Wednesday, November 5, 2014

ஊர் ஸ்பெஷல் - முதலூர் மஸ்கோத் அல்வா !

அல்வா..... இதை நினைத்தாலே இன்றெல்லாம் திருநெல்வேலி அல்வா மட்டும்தானே நினைவுக்கு வருகிறது ! பெங்களுருவில் சில இடங்களில் மாலை நேரங்களில் மஸ்கோத் அல்வா என்று ஒரு வண்டி நிற்கும், இந்த மஸ்கோத் என்ற பெயரை கேட்டாலே சிட்டு குருவி லேகியம், பீம புஷ்டி அல்வா போன்ற ஒரு விதமான கிளுகிளுப்பு இருப்பதாக படவே அதன் பக்கத்தில் செல்லவே ஒரு மாதிரி இருக்கும், ஒரு நாளில் அருகில் சென்று அல்வா எவ்வளவு என்று கேட்க கிலோ நூறு ரூபாய் என்று சொல்ல, நாம் எல்லாம் அதிகம் விலை என்றால் பொருளும் தரமாக சுவையாக இருக்கும் என்று நினைக்கும் ஆள், ஆதலால் வேண்டாம் என்று வந்து விட்டேன் !?. ஆறு மாதத்திற்கு பின் மீண்டும் அதே வண்டி, இந்த முறை ஆவல் அதிகம் என்பதால் சற்று நெருங்கி சென்று ஒரு கால் கிலோ வாங்கினேன்..... வீட்டிற்க்கு வந்து ஒரு வாய் வைத்தவுடன் நமது திருநெல்வேலி அல்வாவை போல அல்லாமல் வித்யாசமாக இருந்தது, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ருசி மனதை கொள்ளை கொண்டது !! இதை தேடிய இந்த பயணத்தில் நீங்கள் நம்பவே முடியாத அதிசயமாக இருந்தது என்பது சத்தியமான உண்மை !

மஸ்கோத் அல்வா பற்றி இன்னும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.... மஸ்கோத் அல்வா !!
முதலூர் வந்தாச்சு..... அல்வா எங்கப்பா ?!
முதலூர் என்பது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமம், இது தூத்துக்குடியில் இருந்து சுமார் அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. மஸ்கோத் அல்வாவை பற்றி பேச்சு எடுத்தால், சாத்தான்குளம், திசையன்விளை, முதலூர் ஆகிய ஊர் பெயர்கள் அடிபடும், இதில் முதலூரில்தான் இந்த மஸ்கோத் அல்வா செய்ய ஆரம்பித்தனர் என்பதால் முதலூர் நோக்கி பயணமானோம். எங்களுக்கு தெரிந்தது எல்லாம் உடன்குடி சென்று அங்கு இருந்து முதலூர் செல்லவேண்டும் என்பது மட்டுமே. உடன்குடி சென்று முதலூர் என்று கேட்க இந்த பக்கம் என்று கை காட்டினர்....... தூரத்தில் இருந்து பார்க்கும்போது ஒரு ஒற்றை ரோடு, நன்றாக இருக்கிறது என்று நினைக்க தோன்றும், இரு பக்கத்திலும் பனை மரங்கள் எங்கு திரும்பினாலும் என்று இருந்தது........ ரோட்டில் சிறிது வேகத்தை அதிகரித்து செல்லும்போது மட்டுமே உங்களுக்கு தெரியும்...........வண்டி ஒரு குண்டும் குழியுமான சாலையில் செல்வது போல, அந்த அளவுக்கு சாலை மேடும் நெளிவுமாக "நன்றாக" இருந்தது, அதிகபட்ச வேகமே 30km மட்டுமே செல்ல முடியும்.


