Tuesday, January 28, 2014

அறுசுவை(சமஸ்) - ஒரு ஜோடி நெய்தோசை, திருச்சி

"சாப்பாட்டுப்புராணம்" என்ற புத்தகத்தை படித்துவிட்டு இதை படிப்பவர்களுக்கு மிகவும் கொண்டாட்டமாக இருக்கும், அதை படிக்காதவர்கள் இந்த பதிவை பத்திரபடுத்தி வையுங்கள்..... ஏனென்றால், இந்த உணவகங்கள் எல்லாம் தலைமுறையை தாண்டி சுவையான உணவுகளை தருகின்றன, அது மட்டும் இல்லை இங்கு நீங்கள் சென்றால் அலைமோதும் கூட்டத்தில் வரிசையில் நின்றுதான் சாப்பிட வேண்டும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் !. திருச்சி....... நான் பிறந்து வளர்ந்த ஊர், ஆனால் எனக்கே இந்த புத்தகத்தை படித்தபின்புதான் இந்த உணவகத்தின் சிறப்பு தெரிந்தது. காலம் காலமாக இந்த உணவகத்தை தெரிந்த மக்கள், இங்கு தேடி சென்று காத்திருந்து உண்கிறார்கள்.....ம்ம்ம்ம்ம் நான் ரொம்ப லேட் பண்ணிட்டேன். இதுவரையிலும் பல பல உணவகங்களில் உணவு உண்டு இருந்தாலும், தோசைக்கு ரேகை உண்டு என்று அறிந்தது இங்கேதான் !!

சமஸ் அவர்களின் எழுத்தில் இந்த தோசையை பற்றி படிக்க...... ஒரு ஜோடி நெய் தோசை !



திருச்சி சென்று, அங்கிருந்து திருவானைக்காவல் கோவிலுக்கு செல்பவர்கள், அப்படியே கோவில் கோபுரத்தில் இருந்து வலதுபுறம் இருக்கும் மேல விபூதி பிரகாரத்திற்கு திரும்பி நடந்தால் சிறிது தூரத்திலேயே நெய் வாசம் தூக்கும்..... அதுதான் "ஸ்ரீ பார்த்தசாரதி விலாஸ்" நெய் தோசை !!




மிக பழமையான கட்டிடம், உள்ளே நுழையும்போதே அந்த கால தூண்கள், படங்கள் என்று நம்மை பின்னோக்கி இழுத்து செல்கிறது. மர மேஜைதான், அதில் உட்கார்ந்து நாம் சுற்றி பார்க்கும்போதே வாழை இலை வைத்து தண்ணீர் வைக்க, என்ன வேண்டும் என்று கேட்கும்போதே அடுத்த இலைகளை பார்த்தால் எல்லோரும் மொருகலாக தோசையை ஒரு கட்டு கட்டிக்கொண்டு இருந்தனர். நாம் அதை எச்சில் ஊற பார்க்கும்போதே ஆர்டர் எடுக்க வந்தவர் "நெய் தோசையா....." என்று கேட்க தலை தானாக ஆடுகிறது !! வாயில் இருந்து சட்டென்று "எனக்கு ரெண்டு நெய் தோசை....." என்று சொல்ல பக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சிரிப்பதை பார்த்தாலும், அதை எதிர்நோக்கி காத்திருக்க ஆரம்பித்தேன்.





கொஞ்சம் உற்று கேட்டால் "சொய்.....சொய்" என்ற சத்தம் விடாமல் கேட்க்கிறது. தோசை தட்டு தட்டாக நமது மேஜைக்கு வராமல் அடுதவரிடதிர்க்கு போகும்போது கொலைவெறி தோன்றினாலும், அடுத்து நமது முறை என்று நமக்கே சமாதானம் செய்துகொள்ள வேண்டுகிறது ! முடிவில் எனது இலைக்கு வந்து சிரித்துக்கொண்டே இரண்டு நெய் தோசையை வைத்தவுடன், எனது முகம் மலர்ச்சியோடு இருந்தது என்று அடுத்தவர்கள் சொன்னாலும், அந்த இடத்தில் சிறிது வெளிச்சம் அதிகமானது எனக்கே தெரிந்தது ! தோசையை மெதுவாக பியித்து எடுக்கும்போது சட்டென்று உடைந்து போனது, அவ்வளவு மொறு மொறுவென்று இருந்ததை எப்படி சொல்ல. வெறும் நெய் வாசத்தோடு மட்டும் ஒவ்வொரு விள்ளலாக எடுத்து வாயில் போட போட, அது கரைய கரைய....... இந்த பதிவினில் நான் ருசித்ததை எவ்வளவுதான் சொன்னாலும் உங்களுக்கு இந்த ருசி சாப்பிட்டால் மட்டுமே தெரியும் !!





