Sunday, August 14, 2016

YummyDrives - முதலாம் ஆண்டு கொண்டாட்டம் !!

சென்ற வருடம் இந்த நாளான 14-ஆகஸ்ட், 5 மணிக்கு இருந்த அதே படபடப்பு, புரியாத அந்த உணர்வு இன்றும்..... ஆனால், இன்று அந்த உணர்வில் சந்தோஷமும் கலந்து இருக்கிறது !! ஆம், YummyDrives.com ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது.... திரும்பி பார்த்தால், என்னை பொறுத்த அளவில் இது சாதனைகளை செய்து இருக்கிறது என்றுதான் சொல்வேன் ! 50 லட்சத்திற்கும் மேலான பார்வைகள் முகப்புத்தகத்தில், 5000+ பேஜ் லைக்ஸ், 150 வாட்ஸ் அப் குழுமம், தமிழ்நாடு முழுவதும் கவர் செய்த சுவையான உணவு தகவல்கள், 682 மொபைல் செயலி டவுன்லோட் என்று முதலாம் ஆண்டு ஒரு நல்ல, பெரிய தடத்தை பதித்து இருக்கிறது !!

திரு.கேபிள் சங்கர் அவர்களின் சினிமா விமரிசனத்தை படித்து, அவரின் உணவு  பற்றிய பதிவுகளில் திளைத்து, ஒரு சுபயோக சுபதினத்தில் என்னால் பிளாக் எழுத முடியும் என்று ஒரு அசட்டு நம்பிக்கையில் 14-ஜூன்-2012 அன்று ஆரம்பித்ததுதான் "கடல்பயணங்கள்" தளம். பல பல நல்ல நண்பர்களையும், நட்புக்களையும் தந்த இந்த தளத்தில் நிறைய சப்ஜெக்ட் பற்றி எழுதி வந்தாலும், என்னை உணவு விரும்பியாகவே முன் நிறுத்தியது காலத்தின் கோலமே :-), உணவகங்களை தேடும்போது கீழ்வரும் சிரமங்களை உங்களை போலவே நானும் சந்தித்தேன்...

1) நிறைய பேர் இந்த ஊரில் இந்த உணவு நன்றாக இருக்கிறது, உணவகம் நன்றாக இருக்கிறது என்று செய்திகளை கொட்டினாலும், அதை சரியாக தொகுக்க முடியாததால் நான் தேடும்போது கிடைப்பதில்லை. 

2) பல பல நேரங்களில், நீங்கள் போன் செய்து உணவகங்களை கேட்டு போன் செய்யும்போது அந்த தகவல்களை எளிதாக எடுக்க முடியவில்லை.

3) இந்த உணவகம் கேபிள் ஜி எழுதியதா, இணையத்தில் பார்த்ததா, நண்பர்கள் பகிர்ந்ததா என்று புரியாமல் குழம்பியது உண்டு 

ஒரு நல்ல உணவை ருசித்து சாப்பிட இத்தனை விரும்பிகள் இருக்கும்போது, ஏன் அந்த எல்லா உணவையும் தொகுத்து வழங்கும் ஒரு தளம் இல்லை என்ற கேள்விக்கு விடையே இந்த யம்மி டிரைவ்ஸ் !!



இந்த தளம் ஆரம்பிக்கும்போது, சில விஷயங்களில் தெளிவாக இருந்தோம். இது ஒரு ஓபன் தளம் ஆக இருக்க வேண்டும், யாரும் அவர்களின் தகவல்களை தரும்படியாக இருக்க வேண்டும், ஸ்டார் ஹோட்டலோ அல்லது கையேந்தி பவனோ உணவின் சுவையும் சுகாதாரமும் மட்டுமே முக்கியம், எளிதில் தேடி எடுக்கும்படியாக இருக்க வேண்டும், இந்த தகவல்கள் எல்லோரையும் சென்று அடையுமாறு இருக்க வேண்டும் என்பதே. ஜனவரி 2015ம் ஆண்டு வேலையை ஆரம்பித்து, பல பல தூக்கம் இல்லா இரவு கண்டு, கேபிள் ஜி மற்றும் கோவை நேரம் ஜீவா அவர்களுடன் சேர்ந்து ஆரம்பித்ததுதான் இந்த நாளின் வெற்றியான யம்மி டிரைவ்ஸ் !!




தளம் ஆரம்பித்த பிறகு, சொந்த வேலைகள் மற்றும் அலுவல்கள் எல்லாம் சேர்ந்து ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்தபோது, தனது திறமையான மீம்ஸ் மற்றும் பதிவுகள் மூலம் உயிர் கொடுத்ததும், கொடுத்து கொண்டு இருப்பதும் திரு. சிதம்பரம் சௌந்தர பாண்டியன் அவர்கள். இவர் நண்பர் என்பதில் இருந்து ஒரு குடும்ப உறுப்பினர் என்ற அளவுக்கு நெருக்கமானார், இன்று வரை அந்த உற்சாகம் குறையாமல் இந்த தளத்தின் மார்க்கெட்டிங் பிரிவை திறம்பட செய்து வருகிறார்.