அல்வா சாப்பிடும் முன்......
மாலை ஐந்து மணி, நாங்கள் செல்லும் அந்த கிராமத்து பாதையில் ஆள் அரவம் என்பது இல்லை, முதலூர் மஸ்கோத் அல்வா என்று பெருமையாக சொல்லும் அந்த இடம் இப்படியா காட்டின் நடுவே இருக்கும் ? நாம் செல்லும் இடம் தப்பு என்று மனம் அடித்துக்கொள்கிறது, ஆனால் கேட்பதற்கு என்று யாராவது ஆள் வேண்டுமே ?! முடிவில் ஒரு நாலு ரோடு வர, அங்கு காத்திருந்தவர்களிடம் இங்க முதலூர் அப்படின்னு என்று கேட்க, இந்த பக்கம் என்றனர், இங்கதான் மஸ்கோத் அல்வா கிடைக்குமா என்று கேட்க ஆமாம் என்றனர். இந்த காட்டில் எவன் வந்து வாங்குவான், இங்க தயாரிச்சு ஊருக்குள்ள போய் விற்ப்பாங்க, அதை ஊருக்குள்ளேயே வாங்கி இருக்கலாமே என்று எனக்கு செமை திட்டு, ஆனாலும் ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு அந்த ஊருக்கே சென்றுதான் எதையும் வாங்கவும், சுவைக்கவும் வேண்டும் என்று உறுதியாக இருந்ததால் வண்டியை கட்டினோம்..... தூரத்தில் முதலூர் என்று பெயர் பலகை தெரிந்தது. அது நெருங்க நெருங்க அங்கங்கு மட்டுமே இருந்த வெகு சொற்ப பாழடைந்த வீட்டின் சுவற்றில் எல்லாம் "AJJ மஸ்கோத் அல்வா" என்று இருந்தது. பஸ் ஸ்டாப் எல்லாம் கூட அதே பெயர், கண்ணுக்கு எட்டிய வரை வீட்டை காணோம், கடையையும் காணோம். இப்படியே போய் ஒரு குடிசை வீடு வரும் அங்க போய் மஸ்கோத் அல்வா அப்படின்னு கேட்க்க போறோம், அவர் அந்த குடிசை வீட்டில் இருந்து எடுத்து கொடுக்க போறார் என்று ஒரே கிண்டல்............ சிறிது தூரத்தில் அந்த ஒற்றை ரோட்டின் இரண்டு பக்கமும் பஸ், கார், வேன் என்று நின்றது.............. "கண்டேன் மஸ்கோத் அல்வாவை !!"

முதலூர் மஸ்கோத் அல்வா...... ஒரிஜினல் !!

இவர் "தினேஷ்"...... இந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் எழுதும் ஒவ்வொன்றிலும் இவருக்கு சமபங்கு உண்டு !!
நீங்கள் நம்பவே முடியாது, இவ்வளவு காட்டின் உள்ளே அப்படி ஒரு கண்ணை பறிக்கும் கலரில், ஒளியில் ஒரு கடை இப்படி இருக்கும் என்று ! அல்வா வாங்க நீங்கள் பணம் எடுத்து வந்து இருக்க வேண்டும், இப்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வைத்து இருப்பவர்கள் வந்து மெசின் இல்லை என்று ஏமாறுகிறார்கள் என்று அந்த கடைக்கு என்றே ஒரு பேங்க் ATM !! இவ்வளவு தூரம் வருபவர்களுக்கு என்றே உண்ணும் கடைகள் என்று இருந்தது. முதலூர் (முதல் + ஊர் ) என்பது 1799ம் ஆண்டு திரு. டேவிட் சுந்தரநந்தன் என்பவரால் கிறிஸ்துவ மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கிராமம், மொத்தம் ஐந்தே தெரு அதில் மிக பெரிய கிறிஸ்துவ கோவில். இந்த மஸ்கோத் என்பதின் பெயர் காரணம் தெரியுமா ? வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட். அங்கு தேங்காய்ப் பாலில் செய்யும் அல்வா ஃபேமஸ். மஸ்கட்டிலிருந்து இலங்கைக்குச் சென்றவர்கள் இந்த அல்வாவின் மணத்தை இலங்கைக்குப் பரப்ப, அங்கிருந்து புலம் பெயர்ந்த முதலூர்காரர்கள் நெல்லை & தூத்துக்குடி மண்ணில் இந்த அல்வாவை செய்து கொடுக்க, இன்று முதலூர் மண்ணின் முக்கியத் தொழிலாகி விட்டது மஸ்கட்... சாரி.... மஸ்கோத் அல்வா.



