஆறு சதுர அடியில் ஒரு பெரிய செவ்வக வடிவ இடம் ஒன்று இருக்கிறது, இதன் உள்ளே சுமார் 1800 ~ 2000 கிலோ வரை ஏலக்காயை போட்டு காய வைக்கலாம். ஐந்து கிலோ நீங்கள் பறித்த ஏலக்காயை போட்டால் உங்களுக்கு சுமார் ஒரு கிலோ மட்டுமே நீங்கள் இப்போது கடையில் வாங்கும் வகையான ஏலக்க்காயாக கைக்கு கிடைக்கும். அதை அப்படி ஆக்க அவர்கள் அந்த அறையை சூடு படுத்துகின்றனர். ஏலக்காயை வலை போல இருப்பதில் கொட்டுகின்றனர், பின்னர் கீழே இருந்து வெப்பத்தை சீராக, மெதுவாக செலுத்துகின்றனர்...... சுமார் 30 ~ 36 மணி நேரம் வரை இப்படி செலுத்த வேண்டும் ! இந்த வெப்பத்தில் அந்த காய் சுருங்கி, உள்ளே இருக்கும் விதையை சுருக்கி உங்களுக்கு அந்த ஏலக்காய் கிடைக்கிறது !
ஏலக்காய் உலர்த்தும் எந்திரம்
இதுதான் வலை, இதைதான் ஏலக்காய் பிரித்து போட பயன்படுத்துவார்கள் !
 பெரும்பாலும் சிறு தோட்டம் உடையவர்கள்தான் இங்கே வருகிறார்கள், அல்லது பெரிய தோட்டம் வைத்து இருப்பவர்கள் பல விதமான ஏலக்காய் பயிரிட்டு கொண்டு வரும்போது அதை இப்படி ஒரே தொட்டியில் போடா முடியுமா என்று நீங்கள் நினைத்தால்...... அருமை, நீங்கள் கடல்பயணங்கள் படித்து முன்னேறி விட்டீர்கள் என்று அர்த்தம் :-).  ஒவ்வொரு ஏலக்காய் வகையை போட்டவுடன் அவர்கள் அதன் மேல் ஒரு சீட்டில் உங்களது பெயர் அல்லது ஏலக்காய் வகையை எழுதி மேலே போடுகின்றனர். பின்னர், அதன் மேலே ஒரு வலையை போடுகின்றனர் (படத்தை பாருங்கள் புரியுமே !). இதனால் ஏலக்காய் மிக்ஸ் ஆவது தடுக்கபடுகிறது. சரி, இதற்க்கு வெப்பம் எங்கு இருந்து வருகிறது என்று பார்ப்போமா ?!
இந்த இடத்தில்தான் விறகு போட்டு எரிப்பார்கள்.... இந்த வெப்பம் மேலே செல்லும்
விறகு ரெடி.... ஏலக்காய் ரெடியா !
விறகு போட்டாச்சு.... ஏலக்காய் இங்கதான் போடணுமா :-)
கீழே ஒரு சிறிய விறகு எரிக்கும் இடம், அதனில் இருந்து வரும் வெப்பத்தினை ஊதி தள்ள ஒரு மோட்டார் அவ்வளவுதான் !!  வெறும் இரண்டு அல்லது மூன்று விறகு மட்டுமே எடுத்து போட வேண்டும். 45 ஃபாரன் ஹீட் வெப்பத்தைச் செலுத்தி சுமார் 36 மணி நேரம் வரை இந்த வெப்பத்தை தந்து ஏலக்காயாக மாற்றுகிறது. நான் அங்கு தயாராக இருந்த அடுத்த அடுப்பில் விறகு எடுத்துபோட்டு பற்ற வைத்து என்று ஒரு ஏலக்காய் விவசாயியாக
