Wednesday, July 2, 2014

உலக பயணம் - பத்துமலை முருகன், மலேசியா

மலேசியா செல்பவர்கள் இரண்டு இடத்திற்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள்..... இரட்டை கோபுரம், பத்துமலை முருகன் கோவில் ! நான் மட்டும் விதிவிலக்கா என்ன, இரட்டை கோபுரம் சென்றவுடன் அடுத்து எனும்போது இந்த இடம்தான் நினைவுக்கு வந்தது. சுண்ணாம்புக் குன்றுகளிலான இந்தக் குகைக்கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே, கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது. இந்தக் குகைக்கோயிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. நான் தங்கி இருந்தது இரட்டை கோபுரத்திற்கு அடுத்து இருந்த ஹோட்டல், அங்கிருந்து ஒரு டாக்ஸி எடுத்துக்கொண்டு பத்து மலை என்று கேட்டு சென்றோம். சுமார் இருபது நிமிடத்தில் மலைகள் சூழ்ந்த ஒரு பகுதிக்கு வந்தபோது அங்கு இருந்த கூட்டம் கண்டு நெருங்கிவிட்டோம் என்று தோன்றியது ! அங்கு இருந்த மலைகளை எண்ண ஆரம்பித்தேன்...... பத்து மலை இல்லையே, பின்னர் எதனால் இதற்க்கு பத்து மலை என்று பெயர் வந்தது ?!

 
 


சுண்ணாம்புக் குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து ஆற்றின் (மலாய்: Sungai Batu; ஆங்கிலம்: Batu River) பெயரில் இருந்து பத்துமலை எனும் சொல் வந்தது. இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. முருகப் பெருமானுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஒரு காலத்தில் ஓர் ஒற்றையடி பாதையில் சென்று மலையின் உச்சியில் இருக்கும் முருகப் பெருமானை வழிபட்டு வந்த காலம் மாறி இன்று உலக அளவில் புகழ்ப்பெற்று விளங்குகிறது பத்துமலை திருத்தலம். பத்துமலையின் சிகரத்தில் இருக்கும் முருகப் பெருமானின் சன்னிதானத்தை அடைய 272 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். கோலாலம்பூரில் புகழ்பெற்று விளங்கிய கே.தம்புசாமி பிள்ளை எனும் செல்வந்தரால் 1891 ஆம் ஆண்டு இந்த பத்துமலைக் கோயில் உருவாக்கப்பட்டது. இதற்க்கு மேல் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்...... பத்துமலை முருகன் கோவில் !
 
 


கீழே ஒரு முருகன் கோவில் இருக்கிறது, அதை சுற்றி உள்ள இடத்தில் புறாக்கள் தத்தி தத்தி விளையாடுகிறது. குழந்தைகள் அதை பிடிக்க ஓடி என்று விளையாடுகின்றனர். பெரியவர்களும் அதற்க்கு பொறி போட்டு, பிடிக்க என்று விளையாடுவது கண்கொள்ளா காட்சி ! கீழே இருக்கும் கோவிலை சுற்றி வரும்போது நாம் மலேசியாவில் இருக்கின்றோம் என்பதே மறந்து போகிறது, கண்ணிற்கு இனிய கோவில் சிற்ப்பங்களும், தமிழும் விளையாடுகிறது இங்கு. அந்த கோவிலை பார்த்து முடித்தவுடன் மலையின் மேல் இருக்கும் கோவிலுக்கு செல்லலாம் என்று அதன் அடிவாரத்திற்கு வந்து நிமிர்ந்து பார்த்தால் தங்க நிறத்தில் முருகனின் விசுவரூபம் வியக்க வைக்கிறது !
 


