Wednesday, April 30, 2014

ஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (நிறைவு பகுதி - 3)

சென்ற வாரத்தில் எழுதிய மானாமதுரை மண்பானை (பகுதி - 1), மானாமதுரை மண்பானை (பகுதி - 2) பகுதிகள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதை என்னால் உணர முடிந்தது. சென்ற வாரம் வரை மண் எங்கு எடுக்கிறார்கள், அதன் தன்மை என்ன, அதை எப்படி தயார் செய்கிறார்கள், அதன் பின்னர் எப்படி பானை செய்கிறார்கள் என்றெல்லாம் பார்த்தோம். இந்த வாரம் வாருங்கள் இன்னும் சுவாரசியமான பகுதிகளை பார்ப்போம் ! களிமண் என்பது கருப்பு நிறத்தில் இருக்கு, ஆனா பானை சிவப்பா இருக்குதே எப்படி என்று உங்களுக்கு கேள்வி எழுந்தால் உங்களின் முதுகில் ஷொட்டு வைத்துக்கொள்ளுங்கள் ! செம்மண்ணில் ஒரு வகை இருக்கிறது, கைகளில் எடுக்கும்போதே கடல் மணல் போல கைகளில் வழியும். மிகவும் நைஸ் மண் ஆன அதை தண்ணீர் ஊற்றி வைத்துக்கொள்கின்றனர், பானை நன்கு காய்ந்தவுடன் உள்ளேயும், வெளியேயும் ஒரு துணியை கொண்டு இந்த மண்ணை பூசுகின்றனர், முடிவில் பானை சிவப்பாகிவிட்டது !!

மண் பானை சுடுவதற்கு தயார் !

அந்த சிவப்பு பானை காய்ந்தவுடன் அதை சுட்டு எடுக்க வேண்டும். அதை சுட்டு எடுக்க அரசாங்கமே கொட்டகை போட்டு கொடுத்துள்ளது, யார் வேண்டுமோ முன் பதிவு செய்துக்கொண்டு தங்களது பானைகளை சுட்டு எடுக்கலாம். இதை சுடுவதற்கு சுள்ளிகளையும், முள் செடிகளையும் நடுவில் போட்டு அதன் மேலே பானையை நன்கு அடுக்கி வைக்கின்றனர். நான் பார்த்த வரையில், ஒவ்வொரு பானையையும் மெதுவாக அடுக்குகின்றனர். ஒரு முறையில் சுமார் ஆயிரம் பானை வரை அடுக்குகின்றனர். பின்னர் அதன் மேலேயும் சுள்ளிகளை போட்டு தீயை பற்ற வைக்க, பானை அந்த சூட்டில் இறுக ஆரம்பிக்கிறது. சுமார் பத்து மணி நேரம் வரை கொஞ்சம் கொஞ்சமாக சூடை கொடுக்கின்றனர். எல்லா சுள்ளிகளும் எரிந்து சாம்பல் ஒரு போர்வை போல போர்த்தி இருக்க அந்த சூடு தணிந்தவுடன் பானையை ஒவ்வொன்றாக எடுக்க ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொரு பானையையும் எடுத்து தட்டி பார்த்து அப்போதே தரம் பிரிக்கின்றனர். சரியாக சுடாத பானையை மீண்டும் சுடுவதற்கு எடுத்து வைக்கின்றனர். முடிவில் அதை சொசைட்டிக்கு கொடுத்து விட்டு (அவர்கள் வைத்திருக்கும் விலையில்) மீண்டும் அடுத்த பானை செய்ய தயார் ஆகின்றனர் !

சுட்டு முடித்து எடுத்த பின்......


நல்ல தரமான பானைகள் இந்த பக்கம் இருக்கு வாங்க !
 
