Wednesday, September 10, 2014

ஊரும் ருசியும் - மதுரை ஸ்பெஷல் உணவுகள் (பகுதி - 2) !!

சென்ற "ஊரும் ருசியும்" பகுதியில் அறிமுகபடுத்தபட்ட மதுரை உணவுகளை ருசித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன், எப்படி இருந்தது ! மதுரையை சுற்றிலும் வித விதமான உணவுகள் குவிந்து கிடக்கின்றன, இதனால் எத்தனை பாகங்கள் எழுதினாலும் இது தீரவே தீராது என்று சொல்லலாம். தூங்கா நகரமான மதுரையில் நீங்கள் பசியோடு உறங்க செல்லவே முடியாது என்று சொல்லும் அளவுக்கு நிறைய இருக்கிறது. வாங்களேன், இந்த வாரம் என்ன இருக்குது என்று பார்க்கலாம் !

பஜ்ஜி, வடை, போண்டா :

தெருவுக்கு இரண்டு கடைகள் என்று சொல்லும் அளவுக்கு எங்கு திரும்பினாலும் மதுரையில் பஜ்ஜி, போண்டா சூடாக கிடைக்கும். டீ கடையில் இருந்து, தனி கடைகள் வரை இங்கு தனியாக கோலோச்சும் இடங்கள் நிறையவே இருக்கின்றன. முக்கியமாக சொல்வதென்றால் பெரியார் நிலையம் சுற்றிலும், வண்டியூர் தெப்பக்குளம் பகுதியுலும் இருக்கும் பஜ்ஜி கடைகளில் சூடாக கிடைக்கும். அதிலும் பஜ்ஜி, போண்டாவுக்கு சட்னி என்பது ஒவ்வொரு பகுதியிலும் வெளுத்து வாங்குகிறது...... தேங்காய் சட்னி, புதினா சட்னி, பருப்பு பொடி, தக்காளி சட்னி, கடப்பா சட்னி, கொத்தமல்லி சட்னி, வெங்காரம், குருமா, பட்டாணி - வெங்காயம் என்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதம். அதுவும் பஜ்ஜியை பற்றி இங்கே சொல்லியே ஆக வேண்டும்..... பொதுவாக வாழைக்காய் பஜ்ஜியில் மாவு வாழைகாயோடு ஒட்டி கொண்டு வரும், ஆனால் மதுரையில் பார்த்தால் வாழைகாயுக்கும் பஜ்ஜி மாவுக்கு இடையில் வெறும் காற்றுதான் இருக்கும் ! கடிக்கும்போது வாழைக்காயின் சுவையை தனியாக உணர முடியும்.


கறி தோசை :

கோனார் மெஸ் - தங்க ரீகல் தியேட்டர் அருகிலும், சிம்மகல்லிலும் இருக்கும் இந்த கடையில் நுழையும் எல்லோருமே கறி தோசை சாப்பிடாமல் திரும்புவதில்லை எனலாம். தோசைக்கு கறியை தொட்டு கொள்வது ஒரு வகை என்றால், தோசையில் கறி வைத்து தருவது ஒரு புது வகை. மிதமாக புளித்த மாவில், சிறிது வேக விட்டு அதன் மேல் முட்டையை உடைத்து ஊற்றி, அது பாதி வெந்து இருக்கும்போது அதன் மேலே நன்கு வெந்த ஆடு அல்லது கோழி கறியை பரப்பி, மிளகு உப்பு சேர்த்து முறுகலாக தரும்போது உங்களது நாவில் எச்சில் ஊற ஆரம்பிக்கும். தோசைக்கு என்று சிக்கன் அல்லது ஆட்டு குழம்பு நன்கு திக் ஆக வைத்து இருக்கின்றனர். அதை சிறிது ஓரமாக ஊற்றி தோசையை சிறிது பிய்த்து அதில் தொட்டு தின்றால்.......அடடடா மதுரைகாரர்கள் கொடுத்து வைத்தவர்கள் போங்கள் !!

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்....... மதுரை கோனார் கடை கறி தோசை





அரிசி / கேப்பை / கோதுமை புட்டு :

மதுரையின் இன்னொரு சிறப்பு என்பது சூடாக கிடைக்கும் விதவிதமான புட்டு ! மதுரை வண்டியூர் தெப்பக்குளம் பகுதியில் ஆறு மணிக்கு மேல் ஒரு வண்டியில் இருந்து புட்டு வாசனை வரும்போது உங்களது கால்கள் அங்கே சென்று நிற்கும் ! தும்பை பூவை போன்ற அரிசி மாவை புட்டு பாத்திரத்தில் திணித்து, சிறிது நேரத்தில் அதை வெளியே எடுத்து, அதன் மேலே கொஞ்சம் ஜீனியும், தேங்காய் பூவையும் போட்டு தரும்போது இங்கே கை பரபரக்க ஆரம்பிக்கும். ஒரு வாய் எடுத்து வைத்தவுடன் அரிசி சுவையும், பின்னர் தேங்காய் ஜீனியின் சுவையும் தெரியும்போது ம்ம்ம்ம்ம்ம், புட்டில் இவ்வளவு ருசி இருக்கா என்று தோன்றுவதை தவிர்க்க முடியாது !




