Monday, November 20, 2017

அறுசுவை - விருந்து சமையல் !

ஆவி பறக்க இட்லி - சட்னி, மிளகு ஜாஸ்தி போட்ட பொங்கல், முறுகலாக ரவா தோசை, நெய் வழிய இருக்கும் புரூட் கேசரி, சின்ன வெங்காயம் நன்கு வெந்த ஊத்தப்பம், இளம் ஆட்டு கறியில் செய்த மட்டன் சுக்கா, செட்டிநாடு நாட்டு கோழியில் செய்த கறி பிரட்டல், பச்சை மிளகாய் அதிகம் போட்ட பணியாரமும் காரச்சட்னியும், பொன்னிறமாக வறுத்த வாழைக்காய் பஜ்ஜி, பழைய சோறும் கருவாடும், பொன்னி அரிசி சோறும் பூசணிக்காய் குழம்பும், இளம் கத்திரிக்காயில் நெய் விட்டு செய்த எண்ணெய் கத்திரிக்காய், நல்லெண்ணெயில் செய்த முட்டை பொரியல், தேங்காய் பாலில் ஊற வைத்த இடியாப்பம், பசு மாட்டு பாலில் இருந்து எடுத்து முருங்கை கீரை போட்ட நெய்யில் ஊற்றிய தோசை, பொன்னிறமாக எடுக்கப்பட்ட வடை, காரம் அதிகமாக பொறிக்கப்பட்ட நெய் மீன், கரகரவென காராபூந்தி போட்ட பிஸிபேளாபாத், மிளகு தூக்கலான ரசவடை, வறுத்த முந்திரி மிதக்கும் பாயசம்.... இப்படி நிறைய உணவு வகைகளை சொல்லிக்கொண்டே போகலாம், அதை எல்லாம் விட வீட்டில் விசேஷம் என்று செய்யும் கெடா விருந்தில், நாமே எடுத்துக்கட்டிக்கொண்டு செய்யும் அந்த சுவை இருக்கிறதே..... ஆஆஹாஆ !!


என்னதான் ஹோட்டல் சென்று மூக்கு பிடிக்க சாப்பிட்டாலும், சொந்த பந்தங்கள் உடன் ஒரு விருந்து சமையலில் பங்கு கொண்டு, இதை டேஸ்ட் பாருங்கள் என்று சொல்லும்போது, இது ஜாஸ்தி அது கம்மி என்று நாட்டாமை பண்ணிக்கொண்டு, மாமாவுக்கு மட்டன் கொஞ்சம் ஜாஸ்தியா வை, பாயசம் கொடு இங்க என்று உதார் விட்டு, பீடா எங்கடா என்று சலம்பி சாப்பிடும் விருந்து என்பது எப்போதுமே ஒரு சந்தோசம்தான் ! பல நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டாலும், சென்று சாப்பிட்டு வந்து விடுகிறோம், ஆனால் முதலில் இருந்து முடிவு வரை ஒரு விருந்து செய்து சுவைப்பது இருக்கிறதே அது ஒரு தனி சுவை. வருடத்திற்கு ஒரு முறையாவது இப்படி பட்ட விசேஷங்களில் சுவைத்தால் நாக்கிற்கு மட்டும் இல்லை, மனதிற்கும் சுவை தெரியும். நகரங்களில் நடக்கும் விருந்துகளில் எல்லாமே ஆர்டர் செய்து விடுவோம், வரும் சொந்தங்களுக்கு பரிமாறுவார்கள் ஆட்கள்.... என்னதான் சுவையோடு உணவு இருந்தாலும், ஒரு மனநிறைவு கிடைக்காதில்லையா !!