 
சென்ற வாரத்தில் மண் பானையில் வைக்கும் தண்ணீர் எப்படி சில்லென்று இருக்கிறது என்றும், பானை செய்யும்போது அடியில் சிறிது சதுரம் போல் தட்டி விட்டால் நாம் தரையில் வைப்பதற்கு சௌகரியம் அல்லவா, ஏன் உருண்டையாகவே இருக்கிறது என்று கேட்டு இருந்தேனே.... விடை ஏதேனும் யோசித்தீர்களா ?!  முதல் விஷயம் பானையை ஒரு மூலையில் மணல் குவித்து அதன் மேல்தான் வைப்பார்கள். இந்த மணற் குவியலில் ஒரு தாத்பர்யம் இருக்கிறது. அது வெறும் ஸ்டாண்ட் அல்ல. அது ஒரு பர்ஃபார்மன்ஸ் இண்டிகேட்டர். என்ன பர்ஃபார்மன்ஸ் என்று சொல்ல வேண்டுமானால் பானை வேலை செய்யும் விதத்தை முதலில் சொல்லியாக வேண்டும். பானைக்குள் இருக்கும் தண்ணீர் அதிலிருக்கும் நுண் துளைகள் வழியாக வெளியேறிக் கொண்டிருக்கும். (வெளியேறும் என்றால் கொட கொடவென்று டீக்கடையில் டிக்காஷன் ஊற்றுவது போல் அல்ல) அது ஒரு விதமான ஊஸிங் ஔட். பானையை ஒரு மெகா மைக்ரோ ஃபில்ட்டருக்கு ஒப்பிடலாம். ஃபில்ட்டர் என்றாலே அழுத்த மாறுபாடு இருக்கும். டிராப் எக்ராஸ் ஃபில்ட்டர் என்கிற பிரயோகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். தண்ணீர் மட்டுமல்ல, எல்லா திரவங்களுமே குறிப்பிட்ட உஷ்ணநிலையில் குறிப்பிட்ட வேப்பர் பிரஷரில் இருந்தே தீரும். குறைந்தால் ஆவியாகி அதை சரிக்கட்டிக் கொள்ளும். இது திரவங்களின் இயற்கைத் தன்மை. வெளியேறிய தண்ணீர் உள்ளிருக்கும் தண்ணீரை விட அழுத்தம் குறைவாக இருப்பதால் அதன் வேப்பர் பிரஷரும் குறைவாகியிருக்கும். ஒவ்வொரு வேப்பர் பிரஷருக்கும் ஒரு உஷ்ணநிலை உண்டு என்பதால் வேப்பர் பிரஷர் குறையும் போது உஷ்ணநிலையும் குறையும். அதாவது, பானைக்குள் இருக்கும் நீரை விட வெளியேறிய நீர் குறைந்த உஷ்ணநிலைக்கு வந்திருக்கும். மேலும் இது ஒரு எக்ஸ்பான்ஷன் பிராஸஸ் என்பதால் விரிவடைந்து ஆவி நிலையில் இருக்கும்.மேற்கத்தியர்கள் சார்ட் என்பதால் ஆம்பியண்ட் பிரஷரில் 20 டிகிரி இருக்கிறது.இந்தக் குளிர்ந்த ஆவி வெளிக்காற்றில் இருக்கும் நீராவியைக் குளிப்பித்து சின்னச் சின்ன குளிர்ந்த நீர்த் திவலைகளை பானையின் வெளிப்புறம் உண்டாக்கும். இதனால் உண்டாகும் லேயர் ஒரு இன்ஸுலேட்டராக செயல்படுவதுடன், பானைக்குள்ளிருக்கும் நீரைக் குளிர்ப்பிக்கவும் செய்யும். அழுத்த மாறுபாட்டின் கரணமாக அடுத்தடுத்து உள்ளிருந்து ஊஸிங் ஔட் ஆகிக் கொண்டே இருக்கும். ஏற்கனவே இருக்கும் திவலைகள் வழிந்தோடி கீழே கொட்டி வைத்திருக்கும் மண்ணை ஈரமாக்கும்.நீரின் கடினத் தன்மையைப் பொறுத்து கொஞ்ச காலத்தில் நுண் துளைகள் மெல்ல அடைபட்டுக் கொண்டே வரும். அப்படி ஆகிற போது கொட்டி வைத்திருக்கும் மண் ஈரமில்லாமல் தொடர்ந்து உலர்ந்தே இருக்கும். அப்போது பானையை மாற்றியே ஆக வேண்டும். என்ன விஞ்ஞானம் இல்லை !! ( இதை ஒரு வலை தள நண்பரின் தளத்தில் இருந்து எடுத்தேன், வலைதள முகவரி காப்பி எடுக்கும் முன் சிஸ்டம் டவுன் ஆனதால், மீண்டும் அந்த தளம் கிடைக்கவில்லை....... ஆனால் மேலே சொன்ன விஷயம் அந்த முகம் தெரியாத நண்பருடையது !!)
 

மண்ணில் பானை மட்டுமே உண்டாக்க முடியும் என்று நான் நினைத்து இருந்ததை பொடி பொடியாக்கியது அங்கே நான் கண்ட மண் பொருட்கள். இட்லி குண்டா, பிரிட்ஜ், ஆப்ப சட்டி, தோசை சட்டி, வித விதமான விளக்குகள், குடுவைகள், உண்டியல் சாப்பிடும் தட்டு என்று அவர்களின் உழைப்பும், கலையும் பிரம்மிக்க வைக்கிறது ! எல்லோரும் இன்று மண் பொருட்களை மறந்து பீங்கான், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாறுவது இவர்களுக்கு வருத்தத்தை தருவதை அறிந்துக்கொள்ள முடிகிறது ! என்ன..... மண்பானைதானே என்று யோசித்ததில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று தோன்றுகிறதா ?! அடுத்த முறை மானாமதுரை சென்றால் மண்பானை வாங்கி வர மறக்காதீர்கள் !

மண்ணில்.... இட்லி சட்டி !

தோசை சட்டி வேண்டுமா..... பணியார சட்டியா ?

இதுவும் மண்ணில் செய்ததுதான்...... கலை வண்ணம் !!

சாப்பிடும் தட்டு கூட மண்ணில் தயார் !!

ஆப்ப சட்டியும், குடுவையும் !

முன்னால் தெரிவதுதான் மண்பானை பிரிட்ஜ் !