கடல்பயணங்கள் தளத்தின் மூலம் அறிமுகமான சேலம் திரு. சரவணன் அவர்களின் சகோதரி திருமதி. <பெயரை குறிப்பிட வேண்டாம் என்று அன்பு கட்டளை> ஒரு சுபதினத்தில் ஐடியா உதித்து ஆரம்பித்தது யம்மி டிரைவ்ஸ் வாட்ஸ்அப் குரூப். எனக்கு கூட தோன்றவில்லை இது, ஆனால் அவர் ஆரம்பித்து வைத்த இந்த குழுமம் பல பல உணவு பிரியர்களை ஒன்று இணைத்தது மட்டும் இல்லாமல், அவர்கள் ருசித்த தகவல்களையும் ஷேர் செய்யும் ஒன்றாக இருக்கிறது. இவரது கைம்மாறு இல்லாத அன்பும், சகோதரர் திரு.சரவணன் அவர்களின் பங்களிப்பும், இன்றளவும் மகிழ்ச்சி கொள்ள செய்கிறது.




இவர்கள் மட்டும் இல்லாமல், கண்களுக்கு தெரியாமல் பலர் செய்த உதவிகள் பல. அவர்களின் பெயர்களை பட்டியல் இட்டால் இந்த தளம் பத்தாது என்பதே உண்மை. தளத்தை வடிவமைத்தது, டெஸ்ட் செய்து கொடுத்தது, போஸ்டர் வடிவமைத்தது,அண்ணே இதை ஆட் செய்யுங்கள் என்ற உள்ளங்கள் என்று அநேகம் பேரின் உழைப்பும் இங்கு உள்ளது. இந்த தளம் ஆரம்பித்து கொடுத்த திரு.தமன் (திரைப்பட நடிகர்), திரு.வெங்கடேஷ் ஆறுமுகம் (பல்சுவை கலைஞர், வித்தகர்) மற்றும் செல்வி. ரொபினா சுபாஷ் (மசாலா எப்.எம்) இன்று நன்றியுடன் நினைவு கூறுகிறேன், இந்த தளம் விரைவில் தவிர்க்க முடியாத உணவு தளமாக மாறும் என்ற நாள் தூரத்தில் இல்லை என்று சொல்லாமல் சொல்கிறது இந்த முதலாம் ஆண்டு கொண்டாட்டம் !!




நன்றி நண்பர்களே..... உங்களது பங்களிப்புடன் இந்த முதலாம் ஆண்டு கொண்டாட்டம் இனிதே அமைந்தது, ருசியான உணவுகளையும் அதை பற்றிய தகவல்களையும் இனி அதிகமாக எதிர் பார்க்கலாம். சில பல மாற்றங்குளுடன் இன்னும் வீறு கொண்டு வெற்றி நடையை ஆரம்பிக்கிறோம் !!

Labels : YummyDrives, launch, first year anniversary

Tuesday, June 14, 2016

அறுசுவை - விநாயகா தோசை கடை, குற்றாலம் !

குற்றாலம்... இந்த பெயரை சொல்லும்போதே  அந்த அருவியில் நனையும் சுகம் தெரிகிறது, சிலுசிலுக்கும் அந்த காற்று, அங்கு இருக்கும் ஹோட்டல் மற்றும் உணவுகள் என்று கண் முன்னே வந்து செல்கிறது. இங்கு சென்றாலே பல பேருக்கு உண்ணுவது - குளிப்பது - உறங்குவதுதான் முழு நேர வேலை என்று இருக்கும். நானும் இங்கு சென்று இருந்தபோது குளித்தவுடன் பசிக்கும், பின்னர் வண்டியை எடுத்துக்கொண்டு பார்டர் கடை சென்று நன்றாக வேர்வையில் குளித்துக்கொண்டே சாப்பிடுவோம், அய்யய்ய வேர்துடுச்சே என்று மீண்டும் குளிக்க சென்று ஒரு மீள முடியாத சுழலில் சிக்கி கொள்வேன்.... தினமும் சிக்கன், மட்டன் என்று தின்று விட்டு என்றாவது ஒரு நாள் மட்டும் கொஞ்சம் லைட் ஆக சாப்பிடலாம் என்று நினைக்கும்போது, அது வாய்க்கு ருசியாகவும் கொஞ்சம் புதுசாகவும் இருக்க வேண்டுமே என்று யாரிடமாவது கேட்டால் எல்லோரும் சொல்வது "விநாயகா தோசை கடைக்கு" போங்க என்பதுதான் !!





தென்காசியில் இருந்து குற்றாலம் செல்லும் ரோட்டில் மேலகரம் என்னும் ஒரு ஊரின் ரோட்டின் இடது பக்கத்தில் ஒரு சிறிய கடையாக இருக்கும். பலரும் இந்த கடையையும், இங்கு கிடைக்கும் வித விதமான தோசையை பற்றியும் சொல்லி இருந்ததால், நாங்கள் எல்லோரும் பளபளக்கும் விளக்குகளுடன், பெரிய கடை, பார்கிங் வசதி என்று நினைத்து இருந்தோம், ஆனால் அதிசயமாக ஒரு நான்கு டேபிள் போடும் இடத்தில் இருந்தது அந்த கடை. கூட வந்த எல்லோரும் இந்த கடைதானா, சுவை நன்றாக இருக்குமா என்றெல்லாம் கேள்விகேட்டுக்கொண்டே வந்தனர்.... அந்த சந்தேகத்தை எல்லாம் சுவை துடைத்து எறிந்தது எனலாம் !