சாம்பிள் பாக்கெட்.... பத்து ரூபாய் ! ட்ரை செய்யுங்கள்..... பின்னர் வாங்குங்கள் !
பொதுவா அல்வான்னா எண்ணெய், வனஸ்பதி அல்லது நெய்யை பயன்படுத்தி செய்றதுதான் வழக்கம். ஆனா மஸ்கோத் அல்வாவோட ஸ்பெஷாலிட்டியே தரமான தேங்காய்ப் பாலில் செய்வதுதான். தேங்காய்ப் பால்தான் இந்த அல்வாவின் முக்கிய மூலப்பொருள். திருநெல்வேலி இருட்டு கடை அல்வாவை கொஞ்சம் எடுத்து வாயில் வைத்தாலே நெய், சக்கரை எல்லாம் சேர்ந்து அடுத்த வேளை நீங்கள் உணவு உண்ண வேண்டாம் என்ற உணர்வு வரவழைக்கும், ஆனால் இந்த மஸ்கோத் அல்வாவில் அதிகம் எண்ணையும், சர்க்கரையும் இல்லை என்பதால் நீங்கள் உண்டு கொண்டே இருப்பீர்கள். இந்த கடையில் நுழைந்து மஸ்கோத் அல்வா என்று வாங்கி அந்த பளபளக்கும் பாக்கெட்டை பிரித்து கொஞ்சமே கொஞ்சம் அந்த அல்வாவை துண்டு செய்து ஒரு வாய் வைக்க....... முதலில் அந்த இனிப்பு சிறிது தெரிய ஆரம்பிக்கிறது, பின்னர் தேங்காயின் சுவை, இப்போது அதில் நாம் அதில் மயங்கி கொஞ்சம் எச்சிலை விழுங்க அந்த அல்வா அப்படியே தொண்டை குழியை தாண்டி, வயிற்றில் விழும் அந்த எபக்ட் அலாதி போங்கள் !!

இப்படி ஒரு கிராமத்தில் இவ்வளவு கும்பல், கடையும் பள பளவென்று..... நம்ப முடிகிறதா !



இந்த மஸ்கோத் அல்வா வாங்கிய பின்னர் வேறு என்ன வாங்கலாம் என்று பார்த்தால்...... கருப்பட்டி அல்வா, முந்திரி அல்வா, பாதாம் பிஸ்தா அல்வா, பேரிட்சை அல்வா, நெய் அல்வா, ப்ரூட் நட் அல்வா, கோதுமை அல்வா என்று கிடைக்கிறது, இந்த அல்வாவின் சுவையில் மயங்கி எல்லாவற்றிலும் ஒன்றொன்று வாங்கி கொண்டோம்...... அது ஊரு போய் சேரும் முன்பு தீர்ந்துவிட்டது என்பது தனி கதை ! ஆகவே, வீட்டிற்க்கு வேண்டும் என்றால் தனியாக வாங்கி கொள்ளவும்...... அல்வா அவ்வளவு டேஸ்ட், வீடு சென்று சேரும் வரை நாக்கை கட்டுப்படுத்த முடியாது ! இந்த ஊரிலேயே இரண்டு கடைகள் AJJ, SJ என்று, வரும் வழியெல்லாம் இந்த AJJ என்று எழுதி வைத்து இருப்பதாலும், இந்த கடை முன்னரே வருவதாலும் இங்கேயே கும்பல் அள்ளுது ! இங்கே அல்வா மட்டும் இல்லாமல் பேக்கரி அயிட்டம், சாக்லேட் என்று எல்லாமும் இருக்கிறது ! 



இது இரண்டாவது கடை.... கூட்டம் இல்லை !
தேவையான பொருட்கள்: (10 கிலோ மஸ்கோத் அல்வா தயாரிக்க) சர்க்கரை - 5 கிலோ, தரமான தேங்காய் - 30, மைதா மாவு - ஒன்றரை கிலோ, முந்திரிப் பருப்பு - 400 கிராம்.

