Tuesday, May 13, 2014

ஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் (பகுதி - 1) !!

மாங்காய்….. சொல்லி பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறதா ?! மஞ்சள் வண்ண நிறங்களில் சிறியதும் பெரியதுமாக எங்கு பார்த்தாலும் மாம்பழம் கண்ணில் படுகிறதா. எந்த ஊர் மாம்பழம் நன்றாக இருக்கும் என்றால் குழந்தையும் சொல்லிவிடும் சேலம் மாம்பழம் என்று, ஆனால் அது உண்மையா ? மாமரம், ஒட்டு மாமரம் வித்யாசம் என்ன ? இவ்வளவு மாங்காயும் ஊறுகாய் மட்டும்தான் போடபடுகிறதா ? மாம்பழம் என்னவாகிறது ? எத்தனை வகை மாம்பழம் இருக்கிறது ? வண்டு துளைத்த மாம்பழம் மட்டும் என்ன அவ்வளவு சுவை ?….. இப்படி நிறைய கேள்விகள் மனதில் எழுகிறதா ?? இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு என்று விஷயம் சேகரிக்க செல்லும்போது எவ்வளவு விதமான சோதனைகளை சந்திக்கிறேன் என்பதை இந்த பகுதியின் மூலம் நீங்கள் புரிந்துக்கொள்ளலாம், அவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் இன்று இதை எழுதும்போது சந்தோசமாக இருக்கிறது, அவ்வளவு தெரிந்துக்கொண்டேன். இந்த பகுதி சற்று நீளமாக இருக்கும்…… இல்லையென்றால் நான் நான்கு பகுதிகளுக்கு மேலாக எழுதும் அளவுக்கு விஷயம் இருக்கும் !!



சேலம்….தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. சைலம் என்ற சொல்லிற்கு மலைகளால் சூழ்ந்த வாழிடம் என்பது பொருள். இந்த சைலம் என்பதே திரிந்து, சேலம் ஆனது. கொங்கு மண்டலத்தின் கிழக்குஎல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக நடுவம் ஆகும். இதனை "மாங்கனி நகரம்" என்றும் அழைப்பார்கள். தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் மாமரங்கள் அதிகம் உள்ளன. சேலம் மாவட்டத்தில் சேலம் பெங்களூரா, மல்கோவா, அல்போன்சா, நடுசாலை, செந்தூரா, குதாதத், பில்பசந்த், பைகன்பள்ளி உள்ளிட்ட ரக மாம்பழங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ரக மாம்பழங்கள் நங்கவள்ளி, வனவாசி, மேட்டூர், வரகம்பாடி, சங்ககிரி, சோரகை, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகின்றன. மாம்பழங்கள் தமிழ் நாட்டில் மட்டும் அல்ல, இந்தியாவில் பல இடங்களில் பயிரிடபடுகின்றன, அதை பற்றி எழுத வேண்டும் என்றால் இன்னும் ஒரு பகுதி ஆகும் என்பதால், இந்த படத்தை பார்த்து எங்கு என்ன வகை மாம்பழம் பிரபலம், பயிரிடபடுகிறது என்று தெரிந்து கொள்ளுங்களேன் !



            

மாம்பழம் புவிமையக் கோட்டுப் பகுதியில் வளரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள் இந்தியாவங்காளம்தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் தோன்றின. சுமார் 35 சிற்றினங்களைக் கொண்ட இம்மரத்தின் அறிவியல் பெயர் Mangifera spp. இவற்றுள் இந்திய சிற்றினமே (Mangiferra indica) உலக அளவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. மாம்பழம் உலகெங்கும், குறிப்பாக ஆசியாவில், கோடை காலங்களில் அதிகம் சுவைக்கப்படுகிறது. பழமாகவும், பழரசமாகவும் மட்டுமல்லாது காயாகவும் பல வித உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக நமக்கு வரும் சந்தேகம் என்பது, மாம்பழத்தில் எத்தனை வகை இருக்கிறது, அவற்றில் எது மிகவும் ருசியாக இருக்கும் என்பது. 



