Thursday, August 28, 2014

சிறுபிள்ளையாவோம் - பதநீர் !!

"பதனீ..... பதனீ"..... சிறு வயதில் காலை ஏழு மணிக்கு இப்படி ஒரு குரல் என்னை எழுப்பும். பல நாட்கள் அது என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வப்படவில்லை, ஆனால் அதன் சுவை தெரிந்ததில் இருந்து குரல் கேட்டவுடன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும் எழுந்து, அம்மாவிடம் நச்சரித்து ஒரு சொம்பில் வாங்கி வருவேன் !! இந்த தலைமுறைக்கு, அதுவும் நகரத்தில் வாழும் சிறுவர்களுக்கு இதன் சுவை தெரியுமா ?! முதலில் அவர்கள் பனைமரத்தை பார்த்து இருக்கிறார்களா என்பதே சந்தேகமே. நமது சிறு வயதில் எல்லாம் இயற்க்கை கொடுத்த தின்பண்டங்களே அதிகம், செயற்கை என்பது கடையில் கிடைத்தாலும் அந்த இயற்கையின் ருசி என்பது நாம் அறிவோம் என்பதுதான் நிஜம். என்னதான் இளநீர் குடித்தாலும், இந்த பதநீரை சொம்பில் வாங்கி குடிக்கும்போது அந்த சுண்ணாம்பின் சுவை சேர்த்த அந்த நீர்......... ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நாக்கு ஊருதையா !!




பனை மரம் என்பது எல்லாம் ஊருக்கு வெளியே இருக்கும் என்பது எழுதப்படாத விதி, அதுவும் அந்த பனைமர ஓலையை எடுத்து விளையாடியது எல்லாம் மறக்கவே முடியாத ஒன்று. நுங்கு என்பதை ஒருமுறை சுவைத்தபோது அதன் உள் இருக்கும் தண்ணீர் மிகவும் சுவையாக இருந்தது, பின்னர் பனை மரத்தில் இருந்துதான் நுங்கு வருகிறது என்று தெரிந்தபின் இந்த பதநீர் நுங்கில் இருந்துதான் எடுக்கின்றனர் என்றே நினைத்திருந்தேன்....... சிறிய சிறிய நுங்குகளை பிரித்து தண்ணீர் எடுத்து அதை இரண்டு குடங்களில் தூக்கி வரும்போது எவ்வளவு வேலை என்று ஆச்சர்யமாக இருந்தது, ஆனால் உண்மை புரிந்தபோது அதிசயமாக இருந்தது எனலாம். நீங்கள் இந்த பதநீர் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்த்து இருக்கிறீர்களா ?!

  


பனை மரம் என்பது தானாக வளரும் என்பார்கள், அதை பராமரிக்க தேவை இருக்காது, இதனால் இதன் கிளைகள் அவ்வப்போது காய்ந்து கீழே விழுகும், அதை பனங்கருக்கு என்பார்கள், அது கத்தி போன்று கூர்மையாக இருக்கும், ஒரு விளறு விளாரினால் ரத்தம் தெறிக்கும். அந்த மரத்தில் காயம் படாமல் ஏறி, அது பூபூத்து இருக்கும் போது, அதன் பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி. சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டி விடுவார்கள், இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார் !!


 
 
 
 
பதநீர் தயாராவதை விடுங்கள், அதை சிறுவயதில் நாம் அதிகம் பார்த்து இருக்க மாட்டோம், இந்த பதநீர் கொண்டு வருபவர்களை பார்த்து இருக்கிறீர்களா ? நன்கு கருத்த கட்டுமஸ்தான உடம்பு, ஒரு பிரம்பு கழியில் இரண்டு பக்கமும் கயிறு கட்டி, அதில் ஒரு பானை வைத்து பேலன்ஸ் செய்து கொண்டு வருவார்கள்....... "ஏம்பா.... பதனீ.... கொஞ்சம் நில்லு" என்றவுடன் சரட்டென்று நின்று கம்பை அப்படியே தூக்கி திரும்பி மறு தோளில் வைத்து என்ன தாயீ..... என்று வந்து இறக்கி வைக்க, எனது கண்கள் அந்த பிரம்பையே பார்த்துக்கொண்டு இருக்கும். பதனி எவ்வளவுப்பா என்று கேட்க்கும்போதே வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள் என்று பக்கத்தில் இருக்கும் சிறு பயல்களுக்கு என்று சொம்பில் சிறிது எடுத்து முதலில் குடிச்சு பாருங்க என்று கொடுக்க...... அந்த சொம்பை எடுத்து அண்ணாந்து கொஞ்சம் ஊற்றும்போது, முதல் மடக்கில் தொண்டை கொஞ்சம் சுண்ணாம்பினால் எரியும், அடுத்த நொடியே சிறிது இனிப்பு நாக்கில் வேகமாக பரவும், பின்னர் கொஞ்சம் இனிப்பு, கொஞ்சம் சுண்ணாம்பு என்று தித்திப்பு இருக்கும்....... குடித்து முடித்தவுடன் அம்மாவை பார்த்து இன்னும் கொஞ்சம் என்று கேட்க, அவர் விலையை குறைத்து கேட்டாலும் இப்போது பலன் இருக்காது !!
 
