Wednesday, May 13, 2015

சிறுபிள்ளையாவோம் - ஜட்கா வண்டி பயணம் !!

குதிரை வண்டி என்று சொன்னதுமே வெள்ளை அல்லது பழுப்பு கலரில், வாலை ஆட்டியபடி கழுத்தில் சுற்றப்பட்ட மணி அதிர செல்லும் வண்டி யாபகம் வந்தால், நீங்களும் இந்த பயணத்தை இன்றும் விரும்புகிறீர்கள் என்று தெளிவாக தெரிகிறது. கை ரிக்ஷா வரும் முன்பு எல்லாம் எங்களது ஊரில் இதில்தான் பயணம். அதுவும் வண்டியோட்டியின் அருகில் உட்காருவதற்கு சிறுவர்களுக்கு ஆர்வம் ஜாஸ்தி. காலை தொங்க போட்டு உட்காரும்போது குதிரையின் வால் காலில் பட சென்ற அந்த கணங்கள் வாழ்வில் மறக்கவே மறக்காது. அப்படி ஒரு பயணத்தை செய்து பார்த்தேன்..... பழனியில் !!

ஒரு சிறுவன் (?!) வண்டியோட்டியின் அருகில் !!



பழனியில் சென்று இறங்கியவுடன் அதன் சுற்று வட்ட பாதையில் செல்வதற்கு ஆட்டோ ஒன்றை அமர்த்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்துகொண்டு இருக்கும்போது கண்களில் பட்டது இந்த குதிரை வண்டி. நாங்கள் மூன்று பேர், அதை தாங்குமா என்று கூட யோசிக்க அவகாசம் தராமல் "குதிரை வண்டி பாருங்க, வாங்க அதில் போகலாம்" என்று சொல்ல, ஆட்டோ ஓட்டுனர் என்னை ஒரு மாதிரியாக பார்த்ததாக நினைவு. ஆர்வத்தில் அந்த குதிரை வண்டியின் குறுக்கே சென்று கையை போட்டு ஸ்டாப் என்று சொன்னவுடன், அந்த வண்டிக்கு பிரேக் சிஸ்டம் என்பது வேறு என்பது அது என்னை தாண்டி கொண்டு சென்றதிலும், அந்த வண்டிக்காரர் என்னை முறைத்துக்கொண்டே குதிரை மிரண்டுடும் என்று சொன்னதிலும் தெரிந்தது.


முடிவில் பழனி பாதையை முழுமையாக சுற்றி வந்து அதே இடத்தில இறக்கி விட வேண்டும் என்று சொல்லிவிட்டு வண்டியின் பின்னே சென்று ஏறினேன். குதிரை வண்டியில் ஏறி உட்காரும்போது கவனித்து இருக்கின்றீர்களா..... ஒரு கனமான போர்வை போட்டு இருக்கும், அதன் கீழே பசும்புல் வாசம் வீசும். அந்த புல் நாம் உட்காரும் இடத்தை மெத் மெத் என ஆக்கும். குதிரை நாம் அதன் சாப்பாட்டின் மீதுதான் உட்காருகிறோம் என்று தெரிந்தால் அப்போதே தள்ளி விட்டு இருக்கும், பெருந்தன்மையாக நம்மை உட்கார சொல்லி இழுத்தும் செல்லும். குதிரையை அந்த காலத்தில் அழகு படுத்துவது என்பது ஒவ்வொரு வண்டியோட்டிக்கும் அவ்வளவு ஆசையான விஷயம். சங்கு போல இருக்கும் மணியை லெதர் பெல்ட் போட்ட ஒன்றில் கோர்த்து குதிரைக்கு போடுவதும், அதன் மண்டையில் செங்குத்தாக நிற்கும் கலர் கொண்டையும், வால் பகுதியில் காட்டப்படும் மணியும் என்று ஒவ்வொரு குதிரையும் அவ்வளவு அழகு இல்லையா !



குதிரை செல்லும்போது வேகம் வேண்டும் என்பதற்காக சாட்டையை வைத்து சொடுக்குவதும், அப்போது அது வேகத்தை கூட்டும்போது அதன் லாடம் டக் டக் டக் என்று சத்தம் போடுமே, அதுவும் இந்த குதிரை வண்டிக்காரர் அந்த குதிரையை செல்லமாக மிரட்டும் அழகே தனி. ஹே.....டுர்......தே.... மற்றும் செல்லமான கெட்ட வார்த்தைகள் என்று எவ்வளவு அழகாக ஓட்டுவார் தெரியுமா. சுகமான காற்றுடன் அந்த வண்டியில் செல்லும்போது அந்த வண்டிகாரரிடம் அது ஏன் இந்த குதிரை வண்டியை ஜட்கா வண்டி என்கிறோம் என்பதற்கு பதில் இல்லை, ஆனாலும் என்ன ஜட்கா என்ற பெயர் நன்றாகத்தானே இருக்கிறது !!