வீட்டில் ஒரு விசேஷம், மதிய சாப்பாட்டுக்கு பிரியாணி, கதம்பம், மட்டன் சுக்கா என்று ஒரு பக்கா மெனு. முதல் நாள் மாலையிலேயே சமையல் செய்ய பாத்திரங்கள் வந்து இறங்கிவிட்டது, பந்தல் போட்டு கொண்டு இருந்தனர். யார் யாருக்கு என்ன என்ன வேலை என்று ஒதுக்கி கொண்டு இருந்தார்கள். அடுத்த நாள் அதிகாலை  நான்கு மணிக்கே ஒருவர் எழுந்துக்கொண்டு இருந்ததை பார்த்தேன், என்ன விஷயம் என்றபோது ஆடு உரிக்கணும் என்றார். ஆகா, என்று அப்போதே தூக்கம் கலைந்து விட்டது ! ஆட்டத்துக்கு நானும் வரலாமா என்று கேட்க, வாங்களேன் என்றார். அதிகாலையில் கைலியுடன் ஒரு துண்டை போர்த்திக்கொண்டு அந்த காலத்து ராம்கி படத்தில் ஊர் காவலுக்கு செல்வது போல ஒரு லாந்தருக்கு பதில் டார்ச் லைட் எடுத்துக்கொண்டு புறப்பட்டோம் !!


எங்களது ஆடு, நாங்கள் வருவதை பார்த்தவுடனே முடிவு செய்துவிட்டது, இன்னைக்கு நம்ம ஒரு இடத்தையும் இவன் விடாமல் சாப்பிடுவானே..... ஆண்டவா, எனக்கு மன்னிப்பே கிடையாதா என்று. அன்றுதான் ஒரு ஆடு வெட்டப்படுவதில் இருந்து அது பாத்திரத்தில் சிறிய துண்டுகளாகவும், மற்ற பகுதிகள் அனைத்தும் கழுவி கொடுக்கப்பட்டதையும் பார்த்தேன். ரத்தம் பிடிப்பதில் தொடங்கி, கால்கள் வெட்டப்படுவது, தலையை சுத்தப்படுத்துவது என்று விறுவிறுவென்று நடந்தது. சுமார் இரண்டு மணி நேரத்தில் ஒரு ஆட்டை அண்டாவில் எடுத்து வந்து கொண்டு இருந்தோம் !


வீட்டின் அருகினிலேயே ஒரு காலி இடத்தில் சின்ன சாமியானா பந்தல் போட்டு, கற்கள் ரெடி செய்து, மூட்டை மூட்டையாய் வெங்காயம் உரிக்க ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம் புதினா, இஞ்சி என்று ரெடி ஆகி கொண்டு இருந்தது. நெருப்பை எடுத்து பற்ற வைத்து அதில் அண்டாவை ஏற்றியவுடன் எல்லோரது பார்வையிலும் ஒரு குதூகலம் ! சமையல் செய்பவர்கள், சமைக்க உதவி செய்பவர்கள் என்று ஒரு குரூப் உண்டு, ஆனால் இந்த மாதிரி விசேஷ வீடுகளில் சமையல் மேற்பார்வையாளர்கள் என்று ஒரு பெரிய குரூப்பே இருக்கும், அந்த நாள் வரை சமையல் அறை பக்கமே சென்று இருக்க மாட்டார்கள், ஆனால் அதில் உப்பு கம்மி, காரம் ஜாஸ்தி என்று சலம்பி கொண்டு திரிவோம். அவ்வப்போது அவர்களது பொண்டாட்டி கிராஸ் செய்யும்போது, என் பொண்டாட்டி இதை செஞ்சா எட்டு ஊருக்கு மணக்கும் தெரியுமா என்று சமையல்காரரை வெறியேற்றுவார்கள். பொதுவாக அவர்கள் உபயோகிக்கும் வார்த்தை என்பது.... "நல்லா கிண்டி விடுப்பா..." !!


இந்த மாதிரி விருந்து சமையலில் இருக்கும் காதலான நொடி என்பது, சமையல் கொஞ்சம் கொஞ்சமாக ரெடி ஆகும்போது வரும் அந்த வாசனைதான். அப்போது கவனித்து பார்த்தால், வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லாமுமே வாசனை வரலையே என்பது போலவே இருப்பார்கள், நாம் அவர்களோடு இருக்கும்போது அந்த வாசனை உலக அழகி போன்று வந்து மூக்கை சொறிந்து விடும்.... இங்கதான் நாம உஷாரா இருக்கணும், வாசனை வருதே என்று சொன்னால், நல்லா நெய் வடிய வீட்டில் கேசரி செய்தபோது எல்லாம் இந்த மூக்குக்கு வாசனை தெரியலை, இப்ப தெரியுதாக்கும் என்பார்கள், வாசனையே வரலையே என்று சொல்லும்போது ஒரு பொடி பயல் வந்து கறி வாசனை வருது மாமா என்பான், இல்லையே என்று சொல்லும்போது, அந்த மனுஷனுக்கு நாக்குதான் நீளம், மூக்கு கம்மிதான் என்று வீட்டில் பொங்க வைப்பார்கள்.... கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான், அப்போதான் சட்டுன்னு "ஹலோ, நான் மார்க் அண்டோனிதான் பேசறேன், யாரு ஒபாமாவா...." என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்துவிட்டு மூச்சை நன்கு இழுத்து விடும்போது ஒரு சந்தோசம் வருமே.... அட அட அட !!