 
 

பதநீரை சொம்பினில் ஊற்றி குடிப்பது ஒரு வகை என்றால், அதை பனை மர இலையை கொண்டு ஒரு குழி உருவாக்கி குடிப்பது என்பது இன்னொரு வகை. ஒரு இலையை எடுத்து சரசரவென்று மடித்து ஒரு குழி உருவாக்கி, அதில் கொஞ்சம் பதநீர் ஊற்ற, அந்த இலையின் வாசனையோடு அருந்துவது என்பது பேரின்பம் அல்லாமல் வேறென்ன. இன்று விதவிதமான விதங்களில் எவ்வளவோ குடிக்கின்றோம் ஆனால் இப்படி பனை ஓலையில் குடிப்பது எவ்வளவு சுகம் !!


 



 
இதை இன்று குடிக்கும்போது, சிறு வயது நினைவுகள் பல வந்து செல்கின்றன, இன்று காரில் செல்லும்போது பனை மரத்தினை பார்க்கும்போது அந்த கரடு முரடான மரம் எவ்வளவு சுவையானதை உள்ளே வைத்து இருக்கின்றது...... அப்பாவை திரும்பி பார்க்கிறேன், இவரும் பனை மரத்தினை போலதானே என்று மனதில் தோன்றும்போது கேட்கிறார்...... பனை மரம் ஜாஸ்தியா இருக்கு, பக்கத்தில் பதநீர் எங்கேயாவது இருந்தா கொஞ்சம் காரை நிறுத்து..... இப்போது அவர் குழந்தையாகிறார் !!

Labels : Suresh, Kadalpayanangal, sirupillaiyaavom, child, childhood, Pathaneer, Palm water, Palm, Amazing drink

 

Wednesday, August 27, 2014

ஊர் ஸ்பெஷல் - வடுகபட்டி பூண்டு !!

பூண்டு....... நமது ஊரில் வாயு கோளாறு என்றால் சட்டென்று வீட்டில் பூண்டு ரசம் வைத்து கொடுத்தால் டக்கென்று கேட்க்கும், இது மட்டுமே பூண்டை பற்றி தெரியும் நமக்கு !! ஆனால், இந்த ஊர் ஸ்பெஷல் பயணத்தில் பூண்டை பற்றி என்ன என்ன அதிசயமான தகவல்கள் தெரியுமா ?! பொதுவாக ஒரு ஊரில் விளையும் பொருட்களுக்கு மட்டுமே அங்கு சந்தை இருக்கும், உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ஈரோடு மஞ்சள், போடி ஏலக்க்காய், ஊத்துக்குளி வெண்ணை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்று, இதனால் நீங்கள் ஊருக்குள் நுழையும் முன்னேயே வயலில் இறங்கினால் அந்த பொருட்களை பார்க்கலாம், பின்னர் சந்தைக்கு சென்று வாங்கலாம். ஆனால், வடுகபட்டியை சுற்றியும் பூண்டு என்பது விளையவில்லை, ஆனாலும் பூண்டு சந்தை என்பது பேமஸ் என்றால் அதிசயம் இல்லாமல் வேறென்ன !! பொதுவாக வீட்டின் சமையல் அறையில் பூண்டு என்பது மிகவும் கொஞ்சமாக இருக்கும், வெள்ளை வெளேரென்று இருக்கும் பூண்டை உரித்து ரசத்திலும், குழம்பிலும் போடும்போது இரண்டே இரண்டு மட்டும் போடுவார்கள், ஆனால் மூட்டை மூட்டையாக பூண்டை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா ? ஊருக்குள் நுழைந்தாலே பூண்டு வாசனை தூக்குகிறது.......... அந்த வாசனையோடு பூண்டு பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோமே !! இந்த ஊரின் இன்னொரு சிறப்பு என்பது இது கவிஞர் வைரமுத்துவின் பிறந்த ஊர் என்பது !








 
வடுகபட்டி.....வத்தலக்குண்டுக்கும் பெரியகுளத்துக்கும் இடைப்பட்ட ஊரான தேவதானப்பட்டி வழியாகவும்,  தேனி-பெரியகுளம் வழியாகவும் வடுகபட்டிக்குச் செல்ல முடியும். வடுகபட்டியின் பூண்டு சந்தைதான் தமிழ்நாட்டில் பெரிய பூண்டு சந்தை. இந்த ஊருக்குள் நுழைந்தாலே வெள்ளைப் பூண்டின் மணம் காற்றுவெளிகளில் கலந்து வாசத்தை அள்ளி வீசுகிறது. ஊருக்குள் நுழைவதற்கு முன் அங்கு இருந்த வயல் வெளிகளில் பூண்டு செடியை தேடி அலைந்தோம்..... இதற்க்கு முன்னே பூண்டு செடி பார்த்ததில்லை, இதனால் எந்த செடியை பார்த்தாலும் இதுதான் பூண்டு செடி என்று தேடிக்கொண்டு இருக்க, அதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தில் ஒருவர் என்ன தேடறீங்க என்று கேட்க, பூண்டு செடி என்றபோது அவர் அது இந்த ஊரிலேயே இல்லையே என்று சொல்ல குழப்பம் ஆரம்பம் ஆனது. இந்த ஊரில்தான் தமிழ்நாட்டின் பெரிய பூண்டு சந்தை இருக்கு, ஆனால் இந்த ஊரில் பூண்டு விளைவிப்பதில்லை........ என்ன குழப்பம் இது ?!