இதுவரை பயணம் என்றால் காரில் ஏறி, அது ஸ்டார்ட் ஆகிவிட்டது என்பதும் ஓடுவதும் தெரியாமல் அவ்வளவு சத்தமும் அதிர்வும் இல்லாமல் சென்று, செல்லும்போது வெளி சத்தம் இல்லாமல் இனிய பாடலை கேட்டுக்கொண்டு , குளிர்சிக்காக ஏசி போட்டு செல்லும் சொகுசு பயணத்தில்...... இந்த முறை வண்டியில் ஏறி உட்காரும்போதே குதிரை அங்கும் இங்கும் அலைபாய தடுமாறி உட்கார்ந்து, முன்னே நகர்ந்து வண்டிகாரரை தள்ளி உட்கார சொல்லி அவர் பக்கத்தில் உட்கார்ந்து அவர் ஓரத்தில் தொங்க விட்டு இருந்த கைஅடக்கமான ரேடியோவில் பாட்டு வெளி சத்தத்தோடு அலற, அவ்வப்போது வாகனங்கள் கடக்கும்போது வரும் காற்று என்று இந்த பயணம்தான் சந்தோசத்தை கொடுத்தது !! இந்த கால குழந்தைகள் இந்த வண்டியில் செல்வதை விட காரில் செல்வதையே விரும்புகிறார்கள், இந்த பயணத்தின் சந்தோசத்தை யார் அவர்களுக்கு புரிய வைப்பது.




Labels : Suresh, Kadalpayanangal, Sirupillaiyaavom, childhood, horse vehicle riding, jatka, kuthirai vandi, amazing ride, best ride, reviving childhood, memorable journey

Tuesday, May 12, 2015

ஊர் ஸ்பெஷல் - உடன்குடி கருப்பட்டி (பகுதி - 2) !!

உடன்குடி கருப்பட்டி (பகுதி-1) பற்றி எழுதி இருந்தேன், அதன் பின்னர் ஏதோ ஒரு யாபகத்தில் புதுக்கோட்டை முட்டை மாஸ் பற்றி எழுதிவிட்டேன்..... உடன்குடி கருப்பட்டி பகுதி இன்னும் மிச்சம் இருக்கும்போது எப்படி முட்டை மாஸ் பற்றி எழுதலாம் என்று உரிமையோடு கடிந்துக்கொண்ட நண்பர்களுக்கு நன்றி, உங்களை போன்றவர்கள் படிப்பதனால்தான் இந்த பகுதிக்கு இவ்வளவு உழைப்பை செலவிடுகின்றேன் ! சென்ற பகுதியில் உடன்குடி என்னும் ஊரை பற்றியும், பனை மரத்தினை பற்றியும், கள் பற்றியும் மிக விரிவாக பார்த்து இருந்தோம், இந்த பகுதியில் அதை எப்படி கருப்பட்டி ஆக்குகின்றனர் என்று பார்ப்போமே. கருப்பட்டி தயாரிப்பவர்கள் இன்று கிராமத்தில்தான் இருக்கின்றார்கள் என்று தெரியும், ஆனால் அந்த கிராமத்திலேயே மிக மிக தொலைவில்தான் இது செய்யப்படுகிறது என்றால் அது எப்படிப்பட்ட முள் காடாக இருக்க வேண்டும் என்று நினைத்து பாருங்கள்..... அங்கும் கடல்பயணங்கள் பயணப்பட்டது, கண்ட காட்சிகள் ஆச்சர்யத்தை வரவழைத்தது !!



பதநீர் என்பதை நான் இதுவரை ஒரு பெரிய குடத்தில் மட்டுமே பார்த்து இருக்கிறேன், பொதுவாக கிராமத்திலும் நகரத்தில் எப்போதாவதும் பதநீர் பதநீர் என்று கூவிக்கொண்டு வருபவர்களை காணும்போது பதநீர் என்பது இவ்வளவுதான் என்று தோன்றும், ஆனால் முதன் முதலாக பதநீர் என்பதை தொட்டி தொட்டியாக காணும் பாக்கியம் கிடைத்தது. ஒரு பனை மரத்தில் நாள் ஒன்றுக்கு 6 லிட்டர் வரை பதநீர் கிடைக்கும். 18 லிட்டர் பனை பதநீரை காய்ச்சினால் தான் 10 கிலோ கருப்பட்டி வெல்லம் கிடைக்கும்.அதிகாலையிலேயே மரத்தில் ஏறி பதநீர் என்பதை சட்டி சட்டியாக இறக்கி அதை கொண்டு வந்து இங்கு கொடுத்து காசு வாங்கி கொள்கின்றனர். பதநீரை காய்ச்சும் அந்த அடுப்பு என்பது மிகவும் வித்யாசயமாக இருக்கின்றது, நின்று கொண்டு காய்ச்சும் வண்ணம் இந்த அடுப்பு தரையில் இருந்து பள்ளம் தோண்டி வைத்து இருக்கின்றனர், அதனில் இருந்து ஒரு சுரங்கம் போன்று அமைத்து தூரத்தில் முடிகிறது, அங்கு இருந்துதான் விறகும், தேங்காய் மட்டைகளும், பனைமர இலைகளும் கொண்டு நெருப்பு மூட்டுகின்றனர். பதநீரை ஒரு சிறிய டம்பளரில் மட்டுமே குடித்து பழகிய எனக்கு அன்று குடம் குடமாய் அள்ளி ஒரு பெரிய வாணலியில் ஊற்றியது கண்டு மகிழ்ச்சி, அதே சமயம் அந்த குடத்தை தூக்கி தூக்கி ஊற்றிய அந்த வயதான அம்மாவின் உடம்பில் அங்கங்கு சிதறிய பதநீரை குடிக்க அவரை மொய்த்த தேன் ஈக்களும், கொசுவும் என்று இருந்தும் அதை பார்க்காமல் அடுத்த வேலை என்று இருந்தது கண்டு மனதில் சங்கடம் !