செய்முறை: முதல் நாளே, மைதா மாவில் தண்ணீர் ஊற்றி பரோட்டா பதத்துக்கு உருட்டி உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். கைகள் இரண்டிலும் கிளவுஸ் அணிந்து கொள்ளுங்கள். இனி உருட்டி வைத்திருக்கும் மாவு உருண்டைகளில் இருந்து ஒன்றை எடுத்து, தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் போட்டு, ஐந்து நிமிடம் இரண்டு கைகளாலும் மாவை நன்றாக பிசைய வேண்டும். அதிலிருந்து பால் மெதுவாக வெளியேறும். தண்ணீர் கலந்த இந்த பாலை, வேறு ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றிவிடுங்கள்.

இப்படி ஒவ்வொரு உருண்டையையும் ஒரு சொம்பு தண்ணீரில் போட்டு பிழிந்து பால் எடுத்து, சேகரித்த தண்ணீரை ஓர் இரவு முழுக்க மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில், கெட்டியான மைதா பால் அடியில் தங்கியிருக்கும். தண்ணீரை வடிகட்டி, மைதா பாலை தனியே எடுக்க வேண்டும் (ஒன்றரை கிலோ மாவில் இருந்து முக்கால் கிலோ மைதா பால் கிடைத்திருக்கும்). இந்தப் பாலுடன், 30 தேங்காயில் இருந்து எடுக்கப்பட்ட பாலையும், தேவையான அளவு தண்ணீரையும் கலந்து கொள்ள வேண்டும். அகலமான வாய் கொண்ட சட்டியை அடுப்பில் வைத்து, கலந்து வைத்திருக்கும் பாலை ஊற்றி, 5 கிலோ சர்க்கரை, முந்திரிப் பருப்பு ஆகியவற்றையும் சேர்த்துக் கிளறவேண்டும்.
வீட்டில் செய்யப் போகிறீர்கள் என்றால்... பொறுமை நிறைய தேவைப்படும். இரண்டு மணி நேரம் விடாமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் ஆவியாகி, தேங்காய்ப்பாலில் இருந்து தேங்காய் எண்ணெய் வெளிப்பட்டு மாவின் மேல் மெதுவாக பரவ ஆரம்பிக்கும். தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருந்தால் கெட்டியான பதத்துக்கு வந்துவிடும். சரியாக இரண்டு மணி நேரம் ஆனதும் ட்ரேயில் ஊற்றி, ஒரு நாள் முழுக்க ஆற வைத்தால்... உங்களை சொக்கிப் போக வைக்கும் சுவையில் மஸ்கோத் அல்வா ரெடி.

குறிப்பு: அதிகமாக தேங்காய் சேர்ந்திருப்பதால், அதிகபட்சமாக மூன்று வாரங்கள் வரை மட்டுமே இதை வைத்திருந்து சாப்பிட முடியும். 
  

மஸ்கோத் அல்வா சாப்பிட்ட பின் :-)
 Labels : Oor special, district special, tamilnadu, mudalur, muthaloor, mascot, mascoth, alwa, alwaa, thisaiyanvilai, thangaiyaa sweets, sathankulam, coconut alwa, oorum rusiyum, district and taste

38 comments:

  1. சுரேஷ் டயட்ல இருக்கலாம்னா விட மாட்டிங்க போல ...! அண்ணாச்சி கடைல வாங்கியாச்சு....

    ReplyDelete
    Replies
    1. டயட்டா.... அப்படினா !! சரி வாங்கியதில் எனது பங்கு என்ன பிரேம் !!

      Delete
  2. நன்றி சுரேஷ். உங்கள் எழுத்து நடை அருமை. நன்றாக அனுபவித்து படித்தேன். திருநெல்வேலி பக்கம் செல்லும் நண்பர்கள் இந்த அல்வாவை வாங்கி வந்து கொடுப்பார்கள். இந்த சிறிய ஊருக்கு இவ்வளவு பெருமை. இது போல நிறைய உங்கள் வயிற்ரை நிரப்பி எங்கள் மனங்களை நிரப்ப எழுதுங்கள்.

    அன்புடன்

    ஜெயராமன். சிங்கை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெயராமன் சார் !! நீங்கள் இந்த பதிவை விரும்பி படித்தது கண்டு மகிழ்ந்தேன். கண்டிப்பாக இன்னும் இன்னும் நிறைய ஆச்சர்யங்களை எழுதுகிறேன்....... கருத்திற்கு நன்றி !