 
கொடைக்கானல் மலைப்பகுதியான வில்பட்டி, பூம்பாறை, கூக்கால், மன்னவனூர், பூண்டி கிராமங்களில் 650 எக்டேர் பரப்பில் பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. அங்கு சந்தை வசதியும், அதை வாங்கும் அளவுக்கு மக்கள் தொகையும் இல்லாததால், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது இரண்டு தலைமுறைக்கு முன்பு வடுகபட்டிக்கு அருகில் இருக்கும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளைந்த பூண்டுகளை அங்குள்ளவர்கள் கீழ்ப்பகுதிக்கு கொண்டுவந்து, இங்கு வாழ்ந்த மக்களிடம், வெற்றிலை, அரிசி, தேங்காய், பருப்பு போன்ற தானிய வகைகளுக்கு, 'பண்டமாற்று’ முறைப்படி மாற்றிக்கொண்டார்கள். இப்படி மாற்றத்தொடங்கிய சந்தை நாளடைவில் ஏற்றுமதியாகும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. பூண்டு சந்தை என்றவுடன் பெரிய பெரிய கட்டிடங்கள், வீதிகள் என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டாம், ஒரு சிறு வீதி..... பூண்டு சந்தை வீதி என்று கேட்டால் எல்லோரும் சொல்கிறார்கள். ஒவ்வொரு வியாழனும், ஞாயிறும் சந்தை நடைபெறும் அப்போது இந்த தெருவில் நீங்கள் எள் போட இடம் இருக்காது !!



பூண்டு என்பது தாவர வகைகளுள் ஒன்று. இவை உறுதியில்லாத, ஒடிசலான, பெரும்பாலும் பச்சை நிறம் கொண்ட தண்டுகளுடன் கூடியவை. பூண்டுகள் ஒரு மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்டவை. இவை பருவகாலத் தாவரங்கள். நிலத்துக்கு மேல் உள்ள இதன் பகுதிகளான இலை, தண்டு என்பன குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே காணப்படும். அதன் பின்னர் அவை அழிந்து விடுகின்றன. பூண்டு ஒரு பலபருவப் பயிராகும். மேல் மலைப்பகுதிகளில் பூண்டு இரு பருவங்களில் பயிர் செய்யலாம். கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 2000 மீட்டர் உயர இடங்களில் சாகுபடி செய்யலாம், இதனால்தான் தமிழ்நாட்டில் மலை பகுதிகளில் மட்டுமே வளர்கிறது, இதை சந்தைபடுத்த முன்னொரு காலத்தில் வடுகபட்டிக்கு வந்ததால் இன்று வடுகபட்டி பூண்டு என்று ஆகிவிட்டது !! பயிர் வளர்ச்சிப் பருவத்தில் குளிர்ச்சியான ஈரப்பதம் நிறைந்த வெப்பநிலையில் முற்றும் நிலையில் உலர்ந்த வெப்ப நிலையில் இருப்பது அவசியம். பூண்டு முற்றுகின்ற தருணத்தில் நீண்ட வெப்ப நாள் இருப்பது நல்லது. அதிக வெப்பம் மற்றும் கடுமையான பணி பூண்டுக்கு ஏற்றதல்ல. பூண்டு  இருமண்பாடுகள் வடிகால் வசதியுடன் கூடிய நிலத்தில் நன்கு வளரும். மணற்சாரி மண்ணாக இருந்தால் பூண்டிற்கு சிறப்பான நிறம் கிடைப்பதில்லை. ஆண்டு தோறும் 3300 டன் பூண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. பூண்டு பயிர் சாகுபடியில் 3000 விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

1.   மூலிகையின் பெயர் -: பூண்டு.
2.   வேறு பெயர்கள் -: வெள்ளைப்பூண்டு.
3.   தாவரப்பெயர் -: ALLIUM SATIVUM.
4.   தாவரக்குடும்பம் -: AMARYLLIDACEAE.



ஊரின் உள்ளே நுழைந்து சந்தை தெருவை தேடி கண்டுபிடித்து இதுவா அதுவா என்று யோசிக்கும்போதே பூண்டு வாசனை இந்த தெருதான் என்று வழி காட்டுகிறது. நாங்கள் சென்று இருந்தபோது ஒரு லாரியில் இருந்து பூண்டை இறக்கி கொண்டு இருந்தனர். இன்றைக்கு மிகப் பெரிய பூண்டு வர்த்தக மையமாக மாறியிருக்கும் இந்த சந்தைக்கு  மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், இமாச்சலபிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்தும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற நமது மலைப்பிரதேசங்களில் இருந்தும் ரகம், ரகமாய் பூண்டுகள் வடுகபட்டிக்கு வந்து குவிந்து மொத்தமாக விற்பனையாகி வருகிறது. என்னதான் வெளிமாநிலங்களிலிருந்து வெள்ளைப் பூண்டு இங்கு வந்து குவிந்தாலும், கொடைக்கானல் பள்ளத்தாக்குப் பகுதியில் விளையும் மலைப்பூண்டுதான், மார்க்கெட் விலையைத் தீர்மானிக்கிறது. பூண்டு வகைகளை பற்றி கேட்டால் சொல்லி கொண்டே போகின்றனர், நிறைய வகை இருந்தாலும் உள்ளூர் வகைகள் என்பது சிங்கப்பூத் சிகப்பு, ராஜாளி மற்றும் பர்வி, காடி. பூண்டை மூன்று வகையாக வியாபாரத்திற்கு பிரிக்கின்றனர், முதல் ரகம் என்பது கொடைக்கானல் பூண்டு, இரண்டாம் ரகம் என்பது ஊட்டி பூண்டு, மூன்றாம் ரகம் என்பது ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேஷ், உத்தர் பிரதேஷ் காஷ்மீர், சீனா பகுதிகளில் இருந்து வருவது. மற்ற மாநில பூண்டுகள் வெள்ளை நிறத்திலும், நம்மூர் மலைப்பூண்டுகள் பழுப்பு நிறத்தில் மண் வாசத்தோடும் இருக்கும்.

