Wednesday, July 23, 2014

ஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் ! (பகுதி - 1)

பிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் ! முதன் முதலாக இதை பார்த்த பொது வந்த பயம், அப்பா வாங்கி வந்த பிரம்பு மோடாவில் ஆச்சர்யமாக மாறியது. மிக அழகாக கைவினை கொண்டு செய்யப்பட்ட இதில் ஒரு சிறிய பிரம்பு எப்படி இவ்வளவு அழகாக மாறுகிறது என்று தெரியவந்தது. பின்னர் சொகுசு சோபாக்கள், ஸ்டீல் கட்டில்கள், பிளாஸ்டிக் சேர், அலுமினிய ஸ்டூல் என்று கால மாற்றத்தில் இது பின்னுக்கு தள்ளப்பட்டது என்பதுதான் உண்மை, இன்று எந்த ஷோ ரூம் சென்றாலும் மரத்தில் ஆன பொருட்கள் கிடைக்கிறது, மிகவும் அழுத்திக்கேட்டால் மட்டும் இதுவும் மரத்தில் ஆனதுதான் என்று "அந்த இன்னொரு பழம் இதுதான்"என்று காட்டி விற்ப்பதையே குறியாக கொண்டு பிரம்பு பொருட்கள் என்ற ஒன்றை மறைக்கின்றனர். இந்த பிரம்பு பொருட்களை மிக அருமையாக கலை நயத்துடன் செய்யும் ஒரு ஊர் இருக்கிறது தெரியுமா ? சுமார் ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றுக்கணக்கில் கடைகளும், சிறு தொழில் போல ஒவ்வொரு வீடும் இந்த பிரம்பு பொருட்களை ஏற்றுமதி செய்கின்றனர் தெரியுமா…… இந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில்தான் எத்தனை எத்தனை ஆச்சர்யங்கள் !!








முதலில் அந்த ஊரையும், எப்படி பிரம்பு செய்கிறார்கள் என்று பார்ப்பதற்கு முன் இந்த பிரம்பை பற்றி சிறிது தெரிந்து கொள்வோமே ! பிரம்பு உலகெங்கும் வளரும் போவேசியே குடும்பத்தைச் சேர்ந்த நெகிழ்ச்சித்தன்மையான வன்தண்டைக் கொண்ட பல்லாண்டுத் தாவரமாகும். இது இரண்டு பேரினங்களைக் கொண்டது. பேரினம் அருண்டோ(Arundo) மத்திய தரைக்கடல் முதல் தூரக்கிழக்கு நாடுகளை தாயகமாகக் கொண்டவை. மற்றைய பேரினம் அருண்டினாரியா (Arundinaria). போவேசியே செடி வகையில் சுமார் 10,000 வகைகள் உள்ளன அதில் ஒன்றுதான் பிரம்பு ! இன்னும் சிறிது தெளிவாக சொல்வதென்றால் எந்த புல்லை எடுத்துக்கொண்டாலும் அதன் இலைகளை எடுத்துவிட்டு பார்த்தால் நடுவில் தெரியும் தண்டு பகுதிதான் சிறியதில் இருந்து பெரியது வரையாக வித்தியாசப்பட்டு பயன்பாட்டுக்கு வருகிறது…… என்ன பார்க்கில் இருக்கும் புற்கள் சிறிது அதனால் காதலர்கள் பிடுங்கி போடுகின்றனர், இதுவே காவிரி கரையில் ஆள் உயரத்திற்கு வளர்ந்து இருப்பதை ரசித்துவிட்டு செல்கின்றனர் !! பிரம்பு ஒரு பெரிய தாவர வகை….. மூங்கில் மிக பெரிய தாவர வகை….. கரும்பு என்பது இனிக்கும் தாவர வகை…… நெல் பயிர் என்பதும் புல்லின் ஒரு வகையே…. இப்படி நீங்கள் சுற்றி பார்த்தால் இந்த உலகம் புல்லினால் ஆனது என்பது தெரிய வரும் !!