பதநீர் வாசனை இதுவரை நுகர்ந்து இருக்கின்றீர்களா ? பதநீர் வாசனை என்பது சுண்ணாம்பு வாசனை என்பதுதான் இதுவரைக்கும் எல்லோருக்கும் தெரியும், ஆனால் இங்கு பதநீர் காய்ச்சும்போது ஒரு வாசனை அந்த இடம் எங்கும் பரவுகிறது. ஒரு பெரிய கரண்டி கொண்டு அந்த வாணலியில் கிண்ட, அந்த பதநீர் இப்போது பிரவுன் நிறமாக கொஞ்சம் கொஞ்சமாக திக் ஆக ஆரம்பிக்கிறது. அதை இப்போது பதம் பார்த்து பார்த்து ஒரு கட்டத்தில் தீயை அணைக்க, எனக்கோ அதை சற்று எடுத்து வாயில் வைக்க ஆவல் அதிகரிக்கிறது ! இந்த பக்கம் ஆற்று மணல் மீது தண்ணீர் தெளித்துக்கொண்டு இருந்தனர், அதன் மீது இப்போது ஒரு பருத்தி சேலையினை தண்ணீரில் பிழிந்து மேலே போடுகின்றனர். ஒருவர் இப்போது ஒரு மூட்டை நிறைய கொட்டங்குசியை அள்ளிக்கொண்டு வர எனக்கு இங்கே என்ன நடக்கிறது என்று ஆர்வம் அதிகமானது !



ஒரு ரோபோவினை போல சரசரவென்று அந்த கொட்டங்குசியை ஒரு பாட்டி அடுக்கி வைக்க ஆரம்பித்தார். நானும் அதை எடுத்துக்கொண்டு இன்னொரு பக்கத்தில் அடுக்க ஆரம்பித்தேன், அந்த பாட்டி இப்போது என்னைவிட வேகமாக அடுக்கிவிட வேண்டும் என்று ஒரு அசாதாரண சுறுசுறுப்பை காட்ட ஆரம்பித்தார், கேலியும் கிண்டலும் என்று எங்களுக்கு பின்னே அங்கே வேலை பார்த்தவர்கள் செய்ய, நான்தான் முதலில் என்று கூவிக்கொண்டே அந்த பாட்டியை வம்புக்கு இழுத்தது இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது..... முடிவில் நான் அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், தோத்துட்டேன் என்று கையை தூக்க, எங்களுக்கு பின்னால் பகடி செய்தவர்கள் சிரிக்க, அந்த பாட்டி இப்போது அதை போட்டுவிட்டு அட விடுய்யா, இங்க பாரு கையெல்லாம் கீறி இருக்கு என்று சொல்லி, நீ ராசாயா, எல்லாத்திலும் நீதான் ஜெயிப்ப என்று நெட்டி முறிக்க, அங்கே தோற்றது, ஜெயித்தது என்று எதுவும் இல்லாமல் போனது. கிராமத்து ஆத்தாக்கள் எந்த பிள்ளையாய் இருந்தாலும் தாங்கள் தோர்ப்பதையே விரும்புகிறார்கள்.... கருப்பட்டியை விட பெரிதா அந்த சுவை !!






இப்போது ஒரு சிறிய ஜக்கில் சிறிது ஆறி இருந்த காய்ச்சிய பதநீரை எடுத்து வந்து இந்த கொட்டாங்குச்சியில் ஊற்ற தயாராகின்றனர். ஒரே அளவில் அந்த கொட்டாங்குச்சியில் மெதுவாக ஊற்ற ஆரம்பிக்க, எனக்கோ அந்த காய்ச்சிய பதநீர் எப்படி இருக்கும் என்று ஆர்வம் தாளவில்லை. கொஞ்சமே கொஞ்சம் கையில் எடுத்து நக்கி பார்க்க அந்த கருப்பட்டி கொஞ்சம் சூடாக இருந்தால் எப்படி இருக்குமோ அந்த சுவை ! இப்போது நானும் ஒரு ஜக் எடுத்து ஊற்ற ஆரம்பித்தேன், ஒரு இடத்தில் அதிகமாகவும், ஒரு இடத்தில் குறைவாகவும் ஊற்ற எல்லோரும் சிரித்தனர், அதையும் மீறி இப்படி பட்ட வேலையை ஆர்வத்துடன் செய்வதை பார்த்து படித்த ஆளுக்கு ஏன் இந்த வெட்டி வேலை என்று எனது காதுபடவே பேசுவதை கேட்க முடிந்தது...... அவர்களுக்கு என்ன தெரியும், நான் இப்போதுதான் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன் என்று ! இப்படி ஊற்றப்பட்ட பதநீரை சுமார் மூன்று மணி நேரம் வரை காய வைக்க, இப்போது அந்த கொட்டாங்குச்சியை எடுத்து டக்கென்று தட்ட கருப்பட்டி ரெடி !! 