      Delete
  3. I enjoyed reading this. I studied in Udangudi and heard about Mudlalur. Never gone there. Thanks

    ReplyDelete
    Replies
    1. Thanks friend for your comments !! You have missed a wonderful tasty Alwa !!

      Delete
  4. படிக்கும்போதே சாப்பிட்ட மாதிரி இருக்கு! தொடரட்டும் உங்கள் சமூக சேவை :P

    ReplyDelete
    Replies
    1. நன்றி தக்குடு சார் !! கண்டிப்பாக சாப்பிட வேண்டிய ஒன்று...... உங்க ஊரிலும் கிடைக்கிறதே !

      Delete
  5. அறியாதன அறிந்தேன்
    முன் பின் படம் மிகவும் அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார்.... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் ! அடுத்த பதிவர் சந்திப்பில் போட சொல்லலாமா ?! முன் அருமையா, பின் படம் அருமையா..... சரியா சொல்லுங்க !

      Delete
  6. மஸ்கோத் அல்வா பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுகிறது! அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ், நாம் உண்மையிலேயே அனுபவித்து இருந்தால் அது எழுத்திலும் தெரியும்..... என்ன உண்மைதானே !!

      Delete
  7. Maskoth halwa or Thirunelveli Halwa - which is Best?

    ReplyDelete
    Replies
    1. There is no question of best here... both has unique taste. I feel you must try both :-) Thanks for visiting my blog !

      Delete
  8. Replies
    1. தமிழ் மணம் வாக்கு அளித்தமைக்கு நன்றி மது !!

      Delete
  9. முதல் வருகை... எனது
    அனுபவம் அருமை...
    விவரணை செமை..
    தொடர்க

    ReplyDelete
    Replies
    1. முதல் முறை எனது தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள் !! வரவேற்ப்பு இனிப்பில் துவங்குவதில் மகிழ்ச்சி !

      Delete
  10. வணக்கம்
    அண்ணா.
    பார்த்தவுன் சாப்பிட சொல்லுகிறது... எழுதிய விதம் நன்று..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன், அடுத்த முறை ஊருக்கு வரும்போது முயற்சி செய்துவிட்டு கருத்துக்களை அளியுங்களேன் !

      Delete
  11. அடுத்த பதிவர் விழாவில் கொடுத்து விடலாம்... சரியா...?

    ReplyDelete
    Replies
    1. என்னது அல்வாவா ?! DD சார், இந்த முறை பதிவர் திருவிழா இந்த அல்வாவை விட அதிக சுவை !

      Delete
  12. 12 வருஷம் முன்பு எங்கள் வீட்டு திருமணதிட்கு இந்தியாவில் உள்ள உறவினர் மூலமாக ajj மஸ்கோத் அல்வாவை தருவித்தோம்..திருமண அழைப்பிதழுடன் அல்வாவும் பொதியும் பகிர்ந்தோம் ..அருமையான சுவை இன்றும் நினைவில் உள்ளது ..அருமையான தகவல்களக்கு நன்றி -விஜய்- கொழும்பு

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஜய்.... அப்போ திருமண வாழ்த்தையே இனிப்புடன் சொல்லி இருக்கிறீர்கள். உங்களுடைய வாழ்க்கையும் இந்த மஸ்கோத் அல்வா போல இனிப்புடன் இருக்கட்டும்.

      Delete
    2. பின்னூட்ன் டத்துக்கு நன்றி சுரேஷ் சார் ...பதிவுகள் அனைத்தும் அருமை...பெற்றோர் வழி சொந்த ஊர் திருநெல்வேலி ஆயினும் இந்தியா வர ந்காலம் அமையவில்ல..தங்களின் பதிவுகள் மூலமாக பல ஊர் அதிசயம் ,உணவு வகைகளை அறிந்து கொள்ள முடிகின்றது ..நன்றிகள்

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  13. தூத்துக்குடி போன கண்டிப்பா அங்க அல்வா வாங்க போக வெச்சீடீங்க..

    ReplyDelete
    Replies
    1. அப்போ தூத்துக்குடி மக்ரோனும் வாங்கி சுவையுங்கள் !! நன்றி கருண் !!