பல நாட்களாக காரமாக சாப்பிட்டு கொஞ்சம் காரம் கம்மியாகவும், தோசை சுவை மாறாமலும் சாப்பிடலாம் என்று எண்ணிக்கொண்டே விலை பட்டியலை திரும்பி பார்த்தபோது பல வகை தோசை கண்ணில் பட்டது. ஒரு முறை முழுதுமாக வாசித்து பார்த்து, இதை சொல்லலாமா இல்லை அதை சொல்லலாமா என்று குழப்பம்தான் மிஞ்சியது, அந்த அளவுக்கு விதம் விதமாக இருந்தது. வீட்டில் எல்லாம் தோசை, கொஞ்சம் அதிகாரம் செய்து கேட்டால் முட்டை தோசை என்று மட்டுமே கிடைக்கும், இங்கே பார்த்தால் அவ்வளவு இருக்கிறது..... இருக்கட்டும், வீட்டுக்கு போய் நானே தோசை சுடறேன் ! எனக்கு என்று மிளகு பொடி தோசை மற்றும் கீரை தோசை சொன்னேன்...





ஒரு பெரிய வாழை இலையை எனக்கு முன்னாடி வைத்த பின்பு கடையை சுற்றி பார்த்தேன், மொத்தமாக சுமார் 25 ஆட்கள் அமர்ந்து சாப்பிடும் இடம், நிறைய பேர் பார்சல் தான் வாங்கி செல்கின்றனர். அவ்வப்போது பஸ், மற்றும் கார்களில் வந்து இந்த கடையை கேள்விப்பட்டு வருகின்றனர். மாஸ்டர் போட்ட தோசையை எனது இலையில் வைக்கும்போதே வாசம் கமகமக்கிறது, மிளகை மாவாக இல்லாமல் அரைத்து அதை தோசையின் மீது தூவி மொருகலொடு தருகின்றனர், அதை ஒரு வாய் வைக்கும்போதே காரமும், தோசையின் சுவையும் இணைந்து நர்த்தனமாடுகின்றன நமது நாக்குகளில். தக்காளி சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் எல்லாம் தொட்டு சாப்பிட ஒவ்வொரு வாய்க்கும் மொருமொருப்புடன் குதித்து செல்கிறது அந்த தோசை. அடுத்து வந்த கீரை தோசை இன்னும் பேஷ் பேஷ்.... கீரையை சமைத்து சாப்பிட சொன்னால் கொஞ்சம் மூஞ்சி சுருங்கும், இங்கு தோசையுடன் கலந்து இருப்பதால் சுவை நன்றாக இருக்கிறது (எங்க இருந்து இப்படி எல்லாம் கண்டு பிடிக்கிறாங்களோ !!).



முடிவில் ஒவ்வொரு வகையான தோசையையும் காணும்போது, மீண்டும் இங்கே வரவேண்டும் என்றுதான் தோன்றுகிறது. குற்றால சாரல் மழையுடன் கூடிய தருணங்களில் இந்த தோசைகளை சாப்பிட்டால் ஒரு குதூகலம் நமது வயிற்றுக்கும் கிட்டும். இங்கு ஸ்பெஷல் தோசை என்பது வல்லாரை தோசையாம், அதை சாப்பிட்டால் அன்று இரவு தூங்க முடியாதாம்.... தோசையிலும் இன்பம் வைத்தாயே இறைவா !!

Labels : Suresh, kadalpayanangal, kutralam, dosai kadai, vinayaga thosai kadai, various types of dosa, tenkasi, melagaram, veg food

Monday, May 30, 2016

அறுசுவை - சிவாஜி மிலிட்டரி ஹோட்டல், பெங்களூர் !!

சிறு வயதில் ஒரு நல்ல பிரியாணி, கறி சாப்பிட வேண்டும் என்றால் நமக்கு எல்லாம் இரண்டே சாய்ஸ்தான்..... முனியாண்டி விலாஸ் மற்றும் மிலிட்டரி ஹோட்டல் ! எதற்க்காக ஹோட்டல் பெயரில் மிலிட்டரி என்பது இன்னமும் விளங்கவில்லை, ஆனாலும் அப்பா அங்கு கூட்டி சென்று பிரியாணியும், சிக்கன் பிரையும் வாங்கி தந்தது மட்டும் மறக்கவில்லை. இன்று வகை வகையாக பல கடைகள் வந்துவிட்டாலும் மிலிட்டரி ஹோட்டல் என்பதும், அதன் சுவையும் மறக்காது. பெங்களுருவில் நல்ல கறி பிரியாணி சாப்பிட வேண்டும் என்றால் நாம் செல்ல வேண்டியது சிவாஜி மிலிட்டரி ஹோட்டல் என்பது எல்லோரும் சொல்லும் ஒன்று. நண்பர் ஜெகதீஷ் பலமுறை செல்லமாகவும், மிரட்டியும் என்னை இங்கு வர வேண்டும் என்று சொன்னார், அது எனது வீட்டில் இருந்து வெகு தூரம் என்பதால் யோசித்தேன்.... கடைசியில் அவரது அன்பான மிரட்டல்தான் ஜெயித்தது !