மாறி விட்டேன் போங்கள் ! இப்படி வெளியே வரும் ஏலக்காயில் அதனது பூவும், காம்பும் இருக்கும், அதை நீக்குவதற்கு என்று ஒரு சிறிய மெசின் இருக்கிறது, அதில் போட்டு சுற்ற சுற்ற அவை எல்லாம் நீங்கி வெறும் ஏலக்காய் மட்டும் வெளியில் வரும் !
ஏலக்காய் பூ !!
ஏலக்காயில் இருந்து காம்பு, பூவை பிரித்து எடுக்கும் எந்திரம்
சரி கட்டிய மூட்டையை அப்படியே விற்ப்பனைக்கு எடுத்து செல்லலாமா ? செல்லலாம், ஆனால் அங்கு தரம் சோதனை போடப்பட்டு உங்களுக்கு ஒரு சீட்டு தருவார்கள். ஏலக்காய் தரம் பிரிப்பதற்கு கிலோவுக்கு 8 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏலக்காயை ஆன்லைன் டிரேட் செய்ய கலர் என்பது முக்கியமாக இருப்பதால் கலர் வாரியாகவும் ஏலக்காயைப் பிரிக்க மெஷின் வந்துவிட்டது. இருப்பு வைக்கும் குடோன்கள் தனியாரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 60 கிலோ ஏலக்காய் மூட்டையை சாதாரண குடோன் களில் வைக்க வருடத்திற்கு 22.85 ரூபாய் கட்டணம். கோல்டு ஸ்டோரேஜ் என்றால் 54 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் அன்றைய ஏலக்காய் மார்க்கெட் விலையில் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம். பிரீமியம் அன்றைய மார்க்கெட் விலையில் 100 ரூபாய்க்கு 0.05 பைசா. அதோடு, அந்த மூட்டையில் இருந்து சிறிது எடுத்து நீங்கள்  ஏலக்காய் சந்தையில் ஏலம் விட கொடுப்பார்கள். அதை எப்படி சோதனை செய்கிறார்கள், அதை எப்படி செய்ய வேண்டும், எதை சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்றெல்லாம் நான் கற்றுக்கொண்டதை போட்டால் நீங்கள் பதினைந்தாம் வாய்ப்பாட்டை படிப்பது போல இருக்கும் என்பதால், அதன் படங்களை மட்டும் பாருங்களேன் !
ஏலக்காயை தரம் சோதனை செய்யும் இடம்..... ஊசி கொண்டு பிளந்து பார்ப்பார்கள் !
சொன்னா நம்புங்க..... இதுதான் தரமான ஏலக்காய் !!