பூண்டு சாகுபடி பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..... பூண்டு பயிர் !

 

 

 




பூண்டு செடி என்று சொல்லும்போது இது விதை போட்டு வளரும் தாவர வகை. விதையை விதைத்து அது வளர ஆரம்பிக்கும்போது வெங்காயம் போல மண்ணுக்கு அடியில் பூண்டு வளரும். ஒரு செடிக்கு ஒரு பூண்டு மட்டுமே, அது நன்கு வளர்ந்தவுடன் அந்த செடியில் இருந்து நீல நிறத்தில் பூ பூக்கிறது, அந்த பூ சிறிது சிறிதாக பூண்டு விதைகளை தருகிறது. அந்த விதைகளையே மீண்டும் போட்டு பூண்டு வருகிறது. பூண்டு செடியை பார்க்கும்போது ஆனந்தம்தான் !!







இப்படி வளரும் பூண்டுகளை மலை பூண்டு, நாட்டு பூண்டு என்று இரு வகை கொண்டு இங்கே பிரிக்கின்றனர். அதிலும் வட நாடு, கொடைகானல், சீனா பூண்டு என்று வகைகள் உண்டு. இப்படி அறுவடை செய்யப்படும் பூண்டை 30 kg, 50 kg மூட்டைகளில் கட்டி லாரியில் ஏற்றி இந்த சந்தைக்கு அனுப்பி விடுகின்றனர். சந்தைக்கு செல்வதற்கு முன் இங்கே பூண்டுகளை கசடு நீக்கி, பெரியது சிறியது என்றெல்லாம் பிரிக்கின்றனர். மீண்டும் அதை மூட்டையாக கட்டி, இப்போது பூண்டு சந்தைக்கு ரெடி.

 

ஒரு கிலோ மலை பூண்டு என்பது இங்கு 90 ரூபாய்க்கு மொத்த வியாபாரிகளுக்கு விற்கப்படுகிறது, நாட்டு பூண்டு என்பது அறுபது ரூபாய் ஆகிறது. இதில் சில்லறைக்கு வாங்குபவர்களுக்கு மலை பூண்டு 160 ரூபாய், நாட்டு பூண்டு 100 ரூபாய் !! ஒரு ஏக்கருக்கு சுமார் பத்தில் இருந்து பதினைந்து டன் வரை பூண்டு கிடைக்கும், கிலோ நூறு ரூபாய்க்கு என்று வைத்தாலும் உங்களுக்கு நான்கு லட்சம் !! சரி, பூண்டை விளைவிப்பது எப்படி ? பூண்டு செடி நமது வெங்காய செடியை போலதான், வேரில் காய்ப்பது. அதை வெட்டி எடுத்தால் பூண்டு, மேலே பூக்கும் பூ சிறிய விதைகளாக இருக்கும் அதை நட்டு வைத்தால் மீண்டும் பூண்டு ரெடி ! பூண்டை பறித்து, சுத்தப்படுத்தி, லாரியில் ஏற்றி அனுப்பி வைக்க..... மீதி எல்லாம் லாபம்தான் !! 



 
பூண்டு என்பது மருத்துவ குணம் கொண்டது மட்டும் இல்லாமல், அதை வகை வகையாக உட்கொள்ளலாம் ! பூண்டு பல்லாக, காய வாய்த்த பொடி பூண்டாக, பூண்டு பொடியாக என்று. இதில் மருத்துவ குணம் இருப்பதால் சில மருந்து கம்பனிகளும் இந்த சந்தையில் இருந்து நல்ல பூண்டுகளை எடுத்து செல்கின்றனராம். பூண்டில் என்ன என்ன மருத்துவ குணம் இருக்கிறது என்று தெரியுமா ?
  • வியற்வையை பெருக்கும்,
  • உடற்சக்தியை அதிகப்படுத்தும்,
  • தாய்பாலை விருத்தி செய்யும்,
  • சளியை கரைத்து சுவாச தடையை நீக்கும்,
  • சீரண சக்தியை அபிவிருத்தி செய்யும்,
  • இரத்த கொதிப்பை தணிக்கும்.
  • உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.
  • இதய அடைப்பை நீக்கும்.
  • நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும்.
  • ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியைப் பெருக்கி வீரியம் அதிகரிக்கக் கூடியது பூண்டு.
  •  பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.
  • தொண்டை சதையை நீக்கும்.
  • மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
  • மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்யும்.
  • பிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது.
  • சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்.
  • மூட்டு வலியைப் போக்கும்.
  • வாயுப் பிடிப்பை நீக்கும்.
  • இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறத

  •  
     
    Labels : Suresh, Kadalpayanangal, Oor special, District special, Vadugapatti, Vairamuthu, Poondu, Garlic, Poondu Santhai, About Garlic, Malai poondu, Medical
     
     
     
     
     
     
     
     
     

    Monday, August 25, 2014

    அறுசுவை (சமஸ்) - சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு !!