பனஷங்கரி பஸ் ஸ்டாண்ட் வெகு பக்கத்தில் ஒரு சிறிய சாலையின் முன்னே, வண்டியை அந்த தெருவில் நிறுத்த முடியாத வண்ணம் இருந்தபோதே யோசித்து இருக்க வேண்டும்.... நல்ல பசி நேரத்தில் வந்து இருக்க கூடாது என்று. அந்த வண்டிகள் எல்லாமுமே இந்த ஹோட்டல் பிரியாணிக்கு வந்ததுதான். திருப்பதிக்கு சென்று திரும்பும்போது மொட்டைகளை எங்குமே பார்ப்பதுபோல், இந்த ஹோடேலில் இருந்து திரும்பி வரும் எல்லோரிடமும் ஒரு விதமான தொப்பையும், கைகளில் ஒரு பார்சலும் இருப்பது சர்வ நிச்சயம். நண்பர் ஜெகதீஷ் பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும், எனது உணவு பதிவுகளை விரும்பி படிப்பவர், பல முறை போனில் பேசி பின்னர் நேரில் பார்த்து என்று இன்று ஒரு நெருக்கமான நண்பர்களாகிவிட்டோம். மிக உரிமையோடு, நெருக்கத்தோடு உரையாட ஒரு நல்ல நண்பர் இன்றளவிலும், அவரது விருப்பத்தின் பேரில் இங்கு சென்றது இன்றளவிலும் மறக்க முடியாத அனுபவம்!





ஹோட்டல் உள்ளே நுழைந்து அந்த நுழைவாயிலுக்கு செல்வதற்கே ஒரு 10 நிமிஷம் ஆனது, அவ்வளவு கும்பல். அதை தாண்டி அந்த நுழைவு வாயிலில் ஒரு சிறிய கும்பல், அங்கு இருந்த எல்லோரிடமும் 500, ஆயிரம் ரூபாய் தாள்கள்தான், எல்லோரும் இங்க ரெண்டு பிரியாணி பார்சல், நாலு பிரியாணி பார்சல் என்று சொல்லிக்கொண்டு இருந்தனர். நாம இங்க சாப்பிடனும், எப்படி போகணும் என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போதே.... சாபிடணும்னா உள்ளே போங்க, இது பார்சல் கியூ என்றார்கள், டேய் கொஞ்சமா பார்சல் வாங்குகடா எங்களுக்கு கிடைக்காது போல என்று நினைத்துக்கொண்டோம். சரி, இனிமேல் பிரியாணி கிடைத்து விடும் என்று நம்பி உள்ளே சென்றால் இன்னொரு கியூ, இது எதுக்கு என்று பார்த்தால் உட்கார்ந்து சாப்பிடவாம் ! அதில் ஒரு கால் மணி நேரம் சென்றது, நாமதான் ஒருத்தர் இலையை பார்த்தே அவர் முடிக்க போறார் என்று பார்த்து, அவர் பின்னால் சென்று நின்று கொண்டு இடம் பிடிப்போமே அதை முயற்சிக்கலாம் என்றால் அங்கே சாப்பிட்டு முடிப்பவருக்கு பின்னர் ஒருவர், அவருக்கு பின்னால் ஒருவர் என்று இருந்தது. இவர் யாருடா ரெண்டாவது ஆள் என்று நினைத்தால், முதலில் வெயிட் செய்பவர் சாப்பிட்டு முடித்தபின்னர் இடம் பிடிக்கவாம்........ சிரிக்காதீங்க மக்களே, இது நிஜம். முடிவில் அரை மணி நேரம் சென்று உட்கார இடம் கிடைத்தது..... அப்பாடி இனிமேல் பிரியாணி கிடைத்து விடும் என்று பக்கத்து இலையில் பிரியாணி சாபிட்டவரை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, நண்பர் ஜெகதீஷ் அப்பாடி இன்னும் அரைமணி நேரத்தில் பிரியாணியில கையை வைக்கலாம் என்றவரை திகிலுடன் பார்த்தேன் !




வெறும் டேபிள் பார்த்து உட்கார்ந்து கொண்டு இருந்த நமக்கு ஒருத்தர் மந்தார இலை தட்டை வைக்கவே பத்து நிமிஷம் ஆனது, அதுவும் இங்க தட்டு வைங்க என்று சொல்லி சொல்லி மாய்ந்த பின். பின்னர் இருந்த பசிக்கு வெறும் தட்டை நக்கி கொண்டு இருந்தபோது கொஞ்சம் தயிர் வெங்காயம் அப்புறம் ஒரு கப்பில் குழம்பு என்று வைத்தார்கள், அதன் பின்னர் ஒரு 10 நிமிடத்திற்கு பின் ஒருத்தர் பிரியாணியை ஒரு தட்டு நிறைய ஏந்திக்கொண்டு வந்தார்..... ஒரு பெரிய கூட்டத்தில் நமிதாவை நெருக்கமாக அணைத்துக்கொண்டு சென்றால் எப்படி வயிற்று எரிச்சலோடு பார்ப்பார்களோ அப்படி அந்த பிரியாணி கொண்டு செல்பவர்களை பார்த்தார்கள். முடிவில் எங்களுக்கு ஒரு அடிதடியோடு பிரியாணி வந்தது.... எங்களுக்கோ இங்கு ஒரு தேவதை வந்து அமிர்தம் தருவது போன்ற ஒரு பீலிங். எங்களது இலையில் வந்த அந்த மட்டன் பிரியாணி நறுமணத்தை முகர்ந்து கொண்டே "டேய், எங்களுக்கு பிரியாணி கிடைச்சிடுச்சு, முனியம்மா, ராக்கம்மா, வள்ளி தாயி, பொன்னம்மா..... எங்களுக்கு பிரியாணி கிடைச்சிடுச்சு !" என்று கத்த வேண்டும் போன்று இருந்தது, அவ்வளவு சந்தோசம்.... இருக்காதா பின்னே நல்ல பசியில் இருக்கும்போது, இத்தனை தடைகளை கடந்து பிரியாணி கிடைத்தால் !!