இப்படி செய்யப்பட்ட கருப்பட்டியை கடைக்கு எப்படி அனுப்பி வைக்கின்றனர் என்று அறிய முயன்றதில், கருப்பட்டியை மூட்டை மூட்டையாக ஒரு இடத்தில் முதலில் குவித்து வைக்கின்றனர், அதை சுமார் 14 கிலோ கொண்ட சிறிய மூட்டையாக பனை ஓலையில் செய்யப்பட்ட ஒரு பெட்டியில் வைத்து அதை கட்டி வைக்கின்றனர். இப்போது அதை கடைக்கு அனுப்புவோம் என்றவுடன், பொதுவாகவே கருப்பட்டியை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி பழக்கப்பட்ட எனக்கு கருப்பட்டி கடையை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. உடன்குடியில் பிரபலமான கருப்பட்டி கடை என்பது MS சன்ஸ் என்று சொல்ல, அதை ஒரு பெரிய அளவில் கற்பனை செய்துக்கொண்டு செல்ல அங்கே ஒரு சிறிய கடையாக வெளிச்சம் குறைவாக இருந்தது அந்த கருப்பட்டி விற்கும் கடை. உள்ளே சென்று விலை கேட்க்கும்போதுதான் அதில் மூன்று வகை இருப்பதும் கிலோ 40 ரூபாயில் இருந்து, நல்ல கருப்பட்டி சுமார் 70 ரூபாய் வரை கிடைக்கும் என்பதும் தெரிந்தது. பதநீரை எங்கு இருந்து எடுக்கிறார்கள், யார் பதநீர் கொடுக்கிறார்கள் என்பதை கொண்டு அதை தரம் பிரிக்கின்றனர். பின்னர் அதை சிறிது எடுத்து வாயில் போட்டும் அதன் தரம் பிரிக்கின்றனர். மிகுந்த ஆர்வத்துடன் எங்களுக்கு என்று கருப்பட்டியை ஆர்வத்துடன் வாங்கி கொண்டோம். 




புகையிலையை பதப்படுத்தி காய வைக்க பனைக் கருப்பட்டி அவசியம். மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்து தயாரிப்புக்காக அதிகளவில் கருப்பட்டி அனுப்பப்படுகிறது. இவ்வளவு சிரமம் கொண்டு கருப்பட்டியின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்ளுவோமே...
  • கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.
  • கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும். 
  • கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.
  • குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். நமக்குத் தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது. 
  • சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.
அடுத்த முறை உடன்குடி வழியாக சென்றால் இந்த ஊரின் சிறப்புமிக்க கருப்பட்டியை வாங்கி வாருங்கள், அப்படியே இந்த ஊரின் ஸ்பெஷல் கருப்பட்டி காபியையும் குடித்து வாருங்கள் !!

Labels : Suresh, kadalpayanangal, oor special, district special, udangudi, udankudi, karuppatti, palm jaggery, jaggery, famous for, district special, tamilnadu special, karuppatti kaapi

Monday, May 11, 2015

அறுசுவை - இருளும் சுவையும் !

வாழ்வில் என்றாவது நாம் சாப்பிடும் சாப்பாட்டின் முழுமையான சுவையை அனுபவித்து இருக்கின்றீர்களா ?! அது என்ன முழுமையான சுவை என்பவர்களுக்கு..... நாம் சாப்பிடும்போது கவனித்து பார்த்தால் கருவேப்பில்லை, கருகிய வெங்காயம், பெருங்காயம், பூண்டு, திராட்சை, ஏலக்காய், பட்டை, கிராம்பு என்று நிறைய பொருளை ஒதுக்கி வைப்போம் இல்லையா. இன்னும் விரிவாக சொல்வதென்றால், சிறு வயதில் என்றாவது கிராம்பை கடித்திருப்போம், அதன் சுவையில் ஒரு வித்யாசம் தெரிந்து இன்று வரை சாப்பாட்டில் இருந்து ஒதுக்கி வைத்திருப்போம், அது போலவே கருவேப்பில்லை, பெருங்காயம் என்று ஒவ்வொரு உணவும் இன்று வரை நமது தட்டினில் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கும், ஆனால் இன்று அதை சுவைத்து பார்த்தால் கண்டிப்பாக பிடிக்கும். எனக்கு வெண்பொங்கல் என்பது இருபத்திநான்கு வயது வரை பிடித்ததில்லை, அம்மா எவ்வளவுதான் நெய்யை ஊற்றி செய்து தந்தாலும் அது பிடித்ததில்லை..... ஒரு பசி நாளில், அதே வெண்பொங்கல் தேவாமிர்தமாக தெரிந்தது, இன்று வரை எங்கு சென்றாலும் அது எனது பிடித்தமான உணவு. இப்படி ஒரு உணவை அதன் உண்மை சுவை அறிந்து உண்ண வைக்கிறது "டயலாக் இன் தி டார்க்"உணவகம், முற்றிலும் புதுமையான அனுபவத்தில் !!





