Tuesday, November 28, 2017

அறுசுவை - கல்கத்தா ரசகுல்லா !!

கல்கத்தா.... இந்த பெயரை சொன்னவுடன், நமது நினைவுக்கு வருவது ஹவுரா பாலம், டிராம் வண்டி மற்றும் ரசகுல்லா ! அவ்வப்போது கல்கத்தா சென்று வந்தாலும், நிறைய இடங்களில் ரசகுல்லா என்று கேட்டு வாங்கி சாப்பிட்டாலும், ஏதோ ஒன்று குறைந்ததே என்றே தோன்றியது, எனது கல்கத்தா நண்பரிடம் இதை தெரிவித்த போது, வாருங்கள் ஒரிஜினல் ரசகுல்லா சாப்பிடலாம் என்று என்னை ஒரு மாலை பொழுதில் கூட்டி சென்றார். வெள்ளை நிறத்தில் ஜீராவில் மிதக்க விட்டு கொண்டு வந்ததை வழித்து வழித்து சாப்பிடும் சுவை.... இப்போதுதான் புரிகிறது கல்கத்தா ரசகுல்லா என்று ஏன் சொல்கிறார்கள் என்று !!


கல்கத்தாவின் பிஸியான நான்கு முனை சந்திப்பான எஸ்ப்ளானடே (Esplanade) கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது இந்த கடை. வெளியில் அந்த கால டிராம் வண்டி குறுக்க நெடுக்க ஓடி கொண்டு இருக்கிறது, பெங்காலி முகங்கள் எங்கெங்கும், பழைய கால கட்டிடங்கள் என்று நம்மை பழைய காலத்திற்கு இட்டு செல்கிறது. இந்த நான்கு முனை சந்திப்பில் எங்கு இருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம், சிகப்பு நிற போர்டு ஒன்றில் KC Das என்று எழுதி இருக்கிறது. பெயரை பார்த்தவுடனேயே பலருக்கும் நாக்கில் எச்சில் ஊறுவதை பார்க்க முடிகிறது, மிக சிறிய கடையின் உள்ளே சென்று பார்த்தாலே தெரிகிறது.... எல்லோரும் ரசகுல்லா என்று கேட்டு வாங்கி சாப்பிடுவதை !!



கடையின் உள்ளே நுழைந்து என்ன சாப்பிடலாம் என்று பார்த்தாலே மனதுக்கும், கண்களுக்கும் மகிழ்ச்சி விருந்து காத்திருக்கிறது. பெங்காலி ஸ்வீட் வகைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது, ஒவ்வொருவரும் குறைந்தது அரை கிலோ ஒவ்வொன்றிலும் வாங்கி செல்கின்றனர். இதுவரை ஜிலேபி, மைசூரு பாகு என்று சாப்பிட்ட உங்களுக்கு, பெங்காலி ஸ்வீட் வகைகளின் பெயர் தெரியுமா ? ரசகுல்லா, ராஜ் போக், சஹானர் டோஸ்ட், ரோசம்மாதிரி, சமசம், தோய், சென்டெஸ், கிர் காதம், கிரதேஷ் என்று பெயரே நிறைய வித்யாசமாக இருக்கிறது. எனது கூட வந்த நண்பர், என்ன சாப்பிடறீங்க என்று கேட்டபோது ரசகுல்லா என்று மட்டுமே சொல்ல வந்தது, அடுத்து ஒன்றை சொல்ல முனைந்தபோது நாக்கு சுளுக்கி கொண்டது !!




ரசகுல்லா.... ஒரு வெள்ளை நிற அழகி எனலாம் ! கவனித்து பார்த்தால், உங்களுக்கு ஒன்று புரியும்... நமது தமிழ்நாட்டில் எல்லா ஸ்வீட் வகைகளும் (பால்கோவா தவிர்த்து) எல்லாமுமே பொன்னிறத்தில் இருக்கும். தங்க நிறத்தில் இருப்பதை பார்த்தாலே நமக்கு வசீகரம் என்பதால் இருக்கலாம், தோசையே நமக்கு முறுகலாக பொன்னிறமாக இருக்க வேண்டும், அம்மா மட்டும் தோசையை கொஞ்சம் வெள்ளையாக கொடுத்து விட்டால் போச்சு, சரியாக வேகவில்லை என்று சொல்லிவிடுவோம், இதுவே எல்லா விதமான ஸ்வீட் வகைகளுக்கும் எனலாம். இந்த ரசகுல்லா பார்க்கும்போதும் இது போலவே தோன்றுகிறது, என்னங்கடா கொஞ்சம் பொன்னிறமாக பொறித்திருக்க கூடாதா.... உஜாலா போட்டு பண்ணிடீங்களோ ?!