ஒரு தொன்னையில் நிரம்பி வழியும் பிரியாணி, அதில் அங்கங்கே குளத்தில் இருந்து எட்டி பார்க்கும் மீன்கள் போலே மட்டன் துண்டுகள், சூடான அந்த சுவை என்று எங்களுக்கு பார்க்கும்போதே எச்சில் ஊறியது. அந்த மந்தார இலையில் கொட்டி, ஒரு வாய் வைக்கும்போதே தெரிகிறது ஏன் இந்த அளவு கூட்டம் என்று. பிரியாணியில் அவ்வளவாக எண்ணை என்பதே இல்லாமல், நன்றாக வெந்து இருந்த மட்டன் துண்டுகளும், அதன் சாறு இறங்கிய அந்த அரிசியும், மசாலா சுவையும் என்று ஒரு பிரியாணி சர்வலக்ஷனமும் பொருந்தி இருந்தது. அதனோடு கூடிய காரமான கோழி வருவலும் என்று ஏகாந்தமான வேளை அது. சொல்வது கடினம்.... சுவைத்து பாருங்கள்.



அடுத்த முறை இந்த பிரியாணி சாப்பிட என்றே இங்கு செல்லலாம் நீங்கள், நம்பி வாங்க தாராளமா சாப்பிடுங்க மனம் நிறைவோடு செல்லுங்கள் ! பல பல தலைமுறைகளாக இது செயல்படுவதும், அங்கு இருந்த கூட்டமுமே சாட்சி.... இந்த பிரியாணி அவ்வளவு சுவையானது என்பதற்கு !







Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Shivaji military hotel, Sivaji military hotel, banagalore, Bengaluru, best biriyani, amazing taste, tasty, not to miss

Monday, May 23, 2016

அறுசுவை - கடுக்கன் விலாஸ் கம்மன்கூழ், ஈரோடு !

அடிக்கும் இந்த வெயிலுக்கு இளநீர், ஜூஸ் என்று சாப்பிட்டாலும் நம்ம ஊரு கம்மன்கூழ் என்று வரும்போது எல்லாமே இரண்டாம்பட்சம்தான் ! சமீபத்தில் ஈரோடு சென்று இருந்தபோது நண்பர் ஒருவர் வெயிலுக்கு இதமா இப்போ கம்மன்கூழ் சாப்பிடலாம் வாங்க என்று கூட்டிக்கொண்டு சென்றார். அங்கு நிறைய கம்மன்கூழ் கடைகள் இருந்தாலும் ஒரு கடையின் முன்னே மட்டும் அவ்வளவு கூட்டம், அப்போதே புரிந்து போனது சுவை எப்படி இருக்கும் என்று ! வெயிலுக்கு இதமாக ஒரு மரத்தினடியில், தள்ளுவண்டியில் இருக்கும் அந்த கடைக்கு நிறைய பேர் ரசிகர்கள்.... ஒரு சொம்பு கம்மன்கூழ் வாங்கி குடிக்கும்போதே தெரிந்துவிடுகிறது, கம்மன்கூழ் என்று இருந்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் !


ஈரோடு சென்று வ.உ.சி. பார்க் எங்கே என்று கேட்டால் எல்லோரும் வழி காட்டுவார்கள், மரங்கள் அடர்ந்து இருக்கும் அந்த இடத்திற்கு ஒரு வெயில் காலத்தில் சென்றாலே நமது மனதெல்லாம் குளிர்கிறது. அங்கு ஒவ்வொரு அடிக்கும் ஒரு கம்மன்கூழ் கடை என்று இருக்கிறது, அதில் ஒரு கடையினை தவிர்த்து மற்ற எல்லா கடைகளிலும் காற்று வாங்குகிறது. கொஞ்சம் நெருங்கி சென்று பார்த்தால் பெயரே வித்தியாசமாக இருக்கிறது.... கடுக்கன் விலாஸ் !! 




கொஞ்சம் அந்த கூட்டத்தை எல்லாம் விலக்கிக்கொண்டு சென்று பார்த்தால் பெயர் காரணம் புரிகிறது.... அங்கு கம்மன்கூழ் விற்று கொண்டு இருப்பவர் காதில் கடுக்கன் போட்டு இருக்கிறார். அவரது முன்னே இரண்டு குளிர்ந்த மண் பாண்டங்கள், அதற்க்கு முன்னே மாங்காயை சிறிய துண்டுகளாக அரிந்து அதில் மிளகாய் எல்லாம் தூவி ஒருபுறமும், ஆந்திரா குடை மிளகாயை ஒட்டன்சத்திரம் தயிரில் வேதாரண்யம் உப்பு போட்டு ஊற வைத்து அதை எண்ணையில் பொறித்து எடுத்து வைத்திருந்தது ஒரு புறம், இன்னொரு பக்கம் அப்பளம், அடுத்து ஒரு பக்கம் ஊறுகாய் என்று நாக்கில் எச்சில் ஊற வைக்கின்றார். எனக்கு ஒரு கம்மன்கூழ் என்று கேட்க, வெங்காயம் போட்டுதானே என்றபோது தலை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல ஆடியது !