ஒரு உணவகத்திற்கு செல்லும்போது, உள்ளே நுழையும்போதே பக்கத்தில் சாப்பிடுபவர்கள் தட்டில் என்ன இருக்கிறது என்று பார்த்துக்கொண்டே சீட்டில் போய் உட்காருவோம். அந்த கணத்தில், பார்த்ததை வைத்து உணவு எப்படி இருக்கும் என்று மனதில் ஒரு கருத்து வரும். உணவு ஆர்டர் செய்து தட்டில் வந்தவுடன், அந்த உணவின் நிறம் மற்றும் அதன் அமைப்பை பார்த்து இப்படிதான் இருக்கும் என்று ஒரு எண்ணம் இருக்கும், அதன் பின்னர் பக்கத்து டேபிளில் யாராவது அதே உணவை நன்றாக இல்லை என்று சர்வரிடம் சத்தம் போடுவது காதில் கேட்கும்போது ஒரு கருத்து உருவாகும், பின்னர் அந்த உணவினை வாயின் அருகே கொண்டு செல்லும்போது வரும் வாசனை ஒரு மின்னல் வேக கருத்தினை மூளைக்கு கொண்டு செல்லும், இதை செய்துக்கொண்டு இருக்கும்போதே அந்த உணவில் நமக்கு பிடிக்காது இருக்கும் கருவேப்பில்லை இன்ன பிற வஸ்துக்களை உணர்வின் மூலம் தூக்கி கெடாசுவொம், முடிவில் அது நமது நாக்கிற்கு செல்லும்போது அது எவ்வளவுதான் தேவாமிர்தமாக இருந்தாலும் நமது மூளை இதற்க்கு முன்னே கிடைத்த செய்தியின்படி...... ஓகே என்று மட்டுமே சொல்ல வைக்கும் !! பல நேரங்களில் உண்டு கொண்டு இருக்கும்போதே பக்கத்து டேபிளில் இருக்கும் அம்மணிகளை கண்களால் சாப்பிட்டு, உணவின் சுவை தெரியாமலே போய் இருக்கும். இப்படிதானே இவ்வளவு நாட்களாய் உணவை உண்டு கொண்டு இருக்கிறோம் ! ஒரு உணவு..... அதை நமது உணர்வை கொண்டு மட்டுமே உண்டால் எப்படி இருக்கும். பார்ப்பது, கேட்பது, உணர்வது என்று எதுவுமே இல்லாமல், உணவை அதன் சுவையை மட்டும் உணர்ந்து உண்டால் எப்படி இருக்கும் ?! கும்மிருட்டில் உங்களது கைகளே உங்களுக்கு தெரியாதபோது, உணவை உண்டால் எப்படி இருக்கும் ?!




பெங்களுருவில் பீனிக்ஸ் சிட்டி மால் செல்லும்போது "டயலாக் இன் தி டார்க்" என்று ஒன்றை பார்ப்பேன், வெளியில் இருந்து பார்க்கும்போது அது ஒரு உணவகம் என்றே சொல்ல முடியாது. ஒரு டேபிள் போட்டு உட்கார்ந்து இருப்பார்கள், அதுவும் எதோ ஒரு கடை என்றும், பக்கத்தில் சென்றால் காசு பிடுங்கி விடுவார்கள் என்றும் நினைத்து இதுவரை அருகினில் கூட சென்றதில்லை. வித்யாசமான உணவகங்களை தேடி கொண்டு இருந்தபோது இதை பற்றி படித்தேன், அன்றில் இருந்து ஒரு முறையேனும் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து சென்ற வாரத்தில் சென்றேன். அங்கு சென்று சாப்பிட வேண்டும் என்று கேட்டவுடன், அதை பற்றி எளிமையாக விளக்கினார்கள், பின்னர் பணம் கட்டிவிட்டு ஒரு லாக்கரில் உங்களது போன், பர்ஸ் என்று எல்லாவற்றையும் வைக்க சொல்லிவிட்டு ஒரு சிறிய கதவை காட்டி, உங்களை எங்களது வழிகாட்டி அழைத்து செல்வார் என்றார்கள். கதவு இப்போது திறந்தவுடன் அசாதாரண இருட்டில் உள்ளே நுழைய...... தூரத்தில் ஒரு குரல் கேட்டது "வெல்கம் டு தி ரெஸ்டாரன்ட் சார், யு வில் நவ் எக்ஸ்பீரியன்ஸ் தி ரியல் டேஸ்ட்" என்று !