இன்று மாமரங்களில் ஒட்டு மாமரம் (இதை பற்றி விரிவாக அடுத்த பகுதியில் எழுதுகிறேன் !) என்ற வகை வந்ததில் இருந்து, ஊர் ஊருக்கு ஒரு பெயர் வைத்துக்கொள்கின்றனர், ஆனால் அதற்க்கு முன்பு இந்தியாவில் கீழே இருக்கும் வகைகளே பிரபலமாக இருந்தன….. அதில் 


  • தேமா (இனிப்பு மிக்கது) [2]
  • புளிமா (புளிப்பு மிக்கது)
  • கறுத்த கொழும்பான்
  • வெள்ளைக் கொழும்பான்
  • பங்கனப்பள்ளி
  • மல்கோவா
  • ருமானி
  • திருகுணி
  • விலாட்டு
  • அம்பலவி [கிளி சொண்டன் மற்றும் சாதாரண அம்பலவி என இரண்டு]
  • செம்பாட்டான்
  • சேலம்
  • பாண்டி
  • களைகட்டி
  • பச்சதின்னி
  • கொடி மா
  • மத்தள காய்ச்சி



  • இதில் தெரிந்து கொள்ள வேண்டியது என்பது மாம்பழ சீசன் பற்றி, பொதுவாக தமிழ்நாட்டில் கோடை என்றாலே மாம்பழ சீசன் ஆரம்பமாகிவிடும், ஆனால் பொதுவில் மாம்பழ வகைகளை பொருத்து இந்த சீசன் என்பது மாறுபடும்…. எல்லா வகைகளும் எல்லா நேரத்தில் கிடைப்பதில்லை !





    சரி, சேலம் பற்றி தெரிந்து கொண்டாயிற்று, மாம்பழம் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொண்டோம்….. வாருங்கள் சிறிது அந்த மரத்தை பற்றியும் தெரிந்து கொள்வோம் ! மாமரம் 35 - 40 மீ உயரம் வளரக்கூடிய பெரிய மரமாகும். இதன் இலைகள், எப்போதும் பசுமையாகவும் மாற்றடுக்காகவும் அமைந்துள்ளன. இவை 15 - 35 செ.மீ நீளமும், 6 - 16 செ.மீ அகலமும் கொண்டிருக்கும். கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும், வளர வளர பச்சையாகவும் மாறுகின்றன. பூக்கள் கிளை நுனியில் கொத்தாகத் தோன்றுகின்றன. இவை மிகச்சிறியதாக, 5 - 10 மி.மீ. நீளமுடைய இதழ்களையும், மிதமான இனிய மணத்தையும் கொண்டுள்ளன. பூத்து, மூன்று முதல் ஆறு மாதங்களில் பழங்கள் முற்றுகின்றன. மாம்பழம் நீன்ட காம்புகளுடன் மரக்கிளைகளில் கொத்தாய் தொங்கும். பழங்கள் 10 - 25 செ.மீ நீளமும், 7 - 12 செ.மீ விட்டமும், 2.5 கிலோகிராம் வரை எடையும் உடையவை. காய்கள் பச்சையாகவும், பழங்கள் மஞ்சள், இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. பெருபாலும் இரகத்தைப் பொருத்து நிறம் மாறினாலும், சூரியன் படும் பாகங்கள் சிவப்பாகவும், மற்ற இடங்கள் மஞ்சளாகவும் இருக்கும். பழுத்த பழம் இனிய மணம் கொண்டிருக்கிறது. பழத்தின் நடுவில் கடின ஓடுடைய ஒற்றை விதை காணப்படும். இரகத்தைப் பொருத்து இந்த ஓடு நார்களுடனோ வழுவழுப்பாகவோ இருக்கும். விதை 4 - 7 செ.மீ நீளமும், 3 - 4 செ.மீ அகலமும், 1 செ.மீ தடிமனும் கொண்டு, ஒரு மெல்லிய விதை உறையுடன் இருக்கும்.


    மாமரப் பூங்கொத்தில் சுமார் 4000 பூக்கள் இருக்கும். பூங்கொத்தில் பெரும்பகுதி ஆண் பூக்களாகவும் மற்றவை இருபால் பூக்களாகவும் இருக்கும். சாதாரணமாக, நிழலில் வளரும் பூக்கள் இருபால் பூக்களாக இருக்கும். உலர்ந்த அல்லது குளிர் தட்பவெப்பம், மாமரம் பூப்பதை தூண்டுகிறது. மேலும், எதிபான், பொட்டாசியம் நைட்ரேட் அல்லது நாப்தலீன் அசிடிக் ஆசிட் ஆகிய வேதிப்பொருட்களும் பூப்பதை தூண்டப் பயன்படுத்தப்படுகின்றன.  இவ்வளவு பூக்களும் காய் ஆக வராது, மாம்பழமாக வருவது என்பது கொஞ்சமே…. அதை பற்றி விரிவாக அடுத்த பகுதியில் பார்க்கலாம் !! இந்த மாங்காய் ஊறுகாய் போடுவது, மாம்பழ ஜூஸ் என்று இன்னும் இன்னும் சுவாரசியமாக இருக்கும், அடுத்த வாரம் வரை பொறுங்களேன் !!