இதை எல்லாம் படித்துவிட்டு யாரும் அந்த பகுதியில் செங்கலும் நன்றாக இருக்குமே போனீர்களா என்று கேட்பவர்களுக்கு மட்டும் இந்த படம் ! இதை பற்றியும் விரிவாக எழுதினால் இன்னும் ரெண்டு பாகம் போகும்..... ஆகவே அங்கு சுடப்படும் செங்கலை பார்த்துக்கொள்ளுங்கள் !
 


Labels : Suresh, Kadalpayanangal, Oor special Manamadurai, Clay pot, clay, amazing, part 3, District special

Monday, April 28, 2014

அறுசுவை - பத்து ரூபாய் சாப்பாடு !

எனது பதிவுகளை படிப்பவர்கள் என்னிடம் பேசும்போது "எங்க ஊருல ஒரு கையேந்தி பவன் இருக்கு, அங்க சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும், ஆனா நீங்க அங்க எல்லாம் போவீங்களோ என்னமோ அப்படின்னுதான் சொல்லலை." என்று சொல்வார்கள், அவர்களிடமே ஏன் அப்படி நினைத்தீர்கள் என்று கேட்டால் நீங்கள் உலகை சுற்றுகிறீர்கள், நீங்கள் சாப்பிடும் பதிவுகளை பார்த்தால் நீங்கள் இப்படி எல்லாம் சாப்பிடுவீர்களோ என்று தோன்றியது என்பார்கள். நான் செல்லும் பயணங்களில் கிடைத்ததை சாப்பிடுபவன், கிடைத்த இடத்தில் தங்குபவன், கிடைக்கும் சாப்பாட்டில் என்ன இருக்கிறது உயர்வும், தாழ்வும் !! இதற்க்கு முன்பும் கையேந்தி பவன் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறேன், ஆனால் அது பெங்களூரில் இருப்பதால் பெரியதாகி விடாது ! சரி.... வாருங்கள் இந்த வாரம் ஒரு அருமையான சாப்பாட்டை பற்றி பார்ப்போம். சமீபத்தில் மதுரையில் ஒரு இடத்தில் பத்து ரூபாய் சாப்பாடு, அதுவும் அண்ணா பேருந்து நிலையம் அருகில் கிடைக்கிறது என்ற தகவல் கிடைத்தது, கேட்கவே ஆச்சர்யமாக இருந்தது.... இன்று பஸ் ஸ்டான்ட் அருகில் ஒரு உணவகம் இருந்தால், ஒரு சாப்பாடு என்பது அறுபது ரூபாய்க்கு குறையாது, தயிர் சாதமே இன்று இருபது ரூபாய் ஆகிறது, இப்படி இருக்கும்போது எப்படி இவ்வளவு குறைந்த விலையில் என்று தோன்றியது !!


வீட்டில் ஒரு உணவகத்திற்கு செல்கிறோம் என்று சொன்னபோது எந்த இடம் என்று கேட்டார்கள், அண்ணா பேருந்து நிலையம் அருகில் பத்து ரூபாய் சாப்பாடு என்றபோது அந்த இடத்தில் சாப்பாட்டின் தரம் எப்படி இருக்குமோ, அந்த உணவகம் எவ்வளவு பெரியதாக இருக்கும், யார் யார் எல்லாம் அங்கு சாப்பிட வருவார்களோ, எவ்வளவு சுகாதாரமோ, என்ன தண்ணியோ என்றெல்லாம் அச்சப்பட்டனர். பொதுவாக எல்லோரும் பத்து ரூபாய்க்கு சாப்பாடு என்றவுடன் நினைக்கும் கேள்விகள்தான், நமது வயிற்றுக்கு ஒற்றுக்கொளுமோ என்னவோ என்று கவலைபடுவார்கள்தான். ஆனால், எனக்கு நம்பிக்கை இருந்தது, பல பல வருடங்களாக இப்படி குறைந்த விலையில் சாப்பாடு கொடுக்கும் இவர் தரம் இல்லையென்றால் இவ்வளவு காலம் இருந்து இருக்க முடியாது என்று, ஆகவே எங்களது தேடல் ஆரம்பம் ஆனது ! முதலில் அண்ணா பேருந்து நிலையம் சென்று காரை பூக்கடை ஒன்றில் நிறுத்தி பத்து ரூபாய் சாப்பாடு எங்கே கிடைக்கும் எனும்போது எங்களை ஏற இறங்க பார்த்தனர், காரில் வந்து ஏன் இப்படி என்பதுபோல !!