இப்படி பல சைஸ்களில் வளரும் பிரம்புகளை கோரை என்றும் பிரம்பு என்றும் நாம் சொல்கிறோம். இது பெரும்பாலும் பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து தைக்கால் கிராமத்திற்கு வருகிறது. பிரம்பில் இருக்கும் சிரமம் என்பது மிக சிறியதாக இருந்தால் எடையை தாங்காது, மிகவும் தடினமாக இருந்தால் வளையாது. இதனால் வரும் பிரம்புகளில் சுமார் 30% வரை கழிவில் சென்று விடும்…. அதாவது முத்தல், உடைந்தது, பூச்சி அரித்தது என்று, ஆனாலும் இதை குப்பையில் போடாமல் அதையும் ஒரு கலை வடிவமாக்கியோ அல்லது அதை மற்ற பகுதிக்கு பயன்படுத்துகின்றனர். இந்த பிரம்புகள் நீள நீளமாக சுமார் ஆறு அடி உயரம் வரை இருக்கும், பார்க்கும்போது குச்சிதானே என்று தோன்றினாலும் அது ஒரு கலைஞனின் கலைவண்ணத்தில் இந்த தைக்கால் கிராமத்தில் எப்படியெல்லாம் உருவாகிறது என்று தெரியுமா !!




பிரம்பு பொருட்கள் செய்வதையே பிரதானத் தொழிலாகக் கொண்டிருக்கும் தைக்கால் கிராமம் சீர்காழிக்கு அருகில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை வழியில் சீர்காழிக்கு முன்பே கொள்ளிடம் கரையில் இருக்கிறது இந்த ஊர். இங்கு கடைகளில் வார்னிஷ் அடிக்கப்பட்ட விதவிதமான பிரம்பு பொருட்களை வரிசைக்கட்டி வைத்திருப்பதே அழகுதான். கொள்ளிடக்கரையில் இருப்பதால் இந்த பகுதியில் விளையும் மெல்லிய பிரம்புகளை வைத்து வீட்டிலேயே தொழிலைத் தொடங்க, இன்று காவிரி பொய்த்து போனதால் பிரம்புகள் பீகாரில் இருந்தும், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் வருகிறது ! சீர்காழி, சிதம்பரம், திருக்கடையூர், தரங்கம்பாடி போன்ற ஊர்களுக்கு தைக்கால் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதால் வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் தைக்காலுக்கு ஒரு விசிட் அடிக்காமல் போவதில்லை. பஞ்சு மெத்தைகள் சுகமாக இருந்தாலும் கை வேலைபாடுகொண்ட பிரம்புக்கு நல்ல வரவேற்பு இருப்பதும், பிரம்பு பொருட்களின் குளுமை, உடம்பு சூடு தணியும் என்பதாலும் வருடம் முழுவதும் நல்ல விற்பனைதான். வேலூர், சென்னை, திருச்சி போன்ற வெளியூர்களில் பிரம்பு பொருட்களை விற்பனை செய்வதற்காக இங்கிருந்துதான் வாங்கிச் செல்கின்றனர் என்பது இந்த ஊரின் சிறப்பு.

    

இங்கு விளையும் மெல்லிய பிரம்புகளை வைத்து ஜாடி, கூடை, முறம், அர்ச்சனைத் தட்டு, அலங்கார கூடைகள் செய்யப்படுகிறது. இந்த மெல்லிய பிரம்பு அதிக வளைவு கொடுக்காது என்பதால் எடை தாங்கும் கூடைகளைச் செய்ய முடியாது. அதனால கடினமான, குவாலிட்டியான பிரம்புகளை பீகாரில் இருந்து இறக்குமதி செய்து பொருட்களை செய்கிறார்கள். ஏழு வகை பிரம்புகளில் ரைடான், மூங்கில் பிரம்பு, முக்கால் பிரம்பு என ரகரகமாகப் பொருட்களை செய்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். கலை நுணுக்கமான வேலை என்பதால் ஒரு நாளில் எட்டு பேர் சேர்ந்து ஒரு சோபாதான் செய்ய முடியுமாம். கடினமான ரைடான் பிரம்புகளால் பெரிய பிரம்பு சோஃபா, நாற்காலி, டீபாய், ஜூலா போன்றவற்றை செய்கிறார்கள். நீங்கள் அங்கு இருக்கும் பிரம்பு பொருட்களை பார்த்து இதையெல்லாம் பிரம்பில் செய்ய முடியுமா என்று கண்டிப்பாக மூக்கின் மீது விரலை வைத்தாலும், சில சமயங்களில் உங்களுக்கு வேண்டும் பொருட்களை, வேண்டும் என்று சொன்னாலும் நன்கு செய்து கொடுக்கின்றனர்.