போடியில் மூன்று நாட்கள், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள புத்தடியில் நான்கு நாட்கள் என வாரத்தின் ஏழு நாட்களுமே ஏலக்காய் சந்தை இயங்கி வருகிறது. திங்கள் காலை போடியில் உள்ள சி.பி.ஏ. வளாகத்தில் 10 மணிக்கு ஏலக்காய் விளைவிப்போர் சங்கம் (Cardamom Planters Association)மூலம் ஆரம்பமாகிறது முதல் சந்தை. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொருநாள் சந்தையை நடத்துகிறது. முடிவாக, ஞாயிற்றுக்கிழமை அன்று கேரளா கார்டமம் பிராஸஸிங் அண்ட் மார்க்கெட்டிங் கம்பெனி லிமிடெட் நிறுவனம் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலம் விடுவதோடு முடிகிறது. விடுமுறை உள்ள நாட்கள் தவிர எல்லா நாட்களிலும் ஏலக்காய் சந்தை இதேபோல நடக்கிறது.
ஏலக்காய் சங்கம்.....
ஏலக்காய் மூட்டை ரெடி.....உங்களுக்கு எவ்வளவு வேணும் ? என்னது அம்பது கிராமா !!


ஏலமிடுவதற்கான விலை நிர்ணய அளவு (பிட்டிங் பிரைஸ்) என்பது குறைந்தபட்சம் 2 - 9 ரூபாய் வரை என்று இருக்கிறது. வியாபாரிகள் ஏலக்காயின் தரம், கலர், எடை மற்றும் சுத்தம் போன்றவற்றை கவனித்து வாங்குவார்கள். ஏலக்காய் 8.5 மில்லி மீட்டர், 8 மில்லி மீட்டர், 7.5-8 மில்லி மீட்டர், 6.8-7.5 மில்லி மீட்டர் மற்றும் 5.8-6.8 மில்லி மீட்டர் என பல வகைகளில் இருக்கிறது. விவசாயிகள் கொண்டுவரும் ஏலக்காயின் தரம் பார்த்து வாங்கி அதை அளவு மற்றும் தரத்துக்கு தக்கபடி பிரித்து சுத்தம் செய்து, ஐந்து கிலோ கொண்ட பைகளாக கட்டி, அதை ஐம்பது கிலோ கொண்ட ஒரு மூட்டையாகக் கட்டி விற்பனை செய்வார்கள். சரி, இந்த அளவு தகவல் போதுமா, இல்லை இன்னுமும் வேணுமா....... என்ன மயக்கம் வருதா ?! தம்பி, அண்ணனுக்கு சூடா ஏலக்காய் டீ ஒன்னு போடு !!
Labels : Suresh, Kadalpayanangal, Elaichi, Yelakkai, Bodi, Bodinayakanur, Oor special, How it is 

Friday, January 24, 2014

உலக பயணம் - மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்

கிரிக்கெட்..... இது இந்தியாவில் ஒரு மதம் என்றால் அது மிகையாகாது. எனக்கும் கிரிக்கெட்டுக்கும் அவ்வளவு பொருத்தம் கிடையாது !! இந்தியா விளையாடும் குறிப்பிட்ட மேட்ச் மட்டும் கண் முழித்து பார்ப்பதும், வெகு சில மேட்ச் மட்டும் ஸ்கோர் அப்டேட் செய்வதும் என்பது நடக்கும். எனது சில நண்பர்களை போல நான் வெறித்தனமான ரசிகன் எல்லாம் இல்லை !! ஆனாலும் எப்போதும் ஒரு ஆசை உண்டு, அது கிரிக்கெட் மேட்ச் நடக்கும் ஸ்டேடியம் சென்று பார்க்க வேண்டும், அதுவும் புகழ்பெற்றதாக இருக்க வேண்டும் என்பது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகர் சென்று இருந்தபோது எனது ஹோட்டல் மாடியில் இருந்து பார்த்தபோது ஒரு பெரிய ஸ்டேடியம் சிறிது தூரத்தில் தெரிந்தது. கேட்டால் அதுதான் புகழ்பெற்ற மெல்பெர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம் !!






கிரிக்கெட் கிரௌண்ட் பற்றி நிறைய கேள்வி எல்லாம் கேட்காதீர்கள், எனக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியாது. பச்சை பசேல் என்ற புல்வெளியுடன் பகல்-இரவு மேட்ச் நடக்கும் அந்த கிரௌண்ட் என்னுடைய கண்ணுக்கு விருந்து படைக்கும், ஆனால் அதை பற்றிய எந்த விவரமும் எனது அறிவுக்கு எட்டவில்லை. இந்த பதிவில் நானும் ரவுடிதான் என்று காட்டி கொள்வேன் !!ஆனால், இதை சுற்றி பார்த்தபோது நிறைய தெரிந்துகொண்டேன்...... இதுதான் உலகின் பத்தாவது பெரிய கிரிக்கெட் கிரௌண்ட், ஆஸ்திரேலியாவின் மிக பெரியது ! 1956இன் சம்மர் ஒலிம்பிக் போட்டியும், 2006இன் காமன் வெல்த் போட்டியும் இங்குதான் நடந்தது என்பது எனக்கு கூடுதல் தகவல் !





ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் இங்கு அமரலாம். 1854இல் சுமார் 6000 பேர் அமரும்படியாக மரத்தில் செய்து இருந்த இடம் இன்று இவ்வளவு பேர் உட்காரும் விதத்தில் இருக்கிறது ! நாங்கள் முதலில் உள்ளே நுழையும்போதே ஆஸ்திரேலியாவின் நிறைய புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்களின் சிலைகள் அங்கு இருந்ததை காண முடிந்தது. டிக்கெட் பெரும் இடம், மிக பெரிய விளக்குகள், உள்ளே நுழையும் நுழைவாயில் என்று ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வரும்போதே அந்த பச்சை புல்வெளி கண்ணில் தெரிந்தது.




கிரிக்கெட் ஆடும் அந்த பச்சை புல் தரையில் சிறிது நடக்க வேண்டும் என்று ஆசை இருந்தது, ஆனால் அங்கு இருந்த காவலர்கள் அதற்க்கு அனுமதிக்கவில்லை. தூரத்தில் இருந்து ஆசை தீர பார்த்துக்கொண்டோம். சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் அங்கு இருந்தால் அந்த இடம் எப்படி ஆர்ப்பாட்டமாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்...... அதை இந்த காணொளியில் பாருங்களேன் !


இந்தியாவில் எந்த கிரிக்கெட் மேட்ச் நடந்தாலும், சோம்பல் பட்டு நான் சுகமாக காலை நீட்டிக்கொண்டு டிவியில் பார்ப்பவன். ஆனாலும், ஒரு நாளாவது ஒரு உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானம் சென்று பார்க்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறியது ! ஏய்..... கேட்டுக்க, கேட்டுக்க, நானும் ரௌடிதான், நானும் ரவுடிதான்...... :-)


Labels : Suresh, Kadalpayanangal, Melbourne, Australia, MCG, Cricket, Stadium, World travel

Thursday, January 23, 2014

அறுசுவை -ஐயப்பா தோசை கடை, மதுரை

தோசை..... என்னதான் விதவிதமாக சாப்பிட்டாலும், மொறு மொறுவென்று ஒரு தோசை சாப்பிட்டால்தான் மனது சந்தோசமாகிறது, அதே தோசை விதவிதமாக கிடைத்தால் !! இந்த முறை மதுரை சென்று இருந்தபோது கண்டிப்பாக இங்கேதான் சாபிடுவது என்று முடிவானது. ஆறு மணிக்கே சென்று முதல் ஆளாக தோசை சாப்பிட வேண்டும் என்று சென்றால் கடை பூட்டி இருந்தது, ஏமாற்றத்துடன் திரும்பி நடக்கும்போது எங்களை பார்த்த ஒருவர் கடை ஏழு மணிக்குதான் திறக்கும் என்று சொல்ல அவருக்கு நன்றி சொல்லி விட்டு நாங்கள் அங்கிருந்த தெருக்களில் சுற்ற ஆரம்பித்தோம். ஏழு மணிக்கு திரும்பி வந்தபோது கடையின் முன்னே சுமார் ஐந்து தோசை கல் இருந்தது !! எங்களை திரும்பி பார்த்த மாஸ்டர், வாங்க சார் என்று அழைக்க ஆரம்பம் ஆனது எங்களது வேட்டை !!

பெரியார் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் பாண்டிய வெள்ளாளர் தெருவில், ஆர்த்தி ஹோடேலின் ரோட்டில் இடது புறத்தில் இருக்கிறது இந்த கடை. பொதுவாகவே இங்கே வெளிச்சம் கம்மி, அதில் இந்த கடைக்கு என்று விளக்கு வெளிச்சம் அதிகம் இல்லாததால் நீங்கள் இதை மிஸ் செய்ய வாய்ப்பு அதிகம் ! கடையின் முன்னே இருக்கும் ஒரே ஒரு பல்பு வெளிச்சம் கொடுக்க இங்கே நாவில் நீர் ஊற வைக்கும் தோசை தயாராகிறது !