ஆகவே காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, நடந்து சென்று பல கடைகளில் விசாரித்து இடத்தை கண்டு பிடித்தோம். பல பெரிய கடைகளுக்கு இடையில் ஒரு சிறிய அறையும், முன்னே போடப்பட்டு இருந்த கூரையும்தான் கடை. அந்த கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. உட்கார இடம் கிடைக்கவில்லை. காத்திருந்து காத்திருந்து கடைசியில் உள்ளே இருக்கும் சிறிய ரூமில்  அண்ணே இங்க வாங்க என்று இடம் கொடுத்தனர். உட்கார மிக சிறிய ஸ்டூல், சுவற்றில் இருந்து ஒரு சிறிய இலை போடும் அளவே இருந்த சாப்பாட்டு மேஜை, நடக்கும் இடத்தின் நடுவே பெரிய சட்டியில் சாப்பாடும், அதன் கீழே பார்சல் சாப்பாடு கேட்பவர்களுக்கு கட்டி வைக்கப்பட்ட பொட்டலங்களும் இருந்தது. மொத்தத்தில் பார்த்தால் அந்த கடையில் இருந்தது மர அலமாரி, பெஞ்ச் மற்றும் சாப்பாட்டு பாத்திரங்கள் ! உட்கார்ந்தவுடன் ஒருவர் சிறிய இலையை போடுகிறார், தண்ணீர் தெளிக்க என்று ஒரு பிளாஸ்டிக் டம்பளரில் கொடுத்தார்.



கல்லாவில் உட்கார்ந்து இருக்கும் பெரியவர்தான் இந்த சேவையை செய்வது.... நீங்கள் நீடூழி நோயின்றி வாழ வேண்டும் ஐயா !


தண்ணீர் தெளித்த இலையில் பொன்னி அரிசியில் வெள்ளை வெளேரென்று சாதம் ஒரு கப் பரிமாறப்பட்டது, எக்ஸ்ட்ரா சாதம் ஐந்து ரூபாய், ஆனால் உங்களுக்கு அந்த ஒரு கப் சாதமே போதும் என்று தோன்றும். அவரைக்காய் வெங்காயம் போட்ட சாம்பார் பருப்புடன் கொஞ்சம் தண்ணியாக ஊற்றினார்கள், அதனுடன் வாழைக்காய் பொரியலும் கொஞ்சம் ஊறுகாயும் ! பிசைந்து ஒரு கவளம் வாயில் கண்ணை மூடி எடுத்து வைத்தால் உங்களுக்கு நீங்கள் ஒரு பெரிய ஹோட்டல் உள்ளே உட்கார்ந்து இருப்பது போலவே தோன்றும், அவ்வளவு அருமை. அடுத்து மூன்று ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்தால் வத்தல் குழம்பும், பன்னிரண்டு ரூபாய்க்கு முட்டை குழம்பும் ஊற்றுகிறார்கள். அதன் பின்னர் நல்ல ரசமும், பெருங்காயம் ஜாஸ்தி போட்ட மோரும் ஊற்றுகிறார்கள். பொரியல் மற்றும் ஊறுகாய் அடுத்த ரவுண்டு கொஞ்சம் வருகிறது. சுவை அந்த பணத்திற்கு மிகவுமே அதிகம் எனலாம் !




பசியை போக்க வேற என்ன வேண்டும் சார்..... அமிர்தம் இது !

நன்றாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்து கை கழுவும்போது அடுத்த கடையில் லெமன் ரைஸ் 25 ரூபாய் என்று ஒட்டி இருந்தனர், அதை ஒருவர் வாங்கி தின்று கொண்டு இருந்தார். அந்த கடைக்கு இரு நண்பர்கள் செல்லும்போது, ஒருவர் பத்து ரூபாய் சாப்பாடு என்று கண்ணில் பட்டு வா இங்கே செல்லலாம் என்று அவரை கூப்பிட, அவரோ ஐயோ, அது சுத்தமா இருக்காது, எந்த அரிசியோ என்றெல்லாம் சொல்லி அவரை நெட்டி தள்ளி கூட்டி சென்றார்........ திருப்தியான ஒரு ஏப்பம் விட்டு நினைத்துக்கொண்டேன், சில நேரங்களில் மனிதர்களையும், பொருட்களையும் பணம் மட்டுமே முடிவு செய்கிறதே அன்றி அதன் தன்மையோ, மனதோ அல்ல என்று !! அடுத்த முறை மதுரை செல்ல நேர்ந்தால் மறக்காமல் தைரியமாக இங்கு செல்லலாம், சுவையான சாப்பாடு குறைந்த விலையில் தயார் !!


 




பஞ்ச் லைன் :

சுவை - பத்து ரூபாய் சாப்பாடு எப்படி இருக்குமோ என்று அஞ்ச தேவை இல்லை, நல்ல சுவையான சாப்பாடு, நம்பி செல்லலாம் !

அமைப்பு - சிறிய உணவகம், பஸ் ஸ்டான்ட் சுற்றி பார்கிங் செய்ய கொஞ்சம் கஷ்டம்தான். வெயிலில் உள்ளே பேன் எல்லாம் கிடையாது !

பணம் - சாப்பாடு பத்து ரூபாய், முட்டை குழம்பு பன்னிரண்டு ரூபாய், புளி குழம்பு மூன்று ரூபாய்.

சர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள். வார்த்தைக்கு வார்த்தை அண்ணா, சார் என்று கூப்பிட்டு எதையும் கேட்டு கேட்டு செய்கிறார்கள். 