மருந்துக்கு கூட எங்கும் வெளிச்சம் இல்லை, எங்கும் கருப்பு நிறம், தடவி தடவி நடந்து சென்றால் ஒருவர் எங்களை வரவேற்று கவலைபடாதீர்கள், நான் உங்களை கைவிடமாட்டேன் என்று ஒரு அசரீரி போன்று சொல்ல அங்கே கடவுளை அந்த இருளில் தேடிக்கொண்டு இருந்தோம். எங்களது கைகளை இருக்க பற்றிக்கொண்டு வளைந்து வளைத்து அந்த கும்மிருட்டில் அழைத்து சென்று இங்கே உட்காருங்கள் என்று சொல்ல, எனது மூக்கே எனக்கு தெரியாத அந்த அசாதாரணமான இருட்டில் ஒரு சேர் இருப்பதே அப்போதுதான் தெரிந்தது. ஒரு வழியாக உட்கார, மனதின் ஓரத்தில் அப்போதும் ஒரு சிறிய மெழுகுவர்த்தியை கொண்டு வந்து இப்போது வைக்க போகிறார்கள் என்ற நம்பிக்கை எதற்காக இருந்தது என்று தெரியவில்லை. ஒரு சிறிய தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று கொடுக்கும்போது, காற்றில் கைகளை அலைபாய்ந்து பற்றிக்கொண்டேன். எனது முன்னாலே இருக்கும் ஒவ்வொன்றையும் எனது கைகளை பற்றி சொல்லி கொடுத்துவிட்டு, இன்னும் ஐந்து நிமிடத்தில் உங்களது உணவு தயாராகிவிடும் என்று சொல்லி மாயமானார் அந்த மகான். இப்போது நானும் எனது நண்பரும் மட்டுமே..... அந்த இருட்டை பற்றி விவாதிக்க ஆரம்பித்தோம், எங்களது கண்களுக்கு முன் எதுவுமே தெரியவில்லை என்பதால் எங்களது எல்லா புலன்களும் விழித்திருந்தது எங்களுக்கே தெரிந்தது. இப்போது எங்களுக்கு முன்னே உணவை கொண்டு வந்து வைத்துவிட்டு, சாப்பிடுங்கள் என்றதுமே நான் "என்ன உணவு என்று கொஞ்சம் சொல்லுங்களேன், இந்த கும்மிருட்டில் எதுவுமே தெரியவில்லை" என்றவுடன்..... முதலில் சாப்பிடுங்கள் சார், முடிவில் நான் சொல்கிறேன் என்றார் !!




தட்டை முதலில் தடவி தடவி பார்த்தேன், முதலில் தென்பட்டது ரைஸ், அதன் இடது பக்கம் கையை கொண்டு செல்ல அங்கு வடை போன்று நாலைந்து இருந்தது, அதற்க்கு மேலே வெங்காயம், கேரட் போட்ட சலட், அதற்க்கு பக்கத்தில் குருமா போன்று ஒன்று, அதற்க்கு பக்கத்தில் வெங்காய பச்சடி (ரைத்தா), அதற்க்கு கீழே தடவி பார்க்க அலுமினிய காகிதத்தில் சுற்றி வைக்கப்பட்ட ஒன்று. ஒவ்வொன்றையும் நக்கியும், தொட்டும், தடவியும் பார்த்து இதுதான் என்று குத்துமதிப்பாக தெரிந்து வைத்துக்கொண்டேன். பொதுவாகவே சாப்பிடும்போது இதைதான் தொட்டுக்கொள்ள வேண்டும் என்று எழுதபடாத சட்டம் ஒன்று உண்டு..... உதாரனத்திற்க்கு சொல்வதென்றால், இட்லிக்கு சட்னி சாம்பார், பூரிக்கு கிழங்கு, சாதத்திற்கு ரசம், சப்பாத்திக்கு குருமா என்று ஒரு பட்டியலே உண்டு.... சில நேரங்களில் இந்த எழுதபடாத விதியை உடைத்து பார்த்தால் ஒரு புதிய அருமையான ருசி தெரியும், உதாரணமாக இட்லிக்கு கிழங்கு, பூரிக்கு சாம்பார், சப்பாத்திக்கு மாங்காய் ஊறுகாய், பாயசத்திற்கு அப்பளம், சாதத்திற்கு குருமா, ஆப்பத்திற்கு இட்லி பொடி என்று ஒரு பெரிய பட்டியலே உண்டு. இப்படி நாம் சாப்பிடுவது என்பது நமக்கே தெரியாமல் நடந்தால்தான் உண்டு.... அதை இங்கே காணலாம், ருசிக்கலாம்.