சரி, ரசகுல்லாதான் வெள்ளையாக இருக்கிறது என்று பார்த்தால், அதை கொண்டு வந்த கப் கூட வெள்ளைதான், அதனால்தான் இந்த பெங்காலிகாரன் எல்லாம் வெள்ளையா இருக்கானோ ?! ஒரு சின்ன கப், அதில் தெள்ள தெளிவாக மிதக்கும் திரவம், அதன் மேலே சற்றே குவார்ட்டர் போட்டு ஆடியபடியே ஒரு உருண்டையான வெள்ளை வெளேரென்ற ஒரு வஸ்து என்று இருந்தது. அந்த வெள்ளை நிற வஸ்துவை கொஞ்சம் உற்று நோக்கினால் பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கும் நிலம் போல வெடித்து வெடித்து இருந்தது, இவ்வளவு ஜீராவில் ஊற வைத்துமா இப்படி என்று யோசிக்க வைக்கிறது ! கண்களாலேயே ஒரு சுவீட்டை சாப்பிட முடியுமா என்று கேட்டால், அங்கு சென்று பார்த்தால் தெரியும்... நாடி, நரம்பு, ரத்தம், சதை என்று எல்லாமுமே ஸ்வீட் வெறி பிடித்து அலையும் ஒருவனை அங்கு பார்க்கலாம் (நான் இல்லீங்க சார் !!), அந்த ரசகுல்லாவை கொண்டு வந்து உங்களது முன்னே வைக்கும்போது, காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரி என்பதற்கு உதாரணமாக, அங்கு இருந்த பெங்காலிகள், அந்த பெரிய ரசகுல்லாவை பார்க்கும் ஒரு பார்வையிலேயே அதை சாப்பிட்டு விடுகின்றனர், பின்னர் அப்படியே எடுத்து வாயில் போட்டு, வாய் வெடிக்க வெடிக்க மெல்லுகின்றனர் !



நான் ரசகுல்லாவை பார்த்து, காதலோடு அதை அணுகி, ஸ்பூன் எடுத்து கொஞ்சமே கொஞ்சம் விள்ளலாய் எடுத்து வாயில் எடுத்து போட போகும்போது.... எதிரில் பார்த்தால் எனது நண்பர், அவரது எதிரில் இருந்த எல்லாவற்றையும் காலி செய்துவிட்டு அமர்ந்து இருந்தார், அவரது பார்வை... டேய், என்ன தெய்வீக காதலா, பார்த்து ரசகுல்லாவிற்கு வலிக்க போகுது, என்று சொல்லாமல் சொல்லியது. அந்த விள்ளலை வாயில் போட, சொர்க்கம் மதுவிலே என்று யார் சொன்னது, இதிலும்தான்.... கொஞ்சம் கொஞ்சமாக அந்த ரசகுல்லாவை கடிக்க, கடிக்க, அதில் இருந்த ஜீரா இப்போது சிறு சிறு பீஸாக இருந்த அந்த ரசகுல்லாவோடு கலந்து ஒரு ஏகாந்த சுவையை கொடுத்தது. இன்னும் கொஞ்சம் பிய்த்து எடுக்க.... அடேய், எவண்டா அது ரசகுல்லாவின் உள்ளே ஓட்டையை போட்டது ?! நாங்க உளுந்த வடையின் வெளியிலே ஓட்டையை போடவே கஷ்டப்படறோம், நீங்க எப்படிடா ரசகுல்லா உள்ளேயே ஓட்டைய போடறீங்க ?!


ஒரு என்ஜினீயர் ரசகுல்லா சாப்பிட்டா இப்படி எல்லாமாடா சோதிப்பீங்க ?! எங்க ஊரில் எல்லாம் இட்லியை, கொழுக்கட்டை மாதிரி பிடித்து ஜீராவில் போட்டு கொடுத்து இதுவரை ரசகுல்லா அப்படின்னு சொல்லி இருக்காங்களா, என்று நான் யோசிக்கும்போதே, ஒரு பிரளயம் நடந்து கல்கத்தா நடுவினில் கிலோமீட்டர் கணக்கில் ஓட்டை விழுந்து விட்டதோ என்று நண்பர் அதிர்ச்சியாகி என்னை பார்க்க, நான் ரசகுல்லாவின் உள்ளே இருந்த ஓட்டையை பார்க்க, அட, இப்படி ரசகுல்லா செஞ்சாதான் உள்ளே ஜீரா நல்லா ஊரும், சாப்பிடுங்க என்றார். ஓஹோ... இதனால்தான் இந்த கொல்கத்தா ரசகுல்லா இவ்வளவு பேமஸ் போலும் !! ஆனாலும், இந்த இன்ஜினியரிங் அறிவுக்கே சவால் விடுகிறது இந்த ரசகுல்லாவின் உள்ளே வைத்த ஓட்டை !!



அடுத்த முறை, நீங்கள் தமிழ்நாடு விட்டு வெளியே செல்லும்போது, அப்படியே ஷார்ட் கட் எடுத்து இந்த கல்கத்தா வந்து இங்கு ரசகுல்லா சாப்பிட்டு விடுங்கள். பெங்காலி ஸ்வீட் வகைகளிலேயே இந்த இனிப்பு அருமையோ அருமை. அப்படியே எனக்கும் ஒன்று வாங்கி வந்தால் தன்யனாவேன் !!

Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, arusuvai india, kolkatta, kalkatta, rasagullaa, KC Das, best sweet, Best indian sweet, west bengal

4 comments:

  1. They have stores in chennai as well

    ReplyDelete
  2. எல்லாம் சரி, அந்த ஓட்டை எப்படி வந்திச்சுன்னு கேட்டு சொல்லுங்க. இல்லாட்டி மண்டை வெடிச்சுடும்

    ReplyDelete
  3. Sir you are not writing blogs now a days ?

    ReplyDelete