ஒரு கடையினுள் நுழைந்து ஒரு பிரம்பு பொருள் எப்படி உருவாகிறது என்று பார்க்க முடிந்தது. ஒரு சின்ன விளக்கு, நிறைய வகையான ஆணிகள், பிரம்பும் அறுக்கும் பொருட்களும், சுத்தியலும் என்று மட்டுமே இருந்தது. ஒரு பிரம்பை எடுத்து தீயில் காட்ட அது சற்று நெகிழ்ந்து கொடுக்கிறது, அதை சிறிது வளைத்து கொஞ்ச நேரம் பிடிக்க பிரம்பு அந்த வடிவத்தில் அப்படியே இருக்கிறது, பின்னர் மீண்டும் தீயில் காட்டி வளைக்கின்றனர். இப்படியே தேவைக்கு ஏற்ப வளைத்து, நெளித்து ஆணியை கொண்டு அடித்து, கயிறை கொண்டு கற்றி என்று விறு விறுவென்று ஒரு சேர் உருவாகி கொண்டு இருந்தது !









வெளியூர் விற்பனையாளர்கள் இங்கிருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிச் செல்லும் பொருட்களை பதினைந்து ஆயிரத்துக்கு தாராளமா விற்க முடியும் என்கிறார்கள். வாடிக்கையாளர்கள் இங்கு வந்து நேரடியாக வாங்கும்போது கையில இருக்குற தொகைக்கு ஏற்ப பொருட்களை தரம் பார்த்து வாங்க முடியும். அதே சமயம் தரமானதாகவும் பார்த்து வாங்கலாம். சோஃபாசெட், ஜூலா, டைனிங் டேபிள் என எல்லாமே கிடைக்கிறது. முக்கியமாக நேரடியாக வந்து வாங்கும்போது கேரண்டியும் தருகிறார்கள்!.
 
சரி, இந்த பகுதியில் பிரம்பு பொருள்களை பார்த்தோம்.... கோரை பாய்களையும், அதில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று அடுத்த பகுதியில் பார்ப்போமே !!
 
Labels : Suresh, Kadalpayanangal, oor special, district special, Thaikkal, Chidambaram, Pirambu, Paai, amazing works

Tuesday, July 22, 2014

ஊரும் ருசியும் - ராமசேரி இட்லி !

சில சமயங்களில் சில ஊர்கள் நிறைய ரகசியங்களை தனக்குள் கொண்டு இருக்கும், அதை தேடி செல்லும் பயணம் என்பது மிகவும் சுவாரசியம் மிக்கது ! கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம் ராமசேரி !! முகபுத்தகத்தில் ஒருவர் இந்த ஊரை பற்றி குறிப்பிட்டு இந்த ஊரில் செய்யும் இட்லி மட்டும் சுமார் நான்கு நாட்கள் வரை கெடாமல் இருக்கும், சுவையும் அமோகம் என்றார்..... அதில் இருந்து ஒரே ஆர்வம், இதை எப்படியாவது சாப்பிட்டே ஆகா வேண்டும் என்று. இதை பற்றி தெரிந்த தகவல் என்பது...... ராமசேரி இட்லி மட்டுமே. எனது பயணத்தில் வழக்கம் போல எனது ரதகஜதுரபதாதிபதிகளும் இணைந்தனர், ஒரு பசி நேரத்தில் இப்படி ஊர் தேடி அலையும்போது சில நேரங்களில் நமக்கு கட்டப்படும் பட்டமும், அதே பசி ருசியுடன் ஆறியபின் கிடைக்கும் பட்டமும்தான் ஒரு பயணத்தின் சுவாரசியம் !!