முதலில் அலுமினிய பேப்பரில் இருந்ததை எடுத்து, கொஞ்சமாக பியித்து குருமா என்று நினைத்து வெங்காய பச்சடியை தொட்டு கொள்ள ஒரு புதிய சுவை அறிமுகமாகியது. அதன் பின்னர் வடை போன்று இருந்ததை கொஞ்சமாக கடித்து பார்த்து, நாக்கினால் அதன் சுவையை முழுமையாக உணர்ந்து சாப்பிடும்போது ஒரு புதிய அனுபவம், சலட் சாப்பிடுவோம் என்று நினைத்து பச்சை மிளகாயை அவ்வளவு ஆனந்தமாக சாப்பிட்டு தண்ணீர் குடித்தேன், வெஜிடபிள் பிரியாணியில் இருந்த ஏலக்காயை உணர்வதற்கே ஒரு நிமிடம் பிடித்தது அதை உணர்ந்தவுடன் ஏலக்காயும் பிடித்தது, பிரியாணியில் போட்டு இருந்த பட்டை கிராம்பை முதன் முதலாக முழுதாக சுவைத்தேன், வெங்காய பச்சடியை இவ்வளவு ருசியாக இருக்குமா என்ன, ஒரு சமயத்தில் ரோட்டியை பிரியாணியில் தொட்டு சாப்பிட்டும் இருந்தேன். ஒவ்வொரு மிடக்கையும் ஒவ்வொரு சுவையில் ருசித்து சாப்பிட்டது அன்றுதான் ! முடிவில் அவர் வந்து நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள் என்று குவிஸ் நடத்த ஓரளவு சொன்னேன்..... அவர் சிரித்துக்கொண்டே நான் சாப்பிட்டது பீட்ரூட் குல்ச்சா, மேத்தி பன்னீர், ஹரியாலி கபாப், வெஜ் நக்கெட்ஸ், பீட்ரூட் - முள்ளங்கி போட்ட சலட் என்று சொல்லிக்கொண்டே போக இதில் பல வகை நான் சாப்பிட மாட்டேன் என்று ஒதுக்கி வைத்தது !! இதுவரை பார்வையினாலேயே சுவை பார்த்து ஒதுக்கி வைத்துக்கொண்டு இருந்த நான், சிறிது கண்களை மூடி சாப்பிட்டு பார்க்கும்போது எத்தனை வகை சுவை தெரிகிறது என்று தெரிந்து கொள்ள முடிந்தது. உண்மையிலேயே ஒரு சாப்பாட்டின் சுவையை நீங்கள் உணர விரும்பினால் இங்கு கண்டிப்பாக செல்லலாம் !




முடிவில் வெளியே வந்து எங்களுக்கு பரிமாறியவரை கண்டபோதுதான் தெரிந்தது அவர் ஒரு பார்வை இல்லாதவர் என்பது. நாற்பைதைந்து நிமிடம் மட்டுமே தட்டு தடுமாறி சாப்பிட்ட எனக்கு அவர் வாழ்க்கையே இருட்டில்தான் என்பதும், அவர் அவ்வளவு சகஜமாக எதிலும் இடித்து கொள்ளாமல் நடப்பது கண்டும் ஆச்சர்யப்பட்டேன். சுவை மட்டும் அல்ல ஒரு சில நிமிடங்களுக்கு நமது வாழ்க்கையையும் நினைத்து பார்க்க வைக்கிறது இந்த வித்யாசமான உணவகம் !!

Labels : Suresh, Kadalpayanangal, arusuvai, dialogue in the dark restaurant, concept restaurant, different food, experience, eat in the dark, amazing experience, blind, taste of blind

Thursday, May 7, 2015

அறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி !!

திண்டுக்கல் என்றவுடன் பதிவு எழுதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம்ம DD சார், அதன் பின்னே பிரியாணி ! இந்த பதிவில் எழுத இருக்கும் இந்த சிவா பிரியாணி கடை என்பதை வெகு எதேச்சையாகத்தான் கண்டுபிடித்தோம், அப்போதிலிருந்து திண்டுக்கல் செல்லும்போது எல்லாம் ஒரு வேளையாவது இங்கு சாப்பிடாமல் திரும்பியதில்லை எனலாம்..... சுவையில் அப்படி கட்டி போடுகின்றனர். இன்று விளம்பரங்களுக்குதானே மவுசு, திண்டுக்கல் என்றாலே தலப்பாகட்டி பிரியாணி, பொன்ராம் பிரியாணி, வேணு பிரியாணி என்று சொல்லும் அளவுக்கு விளம்பரங்களில் மூளையை மழுங்கடிக்கும் செயல் செய்து வருகின்றனர், ஆனால் இந்த சிவா பிரியாணி கடை விளம்பரம் இல்லாமலே சுவையிலேயே பிரபலம் எனலாம்..... விளம்பரம் மட்டும் இருந்தால் இன்னும் எங்கேயோ சென்றுவிடும் என்பது மட்டும் நிச்சயம் !!