    அடேங்கப்பா, உணவு பகுதியை ருசித்து படிப்பதற்கு இவ்வளவு பேர் இருக்கிறீங்களா, நீங்க படிப்பதோடு மட்டும் இல்லாமல் நிறைய தகவல்கள் வேறு தர்றீங்க..... சூப்பர் ! சமஸ் அவர்களுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்குது போல !! நண்பர் செந்தில்குமார் ராஜு எனது பதிவுகளை தவறாமல் படித்துவிட்டு, சென்ற முறை திருச்சி சென்று இருந்தபோது பார்த்தசாரதி விலாஸ் நெய் தோசையை சாப்பிட்டு இருக்கிறார், அதை தனது முகபுத்தகத்தில் போட்டு என்னை டேக் செய்து இருந்தது மகிழ்ச்சியை தந்தது....... இது போல நீங்களும் ரசிக்கும்போது, சந்தோசமாக இருக்கிறது !! சரி, வாருங்களேன் நாம் மறந்து போன, ஆனால் நாக்கில் நீர் வரவழைக்கும் ஒரு சைடு டிஷ் பற்றி பார்ப்போம்.


    இட்லிக்கு தொட்டுக்கொள்ள எது சிறந்தது...... ஒரு பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு நிறைய இருக்கிறது. தேங்காய் சட்னி, புதினா சட்னி, எண்ணை பொடி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னி, கருவாட்டு குழம்பு, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, கொத்தமல்லி சட்னி, வடை கறி, குருமா, தொக்கு, பாம்பே சட்னி, வேர்கடலை சட்னி, பூண்டு சட்னி, மாங்காய் சட்னி, வெங்காய சாம்பார், முருங்கைக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், வத்தல் குழம்பு, கறிவேப்பிலை சட்னி, துவையல்கள், கீரை கடைசல், ஜீனி, புளிச்ச தயிர்...... எப்பா இப்போவே மூச்சு வாங்குது !! இது எல்லாமுமே எங்கும் கிடைக்கும் வகைகள், சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையில் இருக்கும் எந்த உணவகத்துக்கும் சென்று உட்கார்ந்து இட்லி கேட்டால் மேலே இருப்பதில் ஏதோவொன்று உங்களது இலையில் விழும், ஆனால் இட்லிக்கு இது எல்லாவற்றையும் விட ஒரு பெஸ்ட் தொட்டுக்கை இருக்கிறது என்றால் அது கொத்சு.... அதுவும் சிதம்பரம் கொத்சு !!
     

    சிதம்பரம்..... கும்பகோணத்தில் இருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் இருக்கும், கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ! சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி தெரியாதவர் யாரும் இருக்க முடியாது, ஆனால் கொத்சு என்பது இங்கே பேமஸ் என்பது கண்டிப்பாக நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை ! உடுப்பி கிருஷ்ண விலாஸ்..... சிதம்பரத்தில் இப்படி ஒரு ஹோட்டல் இருப்பது கொஞ்சம் தேடி பார்த்தால்தான் தெரிய வரும், அந்த அளவுக்கு கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கிறது. உள்ளே நுழைந்து செல்ல ஒரு பழைய காலத்து கட்டிடத்தில் ஒரு போர்டு இதுதான் உடுப்பி ஹோட்டல் என்று வரவேற்கிறது. ஹோட்டல் உள்ளே நுழைந்து பார்த்தால் அப்படியே இருபது வருடம் பின்நோக்கி பயணம் செய்தது போல ஒரு பீலிங். அந்த காலத்து பர்மா தேக்கு வைத்து செய்யப்பட்ட மேல் தரை, உள்ளே நுழையும்போதே கலர் கலராக சுண்டி இழுக்கும் பலகாரங்கள், நல்ல ஆடாத சலவை கல் மேஜை, சுவற்றில் தொங்கும் சாமி படங்கள், நல்ல காற்றோட்டமான சன்னல்கள் என்று அருமையான ஹோட்டல்..... என்ன வேணும் என்று இலையை போட்டு விட்டு எங்களை கேட்க, நாங்கள் எல்லோரும் ஒரே குரலில் கேட்டது...... கத்திரிக்காய் கொத்சு !! அவர் தலையை ஆட்டி விட்டு, சரி வேற என்று கேட்க நாங்க அதை கொண்டு வாங்க என்றபோது, எங்களை ஒரு மாதிரி பார்த்துவிட்டு சார், அது தொட்டுக்க நாங்களே தருவோம், சாப்பிட வேற என்ன வேண்டும் என்றபோதுதான் எங்களுக்கே உரைத்தது, கொத்சு மட்டுமேவா சாப்பிடபோறோம் !! அப்போது தூரத்தில் இருந்து இன்னொருவர் "கொத்சு தீர்ந்து போய் இருக்கும் அப்படின்னு நினைக்கிறேன்.... கொஞ்சம் பார்த்துட்டு சொல்லு" என்று சொல்ல இங்கே சிதம்பரம் நடராஜர் ஆடியது போல ஆட ஆரம்பித்தது மனது !!
     