அட்ரஸ் :

மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் கடை இருக்கிறது. கடைக்கு பெயர் என்று எதுவும் கிடையாது, பத்து ரூபாய் சாப்பாடு போடும் கடை என்றால் எல்லோரும் வழி சொல்கிறார்கள்.

மெனுகார்ட் :
 




 
 Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, 10 rupees meals, super meals, low cost meals, Tasty, Madurai, Anna Busstand
 
 

புதிய பகுதி - ஊரும் ருசியும் !!

எவ்வளவு பதிவுகள் எழுதினாலும், பல தலைப்புகளில் எழுதினாலும் இந்த உணவு பற்றி எழுதினால் மட்டும் நிறைய பேர் விரும்பி படிக்கிறார்கள் ! என்னை சந்திக்கும் நபர்கள், கடல்பயனங்கள் தளம் பற்றி பேசிவிட்டு "ஆமாம்…. நீங்க அந்த தோசை பற்றி எழுதி இருந்தீங்களே, அங்க கண்டிப்பா போகணும்"என்று ரசித்து சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கும். இன்று அறுசுவை, அறுசுவை (சமஸ்) என்ற தலைப்புகளிலும், சில சமயங்களில் ஊர் ஸ்பெஷல் பகுதிகளிலும் ஒரு சுவையான உணவகத்தை அல்லது உணவை பற்றி எழுதினாலும், சில சமயங்களில் சில சிறிய உணவுகளை பற்றி விரிவாக எழுதவும், அந்த சிறப்பை சொல்லவும் ஒரு தனி தலைப்பு தேவை என்று பட்டது !!

 

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், திருநெல்வேலி என்றால் அல்வா, கோவில்பட்டி என்றால் கடலை மிட்டாய், மதுரை என்றால் மல்லி……. ஆனால் தூங்கா நகரமான மதுரையில் எவ்வளவு சுவையான வித்யாசமான பதார்த்தங்கள் கிடைக்கிறது தெரியுமா ? கிழிஞ்சது கிருஷ்ணகிரி என்று விளையாட்டாய் சொன்னாலும் கிருஷ்ணகிரியின் புட்டு பணியாரம் பற்றி தெரியுமா ? சேலத்து ஸ்பெஷல் மாம்பழம் என்றாலும் அங்கு பிரபலமாக கிடைக்கும் தட்டுவடை செட் பற்றி தெரியுமா ? கடம்பூர் என்ற ஒரு ஊர் இருக்கிறது என்றும் அங்கு போளி பேமஸ் என்றும் தெரியுமா ? ராமசேரி என்னும் ஊரில் சுடும் இட்லியில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று தெரியுமா ? இது ஒவ்வொன்றும் அந்த ஊரில் இருக்கும் எல்லோரும் சப்பு கொட்டி சாப்பிடும் உணவுகள் !! அதை அறுசுவையில் எழுத முடியாது என்பதால் அந்த ஊரின் சிறப்பை சொல்லியும், அதன் சிறப்பான உணவு பற்றி சொல்லவும் இந்த புதிய பகுதி. இதனால், அந்த ஊருக்கு நீங்கள் சென்றால் அந்த அயிட்டம் தவறாமல் உங்களால் சாப்பிட முடியுமே !!


 

தினகரன் நாளிதழில் சப்புகொட்டுங்க என்ற பகுதியில் திரு வெ.நீலகண்டன் அவர்கள் எழுதி இன்று புத்தகமாக வந்து இருக்கும் "எந்த ஊரில் என்ன ருசிக்கலாம் ?"என்ற புத்தகம் சிறிது வழி காட்டினாலும் , நண்பர்கள் உதவியுடனும் ஒரு சிறிய குறிப்புகளை தயார் செய்து உள்ளேன். அதில் இதுவரை சென்ற ஊரை பற்றியும், அதன் சிறப்பான உணவை பற்றியும் இனி பார்க்கலாமே !! நீங்களும் உங்க ஊரில் என்ன ருசியுடன் இருக்கும் என்று தெரிவியுங்களேன், ஒரு சுவையான பயணமாக இருக்கும் !!


 
Labels : Suresh, Kadalpayanangal, Oorum Rusiyum, District foods, What to eat, New
 

Friday, April 25, 2014

ஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 2)

சென்ற வாரத்தில் எனது அத்தையிடமிருந்து போன் வந்தது, அவரது பிறந்த ஊர் மானாமதுரை என்பதால் இந்த மானாமதுரை மண்பானை (பகுதி - 1) படித்துவிட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் ஒரு குழந்தையை போல அவரது ஊரின் பெருமையையும், பெயர் காரணம் என்று பகிர்ந்துகொண்டார். இந்த ஊர் ஸ்பெஷல் பகுதியின் வெற்றி இதன் மூலம் தெரிந்தது, நான் கஷ்டப்பட்டு சேகரித்த விஷயம் அந்த ஊரில் பிறந்தவர்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது கண்டு மகிழ்ந்தேன் ! இந்த பகுதியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன் !சரி, வாருங்கள் இந்த வாரம் பானை செய்வதை பற்றி இன்னும் விரிவாய் பார்ப்போம் !!