      Delete
  14. இனிய வணக்கம் நண்பரே...
    அட எங்க ஊர்ப்பக்கம் வந்துருக்கீங்க.......
    மஸ்கோத் அல்வா ருசியே தனிதான் நண்பரே...
    அருமையான கட்டுரை.
    ===========================
    மஸ்கோத் அல்வா வேணும்னா ஒரு தொலைபேசி அடிங்க எனக்கு...
    பார்சல் உங்க வீட்டுக்கே அனுப்புகிறேன்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேந்திரன் சார், அது உங்க ஊருன்னு தெரியாம போச்சே..... சரி விடுங்க அடுத்த முறை வரும்போது பெங்களுரு மசாலா தோசைக்கு பண்ட மாற்று பண்ணிப்போம் !! அடுத்த பதிவர் திருவிழா எப்போ அப்படின்னு தோணுது உங்களது வர்ணனையை கேட்க !

      Delete
  15. மஸ்கோத் அல்வா - இது வரை சாப்பிட்டதில்லை.... :((((

    தில்லிக்கு ஒரு கிலோ பார்சல் ப்ளீஸ்!

    த.ம. ஆறு!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் சார்.... இந்த அல்வா ஒரு வாரம் வரை கெடாதாம், அப்போ ஒரு கிலோ மட்டும் போதுமா ?!

      Delete
  16. சுவையும் தகவலும் நிரைந்த எத்தனை இடுகைகள். எப்படி இவ்வளவு அலைச்சலைத் தாங்கிக்கொள்கிறீர்களோ தெரியவில்லை. அதற்கு மேல் எழுதும் வேலை வேறு. உங்கள் உழைப்பு மரியாதைக்குரியது.

    நீங்கள் செல்லும் சில ஊர்களோடு எனக்குத் தொடர்பு உண்டு.
    முடிந்தால் இவைகளை ஒரு கை பார்க்கவும்:

    அருப்புக்கோட்டை: பக்காவடை (பக்கோடா), துரை கல்யாண சமையல் (தங்கச்சாலைத் தெரு அருகே), அமுதம் ஓட்டல் - சகலமும்
    மதுரை: மேலமாசி வீதி ஜெயவிலாஸ் மெஸ் - பிரியாணி, அயிரை மீன் குழம்பு
    தூத்துக்குடி; மெக்கரூன்
    ஊட்டி; வர்க்கி
    கோவை - ஆனந்த பவன் - சோன் பப்படி
    அமெரிக்கா - சில்லிஸ் ரெஸ்டாரென்ட் - வால்கெனோ கேக்.
    மைசூர் - சென்னா பட்டூரா - பாஸந்தி, ஓட்டல் RRR ஆந்திரா சாப்பாடு - சிக்கன் மசாலா

    ReplyDelete
    Replies
    1. நன்றி குலவுசனபிரியன் !! நீங்கள் சொல்வது உண்மைதான் இந்த பயணங்கள் எனது கடும் அலுவல்களுக்கு இடையில்தான் செய்கிறேன், உங்களது கருத்துக்கள்தான் இந்த சிரமத்தை மறக்க செய்கிறது.


      நீங்கள் கொடுத்த தகவல்களை குறித்துக்கொண்டேன், விரைவில் சென்று வந்து எழுதுகிறேன் !

      Delete
  17. http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/MADHURAI/2014/11/09/ArticleHtmls/09112014124003.shtml?Mode=1

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்...... நீங்கள்தான் முதலில் பார்த்துவிட்டு இதை சொன்னது. நீங்கள் உற்சாகமாக கருத்துக்களை எழுதி இருக்காவிட்டால் இது சாத்தியம் ஆகி இராது. மிக்க நன்றி !

      Delete
  18. சொல்லவே இல்லை, அப்போ அல்வா கொடுத்துடலாமா ?!

    ReplyDelete
  19. ஹலோ எங்களின்முதல் வருகை! நண்பர் ஆவி அவர்கள் உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்....நீங்கள் துளசியுடன் பேசியும் இருக்கின்றீர்கள்! (நாங்கள் இருவர் நண்பர்கள் வலைத்தளத்தில்....துளசிதரன், கீதா)

    எங்க ஊர் அல்வா பத்தி எழுதினதுக்கு மிக்க நன்றி! (கீதா)

    ReplyDelete