    அட ஆமாம் என்று சொல்லிவிட்டு அவர் இருங்க பார்த்துட்டு வரேன், என்று சொல்லிவிட்டு தள்ளி இருந்த மேஜைக்கு போய் தேட ஆரம்பிக்க எங்களுக்கு இங்கே ஒரே நேரத்தில் பத்து திகில் படத்தை பார்த்த எபக்ட் வந்தது, அவர் திரும்ப வந்து இருக்கு என்று சொன்னவுடன் பற்பசை விளம்பரத்தில் காண்பிப்பது போல எல்லோரும் பல்லை காட்டிக்கொண்டு சிரித்தது கண்டு அவர் என்ன நினைத்தாரோ !! ரெண்டு இட்லி என்று சொல்லிவிட்டு நாங்கள் காத்திருக்க ஆரம்பித்தோம், இலையில் தண்ணீரை தெளித்து சூடாக ரெண்டு இட்லி வந்து விழுக கொஞ்சம் சட்னி வைத்துவிட்டு அவர் ஒரு சின்ன கிண்ணத்தில் எடுத்து வந்தார் சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு. எப்படி விவரிப்பேன் அந்த தருணத்தை.......
     

    பிஞ்சு கத்திரிக்காய்களை பொடிசாக நறுக்கிக்கொண்டு, அதை நன்கு வேக வைக்க வேண்டும். பிஞ்சு கத்திரிக்காயை நல்லெண்ணெய் ஊற்றி வதக்கும் போது தள தள தள என்று ஓசை வருமே, கேட்டு இருக்கிறீர்களா, அத்தோடு வரும் வாசனை நாக்கில் எச்சில் ஊற வைக்கும் ! இப்போது, அதை கடாயில் போட்டு கொஞ்சம் எண்ணை விட்டு அதை உப்பு, மஞ்சள், புளி சேர்த்து வதக்க வேண்டும். இப்போது இளகிய அந்த கத்திரிகாயை நன்றாக அந்த காரத்துடன் மசிந்து, அதை சின்ன வெங்காயம் போட்டு வதக்கி கொஞ்சம் மிளகாய், கருவேப்பில்லை, காரமல்லி பொடி போட்டு இறக்க ஒரு நிறம் வரும் பாருங்கள், அது கண்களுக்கு..... அடுத்து வரும் வாசனை என்பது மூக்கிற்கு, அதை கொஞ்சம் உள்ளம்கையில் ஏந்தி நுனி நாக்கினில் கொஞ்சமே கொஞ்சம் நக்க, நாக்கு வேர்க்க ஆரம்பிக்கும் பாருங்கள், அடுத்த முறை கொஞ்சம் வாயில் எடுத்து போட அது எச்சிலில் வழுக்கி கொண்டு போகும் சத்தம் என்பது உங்கள் காதுகளுக்கு !! கொஞ்சம் புளிப்பு, கொஞ்சம் காரம், கொஞ்சம் மசாலா என்று சுண்டி இழுக்கும் கொத்ஸை ஏன் மற்ற ஊர்களில் போடுவதில்லை என்பது புரியாத புதிர்தான் !
     
    கொத்சு செய்வது எப்படி என்று பார்க்க இங்கே சொடுக்கவும்...... சிதம்பரம் கொத்சு !!
     


    ஒரு விள்ளல் இட்லியை பியித்து கொத்ஸின் மேல் முக்கி எடுத்து வாயில் போடும்போது, பஞ்சு போன்ற இட்லியுடன் வதக்கி இருந்த கத்திரிக்காயும், நல்லெண்ணையின் சுவையும் முதலில் தென்படும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதன் காரமும், மணமும் உங்களை ஆட்கரமிக்க ஆரம்பிக்கும், முடிவில் இரண்டு இட்லி என்பது போதாது என்று தோன்றும். பொதுவாக சட்னியில் உப்பு காரமும், சாம்பாரில் புளிப்பும் இருக்கும் இதனால் இட்லியை இதனோடு சேர்த்து சாப்பிடும்போது இந்த சுவை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பிக்கும், ஆனால் இங்கு கொத்சுவில் புளிப்பு, காரம், உப்பு எல்லாமும் இருக்க சட்னி போல கொஞ்சம் கெட்டியாகவும் இருக்கிறது, இதனால் ஒவ்வொரு முறை விளுங்கும்போதும் அந்த சுவை உங்களை கட்டி போடும். இட்லிக்கு மட்டும் அல்ல அடை, தோசை, தயிர் சாதம் என்று எல்லாவற்றுக்கும் கொத்சு என்பது சிறந்த நண்பன் !! 
     