அடுத்து இருந்த நெய்தோசையை மீண்டும் சட்னி தொட்டு கொள்ளாமல் சாப்பிடலாமா என்று யோசித்தாலும், அது சட்னியுடன் எப்படி ருசிக்கும் என்ற ஆவலால் கொஞ்சம் சட்னி என்று குரல் கொடுக்க, சற்றே கெட்டியாக சட்னி வந்து வைக்கிறார்கள். முதல் தோசையில் பசியில் இருந்ததாலும், மூக்கில் ஏறிய நெய் மணம் காரணமாகவும் அதை இப்போதுதான் கவனித்தேன்...... தோசையில் ரேகை இருந்ததை. இதுவரை நான் சாப்பிட்ட தோசையில் எல்லாம் மொழு மொழுவென்று தங்க கலரில் மின்னும். ஆனால் இந்த தோசையில் நன்றாக சிவப்பு நிறத்தில் ரேகை தெரிந்தது. அதை பார்த்துக்கொண்டே இருந்த போது அடுத்த தோசையும் காலி !! நாமா சாப்பிட்டோம் இந்த வேகத்தில் என்று எண்ணிக்கொண்டே கை கழுவ கடக்கும்போது கேட்டது..... "சொய்..... சொய்" சத்தம்.



ஆர்வம் மிகுதியில் சமையல் கட்டின் உள்ளே நுழைந்து யார் இப்படி இவ்வளவு ருசியுடன் சுடுகிறார்கள் என்று பார்க்க, ஒருவர் சிறிது வெளிச்சம் கம்மியான அந்த இடத்தில் தோசையை சுட்டு கொண்டே இருக்கிறார். எனது கண்ணில் தெரிந்த ஆச்சர்யத்தை கவனித்துக்கொண்டே நெய்யை தோசையில் ஊற்றி, விறகை சரியாக வைக்கும்போது அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து நகர்ந்தேன், ஆனாலும் அவருக்கு தெரிந்திருக்கும் எனது கண்ணில் தெரிந்த அந்த நன்றி !






கடல்பயணங்கள் பஞ்ச் :

ஒரு தோசை அதை எங்கே சாப்பிட்டால் என்ன என்றுதான் உங்களை போல இன்று வரை நினைத்திருந்தேன், ஆனால் தோசை சாப்பிட்டால் இங்கேதான் சாப்பிட வேண்டும் என்று இன்று நினைத்துக்கொள்கிறேன். இந்த பதிவில் சுவையை எப்படியும் புரிய வைக்க முடியாது, வெறும் அனுபவத்தைதான் சொல்ல முடியும். ஒன்று மட்டும் நிச்சயம்..... திருசிகாரர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்......ம்ம்ம்ம்ம் !!

 Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Samas, Sappaattupuranam, Trichy, Thiruvanaikovil, Parthasarathy vilas, Dosai, Butter roast, Best dosai, Ghee dosai

26 comments:

  1. அடடா... ! என்ன சுவை... என்ன சுவை - எழுத்தில்...!

    தோசையில் ரேகையை திருச்சி வந்து பார்க்க வேண்டும்...

    இட்லி எப்படி...? (முடிவில் உள்ள படம்)

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இட்லியும் சுவைதான், ஆனால் தோசையின் சுவை அலாதி !! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் !

      Delete
  2. நானும் எனது நண்பர்களும் இந்த ஓட்டல் டிபனை சாப்பிடுவதற்காகவே திருவானைக்காவல் சென்று இருக்கிறோம். சுடச்சுட பதிவைத் தந்த சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, உங்களது நினைவுகளை இந்த பதிவு கிளப்பி விட்டது கண்டு மகிழ்கிறேன் !

      Delete
  3. தோசைக்காக திருவானைக்கா போய்விட்டு
    அப்படியே கோவிலுக்கும் போகவேண்டும் என
    எண்ண வைத்துவிட்டது தங்கள் பதிவு
    படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தோசைக்கு முதலிடம் தரும் அளவு என் பதிவை ரசித்ததற்கு மிக்க நன்றி சார் !

