Monday, August 24, 2015

அறுசுவை - ஆறுமுகம் பரோட்டா ஸ்டால், மதுரை !

மதுரை....... இந்த ஊரையும், அவர்களின் சுவையையும் சொல்லிக்கொண்டே சென்றால் நிறைய பதிவுகள் வரும் !  ஒரு இடத்தில் புட்டு செய்கிறார்கள் என்றால், இன்னொரு இடத்தில் சூடான இட்லி, பரோட்டா, பருத்தி பால், பிரேம விலாஸ் அல்வா, வெங்காய குடல் என்று வகை வகையாக இருக்கும், இந்த முறை மதுரை சென்று இருந்த போது பரோட்டாவும் சால்னாவும் எங்கு இருக்கும் என்று தேடியதில் எல்லோரும் சொன்னது தமுக்கம் மைதானம் பக்கம் இருந்த ஆறுமுகம் பரோட்டா கடை. இன்டர்நெட்டில் தேடி பார்த்தாலும் இந்த கடையை பற்றி பலரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னதால் நாங்கள் பெரிய அளவில் பிரம்மாண்டமாக இருக்கும் என்று சென்றால் வெட்ட வெளியில் பரோட்டா  இருந்தனர், காத்திருந்து சாப்பிட்டனர் எல்லோரும்...... உண்மையான மதுரை பரோட்டாவின் சுவை !!



சந்திரன் மெஸ்ஸின் இடது புறத்தில், ஒரு டீ கடை இருக்கிறது, காலையில் பார்த்தால் அது டீ கடை, மாலையில் சுவையான மதுரை பரோட்டா கிடைக்குமிடம் ! மாலை ஆகும்போது நமது உயரத்திற்கு பரோட்டா போடும் கல்லை எடுத்து வருகின்றனர், அதில் மூன்று பக்கத்தில் இருந்து தோசையோ, பரோட்டாவோ போடலாம். அதை துடைத்து, கழுவி எடுத்து வைத்து மேஜையை போட ஆரம்பிக்கும்போதே ஆட்கள் அங்கு காத்திருக்க ஆரம்பிக்கின்றனர். மைதா மாவினை பிசைந்து வைத்துவிட்டு, என்ன ஒரு லாவகத்தோடு அங்கு பரோட்டா செய்கின்றனர் என்று பார்த்தால் அசத்தலாக இருக்கிறது. அதை கல்லில் போட்டுவிட்டு, எண்ணையை எந்த கஞ்சத்தனமும் இல்லாமல் ஊற்ற, அந்த வெள்ளை கொஞ்சம் கொஞ்சமாக பொன்னிறமாக ஆகிறது !!


இரண்டு பரோட்டாவை சூடாக இலையில் எடுத்துபோட்டு, சால்னாவை ஊற்றும்போது புகை நமது மூஞ்சியை தாக்குகிறது, வாசனையோ அதிவேக விசையோடு நமது மூக்கினுள் நுழைந்து எச்சிலை வரவழைத்து விடுகிறது. அதற்க்கு தொட்டு கொள்ள மதுரை மண்ணின் ஸ்பெஷல் ஆன மட்டன் சுக்காவும், சிக்கன் பிரையும் வந்தது. இந்த மதுரை மட்டன் சுக்கவை பற்றி சொல்லியே ஆக வேண்டும், மட்டன் துண்டுகளை சிறியதாக எடுத்து போட்டு, அதனோடு கொஞ்சம் குழம்பும் ஊற்றி, வெங்காயம், பச்சைமிளகாய் எல்லாம் போட்டு தோசை கல்லில் வதக்கும்போது அந்த வண்ணமும், வாசனையும் இப்படிதான் பிணைந்து இருக்க வேண்டும் என்று மனது ஆனந்த கூப்பாடு போடும். ஒரே ஒரு துண்டை எடுத்து வாயில் போட, அந்த பரோட்டாவும் சால்னாவும் நான் முந்தி, நீ முந்தி என்று வாயினுள் வருவதற்கு செல்வதற்கு தயாராகும்.



சிறிய கடைதான் என்றாலும், நீங்கள் அங்கு இருக்கும்போது கொத்து பரோட்டா, சுக்கா, இட்லி, குடல் என்று காதில் கேட்டுக்கொண்டே இருக்கும், அந்த அளவுக்கு வியாபாரம் ! வெளியே சிறிய பெஞ்ச் போட்டு இருப்பார்கள், இதன் பக்கத்திலேயே ஒரு கோவில் இருப்பதால் பார்கிங் செய்வது மிகவும் எளிது. நிறுத்தி, நிதானமாக, ருசித்து சாப்பிட்டு விட்டு செல்லலாம். பரோட்டாவும், மட்டன் சுக்காவும் ஆளை மயக்குகிறது, அதுவும் அந்த குழம்பில் ஊற போட்டு அடிப்பது என்பது மதுரைகாரர்களின் பரம்பரை பழக்கம்.





பஞ்ச் லைன் :

சுவை - மதுரையில் சுவையான பரோட்டாவும், மட்டன் சுக்காவும் சாப்பிட அருமையான இடம்.

அமைப்பு - மிக சிறிய இடம், பக்கத்தில் பார்கிங் இடம் இருக்கிறது. கொஞ்சம் வெளியே காற்றாட பிளாட்பாரத்தில் உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும்.

பணம் - சுவைக்கு விலை குறைவுதான்.

சர்வீஸ் - நல்ல சர்விஸ் ! மிகவும் பொறுமையாக சர்வீஸ் செய்கிறார்கள் ! 

அட்ரஸ் : 
Next to Chandran mess
Alagar kovil road, Tallakulam, Madurai, Tamil Nadu 625002

Near to Madurai tamukkam maidanam




Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Madurai, Arumugam parotta stall,  best non veg mess in Madurai, Madurai hotel, non veg, asaivam, near to chandran mess, famous parotta, mutton sukka

8 comments:

  1. சுரேஷ்ஜி, இங்கு எலும்பு ரோஸ்ட் (பொரியல்) என்று ஒன்று உண்டு. அதை சாப்பிட்டிருக்கிறீர்களா? அது வேறு எங்கும் கிடைக்காத இவர்களின் தனி தயாரிப்பு. சுவையாக இருக்கும். இவர்களைப் பார்த்து ஒரு சில கடைகளில் எலும்பு ரோஸ்ட் போடுகிறார்கள். ஆனாலும் இந்த சுவை இருப்பதில்லை. அதைப் பற்றி நீங்கள் தனிப் பதிவே போடலாம்.
    அருமையான பதிவு!
    த ம 1

    ReplyDelete
  2. ருசித்து இருக்கிறேன் :)

    ReplyDelete
  3. செம்ம சார் இன்னும் பதிவுகள் எதிர்ப்பார்க்கிறேன்

    ReplyDelete
  4. முதலியார் கடை இட்லி ,அதிலும் மட்டன் கொத்து இட்லி ,,செம

    ReplyDelete
  5. இட்லி குடல் குழம்பு ஈரல் மிளகு வருவல் ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  6. இட்லி குடல் குழம்பு ஈரல் மிளகு வருவல் ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  7. இட்லி குடல் குழம்பு ஈரல் மிளகு வருவல் ம்ம்ம்ம்ம்

    ReplyDelete