    பலருக்கும் இந்த கொத்சு என்பது பற்றி தெரியாததால் சிதம்பரம் செல்லும்போது சாம்பார், சட்னியுடன் முடித்து விடுகிறார்கள். நீங்கள் கும்பகோணம், சிதம்பரம் பக்கம் செல்பவராக இருந்தால் கண்டிப்பாக ஹோடேலில் கொத்சு இருக்கிறதா என்று கேட்டு சுவைக்கவும். இந்த பாரம்பரிய சுவையான ஒன்று இப்போது பாஸ்ட் புட் கலாசாரத்தில் வழக்கொழிந்து வருகிறது என்பது கொத்சு வைத்து இருந்த இடத்தில் இருந்தே தெரிந்தது. கொத்சு சாப்பிட்டு முடித்தவுடன், சிதம்பரம் நடராஜரை போலவே ஆனந்த கூத்தாடும் மனதும் உடலும், அதனோடு ஊர் திரும்புவது என்பது ஜென் நிலை அனுபவம் !! சமஸ் சார் நீங்கள் ஏன் இரண்டாவது சாப்பாட்டு புராணம் எழுத கூடாது.......!!
     

    Labels : Suresh, Kadalpayanangal, Samas, Arusuvai, Chithambaram, sithambaram, kotsu, kothsu, amazing side dish, perfect companion, perfect side dish

    Wednesday, August 20, 2014

    உலக பயணம் - அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ?!

    அமெரிக்கா..... எந்த நாடு சென்றாலும் எனக்கு ஆனந்தமாக இருக்கும், ஆனால் இங்கு செல்ல போகிறோம் என்று நினைத்தாலே கிலி ஆரம்பித்துவிடும், வேறொன்றும் இல்லை பயண நேரத்தையும், கால நேர மாற்றத்தையும் கண்டு. இந்தியாவில் இருந்து எந்த நாட்டுக்கு சென்றாலும் எட்டு அல்லது பத்து மணி நேர விமான பயணம், உங்களுக்கு நேரம் நன்றாக இருந்தால் அமெரிக்காவிற்கு ஒன் ஸ்டாப் சேவை கிடைக்கும், அதாவது பெங்களுருவில் இருந்து பிரான்கபார்ட் சென்று (எட்டு மணி நேர பயணம்), பின்னர் அங்கு இருந்து சிகாகோ செல்ல இன்னொரு எட்டு மணி நேர பயணம்..... உங்களுக்கு நேரம் நன்றாக இல்லை என்றால் டைரக்ட் சேவை அல்லது பெங்களுருவில் இருந்து நான்கு மணி நேர பயணத்தில் இருக்கும் அரபு நாட்டுக்கு சென்று அங்கு இருந்து சுமார் பதினைந்து மணி நேர விமான பயணம் என்று இருக்கும். பல நாடுகளுக்கு மேலே பயணம் செய்வோம், பதினைந்து மணி நேரம் இப்படியே உட்கார்ந்து செல்வது என்பது நரக வேதனை (சென்ற மாதம் இரண்டு முறை இப்படி சென்று வந்தேன் :-( ).... சரி அதை விடுங்கள், அமெரிக்கா என்பது பெரிய நாடு, நமது ஊரில் அமெரிக்கா போயிட்டு வந்தேன் என்றால் வெள்ளை மாளிகை பார்த்தியா என்பார்கள், இல்லை என்று  சொன்னால் அப்புறம் என்ன அமெரிக்கா போயிட்டு வந்தேன் அப்படின்ற என்று நம்பவே மாட்டார்கள். முதல் இரண்டு முறை அமெரிக்கா சென்று விட்டு வந்தும், என்னை கடுப்பு ஏற்றியதால் ஒரு முறையாவது கண்டிப்பாக வெள்ளை மாளிகை பார்க்க வேண்டும் என்று கிளம்பினேன் !!  


    அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கிறது இந்த வெள்ளை மாளிகை. பொதுவாக அமெரிக்கா ஜனாதிபதி பேசும்போது அவரது பின்னால் பார்த்தால் ஒரு வெள்ளை கலர் பில்டிங் தெரியும், அதுதான் வெள்ளை மாளிகை. இந்த வெள்ளை மாளிகையில்தான் அமெரிக்க ஜனாதிபதி தங்குவார். பொதுவாக நமது ஊரில் ஜனாதிபதி தங்கும் மாளிகையை பார்த்து இருக்கின்றீர்களா, அது ராஷ்டிரபதி பவன் என்பார்கள் சும்மா மாளிகை போல இருக்கும், அது போலவே அங்கும் !! வாஷிங்டன் சென்று இறங்கியவுடன் எங்க போகணும் என்று மெட்ரோ ரயில் பிடித்து ஒரு இடத்தில இறங்கி வெள்ளை மாளிகை எங்கே தெரியுது என்று தேடிக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம்....... தூரத்தில் தெரிந்தது வெள்ளை மாளிகை !!



    பொதுவாக இந்த இடத்தில் பாதுகாப்பு மிகவும் அதிகம், வெள்ளை மாளிகை முன்பு பெரிய பார்க் போன்ற இடம் என்பதால் மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். வழியில் அமெரிக்காவின் உணவு வகைகளை சுவைத்துக்கொண்டே நடந்தோம், அவ்வப்போது அங்கங்கு இருந்த முயூசியம் சிலவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தாலும் வெள்ளை மாளிகையை எப்போது பார்ப்போம் என்றே இருந்தது...... அவ்வளவு ஆர்வம் பாஸ். மெல்ல மெல்ல அதை நெருங்க நெருங்க அதன் பிரம்மாண்டம் எங்களை தாக்கியது, வெள்ளை வெளேரென்று தும்பை பூ நிறத்தில் எனது கண் முன்னே இருந்தது, அது ஒரு வரலாற்று தருணம் சார் !!