மூடி இருக்கும் இந்த கடைதான், இரவினில் சுவையான உணவை தருது !

சின்ன கடைதான், ஆனால் சுத்தம் ஜாஸ்தி !

வேணு பிரியாணி இருக்கும் அதே தெருவில் மெயினிலெயெ ஒரு சிறிய கடையாக, மாலை ஆறு மணிக்கு மட்டுமே திறந்திருக்கும் இந்த சிவா பிரியாணி. சுவையாக இருக்கிறதே மூன்று வேளையும் சாப்பிடலாம் என்று சென்றால் மாலையில் மட்டுமே என்று போட்டு இருப்பது கண்டு ஏமாற்றமே வரும். ஞாயிறு மட்டுமே மதியத்தில் இருந்து இருக்கும். உள்ளே நுழையும்போதே மிக சிறிய கடை என்பது தெரியும், கும்மென்று பிரியாணி வாசனை ஆளை தூக்கும். கையை கழுவிக்கொண்டு உட்கார, நல்ல பெரிய வாழை இலையை முன்னே போட்டு என்ன வேண்டும் என்று கேட்க பிரியாணி என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்........ அது ருசியாக, நன்றாக இருக்கும் என்றாலும், இங்கே ஸ்பெஷல் என்பதே வேறு !!



இந்த மிளகு குழம்புதான் ஆளை அசத்துது !

இங்கு முதலில் இரண்டு இட்லி வாங்கி கொள்ளுங்கள், அதற்க்கு மூன்று வகையான குழம்பு உண்டு...... ஆட்டுக்கால் பாயா, நாட்டு கோழி குழம்பு, மிளகு கொழம்பு. இதில் டாப் என்பது மிளகு குழம்பு என்பதே, நாட்டு கோழியை நன்கு பியித்து போட்டு, அதில் மிளகை அரைத்து ஊற்றி, மசாலாவுடன் கொதிக்க வைத்து நல்ல திக் ஆக குழம்பு இருந்தால் அதை சூடான ஆவி பறக்கும் இட்லியின் மீது ஊற்றி, அது சிறிது ஊறியவுடன் தின்று பாருங்கள்.... தேவாமிர்தம்தான். அதனோடு சற்று கெட்டியான தேங்காய் சட்னியும் கொடுக்கின்றார்கள், அதனோடு இட்லியும், குழம்பும் என்று ஒரு காட்டு காட்ட வேண்டியதுதான் ! அடுத்து தொட்டு கொள்வதற்கு ஏதேனும் அசைவம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு நாட்டுக்கோழி சாப்ஸ் சொன்னோம், அதனோடு மட்டன் சுக்கா ஒன்றும் !

நாட்டு கோழி சாப்ஸ் !

இளசான ஆட்டின் மட்டன் சுக்கா !


நல்லா வெந்த நாட்டு கோழியை தோசை கல்லில் போட்டு, அதனோடு கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து நல்லெண்ணெய் போட்டு வதக்க ஒரு அருமையான வாசம் வரும். அதன் மேலே பெப்பர் கொஞ்சம் அதிகமாக தூவி, அவர்களது ஸ்பெஷல் ஆன குழம்பை ஊற்ற அது தோசைகல்லில் நன்கு தலபுல என்று கொதிக்க கொதிக்க ஒரு வாழை இலையில் போட்டு கொண்டு வந்து கொடுக்கின்றார்கள், இதை போலவே மட்டன் சுக்காவையும். நல்ல சூடான இட்லிக்கு அதை கொஞ்சம் வழித்து எடுத்து சாப்பிட என்ன அருமையா இருக்கு தெரியுமா. இட்லியே சாப்பிடறோமே, என்று தோசை என்றோம்..... பேப்பர் ரோஸ்ட் கொண்டு வரட்டுமா என்றார், அவ்வளவு பெரிசு வேண்டாம் சாப்பிட முடியாது என்று அந்த பேப்பர் ரோஸ்ட்டை ரெண்டா வெட்டி கொண்டு வாங்க என்றோம், அவரும் சுட்டு கொண்டு வந்தபோதுதான் தெரிந்தது அது நம்ம வீட்டு தோசை சைஸ் என்பது. உண்மையிலேயே ஒரு பேப்பர் போல அவ்வளவு மெலிசு.... அதனோடு மீண்டும் மிளகு கொழம்பு என்று ஆரம்பம் ஆனது ஒரு முடிவில்லாமல் !




பேப்பர் ரோஸ்ட்..... ரொம்பவே மெலிசா !

அடுத்த முறை திண்டுக்கல் செல்லும்போது நீங்கள் நம்பி செல்ல ஒரு இரவு உணவகம் இந்த சிவா பிரியாணி எனலாம். இங்கு பார்கிங் என்பது மட்டுமே பிரச்சனை, மற்றபடி சுவைக்கு நான் கேரண்டி !!




Labels : Suresh, kadalpayanangal, dindikul, siva biriyani, best milagu kulambu, idli, tasty, near madurai, dindigul, famous, biriyani, night, restaurant