உலகிலேயே உயரமான முருகன் சிலை பத்துமலையில் தான் உள்ளது. இதன் உயரம் 42.7 மீட்டர் (140அடி). இதை உருவாக்குவதற்கு மூன்று ஆண்டுகள் பிடித்தன. கட்டுமானச் செலவு 25 இலட்சம் மலேசிய ரிங்கிட். 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புனிதத் திறப்புவிழா செய்தார்கள். இந்த சிலையின் திறப்பு விழாவின் போது அதற்கு 15 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான சாமந்திப் பூ மாலை சூட்டப்பட்டது. அந்த மாலை சுமார் ஒரு டன் எடை. அதனால், பளு தூக்கும் இயந்திரத்தின் உதவியோடு அந்த மாலை முருகப்பெருமானுக்கு அணிவிக்கப்பட்டது. சிலையை உருவாக்குவதற்கு 1,550 கன மீட்டர் பைஞ்சுதை (cement), 250 டன் எஃகு கம்பிகள், தாய்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட 300 லிட்டர் தங்கக் கலவை பயன்படுத்தப்பட்டது. திருவாரூரைச் சேர்ந்த சிற்பி ஆர்.தியாகராஜன் தலைமையில் முருகன் சிலை உருவாக்கம் கண்டது. அவருக்கு உதவியாக 14 சிற்பிகள் பணி புரிந்தனர். சிற்பி ஆர்.தியாகராஜன் மலேசியாவில் பல ஆலய நிர்மாணிப்புகளுக்கு உதவியாக இருந்திருக்கிறார்.
 

 
 
முதல் படியின் அருகில் வந்து நிமிர்ந்து பார்த்தால், சுமார் 271 படிகள் கடக்க வேண்டும் என்று போட்டு இருந்தது. பெருமூச்சு வந்தாலும் மேலே செல்லவேண்டும் என்ற ஆர்வம் உந்த ஏற ஆரம்பித்தோம். அந்த காலத்தில் ஒரு ஒத்தையடி பாதை மற்றும் இருந்ததாகவும் பின்னர் இப்படி படிகள் போடப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. பாதி படிகள் ஏறி மூச்சு வாங்க திரும்பி பார்த்தால் அந்த முருகன் சிலையின் பிரமாண்டம் வியக்க வைத்தது.  மலேசியா நகரத்தின் கட்டிடங்கள் தூரத்தில் தெரிய, இங்கு பக்தி பரவசத்தில் முருகர் சிலை என்று கலவையாக இருந்தது ரசிக்க வைத்தது. ஒரு வழியாக எல்லா படிகளையும் ஏறி கடந்து வர ஒரு குகையின் நுழைவாயில் தெரிந்தது. சுண்ணாம்பு கற்களால் ஆன அந்த குகையில் இருந்த சிறிதளவு வெளிச்சத்தில் கொஞ்சம் மிரண்டது உண்மை. சிறிது உள்ளே செல்லும்போது அந்த குகையின் குளுமையை நீங்கள் முழுமையாக உணர்வீர்கள். வெளியே கொளுத்தும் வெயில், உள்ளே குளுமை....... சிறிது தூரத்தில் முருகன் கோவிலில் பிராத்தனை !
 


ஒரு சமதள பரப்பு வந்து அங்கு ஒரு கோவிலில் எல்லோரும் கும்பிட்டு கொண்டு இருந்தனர், தை பூச திருவிழாவில் இங்கு கூட்டம் அலைமோதுமாம் ! முருகா என்று சொல்லி கும்பிட்டு, விபூதியை பூசிவிட்டு திரும்பி பார்க்க அங்கே இன்னொரு படி ஏறுவது தெரிந்தது. அங்கு இருந்து வந்த வெளிச்சம் ஒரு தெய்வீக காட்சியை கொடுத்தது. சென்று பார்த்தால் அந்த குகையில் எல்லா பக்கமும் மலை சூழ்ந்து இருந்தது, மேலே ஒரு ஓட்டை, அதில் இருந்து வெளிச்சம் கசிந்துக்கொண்டு இருந்தது. அதன் கீழே ஒரு முருகன் ஆலயம் ! ஒளி வெள்ளத்தில் தெரிந்த அந்த இடத்தில் நின்றபோது நாம் மலேசியாவில் இருக்கின்றோம் என்பது கண்டிப்பாக மறந்து போகிறது.... நாடு, கடல் எல்லாம் யாபகம் வருவதில்லை !






நம்ம ஊரு பழனி முருகன் போலவே மலை ஏறி வந்து தரிசித்து கீழே இறங்கி வர வர மீண்டும் வெப்பம் தாக்க ஆரம்பித்தது. உலகின் மிக பெரிய முருகன் சிலை இதுதான், அதை நாம் கண்டு வந்துள்ளோம் என்ற எண்ணம் சந்தோசமாக மாறியது. முழுமையாக கீழே இறங்கி வந்து திரும்பி பார்க்க தங்கத்தில் ஜொலித்த அந்த முருகன் சிலையின் பின் அந்த மலை ஒரு அரணாக தெரிந்தது...... பக்தியும், பரவசமும் அந்த இடத்தில் ஓட ஆரம்பித்தது !
 