ஒரு சிறிய சொம்பை எடுத்து அதில் கம்மன்கூழ் கொஞ்சமாக ஊற்றுகிறார், அதில் தயிர் போன்று திக் ஆக இல்லாமலும், மோர் போன்று தண்ணீராக இல்லாமலும் இருக்கும் நல்ல புளிக்காத மோரை அந்த கம்மன்கூழ் மீது ஊற்ற அது ஒரு ஓவியத்தை காட்டுக்கிறது. அதன் பின்னர் சரசரவென்று வெங்காயம் எடுத்து அரிந்து, கூடவே தண்ணீர் தெளித்து வைத்து இருந்த கொத்தமல்லியையும் அரிந்து, சிறிது மிளகாய் போட்டு கைகளில் கொடுக்கும்போதே அந்த மண்பானை மோரின் சிலுசிலுப்பு கைகளில் தவழ்கிறது. கொஞ்சம் அண்ணாந்து பார்த்து அந்த சொம்பை எடுத்து கம்மன்கூழ் வாயில் ஊற்ற ஒரு சிறு நீர்வீழ்ச்சி வாயில் ஆரம்பித்து வயிறு வரை குளிர்ச்சியோடு பாய்வது தெரிகிறது. அதை குடித்துக்கொண்டே ஒவ்வொரு வாயிற்கும் மாங்காய், அப்பளம், ஊறுகாய், மோர் மிளகாய் என்று சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் அந்த நிழலில் சூரியனை பார்த்து சிரித்துக்கொண்டே சவால் விடுவோம்...."ஏய், சூரிய ஏகாதிபத்தியமே...." !!



இங்கு கம்மன்கூழ் மட்டும் இல்லை, மசால் மோர், ராகி கூழ், தயிர்வடை என்று எல்லாமுமே அற்புதம். அடுத்த முறை ஈரோடு செல்லும்போது மறக்காமல் சென்று வாருங்கள்..... மனதெல்லாம் குளிரும் !!



 Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Kadukkan vilas, erode, Erodu, Kammangool, kammankool, tasty natural food, must try

Thursday, May 5, 2016

சிறுபிள்ளையாவோம் - அதிர்ஷ்ட சீட்டு !!

சிறு வயதில் எல்லாம் அம்மா அல்லது அப்பா கடைக்கு சென்றால் ஒட்டி கொள்வோம், அப்போது நமக்கு கொஞ்சம் மிட்டாய் கிடைக்கும். கொஞ்சம் வயது ஏறியபோது காசின் அருமை நமக்கு தெரிய வந்து, அழுது அடம்பிடித்து நாலணா வாங்கிகொண்டு சென்று மிட்டாய் வாங்கி வருவோம் இல்லையா ! ஆனால், நினைத்து பாருங்கள் அதிர்ஷ்டம் என்பதை எப்போது அல்லது எந்த வயதில் நாம் அறிந்துகொண்டோம் என்பதை ?! கடையில் அதுவரை தின்பண்டம் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது போக, ஒரு அட்டை, அதனை சுற்றி விளையாடும் பொருட்கள் என்று கண்ணுக்கு தெரிந்தது எப்போது ? நமது அதிர்ஷ்டம் என்ன என்று சோதித்து பார்க்க தோன்றியது எப்போது ? சுரண்டி சுரண்டி பணம் போய் ஏமாந்துட்டோமோ என்று நினைத்தது உண்டா ? பரிசு பொருள் கிடைத்து நான் அதிர்ஷ்டக்காரன் என்று நினைத்தது உண்டா ?




இன்று இந்த அதிர்ஷ்ட அட்டைகள் எல்லாம் சிறு கடைகளில் கிடைப்பதில்லை, பெரும் வணிகர்களே சிறு பொம்மைகளையும், இலவசங்களையும் கொடுத்து பழக்கி விட்டதால், அதிர்ஷ்ட அட்டை என்பது காணாமல் போய் விட்டது. இன்று குழந்தைகளுக்கு காசு கொடுத்தால் அது கடைக்கு சென்று என்ன வாங்குகிறது என்று பார்த்து இருக்கின்றீர்களா ? ஒரு சிறு சீட்டு நமக்கு வாழ்க்கையை கற்று கொடுத்தது, ஏமாற்றமும் ஆச்சர்யங்களும் நிறைந்தது இந்த பரமபத வாழ்க்கை என்பதை ஒரு சிறு அட்டையில் அல்லவா கற்றுக்கொண்டோம் !




