இந்த வருட ஆரம்பத்தில் சொன்னதுபோல இந்த ஊர் ஸ்பெஷல் பயணத்தில் இதுவரை யாரும் அறியாத பல ஊரின் சிறப்பையும் சொல்வேன் என்று சொல்லி இருந்தேன் அல்லவா.... அதில் ஒன்றுதான் இந்த பாலவநத்தம் சீரணி மிட்டாய் !! ஒரு ஊரின் பெருமை என்பது அந்த ஊரில் வசிப்பவர்களுக்கே தெரியாது என்பதுதான் சோகம். அதை தேடி செல்வதும், சரியான ஆள்களை பிடித்து விஷயம் வாங்குவதும், தெரியாத நேரத்தில் சென்று கடையின் முன் வெயிலில் காத்திருப்பதும், பேசவே மாட்டேன் என்னும் சிலரை பேட்டி எடுப்பதும் என்று ஒவ்வொரு ஊர் ஸ்பெஷல் பயணமும் கடினமான ஒன்று...... அப்படிதான் இந்த பாலவநத்தம் சீரணி மிட்டாயும் !! என் சொந்தங்கள் இருக்கும் ஊரில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும், நான் அங்கு அடிக்கடி சென்று வருவது இல்லை என்பதால் இதுவரை எத்தனை முறை பாலவநத்தம் ஊரை கடக்கும்போதும் தெரியவில்லை. இந்த முறை ஒரு பாட்டியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவர் சப்பு கொட்ட சொன்ன போதுதான் தெரிந்தது....... அந்த பயணத்தில் தெரிந்தது அழியும் ஒரு ஊரின் சிறப்பு !!
விருதுநகருக்கும் அருப்புக்கோட்டைக்கும் இடையில் இருக்கும் ஊர்தான் பாலவநத்தம். மிக சிறிய ஊர், ஒரு தெரு, அதுதான் அந்த ஊரின் கடைதெரு. அங்கு நூறு கடைகள் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் அதில் பத்து கடைகள் இந்த சீரணி மிட்டாய் கடை. அந்த ஊரில் இருப்பவர்கள் சும்மா இருக்கும்போது எல்லாம் இதை மென்று கொண்டு இருக்கிறார்கள், பஸ் நிறுத்தத்தில் பேருந்து நிற்கும்போது டிரைவரிடம் சொல்லிவிட்டு அம்மாக்கள் கீழே இறங்கி அவசர அவசரமாக இந்த சீரணி மிட்டாயை வாங்குவதை கவனிக்கலாம். இன்று சாக்லேட் யுகத்தில் இது அழிந்து கொண்டு வருகிறது என்பது அவர்களிடம் பேசும்போது தெரிந்தது.
சீரணி மிட்டாயில் இரண்டு வகை உண்டு........வெல்ல சீரணி, கருப்பட்டி சீரணி. அதையே கறுப்பு மற்றும் வெள்ளை சீரணி மிட்டாய் என்றும் சொல்கிறார்கள். இன்று கருப்பட்டியை மக்கள் அதிகம் விரும்புவதில்லை என்பதால்
வெல்ல சீரணி மற்றும் சக்கரை சீரணி கிடைக்கிறது. கிராம மக்களின் ஜாங்கிரி
என்று இதைச் செல்லமாகச் சொல்கிறார்கள். சின்ன வளையங்களாகச் சுற்றி இனிப்பில் முக்கி
எடுத்தால் அது ஜிலேபி. பெரிய சைஸில் நீளமான டிசைனில் இருந்தால் அதுதான் சீரணி
மிட்டாய். சீரணி மிட்டாயை ஒரு வாரம்வரை வெச்சிருந்து சாப்பிடலாம் கெட்டுப்போகாது என்பது இதன் சிறப்பு. ஒவ்வொரு கடைக்கும் ஒரு டிசைன் இருக்கிறது..... ஒரு கடையில் சீரணி மிட்டாய் மெலிதாக இருந்தால், இன்னொரு கடையில் பெரிதாக இருக்கிறது. இந்த ஊரில் சீரணியின் சுற்றை வைத்தே இது இந்த கடை சீரணி என்று சொல்லி விடுகிறார்கள் !!
அங்கு பெயர் பலகையே இல்லாத பழமையான கடை ஒன்று இருக்கிறது, யாரிடம் கேட்டாலும் அந்த கடை சீரணி வாங்குங்க என்றனர். நடந்து சென்று அந்த கடையில் என்ன இருக்கிறது என்று பார்த்தால் வெறும் சீரணி மட்டுமே !! கால் கிலோ கொடுங்க என்று கேட்டவுடன் சுற்றி வைத்து இருக்கும் சீரணியில் இருந்து பியித்து எடுக்கிறார், அதில் இருந்து வெல்ல பாகு கொட்ட இங்கு எச்சில் ஊருகிறது !! முடிவில் பேப்பரில் போட்டு கொடுத்தவுடன் ஒரு வாய் வைக்கும்போது நமது திருவிழா காலங்கள் நினைவுக்கு வருகிறது....... அங்கு சுற்றி வைக்கப்பட்டு இருக்கும் பீமவிலாஸ் புஷ்டி அல்வா கடையில் தூண் போல வைக்கப்பட்டு இருந்த காலங்களில் ஒரு சீரணி வாங்கிகொண்டு சுற்றிய நாட்கள் எவ்வளவு இனிமையானவை !!
ஜாங்கிரி சாப்பிடும்போது மெதுமெதுவென்று இருக்கும், இந்த சீரணி என்பது சற்று கடினமாக இருக்கிறது. கொஞ்ச நேரம் எச்சிலில் ஊறவைத்தால் மெதுவாகி விடுகின்றது. ஒரு வாய் போட்டதுமே சொல்லிவிடும் இதை விடவா சாக்லேட், சிப்ஸ், அல்வா எல்லாம் என்று !! முந்தின காலங்களில் ஊர் முழுக்க இருந்த சீரணி கடைகள் இன்று பத்து மட்டுமே, விரைவில் அது ஒன்று மட்டும் என்று ஆகி காணாமல் போவதற்குள் ஒரு வாய் சாப்பிட்டு பார்த்துவிடுங்கள் !
தேவைப்படும் பொருட்கள்:
பச்சரிசி மாவு - 1/2 கிலோ
உளுந்து - 50 கிராம்.
சுக்கு- 1 டீஸ்பூன்.
வெல்லம்- 3/4 கிலோ
செய்முறை:
'' பச்சரிசி மற்றும் உளுந்தை ஊறவைத்து இட்லி மாவு பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். வெல்லத்தை சுடுதண்ணீரில் கரைத்து வெல்லப்பாகு தயாரித்துத் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். பெரிய சைஸ் துளை போடப்பட்டு இருக்கும் துணியில் அரிசி மாவை வைத்துக் கொதிக்கும் எண்ணெயில் முறுக்கு பிழிவதுபோல் பிழிய வேண்டும். நன்றாக வெந்ததும் வெல்லப்பாகில் 10 நிமிடங்கள் ஊறவைத்து வெளியே எடுத்தால் கருப்பு சீரணி ரெடி. வெள்ளை சீரணி மிட்டாய் தயாரிப்பதும் இதே முறையில்தான். ஆனால், கருப்பு சீரணிக்கு வெல்லம் என்றால், வெள்ளை சீரணிக்கு சீனியை வைத்து சீனிப்பாகு தயாரித்து அதில் ஊறவைத்து எடுக்க வேண்டும்!
Labels : Oor special, Palavanatham, Seerani, mittai, Suresh, Kadalpayanangal, District Special, Virudhunagar