    Labels : Suresh, Kadalpayanangal, Oor special, Mango, Salem, Maambalam, King of Fruit, Indian Mango, Juicy, District special

    10 comments:

    1. மாமரத்தைப் பார்த்தாலே சந்தோசம் பீறிடுகிறது...! + தித்திக்கிறது...!

      ReplyDelete
    2. தேனி பகுதியில் ஒரு மாந்தோப்புக்குச் சென்றிருந்தோம் ..

      அனைத்தும் ஏற்றுமதி ரகங்கள்..மரங்களுக்கு சுத்திரிக்கப்பட்ட தண்ணீர் தான்
      சொட்டு நீர்பாசனம் மூலம் அளிக்கிறார்கள்..

      கைபடாமல் இயந்திரம் மூலம் மாம்பழக்கூழ் தயாரித்து பாட்டில்களில் அடைத்து
      அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறதாம்..
      தொழிற்சாலையைப் பார்க்கவே ஏகப்பட்ட கெடுபிடிகள்..!

      ஃபர்ஸ்ட் க்ளாஸ் குவாலிட்டிகள் வேர்க்கடலையாகட்டும் , மாம்பழம் ,
      அரிசி என்று எந்த வகையாக இருந்தாலும் ஏற்றுமதிக்கு மட்டும் தான்..

      நமக்கு கன்ணால் பார்க்கக்கூட அனுமதி கிடைப்பதில்லை..

      அவற்றை சாப்பிட வேண்டுமானால் வெளிநாட்டுக்குத்தான் பறக்கவேண்டும்..!

      ReplyDelete
    3. தங்களது தமிழ் எழத்து நடையில் நிறைய முன்னேற்றம் தெரிகிறதே, வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    4. கையிலிருக்கும் மாங்காய்களோடு நம்ம வீட்டுக்கு வந்துடுங்க. மிளகாய் தூள், உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

      ReplyDelete
    5. மாம்பழங்கள் குறித்து இத்தனை தகவல்கள்! படங்களை போட்டு மாம்பழ ஆசையை கிளப்பி விட்டீர்கள்! நன்றி!

      ReplyDelete
    6. எங்கள் ஊர் பகுதியில் சப்போட்டா மற்றும் பஞ்சவர்ணம் ரக மாம்பழங்கள் கிடைக்கும்... அடுத்த பதிவுக்காக ஆவலுடன்...

      ReplyDelete
    7. Suresh please also write about
      கும்பகோணம் ஏர் பரோட்டா! From Devan Hotel
      கும்பகோணம் – முராரி ஸ்வீட்ஸ்
      மன்னார்குடி – டெல்லி ஸ்வீட்ஸ்
      நீடாமங்கலம் – பால் திரட்டு
      கும்பகோணம் – ரோஜா மார்க் இனிப்புகள்

      ReplyDelete
    8. கும்பகோணம் ஏர் பரோட்டா! From Devan Hotel
      கும்பகோணம் – முராரி ஸ்வீட்ஸ்
      மன்னார்குடி – டெல்லி ஸ்வீட்ஸ்
      நீடாமங்கலம் – பால் திரட்டு
      கும்பகோணம் – ரோஜா மார்க் இனிப்புகள்

      ReplyDelete
    9. மாம்பழம் என்றதும் சேலம் தான் நினைவுக்கு வரும்..... இங்கே மாம்பழம் பற்றி விரிவாகப் பார்க்கப் போகிறோம் என நினைக்கும்போதே இனிக்கிறது.

      நெய்வேலியில் இருந்தவரை மாம்பழம் நிறைய சாப்பிட்டு இருக்கிறேன் - வீட்டுத் தோட்டத்தில் 6 மாமரம் - அதில் ஒன்று பங்கனப்பள்ளி....

      ReplyDelete