ஒரு பெரிய அட்டையில் நமக்கு / சிறுவர்களுக்கு பிடிக்கும் எல்லா பொருளும் நன்கு பேக் செய்து தொங்க விடப்பட்டு இருக்கும். நான் அந்த அட்டையை பார்த்ததும் ஒரு குழந்தையாகி போனேன் என்றுதான் சொல்ல வேண்டும், அதுவும் எனது மனைவியுடன் அந்த கடைக்கு சென்று இருந்தேன் ! இந்த அதிர்ஷ்ட சீட்டு எடுக்க வேண்டும் என்றவுடன் என்னை தாண்டி பார்த்துவிட்டு எந்த குழந்தைக்கு என்றார், நான் எனக்குதான் வேண்டும் என்றவுடன் எனது மனைவியை பரிதாபமாக பார்த்தார் ! ஒரு குட்டி பிளாஸ்டிக் மிட்டாய்  டப்பாவை எடுத்து ஒரு சீட்டு எடுங்க என்றவுடன் நான், நல்லா குலுக்கி குடுங்க என்றவுடன் அவர் முடிவே செய்துவிட்டார் !






ஒரு ஸ்டாம்ப் சைஸ் சீட்டு அதில் மிகவும் சிறிதாக சில்வர் பூசப்பட்டு இருந்தது, அதை சுவரில் வைத்து சுரண்ட... அந்த கடைகாரரோ "பார்த்து பார்த்து சீட்டு பிஞ்சிடும்" என்றார். சுரண்டியதில் வந்த நம்பர் 440 ! ஆகா என்று பரிசு பொருளில் தேடியபோது கிடைத்தது..... ஸ்டைல் குயின் நதியா பூவே பூச்சூடவா படத்தில் பாட்டு பாடி ஆட்டம் ஆடியபோது வைத்து இருந்த மத்தாப்பு பெட்டி !! ஐயோ, நமக்கு அதிர்ஷ்ட்டம் கூறிய பிச்சிகிட்டு கொட்டுதே என்று நினைத்து நான் அடுத்தடுத்து எடுத்த எல்லா சீட்டிலும் ஜோக்கர் படம் :-( எனது மனைவியை வைத்து ரெண்டு சீட்டு எடுத்தேன்... அதே, அதே, அப்போது அங்கே சென்று கொண்டு இருந்த சிறுவர்களை கொண்டு ரெண்டு சீட்டு எடுத்தேன், அதே அதே.... அடுத்து அங்கு பீடி வாங்க வந்த ஒருவரை வைத்து எடுத்தேன், அதே அதே.... என்னடா இது என்று நான் நொந்துக்கொண்டு, அடுத்த சீட்டு பரிசு விழனும் என்று செல்ல கோபத்தோடு கடவுளிடம் வேண்டிக்கொண்டு ஒரு சீட்டு நான் எடுக்க...... ஐய்யா, எனக்கு இப்போது விழுந்தது ராக்கெட். ஒரு பேரானந்தத்தில் குதிக்க ஆரம்பித்தபோதுதான் தெரிந்தது என்னை சுற்றி இருந்த சிறு கூட்டம்..... சிறுவர்கள், சில பெரியவர்கள் என்று.



ஒரு சீட்டு இரண்டு ரூபாய் என்று நான் அது வரை பதினைந்து எடுத்து இருந்தேன், சுமார் முப்பது ரூபாய் எடுதுக்கொடுக்க.. அதை வாங்கி கொண்டு கடைகாரர் எனது மனைவியிடம் பார்த்து கூட்டிக்கிட்டு போங்க என்றபோது எனது மனைவி ஒரு முறை முறைத்தார். ஆனால், வீட்டிற்க்கு சென்று கொண்டு இருக்கும்போது அவர் புன்னகைத்துக்கொண்டே "அந்த புஸ்வானம் கிடைச்சு இருந்தா நல்லா இருந்து இருக்கும் இல்லை" என்றார்.... ஆகா, அந்த அதிர்ஷ்ட சீட்டு எல்லாரையும் கொழந்தையாக்கி விடுகிறது இல்லையா !

Labels : Suresh, Kadalpayanangal, Sirukulanthaiyaavom, childhood memories, lucky sheet, joker, get lucky, memory

Wednesday, May 4, 2016

வாங்க.. சூடா ஒரு டீ சாப்பிடலாம் !!

உணவு பற்றிய பதிவுகளை எழுதி வரும் எனக்கு நிறைய பேர் போன் செய்து பாராட்டுவதும், சிலாகித்து பேசுவதும் என்று நிறைய அனுபவங்கள் உண்டு, ஒவ்வொரு உணவுக்கும் ஒரு அனுபவம் என்றுதான் இதுவரை பகிர்ந்துள்ளேன்.... ஆம், ஒவ்வொரு உணவும் ஒரு அனுபவமே ! எனது நண்பர்களுடன் ஒரு ஜாலி ஜமாவின்போது ஒரு நண்பர் கிண்டலாக உனது எல்லா உணவு பதிவுலுமே வாயூரும்படியே எழுதுகிறாய், அதை வெவ்வேறு அனுபவம் என்கிறாய் அது தவறு என்றார். நான் இல்லை, ஒரு சூழல்தான் அந்த உணவின் சுவையை தீர்மானிக்கிறது என்று தீர்க்கமாக சொன்னேன். அப்போது அவர், எங்க இந்த ஒரு கிளாஸ் டீ பற்றி ஒரு நாலு பதிவு தொடர்ந்து எழுத முடியுமா என்றார்.....