ராமசேரி இட்லி !!


ஒரு ஊரில் சுமார் 100 வருடங்களுக்கும் மேலாக இட்லி சுட்டு மக்கள் வாழ்கின்றனர், அதுவும் அந்த இட்லி சுமார் நான்கு நாட்கள் வரை கெட்டு போகாது என்பது நிச்சயம் அதிசயம்தானே ! கோயம்பதூரில் இருந்து சுமார் ஆறு மணிக்கு இட்லி சாப்பிட கேரளா போறோம் என்று சொன்னபோதே எல்லோருக்கும் ஏதோ நடக்கபோகுதுன்னு தோன்றியது ! இப்போது ரோடு போட்டுக்கொண்டு இருப்பதால் குண்டும் குழியுமான ரோட்டில் வண்டியை ஒட்டிக்கொண்டு அந்த அதிகாலையில் செல்லும்போது, அங்க கொஞ்சம் நிறுத்து கொஞ்சம் டீ சாப்பிடலாம் என்று சொன்ன என்னை, இட்லி தீர்ந்துடும் வேகமா போகலாம் என்று தலையில் தட்டினர். ரோட்டில் மேல் இருக்கும் கிராமம் என்று நினைத்து தூரம் சென்றுவிட்டு, பின்னர் அங்கே இங்கே கேட்டு ஒரு ஒற்றை ரோட்டில் ராமசேரி எவ்விட (இது கேரளாவின் எல்லையில் இருக்கிறது !) என்று கேட்டு கேட்டு செல்ல அப்போதே மணி ஏழரை..... எல்லோருக்கும் எஞ்சின் சத்தத்தையும் மீறி வயிறு சத்தம் போட ஆரம்பித்தது. தட்டு தடுமாறி ராமசேரி என்ற ஊரின் பேர் பலகையை பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு அங்கு இருந்த ஹோட்டல் ஒன்றில் இட்லி இங்க பேமஸ் இல்லையா என்பதை எப்படி மலையாளத்தில் கேட்பது என்று பட்டிமன்றம் நடத்தில்.... இவ்விடத்தில் இட்லி பேமஸ் என்று மென்று கேட்க, எத்தனை இட்லி வேணும் சொல்லுங்க என்று பதிலுக்கு அவர் கேட்க, சார் எவ்வளவு இட்லி இருக்கு என்று எனது முதுக்குக்கு பின் இருந்து குரல் வந்தது.

சரஸ்வதி இட்லி கடை !

ஊரின் முதல் கடையே இதுதான் !

சங்கர் இட்லி கடை !

நாங்கள் அந்த ஊருக்குள் நுழைந்தபோது முதல் கடையின் முன்னே கார்களும், பைக்களும் நின்று கொண்டு இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஒரு ஊர் என்றால் நான்கு தெரு இருக்கும், ஆனால் இங்கு மெயின் ரோட்டின் இரண்டு பக்கமும் வீடுகள் அதுதான் ராமசேரி கிராமம். நாங்கள் அந்த கடையில் உட்கார இடம் தேட, அங்கு இருந்தவர்களை பார்த்தால் பெரிய இடம் போலவே தோன்றியது..... இட்லி சாப்பிட பென்ஸ் காரில் வந்து இருந்தனர் ! இடம் காலி இல்லை என்று வெளியில் காத்துக்கொண்டு இருந்தோம். பத்து நிமிடத்தில் இடம் காலி என்று சொல்ல நாங்கள் உள்ளே நுழைந்தோம். ஒரு சிறிய அறை, அதன் உள்ளே மர பெஞ்ச் போடப்பட்டு இருந்தது. இடது பக்கத்தில் டீ போடும் இடம். உட்கார்ந்தவுடன் ஒரு தட்டு வைத்து இட்லி என்று சொன்னவுடன் உள்ளே இருந்து சூடாக இட்லியை உங்களது தட்டில் எடுத்து போடும்போது நாம இட்லிதான கேட்டோம், ஊத்தப்பம் இல்லையே என்று சந்தேகபடவேண்டாம்..... இதுதான் ராமசேரி இட்லி !