 



Labels : Suresh, Kadalpayanangal, World tour, ulagapayanam, ulaga payanam, Batu caves, batu, murugan temple, world biggest hindu god statue, murugan temple

22 comments:

  1. thanks for the pictures. i had been longing to see the interior of the caves.
    if possible, consider adding the money you pay for travelling, that could give an idea for others when they plan.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, நான் பணம் எவ்வளவு ஆகும் என்பதை எல்லாம் சொல்வதில்லை, ஒவ்வொருவருக்கும் அது வேறுபாடும் என்பதால், ஆனால் என்னை தொடர்ப்பு கொண்டு கேட்டால் எல்லா விவரமும் தருகின்றேன் !

      Delete
  2. Me and anand (kovai aavee) went there.nice place.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீவா, நானும் உங்களோடு ஒரு பயணம் போகணும் அப்படின்னு ஆசையா இருக்கு !

      Delete
  3. படங்கள் கலக்கல் நண்பா.. நானும் ஜீவாவும் சென்று ரசித்த பல அழகுகளை உங்க போட்டோவில் காண முடியவில்லையே.. ;-)

    ReplyDelete
    Replies
    1. அந்த அழகை எல்லாம் போட்டால் இது "வேற" மாதிரி பதிவு ஆகிடுமோ.... அட நான் பக்தியை சொன்னேன் ஆவி ! :-)

      Delete
  4. பத்துமலை முருகன் கோயில் தகவல்களுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தளிர் சுரேஷ் !

      Delete
  5. மூன்று வருடங்களுக்கு முன் ஒரு முறை பத்து மலை முருகன் கோவிலுக்கு சென்றுள்ளேன் நண்பரே.
    அருமையான இடம்
    படங்கள் ஒவ்வொன்றும் அருமை
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. பதிவை ரசித்து கருத்து இட்டதற்கு நன்றி ஜெயகுமார் ஜி !

      Delete
  6. அருமையான படங்கள்....

    நேரில் செல்ல முடியாதெனினும் உங்கள் பதிவு மூலம் பார்த்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் நேரில் சென்று ரசித்து உங்களது பதிவுகளில் வாசிக்க வேண்டும் என்று ஆசைபடுகிறேன், சீக்கிரம் நிறைவேறட்டும் !

      Delete
  7. Replies
    1. ஒரு வார்த்தை ஆனாலும் உங்களது பாராட்டு உள்ளம் நெகிழ்த்தியது தனபாலன் சார்.... நன்றி !

      Delete
  8. ஒரே ஒரு கோணத்தில் மட்டுமே இந்தக் கோவிலை போட்டோவில் பார்த்திருக்கிறேன். விதம் விதமாகப் படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணன், நீங்கள் மகிழ்ந்தது கண்டு எனக்கும் மகிழ்ச்சி !

      Delete
  9. தங்கள் மிக மிக அற்புதமான பதிவின் மூலம்
    புகைப்படங்களின் மூலம் பத்து மலை முருகனை
    தரிசித்து மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார், மீண்டும் உங்களை சந்திக்க ஆவலாய் உள்ளேன் !

      Delete
  10. அருமை!!

    நம்ம தளத்தில் கொஞ்சூண்டு (!!) எழுதி இருக்கேன். நேரம் கிடைக்கும்போது பாருங்க.

    http://thulasidhalam.blogspot.com/2013/08/9.html

    http://thulasidhalam.blogspot.com/2013/08/11.html

    முருகனை ஒரே இடுகையில் அடக்க முடியலை. அடங்கமாட்டான் போல:-)))))

    இன்னிக்கு சஷ்டி. முருக தரிசனத்துக்கு மீண்டும் நன்றி, சுரேஷ்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம், நீங்கள் உலகம் சுற்றுபவர்... உங்களின் பதிவுகளின் ரசிகன் நான் !

      Delete
  11. நன்றி ஜெகதீஷ் !

    ReplyDelete