பானை சுடலாம் வாருங்கள் !
பானை செய்வதை பற்றி பார்க்கும் முன்பு இந்த ஊருக்கு ஏன் இந்த பெயர் வந்தது, எதனால் இங்கு மண் பானை செய்பவர்கள் அதிகம் என்று காணலாமா ? சங்க இலக்கியங்கள் தமிழக நிலத்தை, ஐவகையாக வகைப்படுத்தினர். அவை குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல் மற்றும் பாலை என்பனவாகும். மருத நிலத்தை, வேளாண்மைக்கு ஏற்ற நிலமாக்கினர்.    வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருதநில மக்கள் மள்ளர் எனப்பட்டனர், மருத நிலத்தலைவர்கள் மகிழ்நன், ஊரன் என்று அழைக்கப்பட்டனர். இன்றைய மதுரை வைகை நதி பாய்ந்த பகுதி, இதனால் விவசாய நிலங்கள் அதிகம் இருந்ததால் மதுரை என்ற பெயர் மருதை என்பதன் மரூஉச் சொல் என பலர் கருதுகின்றனர். மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் இந்த மானாமதுரையின் இயற்பெயர் 'வானர வீரமதுரை', அது மருவி இன்றைய பெயர் வந்துள்ளது. வேளாண்மை செய்து வாழ்ந்து வந்த இவர்களில் ஒரு பிரிவினர் மண்ணை மூலப்பொருளாகக் கொண்டு பொருட்கள் செய்ததால் ‘குசவர்கள்’  என்று அழைக்கப்பட்டு இன்று குயவர்கள் ஆயினர்.
 

களிமண் ஒருவகையான மண் வகையாகும். பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் இருக்கும். நீர் வளம் மிக்க பகுதிகளில் தோண்டினால் இது கிடைக்கும். மானாமதுரை பகுதிகளில் கிடைக்கும் இந்த களிமண்ணில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் செய்யும் பானைகள் சீக்கிரம் சூடாகும் என்கின்றனர், அது போலவே இங்கு செய்யும் கடம் அந்த இரும்பு தன்மையினால் நல்ல இசையை கொடுக்கிறதாம். களிமண்ணுடன் ஆற்றங்கரைகளில் இருந்து கிடைக்கும் பசை தன்மையுள்ள குறுமண்ணை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்துதான் மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. ஆறு, குளங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணை ஈர பதத்துடன் ஒரு சாக்கு போட்டு  வைக்கின்றனர். அதனுடன் சிறிது குருமணல் சேர்த்து  அந்த  காலத்தில் காலால் மிதித்து சரியான பதத்திற்கு கொண்டு  வருகின்றனர்.   முதலில் வெயிலில் அந்த மண்ணை காய வைத்து, பின்னர் அதில் குருமணல் கலந்து தண்ணீர் ஊற்றி காய வைத்து, பின்னர் அதை காலால் மிதித்து, எந்த மணல் கட்டிகளும் இல்லாமல் செய்கின்றனர். கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும், கால் வலிக்கும் வேலை, அதை சுலபமாக்க இன்று மெசின் வந்து விட்டது ! மண்ணை கொட்டி பட்டனை தட்டினால் பதமான மண் தயார் !!
 

மண் இப்படிதான் விற்க்கபடுகிறது....
 

எல்லாம் களிமண்...... விரைவில் அற்புத பானைகளாய் !!
 
மண்ணை பிசைந்து பதத்திற்கு கொண்டு வரும் யந்திரம்.....

பின்னர் இந்த மண்ணை பானை செய்யும் அந்த சக்கரத்தின் நடுவில் வைத்து சுற்றுவார்கள். இன்று அதை மெசின் செய்கிறது ! இந்த பானை செய்வதற்கு நன்றாக வளையும் விரல் வேண்டும்..... இடது கை ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலால் முதலில் மண்ணில் ஒரு குழி செய்து அதை மேலே எழுப்ப வேண்டும், இதை செய்யும்போதே வலது கையில் அந்த பானையை பாலிஷ் செய்ய வேண்டும் ! அது மட்டும் இல்லை, இந்த பானை செய்ய அவர்கள் குத்த வைத்து வெகு நேரம் உட்கார்ந்து இருக்க வேண்டும், இதனால் கால்களில் ரத்த ஓட்டம் தடைபட்டு கால் மரத்து விடும் ! நான் அவரிடம் ஒரு மணி நேரம் வரை பயிற்சி எடுத்து ஒரு பானை செய்தேன், ஆனால் கிட்டத்தட்ட ஐம்பது முறை தோற்று இருப்பேன் !! இந்த நுட்பத்தை இன்றைய தலைமுறை இளைஞர்கள் கற்று கொள்ளாமல் வேறு வேலைகளுக்கு செல்வதால் பானை செய்ய ஆட்கள் கிடைப்பது கடினமாக இருக்கிறது, அதனால் பானை, தொட்டி, விளக்கு என்றெல்லாம் செய்ய மெசின் வந்து விட்டது, தெரியாதவர்களும் செய்யலாம் !! என்றாவது நீங்கள் பானை செய்பவரை பார்த்தால் அவர்களது கையை பாருங்கள், சிறு ரேகைகள் அனைத்தும் அழிந்து இருக்கும்....... அவர்களது எதிர்காலத்தை எந்த ஜோசியரும் கணிக்க முடியாது, அவர்களது வாழ்க்கையை போலவே !