நாங்க ஏழு பேரு, எங்களுக்கு சுத்தறது, சாப்பிடறதுதான் வேலை !



இது இட்லியா, இல்லை தோசையா...... இல்லை சார், இது ராமசேரி இட்லி !

ராமசேரி இட்லி என்பதின் ஸ்பெஷல் என்பதே இதுதான்...... அது இட்லியும் அல்ல, தோசையும் அல்ல ! தொட்டுக்கொள்ள நல்ல தேங்காய் சட்னியும், கார சட்னியும் கொடுக்க ஒரு வாய் பியித்து வைக்க உங்களுக்கே புரியும் அதன் ருசி மெல்ல மெல்ல. பொதுவாக இட்லி என்பது சூடாக, மெதுவாக இருக்கும், மதுரை இட்லிக்கு அந்த குணம் உண்டு. ஆனால், இட்லியின் நாடு பகுதி என்பது சற்று உப்பியது போல இருக்கும்போது, சில சமயங்களில் அதன் ஓரத்தில் இருந்த அந்த தன்மை நடு பகுதியில் எதிர் பார்க்க முடியாதபடி செய்து விடும். ஆனால் இங்கு இட்லி ஒரே போல இருப்பதால் தின்று முடிக்கும் வரை அதே சுவை !! இதன் தன்மையும், வித்யாசமான இட்லி அமைப்பும் உங்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தரும் என்றால் அது மிகை இல்லை !


இது இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பும், நீங்க எப்படி !

இப்படி வித்யாசமான இட்லியை செய்யும் விதமும் வித்தியாசம்தான். பொதுவாக நாம் உபயோகிக்கும் இட்லி பாத்திரம் போல இல்லை இது. ஒரு அலுமினியம் பானை அதன் உள்ளே தண்ணீர் கொதிதுக்கொண்டு இருக்கிறது. அதன் மேலே ஒரு சிறிய வட்டில் போன்ற அமைப்பு, அதன் மேலே துணி போடப்பட்டு இருக்கிறது. அந்த வட்டிலின் மேலே இட்லி மாவை எடுத்து தோசை போல ஊற்றுகிறார்கள். பின்னர், அதன் மேலே மீண்டும் வட்டில் வைத்து மீண்டும் இட்லி..... இப்படி ஒரு முறையில் நான்கு இட்லி மட்டுமே செய்ய முடியுமாம். இரண்டு மூன்று அடுப்பு வைத்து இட்லி செய்கின்றனர். இதை செய்ய புளியமரத்தின் விறகை மட்டுமே பயன்படுத்துகின்றனர், விறகு அடுப்பில் செய்யும் எல்லாவற்றிற்கும் ஒரு தனி சுவை உண்டு போல ! ஒரு நான்கு நிமிடம் கழித்து மேலே கவிழ்த்தி வைத்து இருந்த மூடியை எடுக்க உள்ளே வெள்ளை வெளேரென்று ராமசேரி இட்லி.......இப்போதே நாக்கு ஊற ஆரம்பித்தது எனக்கு ! ஒரு ஊர் இட்லியில் பிழைக்க முடியுமா என்று கேட்டால், பதிலாக சுவையான இட்லியுடன் ராமசேரி இருக்கிறது !

இட்லி பானை.......

ஒரு இட்லி ஊத்தியாச்சி, அடுத்தது.....





இட்லி ரெடி !


சூடான சுவையான இட்லி !

மீதி இட்லி எங்கே அப்படின்னு தேடறீங்களா....நானும்தான்.... எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் 


Labels : Oorum rusiyum, District foods, Ramasery, Idly, Different idly, Palakad, Coimbatore, Oor special, district special

Tuesday, July 15, 2014

உலக பயணம் - தண்ணீருக்குள் ஒரு உலகம் !!