டீ.... நமது வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்ட ஒன்று. எனது அம்மா காலையில் போட்டு கொடுக்கும் அந்த டீயின் சுவை இன்றும் மறக்க முடியாது. எனது நண்பர், அந்த சவால் விட்டவுடன், நான் ஏன் முடியாது நாலு பதிவு அல்ல நாற்பது பதிவு கூட எழுதுவேன் என்றேன். எனது கூட இருந்த அனைத்து நண்பர்களும் சிரித்தனர்... டேய், ஒரு கிளாஸ் டீ பத்தி எவ்வளவு எழுத முடியும். நான் அவர்களது கண்களை பார்த்து சொன்னேன்.... முடியும்டா, நீங்கள் ஒரு டீயை சாதாரணமாக பார்க்குறீங்க, ஆனால் டீ குடிப்பது என்பது ஒவ்வொரு அனுபவம் என்றேன்.



சவால் விட்ட நண்பர், அப்படி என்னதான் டீ பத்தி எழுதுவ... பாலை சுண்ட காய்ச்சி, சர்க்கரையை மிதமா போட்டு, டீயை பொன்னிறமாக ஊற்றி அதை அப்படியே ஒரு கிளாசில் ஊற்றி ஒரு சிப் அடிக்கும்போது சொர்கமே தெரிகிறது என்றா என்றார். நான் மூச்சை நன்றாக இழுத்து விட்டு, நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க என்றேன்...

  • "இப்போ எதுல டீ குடிக்கிற..."
  • "கண்ணாடி கிளாசில்"
  • "எதுல எல்லாம் டீ குடிக்கலாம் ?"
  • "அப்படின்னா"
  • "டீ குடிக்க பயன்படுத்தற வகை வகையான கோப்பைகள்...."
  • "டம்பளர், பேப்பர் கப், மண்ணில் செய்த கப், சாசர்,....." (கண்கள் விரிகிறது)
  • "டீ குடிக்கும் வேளைகள் எல்லாம் எது ?"
  • "காலை, 11 மணி, அப்பப்ப மதியம், 3 மணி, மாலை,..."
  • "அதிகாலை, நைட், 1 மணி காலை எல்லாம் சேர்த்துக்க..... இப்போ சொல்லு, ஒவ்வொரு கிளாசில் டீ குடிக்கும்போதும் ஒவ்வொரு அனுபவம் இல்லையா ? உதாரணமா அந்த சில்லிப்பான மண் கோப்பையை கையில் கெட்டியா புடிச்சிட்டு, ஒவ்வொரு சிப் டீ குடிச்சா எப்படி இருக்கும் அதுவும் சூரிய உதயத்தை பார்த்து" என்றேன்.



டீ குடிப்பது என்பதை எவ்வளவு வகை படுத்தலாம்....

  1. குடிக்கும் இடம் - ரோடு, சாதா ஹோட்டல், சைக்கிள் டீ, 5 ஸ்டார் டீ...
  2. டீ காஸ்ட் - 1 ரூபாய், 10 ரூபாய், 100 ரூபாய், லட்சம் ரூபாய்...
  3. உடை - வெறும் உடம்பில், கைலி, பேன்ட்-ஷர்ட், கோட்-சூட்,...
  4. வேளைகள் - காலை, மதியம், மாலை, இரவு, நள்ளிரவு....
  5. டீ போடும் வகை - பாய்லர், எவர்சில்வர் சிறிய அண்டா, டிப் டீ, மெசின் டீ...
  6. இடம் - வீட்டில், ஆபீஸ், ஹோட்டல், மலை முகட்டில், ஏறோப்லனில்,...
  7. சீசன் - வெயில், மழை, காற்று, குளிர், பனி,....
  8. கோப்பைகள் - டம்பளர், அலுமினியம், மண், பீங்கான், பேப்பர்,....
  9. யாருடன் - நண்பர்கள், குடும்பம், பிடித்த மனிதர், பாஸ், கூலி தொழிலாளி,....
  10. சைடு டிஷ் - வடை, பிஸ்கட், வாழைபழம், சூசி, புல் மீல்ஸ்....

மேலே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றுடன், எதையாவது சேர்த்து பார்த்தால் அது ஒரு காம்பினேஷன்.... புரியவில்லையா. உதாரணமாக.... 
சைக்கிள் டீ - 10 ரூபாய் - கைலி - மாலை - டிப் டீ - மலை அருவி - சில்லென்ற மழை - மண் கோப்பை - நண்பர்களுடன் - வடை 
எதையாவது மாற்றி போட்டால் அந்த அனுபவமே வேறு.... ஆகவே, டீ குடிப்பது என்பது ஒரு ஜென் நிலை இல்லையா ?!




கேட்ட நண்பர் எனது காலில் விழாத குறை... "நீ நானூறு அத்தியாயம் கூட எழுதுவ..." என்றார். இது நடந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது, அன்றில் இருந்து டீ சாப்பிட ஆரம்பித்தேன்..... ஆகா, என்ன அனுபவங்கள். நீங்களும் வாங்களேன், சூடா ஒரு டீ சாப்பிடலாம் !! இந்த பதிவுகளை எல்லாம் "உணவு வேட்டை" என்ற தலைப்பில் எழுத போகிறேன்.... வேட்டை என்பது நிதானமாக பார்த்து இரையை அடித்து ருசித்து சாபிடுவதாகும், இதுவும் ஒரு வேட்டைதானே !

Labels : Suresh, Kadalpayanangal, Tea marathon, about tea, unavu vettai