அடுத்து வருவது டேஸ்ட் செய்யும் படலம். கறி பாதி வெந்து கொண்டு இருக்கும்போதே இதை இப்படி கிண்டனும் என்று செய்முறை செய்து காட்டிவிட்டு, ஒரு சின்ன வாழை இலையை எடுத்து, அதில் கொஞ்சமே கொஞ்சம் வைத்து அங்காளி பங்காளி எல்லாம் கூப்பிட்டு நாக்கில் மை போல தடவுவது என்பது ஒரு சம்பிரதாயம். அதில் விசேஷம் என்னவென்றால், ஒருத்தனும் அது நல்லா இருக்கு என்று சொல்ல மாட்டான், ஏதாவது ஒரு குறை இருக்கும். சுட சுட அப்படியே சட்டியில் இருந்து எடுத்து, வாயில் வாட்டர் பால்ஸ் வருமாறு எடுத்து போட்டு மெல்லுவது சிறப்பு, இதில் மிக சிறப்பு என்பது நம்ம பங்காளிக்கு வெறும் எலும்பை மட்டும் வாயில் வைப்பது.... கறியை எல்லாம் தின்றுவிட்டு, பங்காளி இப்போ எலும்பை கடிப்பாரு எல்லோரும் கை தட்டுங்க என்று கோர்த்து விடுவது !!


முடிவில் எல்லோரும் அதை இறக்கி வைக்கும் முன்னரே நல்லா கட்டிவிட்டு, பந்தியில் இலை போடும்போது மாப்பிள்ளை வந்து உட்காருங்க எனும்போது வடிவேல் போல ஒரு எஸ்ப்ரஸின் கொடுப்போம் பாருங்கள்.... நம்ம முகத்தை பார்க்கும்போதே பொண்டாட்டிக்கு தெரிந்துவிடும், இந்த மனுஷன் சாப்பிட்ட மிச்சத்தைதான் எல்லோரும் சாப்பிட போறோம் அப்படின்னு, சட்டுன்னு குழந்தையை கையில் கொடுத்து, இதுக்கு ஆய் வருதாம் கூட்டிக்கிட்டு போங்க என்று நம்மை காப்பாற்றி விடுவார். அப்புறம் சொந்தங்களுக்கு இலை போட்டு, சூடான பிரியாணி, மட்டன் சுக்கா, கதம்பம், முட்டை மசால், வாழைப்பழம், பீடா என்று வைத்துவிட்டு, ஓடி ஓடி எல்லோருக்கும் பரிமாறிவிட்டு, எல்லோரும் ஒரு ஏப்பத்துடன் எந்தரித்து கை கழுவும்போது..... ஒரு நிம்மதி வருமே.... அதுதான் விருந்தின் சிறப்பம்சம்.


அடுத்த முறை சொந்த பந்தங்களை அள்ளி கொண்டு, ஒரு விருந்து சமையல் செய்து பாருங்கள், அப்போது தெரியும் அந்த ஆனந்தம். ஆடல், பாடல், சுவையான சாப்பாடு, கிசு கிசு என்று களை கட்டட்டும் !!

Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Virunthu, Virundhu, party, enjoy, biriyani, with relatives

5 comments:

  1. எங்களைலாம் கூப்பிடாமலேயே விசேசம் முடிஞ்சுட்டுதா?!

    ReplyDelete
  2. பார்த்தாலே பரவசம்

    ReplyDelete
  3. ஆகா
    விருத்திற்கு எங்களையும் அழைக்காமல் விட்டுவிட்டீர்களே நண்பரே
    தம+1

    ReplyDelete
  4. super narration

    excited i feel mouthwatering....

    ReplyDelete