பானி பூரி / மஷ்ரூம் வறுவல் :

இங்கு எங்கு பார்த்தாலும் பானி பூரி கடைகள், அதற்க்கு மதுரையும் விதிவிலக்கல்ல, ஆனால் இந்த கடைகளில் மஷ்ரூம் வறுவலும் கிடைப்பதுதான் சிறப்பு ! பானி பூரியை பற்றி இங்கு அதிகம் சொல்ல விரும்பவில்லை, எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே....... ஆனால் இந்த மஷ்ரூம் வறுவலில் இருக்கிறது விஷயம். காளான்களை காய வைத்து, அதை வேக வைத்து எடுத்து பின்னர் அதனோடு காரமான மசாலாவை கலந்து வைத்து இருக்கின்றனர். நாம் கேட்டவுடன் கொஞ்சம் எடுத்துப்போட்டு அதனோடு வெங்காயம், கொத்தமல்லி, காரபொடி எல்லாம் போட்டு ஒரு வாணலியில் வறுத்து தருகிறார்கள். ஒரு வாய் எடுத்து வைக்கும்போதே மட்டன் சுக்கா சாப்பிடுவது போல காரமும், மனமும் தூக்குகிறது !!




பர்மா நூடுல்ஸ் :

மதுரை மீனாட்சி பஜார் நடுவில் சொய்ங்..... சொய்ங் என்று சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தால் நீங்கள் இடத்தை நெருங்கி விட்டீர்கள் என்று அர்த்தம். அந்த கடைக்கு சென்று நிற்கும்போது அத்தோ, மொய்ங், மாமா பிறை, போஜா என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தால் பயந்து விடாதீர்கள், பெயர்தான் ஒரு மாதிரியே தவிர சுவையெல்லாம் பட்டையை கிளப்புது ! நமக்கு எல்லாம் நூடுல்ஸ் என்றாலே எக் அல்லது சிக்கன் மட்டுமே, அதுவும் அதில் கொஞ்சம் வெங்காயம், கொத்தமல்லி எல்லாம் இருக்கும், இங்கு தயார் செய்யும் நூடுலில் நிறைய சேர்க்கிறார்கள் ! ஒரு பக்கம் வாழைத்தண்டு சூப் வேறு இலவசமாக இருக்கிறது. வகைவகையாக செய்யப்படும் இதில் எல்லாமே வித்தியாசம்தான்...... கண்டிப்பாக ட்ரை செய்யுங்கள் !





பால் :

பால் சாப்பிடுவதில் கூட மதுரைகாரர்கள் வித்தியாசமாகத்தான் செய்கிறார்கள். மேலோட்டமாக சொல்வதென்றால் இது வெறும் பால்தான், ஆனால் அதை சுண்ட காய்ச்சி அதில் சீனியோ, பனம் கற்கண்டோ, பாதாமோ சேர்த்தால் அதுவும் தேவாமிர்தமே. மீனாட்சி அம்மன் கோவில் வெளி பிரகார வீதியில் நிறைய பால் கடைகள், ஒவ்வொன்றிலும் வித விதமான ஸ்டைலில் ! எங்க ஊரில் கூட இப்படி பால் கிடைக்கும் என்பவர்களுக்கு இங்கே வந்து சாப்பிட்டு பாருங்கள் என்பதுதான் எனது பதிலாக இருக்கும். சாப்பிட்டுவிட்டு பால் சாப்பிடலாம் என்பது ஒரு வகை என்றால், இங்கே பால் சாப்பிட்டுவிட்டு வேறு எதுவும் சாப்பிட முடியாது அந்த அளவுக்கு புல் ஆகிவிடும்..... அதுதான் மதுரை ஸ்பெஷல் !


பட்டர் பன் :

நண்பர் ஒருவர் வாங்க பட்டர் பன் சாப்பிடலாம் என்று சொன்னபோது ஏதோ பேக்கரி கூட்டி செல்ல போகிறார் என்றுதான் நினைத்தேன், ஆனால் வீதி ஓரத்தில் இருந்த ஒரு கடைக்கு கூட்டி சென்றார். பட்டர் பன்  ஒன்னு குடுங்க என்று சொல்லிவிட்டு என்னை பார்க்க, அப்போ உங்களுக்கு என்றபோது என்னை பார்த்து இதை ரெண்டு பேரு சாப்பிடலாம் என்றபோது சிரித்தேன். முதலில் டீ கடைகளில் கிடைக்கும் சாதாரண பன்தான், அதை நடுவே வெட்டி ஒரு தோசை கல்லில் போட்டு சும்மா ரெண்டு கரண்டி பட்டர் எடுத்து தாராளமாக போட்டார், பின்னர் அந்த பன்னை திருப்பி போட்டு திரும்பவும் ரெண்டு கரண்டி வெண்ணை, அடுத்து இன்னும் கொஞ்சம் என்று இப்போது மட்டும் சுமார் ஆறு ஏழு கரண்டி வெண்ணை சாப்பிட்டு இருந்தது அது, பின்னர் அதன் மேலே கொஞ்சம் சீனி தூவி கொடுக்க, முதல் வாய் எடுத்து வைத்தவுடனே அப்பா நாம முதலில் பார்த்த பன்தானா என்று சந்தேகம் வரும் அளவுக்கு ஒரு மைசூர் பாக்கின் தித்திப்போடு இருந்தது. பாதி சாப்பிடும்போதே வயிறு புல்.......இப்போது நண்பர் என்னை பார்த்து சிரித்தார் !! மதுரைகாரர்களே...... ஒரு பன்னில் கூட இவ்வளவு ருசி சேர்க்க முடியுமா உங்களால் !!