      Delete
  4. நானும் திருவானைக்கோவிலில் இருந்துதான் 1974 -1976 வருடங்களில்
    எம்.ஏ படித்தேன்.
    ஆனால் அந்நாட்களில் இந்தக் கடை பற்றி அவ்வளவு பிரபலமாகப் பேசப்படவில்லை.
    நிறைய மாத வார இதழ்களில் இந்தக் கடை பற்றி படித்திருக்கிறேன் .
    அடுத்த முறை திருச்சி போகும்போது முயற்சிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. பல தலைமுறைகளை கொண்ட கடை இது, கண்டிப்பாக உங்களது நாவினை இந்த சுவை கட்டி போடும் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  5. போன மாதம் தான் திருச்சி போனேன். அப்ப தெரியாம போச்சே..நெக்ஸ்டைம் கட்டாயம் போணும்..

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை சென்று வந்து உங்களது கருத்துக்களை மறக்காமல் எழுதுங்கள் ! வருகைக்கு நன்றி !

      Delete
  6. பேப்பர் ரோஸ்ட்ன்னா அது ராஜி கையாலன்னு எங்க வீட்டு ஆளுங்க சொல்வாங்க. என்னை பொறாமைப்பட வச்சுட்டது உங்க பதிவு. திருச்சி போனா கண்டிப்பா இங்க போய் சாப்பிட்டுதான் வரனும்!

    ReplyDelete
    Replies
    1. அப்போ உங்க வீட்டுல எல்லோருக்கும் "ஸ்ரீ ராஜி விலாஸ்" தோசையா....... உங்க பேப்பர் ரோஸ்ட் நினைச்சா எனக்கு பொறாமையா இருக்குது போங்க ! வருகைக்கு நன்றி !

      Delete
  7. சமஸின் அந்த புத்தகம் இன்றளவிலும் படித்ததில்லை,

    உங்கள் எழுத்தும் அந்த தோசையைப் போல் நன்றாக மெருகேறியுள்ளது சார்.. கலக்குங்க ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனு...... உங்களது வார்த்தைகள் உற்சாகம் கொடுக்கிறது.

      Delete
  8. இந்த வாரம் ஜம்புகேசவர் பார்த்துட்டு வண்டிய அப்படியே right side திருப்பு

    ReplyDelete
    Replies
    1. பாபு சாருக்கு முருகலா ஒரு தோசை பார்ஸல்.............வருகைக்கு நன்றி ! :-)

      Delete
  9. இந்த வாரம் ஜம்புகேசவர் பார்த்துட்டு வண்டிய அப்படியே right side திருப்பு

    ReplyDelete
  10. தங்கள் பதிவு
    படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
    வாழ்த்துக்கள் Sridhar.t.s.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீதர்..... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete
  11. சுவையான தோசை சுட்டவருக்கு நன்றி சொல்ல நினைக்கிறீங்க பாருங்க... நீங்க ரொம்ப நல்லவரு... சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. டன்ட டன்ட டன்டடையின்...... பின்னாடி நாயகன் மியூசிக் ஓடுது நண்பரே...... !! வருகைக்கு நன்றி !

      Delete
    2. பார்த்தசாரதி ஒட்டலில் நானும் பலமுறை சாப்பிட்டு இருக்கிறேன். அதைப்பற்றி எழுதவேண்டும் என்று ஆசைப்பட்ட்துண்டு. நீங்கள் சுவாரசியமாக எழுதி இருக்கிறீர்கள். நன்றி. பெங்களுர் மல்லேஸ்வரத்தில் HALLI MANE என்று ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கிறது. அரிசி ரொட்டி, ராகி ரொட்டி, Buffet எல்லாம் நன்றாக இருக்கும். அங்கு போய் சாப்பிட்டு எழுதவும். நன்றி.

      Delete
    3. நன்றி ரவி, ஹல்லி மனேவும் எனது பட்டியலில் இருக்கிறது விரைவில் சென்று வந்து எழுதுகிறேன். தங்கள் வரவுக்கும் கருத்திற்கும் நன்றி !

      Delete
  12. தமிழ் மணத்தில் இந்த பதிவுக்கு ஓட்டு அளித்ததற்கு நன்றி சார் !

    ReplyDelete
  13. தெரியாம செம பசியா இருக்கற நேரத்தில உங்க பதிவை படிச்சிட்டேன்... பசி கண்ணை கட்டுது...

    சின்ன வயசில எங்க பாட்டி நெய் ஊற்றி மெல்லிசாகச் சுட்டுத்தருவார்கள்.. நாங்க எல்லோரும் மோமோ தோசைன்ன்னு ( மொறுமொறு) சொல்லி மகிழ்ச்சியா சாப்பிட்ட தருணங்கள் நினைவிற்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மேடம்.... சிறு வயதில் சாப்பிட்ட எல்லாமும் ருசியானதுதானே ! தங்கள் வரவுக்கும் கருத்திற்கும் நன்றி !

      Delete