மண்ணை உள்ளே போடு, லீவரை இழு..... பூந்தொட்டி தயார் !!
 
சிறு பூந்தொட்டி தயாரிக்கும் யந்திரம் !

 
தொட்டி செய்ய டை, தொட்டிகள் பக்கத்தில்......
 
தொட்டி செய்து காய வைத்திருக்கிறார்கள்.....

தொட்டி தயார்........
 
மண் பானை செய்யும் மண் சுத்தமானதாகவும், கெட்டித் தன்மை கொண்டதாக இருக்கும். இந்த வகையான மண் எல்லா இடங்களிலும் கிடைப்பது இல்லை. அதனால் இந்த மண் கிடைக்கும் இடத்தில் இருந்து விலை கொடுத்து வாங்கி வந்து மண் பானை செய்கின்றனர். மண் பானை செய்ய வல்லம்படுகை, கொள்ளிடம், முட்லூர் போன்ற வெளியூர்களில் இருந்து ஒரு டிராக்டர் மண் 1,500 ரூபாயிக்கு வாங்கி வரப்படுகிறது. பதப்படுத்த பயன்படும் மணல் ஒரு டிராக்டர் 1,000 ,ரூபாய். இதனைச் சுடுவதற்கு வைக்கோல், விராட்டி என அதிக செலவு பிடிக்கிறது. ஒரு ட்ராக்டர் மண் மூலம் சுமார் 750 பானைகள் வரை செய்யப்படும். பானை செய்து நெருப்பில் வைத்து சுட்ட பின்னர் ஒரு பானை 40 ரூபாய் வரை விற்பனை செய்தாலும் போதிய லாபம் கிடைக்கவில்லை என மண் பானை தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.


மண் பானையில் வைக்கும் தண்ணீர் எப்படி சில்லென்று இருக்கிறது என்று யோசித்து இருக்கிறீர்களா ?! பானை செய்யும்போது அடியில் சிறிது சதுரம் போல் தட்டி விட்டால் நாம் தரையில் வைப்பதற்கு சௌகரியம் அல்லவா, ஏன் உருண்டையாகவே இருக்கிறது ? மண் பானை செய்யும்போது வெளியில் மட்டுமே ஒரு அட்டையோ அல்லது பேப்பர் கொண்டு பாலிஷ் செய்கிறார்களே, அதை ஏன் உள்ளே செய்வதில்லை ? என்ன கேள்வி சரிதானே..... அதற்க்கு விடை வாருங்கள் அடுத்த பகுதியில் பார்ப்போம், அதுவரை மண் பானையில் என்னவெல்லாம் செய்யலாம் என்று கீழே இருக்கும் படங்கள் பாருங்களேன் !

பணியார சட்டி, தோசை சட்டி, ஆப்ப சட்டி....... மண்ணில் செய்தது !!

ஒரு தரம்.... ரெண்டு தரம்.... மணி அடிச்சாச்சு !

இது எல்லாமே மண் பானையில் செய்தது தான் !!

Labels : Oor Special, District Special, Suresh, Kadalpayanangal, Manamadurai, Clay pot, ManPaanai, Paanai, Clay

Thursday, April 24, 2014

மறக்க முடியா பயணம் - கப்பல் கட்டுவோம் (பகுதி - 2)

சென்ற பகுதியான "கப்பல் கட்டுவோம் (பகுதி -1)"இல் கப்பலின் வெளி கட்டமைப்பு எப்படி செய்யபடுகிறது என்று பார்த்தோம். வாருங்கள் இந்த வாரம் இந்த கப்பலின் மேல் பகுதி மற்றும் டர்பைன் பகுதிகளை பார்ப்போம் ! கப்பல் செய்யும்போது இரும்பினால் செய்யப்படும், இதில் சூட்சமம் என்பது எவ்வளவு அலை அடித்தாலும் கவிழ கூடாது. இதை மட்டும் தெரிந்து கொண்டால் அந்த பகுதியில் கப்பல் செய்வதற்கு இவர்தான் பிதாமகன், ஆகையால் புயலின் நடுவே சிக்கி கவிழாமல் கரைக்கு வரும் மீனவர்களின் படகுகளை செய்பவர்கள் இங்கு தெய்வமாகவும், பிதாமகர்களாகவும் கொண்டாடுகிறார்கள் ! ஒரு கப்பல் உருவாவதை பார்க்கும்போது அதன் மீது பிரமிப்பு ஏற்படுகிறது.