உலக பயணங்களில் சில நேரம் மெய் மறக்கும் தருணம் என்று சில நேரங்களில் நடக்கும், அது இந்த முறை சிங்கப்பூர் சென்று இருந்த போது நடந்தது ! தண்ணீரின் உள்ளே அதுவும் கோரல் ரீப் எனப்படும் இடங்களில் உலகம் என்பது எவ்வளவு வண்ணமயமானது என்பது புரியும், ஆனால் நீச்சல் தெரியாதவர்களுக்கு அதை அனுபவிக்க முடியாது, அப்படி தெரிந்தாலும் நீங்கள் தண்ணீரின் உள்ளே அந்த உபகரணங்களோடு செல்ல வேண்டியது இருக்கும்..... அப்படி எல்லாம் இல்லாமல் கடலின் அடியில், வெகு அடியில் நீங்கள் நனையாமல் இந்த அழகை எல்லாம் பார்த்துக்கொண்டு நடந்தால் எப்படி இருக்கும் !! சிங்கப்பூரின் சீ அகுவேரியம் (S.E.A Aquarium) என்னும் இடத்தில் இந்த அதிசயம் நடக்கிறது !
குறிப்பு : சிங்கபூரீன் அண்டர்வாட்டர் வேர்ல்ட் என்பதல்ல இது, இது புதிய தண்ணீர் உலகம் !


சிங்கப்போர் செல்பவர்கள் எல்லாம் செந்தோசா தீவிற்கு செல்லுவார்கள், அங்கு கண்டிப்பாக எல்லோரும் செல்வது என்பது அண்டர்வாட்டர் வேர்ல்ட் எனப்படும் ஒரு தண்ணீர் பூங்கா, அதில் ஒரு டியூப் போன்ற கண்ணாடி அமைப்பின் உள்ளே நீங்கள் நடந்து செல்லும்போது உங்களுக்கு மேலே மீன்கள் ஓடும், இதில் ஒரு கடலின் பிரம்மாண்டத்தை நீங்கள் உணரவே முடியாது...... ஆனால் இந்த தண்ணீர் உலகத்தில் விஷயமே வேற, உங்களது முன்னே ஒரு கடல், பிரம்மாண்டமான கடல் அதில் மிக பெரிய மீன்கள் எல்லாம் நீந்துகின்றன என்றால் எப்படி இருக்கும். உலகின் மிக பெரிய கண்ணாடி தடுப்பு என்ற சாதனை பெற்ற தண்ணீர் உலகம் இது ! கின்னஸ் சாதனை படைத்த ஒரு பெரிய தண்ணீர் உலகத்தை காணுவதற்கு கோடி கண்கள் வேண்டும் போங்கள் !
 

 
 
 
ரிசார்ட் வேர்ல்ட் சென்டோஸா என்னும் இடத்தில் இருக்கிறது இந்த இடம். உள்ளே நுழைவதற்கு பெரியவர்களுக்கு 38 வெள்ளி (1900 ரூபாய்), சிறியவர்களுக்கு சுமார் 28 வெள்ளி (1400 ரூபாய்) ஆகிறது. வெளியே நிறைய குடும்பங்களும், ஆட்களும் ஒருவருக்கு இவ்வளவு கொடுக்க வேண்டுமா என்று யோசித்து திரும்பி செல்கின்றனர், ஆனால் உண்மையிலேயே இது ஒரு மிக அருமையான அனுபவம், தவற விட வேண்டாம். பணம் கொடுத்து உள்ளே நுழைய ஒரு சிறிய கண்ணாடி இடம் அதன் பின்னே ஒரு படகு உடைந்த நிலையில், தண்ணீர் சுத்தமோ சுத்தம்...... கடல் தண்ணீரை கரையில் இருந்து களங்கமாகவே பார்த்த நமக்கு இங்கு தண்ணீர் இவ்வளவு சுத்தமா என்று வியக்க வைக்கிறது. இதில் கலர் கலராக மீன்கள் நீந்துவதை பார்க்க ஆனந்தமாக இருந்தது. இவ்வளவு பணம் கொடுத்து உள்ளே வந்து இவ்வளவு சிறிய கண்ணாடி தடுப்பை பார்க்கத்தானா என்று மனம் சுண்டி போனது, இதை எப்படி கின்னஸ் சாதனை என்கின்றனர் என்று மண்டை குழம்பியது. அதை தாண்டி செல்லும்போது ஒரு டியூப் போன்ற கண்ணாடி அமைப்பு வருகிறது, அதில் உள்ளே நடக்க நடக்க உங்களை சுற்றி மீன்கள் நீந்துகிறது, இதைதான் சென்டோஸா தீவில் எல்லோரும் பார்ப்பார்கள் !
 