    நல்லா பார்த்துக்கோங்க பாஸ்...... இதுதான் வெள்ளை மாளிகை ! :-)

    அதன் முன்பு இருந்த மஞ்சள் நிற பூக்களுடன் போட்டோ எல்லாம் எடுத்துக்கொண்டு, இனிமேல் எவன் கேட்டாலும் நான் அமெரிக்கா போயிட்டு வந்தேன் என்பதற்கு ஆதாரமாக இந்த வெள்ளை மாளிகையின் முன்பு எடுத்த போட்டோவை காண்பிப்பேன் என்று கர்வத்துடன் போட்டோ எடுத்துக்கொண்டேன். அப்போது எங்களது அருகில் இருந்த ஒரு சீன டூரிஸ்ட் ஒருவர், Where is the White House ? என்று கேட்க..... அட மாக்கான் இங்க உன் முன்னாடி இவ்வளவு பெரிய வெள்ளை மாளிகை தெரியுதே , கண்ணாடி போட்டு பாருடா என்று நினைத்துக்கொண்டு This is the White House என்று பெருமையாக சொன்னேன், என்னுடன் இருந்த நண்பனும் மாப்ளை எவ்வளவு பெரிய பில்டிங் இல்ல இப்போ மட்டும் ஜனாதிபதி வெளியே வந்து கையை ஆட்டுனா எப்படி இருக்கும் என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே எங்களது பக்கத்தில் வந்த அந்த சீனன் மீண்டும் Is this the White house... are you sure ? என்று கேட்க மீண்டும் நான் அழுத்தி அதே பதிலை சொன்னேன், அவன் என்னை ஒரு மாதிரி பார்க்க நான் அவனை வேறு மாதிரி பார்த்து அனுப்பினேன்.

     

    வெள்ளை மாளிகை !!



    அப்புறம், எல்லா இடத்தையும் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் சிகாகோ வந்து அடுத்த நாள் ஆபீஸ் சென்று நாங்கள் வெள்ளை மாளிகை சென்று வந்தோம் என்று பெருமையாக போட்டோ எல்லாம் காண்பித்துக்கொண்டு இருந்தோம், எல்லா போடோவையும் பொறுமையாக பார்த்துவிட்டு "வெள்ளை மாளிகை போனேன்னு சொன்னீங்க, அந்த போட்டோ எங்க..." என்று கேட்க, அட வெண்ணை இவ்வளவு போட்டோ பார்த்தியே இன்னுமா உனக்கு தெரியலை என்று வெள்ளை மாளிகை போட்டோவை காண்பிக்க, அவர் அட, இது காபிடல் பில்டிங் வெள்ளை மாளிகை இல்லை என்றபோது குழப்பம் அதிகம் ஆனது. அட, உங்க ஊரு ஜனாதிபதி எல்லாம் பேசும்போது பின்னாடி தெரியுமே கட்டிடம் அதுதானே வெள்ளை மாளிகை, அது இதுதானே என்று கேட்க, அவரோ ஆமாம், ஆனா அது இது இல்லை என்று சொல்ல பயங்கரமாக குழம்ப ஆரம்பித்தேன். பின்னர் அவர் கூகுளில் இருந்து படம் எல்லாம் எடுத்து காட்டியவுடந்தான் தெரிந்தது ரெண்டு பில்டிங்குமே வெள்ளைதான் ஆனால் இது பாராளுமன்றம் மாதிரி, ஜனாதிபதி தங்குவது என்பது வேறு மாதிரி இருக்கும் என்றார். திரும்ப மேலே போய் ஜனாதிபதி பின்னாடி இருக்கும் படத்தை பாருங்க.......... உங்களுக்கே புரியும் :-)

    வெள்ளை மாளிகையா.... காபிடல் பில்டிங்கா.... நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க !

    நம்ம இந்திய நாட்டு ஜனாதிபதி மாளிகை.... ராஷ்டிரபதி பவன் !

    நம்ம ஊரு ஜனாதிபதி தங்கும் இடம் அரண்மனை போல இருந்ததால், இந்த இடத்தை பார்த்து நான் கான்புஸ் ஆகிட்டேன். நல்ல வேளை ரெண்டும் வெள்ளையாக இருந்ததால் இன்று வரை இந்த போட்டோ காண்பித்து நானும் அமெரிக்கா போயிருக்கிறேன், வெள்ளை மாளிகை பார்த்து இருக்கிறேன் என்று ஒரு ரௌடியாக பார்ம் ஆகிவிட்டேன்..... இதுவரை யாரும் கண்டு பிடிக்கவில்லை. வெள்ளையா இருக்குறதெல்லாம் பால் அப்படின்னு நினைக்கிற பச்சை புள்ளையை இப்படி ஒரு வெள்ளை மாளிகையை கொண்டு ஏமாத்திபுட்டீங்களே........ ஞாயமாரேரேரேரேரேரேரேரேரேரேரேரேரேரேரே !! அது சரி, இந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டும்.