ஒரு கப்பல் செல்வதற்கு துடுப்பு அல்லது என்ஜின் தேவை, அந்த எஞ்சின் ஒரு காற்றாடி போல இருக்கும் ஒன்றை சுழற்றும், அது தள்ளும் நீரை ரட்டர் எனப்படும் ஒரு பலகையை கொண்டு திசையை தீர்மானிக்கலாம் ! மேலே இருக்கும் படத்தை பார்த்தாலே ஒரு சிறிய படகிற்கு ஆளுயர காற்றாடி தேவை என்பதை அறியலாம். துரு பிடிக்காமல் இருக்க இதை தாமிரத்தில் செய்கிறார்கள். கீழே இருக்கும் படத்தில் ரட்டர் எப்படி இருக்கும் என்பதை காணலாம், இது கப்பலின் சுக்கானுடன் இணைக்கபட்டிருக்கும். நீங்கள் திருப்பும் திசைக்கு எதிர் திசையில் இந்த ரட்டர் திரும்பும் !


சரி கீழ் பகுதியில் எல்லாம் பார்த்தாகிவிட்டது, வாருங்கள் மேலே செல்லலாம். ஒரு கப்பலை கீழே இருந்து பார்க்கும்போது சிறியதாக தெரிவது போல இருந்தாலும் மேலே ஏறும்போதுதான் எவ்வளவு பெரியது என்று தெரிகிறது. ஒரு ஏணி மூலம் மேலே ஏற ஏற அது வானத்திற்கே ஏறுவது போல தோன்றுகிறது. ஒரு வழியாக மேலே சென்று பார்த்தால் எல்லாமே மரத்தில் இருக்கிறது ! இந்த கப்பலின் கீழ் பகுதி இரும்பினால் ஆகி இருந்தாலும், மேல் பகுதி முழுவதும் வாகை மரத்தினால் செய்து இருக்கிறார்கள். முதலில் கப்பலில் மேல் தளம் அமைக்கின்றனர். இதில் இரண்டு இடத்தில் மூடி போட்டு இருக்கின்றனர். பின் பகுதியில் இருக்கும் இடம் எஞ்சின் வைக்கும் இடம், சிறிது தள்ளி இருப்பது மீன் சேமிக்கும் இடம். இதில் ஐஸ் எல்லாம் போட்டு பிடிக்கும் மீன்களை பாதுகாப்பாக வைத்து இருப்பார்கள் !




மேல் தளம் முடிந்தவுடன் கப்பலை செலுத்தும் அறையும், அதன் கீழே இவர்கள் உறங்கவும், சமைக்கவும் உள்ள அறை இருக்கிறது. வெகு சிறிய அறைகள், அதில் கப்பலின் சுக்கான் உடன் எஞ்சின் கட்டுப்பாடு பகுதிகள் எல்லாம் அமைக்கின்றனர். இதை கண்ணாடி கொண்டு மூடி, எவ்வளவு காற்று அடித்தாலும் தாங்குமாறு செய்கின்றனர். எந்த மழையும், புயலும் அடித்தாலும் இந்த அறையில் உள்ளே இருக்கும்போது நீங்கள் பாதுகாப்பாக உணர்வீர்கள் என்கிறார் இதை செய்பவர். பொதுவாக வலையை போட்டுவிட்டு இந்த அறைக்கு முன்னே இருக்கும் கூரையின் நிழலில் உறங்குவதும், சீட்டு விளையாடுவதும் நடக்குமாம். ஒருவர் சமைக்க, இன்னொருவர் சுத்தம் செய்ய, ஒருவர் இளைப்பாற என்று வேலைகளை பகிர்ந்து கொள்வார்களாம். எப்படி சுற்றி ஒன்றுமே இல்லாமல் இருக்கும் கடலை பார்த்துக்கொண்டு நாட்கணக்கில் இருப்பீர்கள் என்பதற்கு, அதில் என்ன இருக்கு என்று பதில் !!




முடிவில் எல்லாமும் முடிந்தவுடன், முதலில் கப்பல் நன்றாக மிதக்கிறதா என்று பார்க்க, அதை ஒரு சிறிய படகு இழுக்கும் ஒன்றில் வைத்து பூஜை செய்து கடலில் தள்ளுகின்றனர். அது மிதக்க ஆரம்பித்த பிறகு சிறிது தூரம் ஓட்டி சோதிக்கின்றனர். பின்னர் எங்கெங்கு தண்ணீர் உள்ளே புகுகின்றது என்று சோதித்து குறித்து வைத்துக்கொண்டு அதை கரைக்கு கொண்டு வருகின்றனர். எல்லாமும் முடிந்தபின், அதை விருப்பமான கலர் கொண்டு பெயிண்ட் செய்கின்றனர். அதன் பின்னர் நமது தேசிய கொடியை பறக்க விட்டு அதை கடலில் இறக்கியபின் நாம் பார்த்த அந்த பிரமாண்டமான கப்பலா இவ்வளவு சிறியதாக தெரிகிறது என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை !! ஒரு படகை இதுவரை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டு இன்று அதை செய்வதை பார்த்தது மிகவும் சந்தோசம் அளித்தது.


Labels : Suresh, Kadalpayanangal, Marakka mudiyaa payanam, memorable journey, kappal kattuvom, boat making, how it is made