 
 
 

சரிதான், இவ்வளவு சின்ன கண்ணாடி தடுப்புக்கு கின்னஸ் சாதனையா என்று பேசிக்கொண்டே நடந்தால் உங்களது முன்னே ஒரு மிக பெரிய சிலிண்டர் வடிவில் ஆன ஒரு பெரிய தண்ணீர் தொட்டி, அதில் வானவில் நிறங்களில் மீன்கள் நீந்துகிறது. உண்மையிலேயே அது கண் கொள்ளா காட்சிதான் ! நம்ம கோவை நேரம் ஜீவாவும், ஆவியும் இங்க இருந்து இருந்தா மீனை தவிர எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்..... அவ்வளவு அம்மணிகள், அதுவும் அரை டவுசரில் !
 



இதை தாண்டி நடக்க நடக்க, ஒவ்வொரு விதமான தொட்டிகள் அதில் விதம் விதமாய் மீன்கள் என்று கடல் உலகத்தின் அதிசயம் தெரிந்தது. இங்கு இந்தியாவில் அக்வேரியம் என்று இருக்கும், அதில் உள்ளே சென்றால் சிறிய சிறிய தொட்டிகளில் கலங்கலாக மீன்கள் இருக்கும், அதை அதிசயத்துடன் பார்த்துக்கொண்டே இருப்போம். ஆனால் இங்கு நிஜமாகவே எல்லாமும் அதிசயமாக இருந்தது. கடலின் உள்ளே சென்று பார்க்க முடியாதவர்கள் இங்கே வந்து பார்த்து சென்றால் அடுத்த முறை இங்கேதான் வாழ வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்.
 



 

இப்படி சுமார் இருபது நிமிடங்கள் வரை நாம் மெதுவாக சுற்றி வர வர ஒரு திருப்பத்தில் அதிசயம் நிகழ்கிறது ! உங்களது முன்னே ஒரு பிரம்மாண்டமான கடல்....... மிக பிரம்மாண்டமாய் அதில் பெரிய பெரிய மீன்கள் நீந்துகிறது, நீங்கள் அதன் முன்னே நிற்க வெகு சிறியதாய் தெரிவீர்கள். இந்த அதிசயத்தை கண்டிப்பாக வார்த்தைகளில் விவரிக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாய் உங்களது மனது அந்த தண்ணீரையும், மீனையும் ரசிக்க ஆரம்பிக்கும்..... சும்மா அப்படியே அந்த கண்ணாடியின் முன்னே உட்கார்ந்து நீங்கள் மணி கணக்கில் அப்படியே மயங்கி இருக்கலாம், அப்படி ஒரு அழகு இந்த கடல் உலகம் !
 
 
 
 
இது மட்டும் அல்ல, நீங்கள் கடலுக்கு அடியில் தங்க வேண்டும் என்று விருப்பபட்டால் அதற்கும் ரூம் இருக்கிறது. ஆனால் ஒரு நாள் வாடகையே....... வேண்டாம் விடுங்கள் விக்கல் வந்து விட போகிறது உங்களுக்கு. ஒரு நாள் முழுவதும் அந்த கண்ணாடி ரூமில் கடல் பார்த்து தங்கினால் உங்களுக்கு சொர்க்கம்தான் !! உலகம் பணம் இருப்பவர்களுக்கு ரொம்பவே அழகுதான் சார் !
 

 
Labels : Suresh, Kadalpayanangal, S.E.A. Aquarium, Singapore, Sentosa, Water world, Guinness world record glass, glass, water, Sea world, amazing fish, colorful