மதுரையில் எல்லோரும் பாராட்டும் கடை என்றவுடன் AC வசதியுடன் பெரிய கடையாக எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றம்தான். உள்ளே நுழையும் இடத்தில ஆறு பேர் அமரலாம், இன்னும் கொஞ்சம் உள்ளே ஒரு அறை இருக்கிறது அதன் உள்ளே சட்னி, இலைகளுடன் சுமார் ஆறு பேர் அமரலாம், மற்றவர்கள் எல்லாம் கையேந்தி பவன் ஸ்டைல்தான் ! இடம் சிறிதாக இருந்தாலும் மெனு லிஸ்ட் நீளம்.......நீங்களே பாருங்களேன்.......


 

திரும்ப திரும்ப மெனுவை மேல் இருந்து கீழாக படித்தாலும் குழப்பமே மிஞ்சியது. எல்லா தோசையும் நன்றாக, வித்யாசமாக இருந்தது. முடிவில், எனக்கு ஹாப் பாயில் தோசை ஒன்று சொல்லி விட்டு காத்திருந்தபோது ஆர்வத்தில் எப்படி சுடுகிறார்கள் என்று பார்த்தேன். பர பரவென்று தோசை கற்களில் மாவை ஊற்றி, ஒரு முட்டையை எடுத்து போட்டு, பெப்பர் தூவி, மேலே சிறிது கார சட்னி ஊற்றி மிகவும் மெலிதாக சஊற்றி கொண்டு இருந்தார். சப்பாத்தி, இட்லியும் இங்கு ஒரு ஓரத்தில் வெந்து கொண்டு இருக்கிறது.



எனது இலைக்கு வந்தபோது எனக்கு பின்னாலேயே வந்து தோசையை இலையில் வைத்துவிட்டு, சிறிது தேங்காய் சட்னியும், கார சட்னியும் வைத்து, சாம்பார் ஊற்றிவிட்டு சென்றவுடன் ஒரு வாய் பியித்து வைக்க...... ஆஹா, அருமையாக இருந்தது.   இதன் சிறப்பு என்பது நமது வீட்டு தோசை போல சிறிதாக இருப்பதால், ஐந்து முறையில் தீர்ந்து  விடுகிறது, பின்னர் இன்னும் இன்னமும் என்று விதவிதமான தோசைகளை உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கிறோம் ! ஒவ்வொரு தோசையும் ஒரு பேப்பரை போல மிக மெலிதாக மொரு மொறுவென்று இருப்பதுதான் உங்களை கவர்கிறது என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை ! சட்னியுடன் உள்ளே செல்ல செல்ல ஒரு தேவானுபவம்தான் !! கை கழுவும்போதுதான் தெரிந்தது நான் நெய் பொடி தோசை, பூண்டு மசாலா தோசை, வீட்டு தோசை என்று சாப்பிட்டது !



பஞ்ச் லைன் :

சுவை - நிறைய வகைகள் இருக்கிறது, ஒவ்வொன்றும் ஒரு சுவை ! தோசையில் இவ்வளவு வகைகளா என்று நீங்கள் நினைப்பது உறுதி, வீட்டு தோசை போன்று சுவை !!

அமைப்பு - மெயின் தெரு, மிக சிறிய கடை, ஏழு மணிக்கு மேல் அங்கு சிறிது வெளிச்சம் கம்மி, வண்டியை பார்க் செய்வது சிரமமாக இருக்கிறது.

பணம் - மெனு கார்டை பார்த்தால் உங்களுக்கே புரியும், அவ்வளவு ஒன்றும் காஸ்ட்லி இல்லை !

சர்வீஸ் - நல்ல சர்விஸ். கூட்டம் அதிகமாக இருக்கிறபோது நீங்கள் இதையே எதிர்பார்க்க முடியாது !

ஞாயிறு விடுமுறை தினம் !!

அட்ரஸ் :

ஸ்ரீ ஐயப்பன் டிபன் சென்டர்,
பாண்டிய வெள்ளாளர் தெருவில்,
ஆர்த்தி ஹோடேலின் ரோட்டில் இடது புறத்தில் இருக்கிறது இந்த கடை

Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, madurai, dosai, dosa, best dosa, Iyappaa dosa center