சமஸ் அவர்கள் சென்று எழுதிய எல்லா உணவகங்களுமே சுமார் பதினைந்து வருடங்களாகவாவது இருக்கும் உணவகங்கள், அதன் தரத்திலும் சுவையிலும் இன்றளவும் எந்த குறையும் இருக்காதவை. நான் சென்று வந்த உணவகங்களில் காலபோக்கில் உணவகங்கள் மாற்றத்தை கொண்டு வந்து இருந்தன, ஆனால் இந்த ஆதிகுடி காபி கிளப் மட்டுமே அதே தோற்றத்துடன் இருப்பது கண்டு ஆச்சர்யமே..... வெளியில் மட்டும் இல்லை, உள்ளேயும்தான் ! ஒரு ஹோடேலின் அமைப்பே நம்மை அந்த உணர்வுக்கு கொண்டு செல்லும் இல்லையா..... உதாரணமாக பைவ் ஸ்டார் ஹோட்டல் செல்லும்போது உடம்பில் அந்த மிடுக்கும், சாலையோர கையேந்தி பவன் செல்லும்போது "என்ன பண்ணுவே" என்ற மிதப்பும், ஐயர் ஹோட்டல் செல்லும்போது சூடா ஒரு டிகிரி காபி என்று சப்பு கொட்டி குடிப்பதும், மிலிட்டரி ஹோட்டல் செல்லும்போது அந்த சிக்கன் லெக் பீஸ் கடிக்க தயாராவதும் என்று ஒவ்வொன்றுமே ஒவ்வொரு உணர்வை கொண்டு வந்து விடும். அது போலவே, இந்த ஹோடேலில் நுழையும்போது சுமார் இருபது வருடங்கள் பின்னே செல்லும் உணர்வு வரும் !!
முக்கிய குறிப்பு :
பட்டணம் பக்கோடா மாலையில் மட்டுமே
ரவா பொங்கல் காலையில் மட்டுமே கிடைக்கும்
திருச்சி மெயின் கார்ட் கேட் பகுதியில், கெயிட்டி என்று பழைய தியேட்டர் உண்டு, அதை தாண்டி நடந்து சென்றால் திருச்சியில் கவரிங் நகைகாகவே உருவாக்கப்பட்ட தெருவோ என்று சந்தேகப்படும் அந்த தெருவை தாண்டி மெயின் ரோட்டிலேயே தேவர் ஹால் பஸ் ஸ்டாப்பில் அடைத்துக்கொண்டு நிற்கும் ஆட்டோ ஸ்டான்ட் பின்புறம் ஒரு பழைய போர்டில் "ஆதிகுடி காபி கிளப்" என்று கிடைக்கும், அப்படி ஒரு பிஸியான ஏரியாவில் இப்படி ஒரு ஹோட்டல் என்ற ஆச்சர்யம் கண்டிப்பாக இன்னும் மிச்சமிருக்கிறது ! உள்ளே நுழையும்போதே சாமி பாடல்கள் ஒலிக்கிறது, சுவரெங்கும் சுவாமி படங்களும், பழைய மர ஸ்டூல் மற்றும் டேபிள், காசி துண்டு போட்ட சர்வர் என்று நாம் பின்னோக்கி செல்ல ஆரம்பிக்கிறோம்.
உள்ளே சென்று உட்கார என்ன வேண்டும் என்று கேட்க பட்டணம் பக்கோடா என்று சொன்னோம். அது வருவதற்கு முன் இங்கே பக்கோடாவை பற்றி சொல்லியே ஆக வேண்டும்..... வெளியே மொறு மொறுவேன்றும் உள்ளே அப்படியே மெது மெதுவென்றும் இருக்கும் பக்கோடா என்பது எந்த கரடு முரடான மனிதனுக்குள்ளும் ஒரு குழந்தை ஓளிந்திருக்கும் என்று காட்டுவது போலவே இருக்கும். பக்கோடா என்பதை ஒரு மழை பெய்யும் நேரத்தில் சூடாக ஒரு டீயுடன் சாபிட்டால் சொர்க்கம்தான். போண்டா என்பதில் வெளியிலும் மெதுவாக இருக்கும், ஆனால் பக்கோடா என்பதில் வெளியே கிரிஸ்ப் ஆக இருக்கும், முதல் கடியில் அந்த மொறு மொறுப்பு வாயில் தெரிய அடுத்த கடியில் அந்த மெதுவான சுவை தெரியும். சார், நீங்க கேட்ட பட்டணம் பக்கோடா என்று எனது டேபிளில் வைக்க அதை காதலோடு பார்க்க ஆரம்பித்தேன். இஞ்சி, கொத்தமல்லி, பூண்டு, வெங்காயம் எல்லாம் போட்டு ஒரு சிறு உருண்டையாக பொறித்து எடுக்கப்பட்ட அந்த பக்கோடாவை முதல் கடியிலேயே அந்த சுவையின் மீது மையல் கொள்ள செய்கிறது.
இதை உண்டு முடித்துவிட்டு ரவா பொங்கல் என்று கேட்க, அது காலையில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிய அப்போதிலிருந்தே நான் காத்திருக்க ஆரம்பித்தேன். பொங்கல் என்பது அரிசியில் மட்டுமே செய்ய முடியும், உப்புமா என்பதில் கேரட், கொத்தமல்லி எல்லாம் போட்டு செய்தாலும் அது வேறு என்பது எனது எண்ணமாக இருந்தது. ஆனால், ரவையை நன்கு குழைய வேகவிட்டு அதில் பெரிய மிளகை தூக்கலாக போட்டு, கொஞ்சம் இஞ்சி, சீரகம், கொத்தமல்லி என்று எல்லாம் போட்டு ஒரு வடையோடு சாப்பிட்டால் இவ்வளவு நன்றாக இருக்கும் என்பது தெரியாமல் போய் விட்டது. இதற்க்கு சின்ன வெங்காய சாம்பார் மட்டும் இருந்துவிட்டால் இந்த ரவா பொங்கல் உள்ளே போவதே தெரியாமல் போகும் ஆபத்து இருக்கிறது.
எப்போதும் இட்லி, தோசை என்று சாப்பிடும் ஆளாக இருந்தால், இங்கு சென்று ஒரு இருபது வருடம் பின்னே சென்று "வோய், இந்த பட்டணம் பக்கோடா கொண்டாரும்.... தரனனனாஆஅ" என்று சாப்பிட இந்த ஆதிகுடி சென்று வாருங்கள்.
Labels : Suresh, kadalpayanangal, arusuvai, samas, best, tasty, adhikudi, adigudi, adhigudi, pattanam pakoda, pakora, rava pongal, famous food, trichy