பருத்தி பால் :

மதுரை தமிழ் சங்கம் ரோட்டில் ஒரு தெரு விளக்கின் அடியில் ஒருவர் தள்ளுவண்டியில் ஒரு குடம் வைத்து இருப்பதை பார்த்தல் உடனே இறங்கி சென்று சாப்பிடுங்கள்........ அவர் வைத்திருப்பது பருத்தி பால் ! பருத்தி விதைகளை அரைத்து அதில் பாலை கொதிக்க வைத்து ஏலக்காய், முந்திரி எல்லாம் சேர்த்து ஒரு கிளாஸ் குடிக்கும்போது ம்ம்ம்ம்ம்ம்ம் என்று சப்பு கொட்டுவீர்கள். பொதுவாக இது போன்ற வித்யாசமான பானங்கள் கிடைப்பது இப்போது அரிதாகிறது, தாகம் எடுத்தாலோ இல்லை பசி எடுத்தாலோ இன்றைய தலைமுறைகள் எல்லாம் கோக், பெப்சி என்று குடிக்க கிளம்பி விடுகின்றனர், உடம்புக்கு சத்தான இது போன்ற ஒன்றை குடிப்பது எவ்வளவு நல்லது........ ஒரு முறை குடித்து பார்த்தீர்கள் என்றால் நீங்களே சொல்வீர்கள் "Yeh...... Dil Mange More" என்று !






இன்னும் இன்னும் நிறைய மதுரை ஸ்பெஷல் உணவுகள் இருக்கின்றன, மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டுபவை ! சுவைத்து விட்டு உங்களது கருத்துக்களை சொல்லுங்களேன் !

Labels : Suresh, Kadalpayanangal, Madurai foods, Madurai, oorum rusiyum, District foods, special food, Paruthi milk, butter bun

12 comments:

  1. please kindly add Thai mess also which is on the way from madurai to trichy. really very nice taste of Rice with Non veg kurry.

    ReplyDelete
  2. மதுரை கிட்னிக்கும் ப்பேமஸ் சட்னிகும் ப்பமஸ். சபாரிஸ் ஹோட்டல் காபி பொங்கல் ஸூபர்.

    ReplyDelete
  3. மதுரையின் சுவை அலாதியானது. கோனார் மெஸ் ரொம்பவே பிரபலம் அங்கே! சாப்பிடும் சுவை மட்டுமல்ல, இது போலவே சிடி வந்த புதிதில் பார்த்திருந்தீர்கள் என்றால் விதம் விதமான காம்பினேஷன்களில் (டி எம் எஸ்- சுசீலா, எஸ் பி பி சுசீலா, எஸ் பி பி - எஸ் ஜானகி, நகைச்சுவைப் பேச்சுகள், சந்திரபாபு பாடலகள்...... இது போல!)யோசித்து யோசித்து சிடிக்கள் ரெடி செய்வார்கள்!

    ReplyDelete
  4. எத்தனை விதமான உணவுகள்......

    படிக்கும்போதே பசிக்கும் உணர்வு! :)

    ReplyDelete
  5. நீங்க மட்டும் போய் சாப்பிட்டு வந்து படம் காட்டி பசியைக் கிளப்புறீங்க....

    ReplyDelete
  6. நல்ல மழை நாளில் சூடான பருத்திப்பால் குடித்து கொண்டே மதுரையை ரசிப்பது போல ஒரு பெரு மகிழ்வு இல்லை :) :)

    ReplyDelete
  7. பருத்திப்பால் கீழ்கண்ட இடங்களிலும் மாலை நேரத்தில் கிடைக்கும். அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் எதிர் வீதி, சினிப்பிரியா தியேட்டர் நுழைவாயில், பெரியார் பேருந்து நிலையம் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் (ஜம் ஜம் ஸ்வீட்ஸ் எதிர்புறம்)

    ReplyDelete
  8. Hi sir can you pls tell the place where you got butter bun...

    ReplyDelete
    Replies
    1. Madurai Meenakshi temple, aavani moola veethi joint, Meenakshi coffee bar, next to that......Thanks !

      Delete
  9. அத்தோ சுவை, சுமார் தான் ... நீங்கள் சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை ... 😞

    ReplyDelete
  10. நான் பருதிபால் வியபாரம் பாக்ரன் சென்னை
    ஆவடி

    ReplyDelete
  11. மதுரை வீச்சு புரோட்டா நல்ல இருக்கும்

    ReplyDelete